News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category "சுவடுகள்"

சுவடுகள் 10 - பிரிகேடியர் கடாபி/ ஆதவன்

Tuesday, March 23, 2010 / No Comments
கடாபி அண்ணை. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர். விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தளபதியுமே ஒவ்வொரு விடயத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராகவே இருந்திருக்கிறார்கள். கடாபி அண்ணையைப் பொறுத்தவரையும் அப்படித்தான். குறிபார்த்துச்சுடுவதில் தனித்திறமை கொண்டிருந்த இந்தத் தளபதி பல படையணிகளை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைப் போரில் வழிநடத்தியதில் தனக்கான இடத்தைக் கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும்.



சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.

வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.

'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய 'புலிப்பாய்ச்சல்' நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை - அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை -  கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.

இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.



ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

Gadaffi-00பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.

அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.

பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.




பிரிகேடியர் கடாபி அவர்கள் சார்ல்ஸ் அன்ரனி படையணி பற்றி   
கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.


நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.

இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட  எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.



சுவடுகள் – 9. கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன்

Wednesday, March 10, 2010 / No Comments
எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான்.

இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்கத்துக்கு வந்து ஒரே படையணியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எட்மன் சிறந்த குறுந்தூர ஓட்டக்காரன். வலிகாமத்தில் விளையாட்டுக்கெனப் பெயர்பெற்ற அக்கல்லூரியில் குறுந்தூர ஓட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தவர்களுள் எட்மனும் ஒருவன்.

இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நாங்களும் கல்லூரியும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து திரிந்தபோது எட்மன் சிலகாலம் யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் படித்தான். பிறகு மானிப்பாயில் மீண்டும்வந்து எம்மோடு இணைந்துகொண்டான். அந்தநாட்கள் இனிமையானவை. எட்மன் இப்போது குழப்படிக்காரனாக மாறியிருந்தான். எப்போதும் குறும்புத்தனமாகவே இயங்கிக் கொண்டிருப்பான். முன்புபோல் அவனால் ஓட்டத்தில் முதலாவதாக வரமுடியவில்லையென்றாலும் துடியாட்டமாகவே இருந்தான்.

சிறிலங்கா அரசுக்கும் இயக்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கிய கையோடு எமது வகுப்பிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் நாளுக்குநாள் ஒவ்வொருவராக போராட்டத்திலிணைந்துகொண்டிருந்தனர். எட்மனும் ஒருநாள் போனான்; இளங்குயிலனாக ஆனான்.

**************



இளங்குயிலன் பயிற்சியெடுத்ததும் இயங்கியதும் இம்ரான் பாண்டியன் படையணியில். சண்டைக் களமுனையோடு தொடர்புபடாத பணியிலிருந்தவன் பொறுப்பாளருக்குத் தொல்லைகொடுத்துச் சண்டைக்குப் போனான். ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் வன்னியை ஊடறுத்துச் செல்லவென சிறிலங்காப் படைகள் தொடங்கிய நடவடிக்கைக்கு எதிரான தொடர்சமரில் இளங்குயிலனும் தனது அணியோடு பங்குபற்றினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பணியிலீடுபட்டிருந்த இளங்குயிலனின் அணிமீது எதிரி பதுங்கித்தாக்குலொன்றைச் செய்தான். நடந்துகொண்டிருந்த இளங்குயிலனிலிருந்து இரண்டடி தூரத்துக்குள்ளிருந்து கிளைமோர் வெடித்தது. உயிர்தப்பினானாயினும் இரண்டு கால்களையும் முழங்காலோடு இழந்திருந்தான். மருத்துவமனையிலிருந்து மீளவும் முன்பு செய்த பணிக்கே திரும்பியிருந்தான்.

இதே இளங்குயிலன் சிலநாட்களிலேயே தானாகவே சைக்கிளில் செல்வது எனக்கு வியப்பைத் தந்தது. நம்ப முடியாமலுமிருந்தது. நான் கண்டது அவனைத்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. வேறிடத்தில் கேட்டு இளங்குயிலன் சைக்கிள் ஓடுகிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

அவனது விடாமுயற்சியும் ஓர்மமும் கடின உழைப்பும் அவனை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். காயம் மாறி, இரண்டு மரக்கால்களைப் பொருத்தி சில நாட்களிலேயே தனியாகவே சைக்கிள் ஓடிப் பணியாற்றப் புறப்பட்டதிலிருந்து அவனைப் புரிந்து கொள்ளலாம்.

களமுனைக்கு வெளியிலே இளங்குயிலன் இயக்கத்திலாற்றிய பணிகள் தொடர்பாகப் பேச முடியாது. இம்ரான் பாண்டியன் படையணியின் மிக முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றினான். கால்களை இழந்தபின்னும் மீளவும் அதே பிரிவில் சில ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில்தான் அவனது நீண்டநாள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடற்கரும்புலி அணியிலே இணைக்கப்படுவதற்கான அனுமதி வந்திருந்தது.

மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கடற்கரும்புலிகள் அணியிலே இணைந்து தனது பணிகளை முன்னெடுத்தான். கரும்புலிகள் அவரவர்களுக்கான சந்தர்ப்பம் வரும்வரைக்கும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருப்பார்கள். அதன்படி இளங்குயிலனும் தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருந்தான்.

அவன் கடற்கரும்புலிகள் அணியில் இணைந்தபின்னர் அவனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கரைச்சிக் குடியிருப்பில் நானும் சிலாவத்தையில் இளங்குயிலனும் பணியாற்றியதால் இடையிடையே எங்காவது சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஊர்க்கதைகள், பள்ளிக்கூடக் கதைகள் என்று எமது உரையாடல் விரியும். பழைய நண்பர்களைப் பற்றி விசாரித்துக் கொள்வோம். ஆன்பொலின் ரீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறையும் கேட்பான். என்னைப் போலவே அவனும் ரீச்சரை அடிக்கடி கண்டிருந்தாலும் ஒருமுறைகூட ஆறுதலாகக் கதைத்ததில்லை.

அவன் வீரச்சாவடைவதற்கு மூன்றுநாட்களின் முன்னர் சந்தித்துக் கதைத்தேன். வழமைபோலவே செந்தழிப்பாக வந்திருந்தான். வழமையை விட அதிகநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பழைய கூட்டாளிகள், பொறுப்பாளர்களைப் பற்றி விசாரித்தான். வழமைபோலவே எல்லோரையும் கேட்டதாகச் சொல்லச் சொன்னான். வழமைபோலவே புன்னகையோடு விடைபெற்றுச் சென்றான்.

21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் எமது இயக்கத்தின் வினியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பளிக்கும் பணியிலீடுபட்டிருந்தபோது எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.

விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன் என்ற பற்றிக் எட்மன்.



சுவடுகள் - 8. கப்டன் அருணன்

Monday, January 4, 2010 / No Comments
அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.

அருணன் எமது வீட்டுக்கு வரும் நாட்கள் மிகமிக இனிமையாகக் கழியும். எந்தநேரமும் ஏதாவது பகிடிவிட்டுக் கொண்டேயிருப்பான். சிலநாட்களின் பின்னர்தான் அருணனின் கூத்துப்பாடல்கள் பாடும் திறமை எமக்குத் தெரியவந்தது. பிறகென்ன? அவன் வரும் நாட்களில் தவறாது சில பாடல்கள் பாடிக்காட்டித்தான் செல்லமுடியும்.

அப்போது ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. எதிரி கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான். அங்கிருந்து அவனை மேலும் முன்னேறவிடாமல் புலிகளின் அணிகள் தடுத்து நின்றிருந்தன. அப்போது அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப் படையணியின் ஒரு கொம்பனி நிலைகொண்டிருந்தது. அந்த அணியிலே அருணனும் இணைத்துக் கொள்ளப்பட்டான்.

அப்போது அந்த முனையிலே அதிகம் சண்டை நடப்பதில்லை. எதிரி ஒலுமடு நோக்கிய முன்னேற்ற முயற்சியைத்தான் முக்கியமாக்கியிருந்தான். ஒட்டுசுட்டான் பக்கமாக முன்னேற்ற முயற்சிகள் செய்யவில்லை. எதிரியின் சிறு ரோந்து அணிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவதும், அவற்றை எதிர்த்துத் தாக்குதல் நடத்துவதுமாகவே அக்களமுனை அப்போது இருந்தது.

இடையிடையே களமுனையிலிருந்து ஒருநாள், இருநாள் என விடுப்பெடுத்து எம்மைப் பார்க்க வருவான் அருணன். சிலவேளைகளில் நிர்வாக அலுவலாகவும் நாமிருக்கும் இடத்துக்கு வந்து போவான். சிறுத்தைப் படையணியின் நிர்வாகமும் அப்போது கற்சிலைமடுவை அண்டியே இயங்கிக் கொண்டிருந்தது.



அருணன் எம்மிடம் வரும் நாட்களின் இரவுகள் மிக இனிமையாகக் கழியும். அவனிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ஏராளமான பகிடிகள், கூத்துப்பாடல்கள். அவன் எங்களிடம் எதிர்பார்ப்பது வெறுந் தேனீர்.

அருணனுக்கு உலகில் மிகப்பிடித்தமானது வெறுந்தேனீராகத்தான் இருக்கும். அந்த விடயத்தில் அவனோர் அதிசயப்பிறவிதான். ஒன்றிரண்டு குவளை என்ற கணக்கில் அவன் தேனீர் குடிப்பதில்லை. லீற்றர் கணக்கில்தான் குடிப்பான். நல்ல சாயம் போட்ட வெறுந்தேனீர் என்றால் அவனுக்குப் போதும், அதற்காக எதுவும் செய்வான்.

வன்னியின் போர்க்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு, சீனித் தட்டுப்பாடு என்று மாறிமாறி வருவதுண்டு. ஜெயசிக்குறு காலம் முழுவதுமே களமுனையில் உணவுப்பிரச்சனை குறிப்பிட்டளவில் இருந்துகொண்டுதானிருந்தது. சரியான உணவில்லாமல், அதேநேரம் மிகமிகக் கடினமான வேலைகளைச் செய்துதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடந்துகொண்டிருந்தது. அது தனிவரலாறு.

இடையிடையே சீனித் தட்டுப்பாடு வருவதுண்டு. அப்போதெல்லாம் பொதுமக்களும் போராளிகளும் ‘நக்குத்தண்ணி’ குடிக்கத் தொடங்குவார்கள். நக்குத்தண்ணி எனப்படுவது, ஓர் உள்ளங்கையில் சிறதளவு சீனியை வைத்துக்கொண்டு அதை நக்கி நக்கி சீனி போடாத தேனீரைக் குடிப்பது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்திலும் இந்த முறை சிலநாட்கள் இருந்தது. ஆனால் வன்னியில் இது வழக்கமாகவே போய்விட்ட ஒரு நடைமுறை.

16_01_09_ltte_03அப்படியான சீனித் தட்டுப்பாட்டுக்குரிய காலங்கள் மிகச் சிரமமானவை. அதுவும் களமுனையில் அது இன்னும் கொடிதாயிருக்கும். கடின வேலைகளுக்கிடையில் நல்ல தேனீர்கூட குடிக்க முடியாது. பின்வந்த காலங்களில் வீரைப்பழத்தில் ‘ஜாம்’ காய்ச்சி அதைத் தொட்டு நக்கியே தேனீர் குடிக்கும் வித்தையைக் கண்டுபிடித்தனர் போராளிகள். ஒரு மாதத்துக்கென பங்கிட்டு வழங்கப்படும் சீனியை புட்டோடு சாப்பிடப் பயன்படுத்திக் கொண்டு வீரைப்பழ ஜாமோடு தேனீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட களமுனைகளுமுண்டு.

அருணன் எம்மிடம் வருவதென்றால் முதல்நாளே களமுனையிலிருந்து அறவித்து விடுவான். நாங்களும் அதற்கேற்றாற்போல் அடுக்குப் பண்ணுவோம். அங்கிங்கே என்று வாங்கி மரவள்ளிக் கிழங்கோ பச்சைக் கச்சானோ அவித்துக் கொடுப்போம். இப்படியாகப் பின்தளத்துக்கு வரும் வேளைகளில்தான் அவர்கள் ஒழுங்கான சாப்பாட்டைக் காண்பார்கள் என்பதும் வயிறார உண்பார்கள் என்பதும் எமக்குத் தெரியும். ஒருமுறை வந்தால் ஓரிரவு தங்கித்தான் செல்வான் அருணன். அவன் தங்கும் இரவு எமக்குக் குதூகலமாகக் கழியும்.

பெரும்பாலும் காத்தவராயன் கூத்துத்தான் பாடுவான். நல்ல குரல் வளம் அவனுக்கு. பெருங்குரலெடுத்துத்தான் பாடுவான். அங்கம் பக்கத்து வீடுகள் பலவற்றுக்கு அன்றிரவு நித்திரை முழிப்பாகத்தான் இருந்திருக்கும். பலர் இரசித்திருப்பார்கள், சிலர் திட்டியிருப்பார்கள். தேனீர் இடைவிடாமல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். பாடல்கள் தானாகக் கொட்டிக் கொண்டிருக்கும். இடையிடையே களமுனையில் நடந்த பம்பல்களைச் சொல்லிக் கொண்டிருப்பான். நாங்கள் படுக்க எப்படியும் பன்னிரண்டு மணி தாண்டும். வழமையான அலுப்பூட்டும் இரவுகளிலிருந்து விடுதலைபெற அருணன் வரும் நாட்களை நாங்கள் ஆவலோடு பார்த்திருப்போம்.

அருணன் நீண்டநாட்களாக வரவில்லை. இடையிடையே வோக்கியில் கதைத்துக் கொள்வான். திடீரென ஒருநாள் செய்தி சொல்லப்பட்டது, அடுத்தநாள் அருணன் வருவதாக. அப்போது சீனித் தட்டுப்பாடு மாதம். எமக்கான வழங்கல்கள் அரைவாசியாகக் குறைந்திருந்தன. ஆனாலும் அடுத்தநாள் வரப்போகும் அருணனுக்கான எம்மிடமிருந்த சீனி அனைத்தையும் ஒதுக்கினோம். ‘ரெண்டு ஜார் பிளேன் ரீ போட இவ்வளவும் காணும். இந்தமுறை அருணனைச் சமாளிக்கலாம்’ என்று வழமையாக அருணனுக்கான தேனீர் தயாரிக்கும் மறவன் சொல்லிக் கொண்டான். இந்தமுறை வெள்ளை அண்ணையிடமிருந்து பச்சைக்கச்சான் வாங்கி வைத்துக் கொண்டோம்.

மறுநாள் பின்னேர வகுப்புக்களுக்கு வராமல் மறவன் வீட்டிலேயே நின்றுகொண்டான். ‘அருணன் வீட்ட வரேக்க ஒராள் நிக்கவேணும், அதோட கச்சான் அவிக்கிற வேலை கிடக்கு’ என்று சொல்லிக் கொண்டான். அன்று மாலை வகுப்புக்கள் முடிந்து எமது வீட்டுக்கு வந்தபோது அருணன் வந்திருக்கவில்லை. ‘சரி ஏதாவது வேலையிருக்கும், முடிச்சிட்டு வருவான்’ என்று இருந்தோம். நேரம் ஏழுமணியாகியது. அருணன் வரவில்லை. ஆனால் ஒரு செய்தி வந்தது.

களமுனையிலிருந்து கற்சிலைமடு நோக்கி வந்துகொண்டிருந்த அருணனும் இன்னொரு போராளியும் எதிரியின் பதுங்கித் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்தனர் என்ற செய்தியே அது.

அதன்பிறகு வந்த பல இரவுகள் வழமைபோலவே கழிந்தன. வழமையான சலிப்பூட்டும் இரவுகளை மாற்ற அருணன் வருவான் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாவது முன்பு இருந்தது. இப்போது அதுவுமில்லை.

சுவடுகள் -7. மேஜர் சுவர்ணன்

Friday, November 6, 2009 / No Comments
ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு - வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது 'சில்லறைச் சண்டைகள்' மூண்டு தணிந்து கொண்டிருந்தன.



ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான்.



1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது.

“டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா.

“சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன்.

“டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான்.

சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.

“சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான்.

இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.

யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக் காட்டுக்குள் வந்த புதிதில் சுவர்ணின் அணி பட்டபாடு சொல்லி மாளாது. மிகக்கடுமையான வேலைகள் எமக்கிருந்தன. கிணறு வெட்டுவது, காட்டுக்குள் பாதைகள் போடுவது, தளம் அமைப்பது, பதுங்கு குழிகள் வெட்டுவது என்று மிகமிகக் கடுமையான வேலைகள். அந்தநேரத்தில் சுவர்ணன் செய்யும் சேட்டைகள் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்கள் வயிறு குலுங்கிச் சிரிக்குமளவுக்கு இருக்கும்.

ஒருகட்டத்தில் எமது கொம்பனி மறுசீரமைக்கப்பட்டது. அப்போது புதிதாக 50 கலிபர் ஆயுதத்துக்கான எட்டுப் பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப்பட்டது. அதில் சுவர்ணனும் ஒருவன். இவ்வளவுநாளும் சுவர்ணன் வேறு அணியிலிருந்ததால் அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்த எமக்கு இப்போது அனுபவிக்க வேண்டியிருந்தது. அதிலொன்றுதான் மேற்சொன்ன கற்றூணை நிறுத்தும் வேலையின்போது நடந்தது. இதுபோல் ஏராளம் சம்பவங்களுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது குறும்பு செய்துகொண்டிருப்பான். அவனது ‘மாஸ்டர்’ பம்பல் எத்தனை மாதமானாலும், எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத நினைவாகவே பதிந்துவிடும்.

50 கலிபர் அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும் எமக்கான ஆயுதம் வழங்கப்படவில்லை. சும்மா ‘கலிபர் ரீம்’ என்ற பேரில் அலைந்துகொண்டிருந்தோம். உண்மையில் அது கனரக ஆயுதங்களுக்கான பிரிப்பாக இருக்கவில்லை, கனரக வேலைகளுக்கான அணிப்பிரிப்பாகவே அமைந்துவிட்டது. வேலைகள் பங்கிடப்படும்போது ஆகக்கடுமையாக வேலைகளே எமது 50 கலிபர் அணிக்கு வழங்கப்படும். அந்த வழியே வந்ததுதான் ரவர் பூட்டும் வேலையும். ‘உவங்கள் கலிபர் ஒண்டும் தரப்போறேல. உது சும்மா மடார் வேலை செய்யிறதுக்கு ஒரு ரீம் தேவையெண்டதுக்காக பிரிச்சதுதான்’ என்று எமக்குள் பம்பலாகப் பேசிக் கொள்வோம். இந்த ‘மடார்’ வேலைகளைச் செய்யும் அணியில் சுவர்ணன் இருப்பது எப்பேர்ப்பட்ட விளைவு? பின்னாளில் GPMG ஆயுதத்துக்கென ஓரணி பிரிக்கப்பட்டபோது அதிகம் மகிழ்ந்தது நாம்தான். எமது கொம்பனிக்கு நல்லதொரு கனரக ஆயுதம் கிடைக்கிறது என்பதற்காகவன்று, எமது சுமைகளைப் பங்கிட இன்னோர் அணி வந்த மகிழ்ச்சியே அது. எமது கலிபர் அணிக்கான கடின வேலைகள் அவர்களோடும் பங்கிடப்பட்டன.



சுவர்ணின் நகைச்சுவையுணர்வு அலாதியானது. எமது கொம்பனியிலிருந்த அணிகள் காட்டுக்குள்ளிருந்த தளத்திலேயே தனித்தனிக் கொட்டில்களில் தங்கியிருக்க, எமது 50 கலிபர் அணி சற்றுத்தள்ளி வெட்டைக்கு அண்மையாகத் தங்கியிருந்தது. அதிகதூரம் எம்மை நடக்கவைத்த கடுப்பு எமக்குள் இருந்தது. ‘கலிபரைத் தந்திட்டு வெட்டைக்குப் பக்கத்தில விட்டாலும் அதில விசயமிருக்கு. இது சும்மா பேருக்கு ஒரு ரீமை வைச்சுக்கொண்டு வெட்டைக்குப் பக்கத்தில இருங்கோ எண்டா என்ன நியாயம்?’ என்று சுவர்ணன் பேசிக்கொண்டிருப்பான்.

அதுவரை அணியின் பெயரில் மட்டுமே கொண்டிருந்த கலிபர் ஒருநாள் இரவில் எமது கொட்டிலுக்கு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் 50 கலிபர் பார்த்திருக்கிறோம். அமைப்பில் இணையமுன்பும் பார்த்திருக்கிறோம், இணைந்தபின்னரும் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பயற்சி பெற்ற தளத்தில் 50 கலிபர் அணியொன்றும் பிறிம்பாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் நெருக்கமாக அவ்வாயுதத்தை அறிந்திருக்கிறோம். தூக்கிப் பார்த்திருக்கிறோம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் பெல்ஜியத் தயாரிப்பான 50 கலிபர் ஆயுதம். நல்ல உருப்படி. நல்ல நிறையும்கூட. அதைத் தூக்குவதற்கும் இயக்குவதற்கும் மிகுந்த உடற்பலமும் பயற்சியும் தேவை. ஆயுதத்தைப் பார்த்தாலே ஒரு பயமும் மதிப்பும் தோன்றும். அதை இயக்குபவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தோன்றும்.

ஆனால் இப்போது எமக்குத் தரப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஆயுதமில்லை. அதை 50 கலிபர் என்று சொன்னபோது சிரிப்புத்தான் முதலில் வந்தது. 50 கலிபர் ஆயுதத்துக்கென எமது மனதிலிருந்த விம்பம் இவ்வாயுதத்தோடு பொருந்தவில்லை. இது மிகவும் நிறைகுறைந்த, ஒல்லியான ஓர் ஆயுதம். சீனநாட்டுத் தயாரிப்பு. வந்தவர்கள் இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நம்பமுடியாமல் குமுதன் குழல்விட்டத்தை அளந்தான். 12.7 mm வருகிறது, அப்போ சரிதான், இது 50 கலிபர் தான்.

முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

மறுநாள் காலை ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு எமது தளத்தின் ஒன்றுகூடலுக்குச் செல்ல வேண்டும். இதைக் கொண்டுபோனால் 50 கலிபர் என்று யாரும் நம்பப்போவதில்லை. நம்பினாலும் எமக்கான மதிப்பு இருக்கப்போவதில்லை. 'இதைவிட ஒரு PK LMG யே திறம் போல கிடக்கு' என்று யாராவது நக்கலடிக்கக் கூடும். இதுவரை கட்டியெழுப்பியிருந்த விம்பம் கலைந்துபோய்விடும். சுவர்ணன் ஒரு திட்டத்தைப் போட்டான். ஆயுதத்தைப் பாய்களால் சுற்றி, பிறகு படுக்கை விரிப்பால் சுற்றி கொஞ்சம் பெரிய உருப்படியாக்கினான் சுவர்ணன். அடுத்துவந்த ஒருகிழமைக்கு எமது கொம்பனிக்கு அப்படி உருப்பெருப்பிக்கப்பட்ட உருப்படியைத்தான் எமது 50 கலிபர் என்று காட்டிக் கொண்டிருந்தோம். எமது கொட்டில்பக்கம் யாரையும் வரவிடாமலும் பார்த்துக் கொண்டோம்.

மீட்கப்பட்ட முல்லைத்தீவில் 1997 தைமாதம் 50 கலிபர் பயிற்சிக்காகப் போயிருந்தோம். அங்கும் அவனது சேட்டைகள் தொடர்ந்தன. கடற்புலி அணியிலிருந்து பயிற்சிக்கு வந்திருந்த சிலர் இவனை உண்மையிலேயே ஒரு பயிற்சியாசிரியர் என்று நினைக்க வைத்துவிட்டான். பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்சூட்டுப் பயிற்சிக்கான நாள். பத்து ரவைகளைத் தந்து பனையில் கட்டப்பட்டிருக்கும் பட்டத்துக்குச் சுடச் சொன்னார்கள். ஒரு விசையழுத்தத்தில் எவ்வளவு குறைவான ரவைகளைச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு எம்மால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். ஒரு விசையழுத்தத்தில் அதிகபட்சம்  மூன்று ரவைகளுக்கு மேல் சுடாமலிருப்பதே நல்ல பெறுபேற்றைப் பெற உதவும். அதேநேரம் மொத்தச் சூட்டு நேரமும் கவனிக்கப்படும். பத்து வினாடிகளுக்குள் பத்து ரவைகளையும் சுட்டிருக்க வேண்டும். நாங்களெல்லோரும் மூன்று அல்லது நான்கு விசையழுத்தங்களில் பத்து ரவைகளைச் சுட்டோம். ஓரளவு நல்ல பெறுபேறுதான். சுவர்ணனின் முறை வந்தது. ஒரே விசையழுத்தல்தான். பத்தும் பறந்து போனது. முக்காலியின் முன்கால் அப்படியே எழுந்து அந்தரத்தில் நின்றது. அந்த நிலையிலேயே எங்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். 'எருமை!! எல்லாத்தையும் காத்தில பறக்கவிட்டிட்டு பெரிய றம்போ மாதிரி போஸ் குடுக்கிறான் பார்'.
ரகுவண்ணா சொன்னார். சூட்டுப்பயிற்சிக்குப் பொறுப்பான பயிற்சியாசிரியர் முகத்தில் கடுப்பு. ஆனால் சுவர்ணனைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாகவே நடந்தது போல் நடந்துகொண்டான்.

சுட்டுவிட்டு நேரே ஆசிரியரிடம் போன சுவர்ணன், நிறுத்தற் கடிகாரத்தைப் பார்த்தபோது அது இரண்டு வினாடிகள் சொச்சத்தைக் காட்டியது.

‘உது பிழை மாஸ்டர், பத்து ரெளண்ட்சும் ஒரேயடியா அடிக்க ஒரு செக்கனுக்கும் குறைவாத்தான் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில அமத்தேல’ என்றான். வாத்தியாரின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

பயிற்சி முழுவதும் முடிந்து முல்லைத்தீவிலிருந்து எமது தளத்துக்குத் திரும்பியிருந்தோம். அப்போது புதிதாக வேறு படையணியிலிருந்து நூறுபேர் வரை எமது தளத்துக்கு வந்திருந்தார்கள். வேறோர் அலுவலாக சுவர்ணன் தவிர்த்து நாங்கள் சிலர் வெளியே ஒருகிழமை சென்றுவிட்டுத் தளம் திரும்பியபோது புதிதாக வந்த கொம்பனி ‘சுவர்ணன் மாஸ்டர்’ என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநாளும் அவன் பட்ட கஸ்டங்கள் வீண்போகாமல் தனது இலக்கை அடைந்திருந்தான் சுவர்ணன். நாங்கள் தலையிலடித்துக் கொண்டோம்.

இப்போது அவன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்தான். தான் ஒரு ‘பிஸ்டல் காய்’ என்று சொல்லவும் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாங்களும் பயணித்தோம். இயக்கத்தில் பிஸ்டல் என்பது தகுதியை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதமாக அப்போது இருந்தது. ‘பிஸ்டல் காய்’ என்றால் அவர் பெரிய தளபதி என்பது கருத்து. சுவர்ணன் தன்னை பிஸ்டல் காயாக பாவனை பண்ணத் தொடங்கியிருந்தான். இந்தப் புதுக்கொடுமை தொடங்கியதால் ‘மாஸ்டர்’ கொடுமையிலிருந்து நாங்கள் தப்பித்திருந்தோம்.

கணேஸ் தான் அதிகம் மாட்டுப்படுபவன். கணேஸ் தன்னுடைய மெய்க்காப்பாளன் என்று சொல்லிக்கொள்வான். ‘கணேஸ்! அண்ணனின்ர பிஸ்டலை ஒருக்கா எடுத்தா’ என்று கட்டளைகள் வரும். அந்தநேரத்தில் கையில் கிடைக்கும் கட்டைகளைத் தூக்கி எறிந்து ‘இந்தா உன்ர பிஸ்டல்’ என்று கணேஸ் பதிலளிக்கத் தொடங்கியபிறகு சுவர்ணன் தனது மெய்க்காப்பாளனை மாற்றிவிட்டான்.

முகத்தில் சின்னச் சிரிப்புக்கூட இல்லாமல் அவன் அடிக்கும் லூட்டிகள் அளவு கணக்கற்றவை. மிகமிக அவசரமாக அணியை வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கும். எல்லோரும் ஆயத்தமாகி வரிசையாக நிற்கும்போது சுவர்ணன் மட்டும் அங்கிங்கென்று ஏதோ தேடிக்கொண்டிருப்பான்.

‘டேய் சுவர்ணன்! என்ன கோதாரியத் தேடுறாய்?’

‘என்ர பிஸ்டலைக் காணேல. நீயே எடுத்தனீ?’

அணிமுழுவதிடமும் உதைவாங்கித்தான் அன்று வெளிக்கிடுவான்.

எதிர்பாராத சந்தர்ப்பமொன்றில் கொம்பனிப் பொறுப்பாளர் சுவர்ணனை அணித்தலைவராக்கிவிட்டார். நாங்கள் ஆனந்தக் கூத்தாடினோம். அப்பாடா! இனி உவனின்ர தொல்லைகள் இருக்காது என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் இரண்டு நாட்களின்மேல் அது நீடிக்கவில்லை. அவன் அடித்த பிஸ்டல் குழறுபடியில் மீண்டும் பழையபடி கலிபர் சூட்டாளனாகவே நியமிக்கப்பட்டான்.

rathaஇப்படியெல்லாம் பிஸ்டலை வைத்துக் கனவு விளையாட்டுக்களை நடத்தி எங்களை எரிச்சல்படுத்தியும் மகிழ்வித்தும் வைத்திருந்த சுவர்ணன் நிசமாகவே ‘பிஸ்டல் காய்’ ஆனான். அதுவும் தேசியத் தலைவரிடமிருந்து  கைத்துப்பாக்கியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

ஒன்றாக இருந்த நாம் காலவோட்டத்தில் பிரிந்து பணிகள் மேற்கொண்ட போது சுவர்ணன் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் கடமையாற்றினான். 2002 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்வரைக்கும் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வந்தது.

~ ~ ~

இப்போது உமையாள்புரத்தில் ஆயத்தப்படுத்தப்பட்ட சண்டைக்கு வருவோம். ஆனையிறவைச் சூழவுள்ள பகுதிகளின் தாக்குதல் நடத்தப்படும்போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் படையினரை பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிறிலங்கா வான்படையின் பெல் ரக உலங்கு வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்தது.. வரும்வழியிலோ அல்லது திரும்பிச் செல்லும்போதோ அவ்வானூர்தியைத் தாக்கியழிக்கும் விதமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது.  இதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்தபடி ஓர் அணி தென்மராட்சிப் பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்திருந்தது. அந்த அணியின் தலைவனாகவும் ஏவுகணையை இயக்குபவனாகவும் சுவர்ணன் இருந்தான். வானூர்தியின் பாதையொழுக்கு ஏற்கனவே வேவு பார்க்கப்பட்டிருந்தது. சுவர்ணனுக்கான இலக்கை வரவைப்பதற்காகவே இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரணி மேஜர் சங்கரின் தலைமையில் களத்தில் இறங்குகிறது. ஆனால் அத்தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைக்காரணம் சிலரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.

உமையாள்புர இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கான திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டது. இராணுவத்தரப்பில் கடுமையான காயக்காரரை உண்டாக்குவதன் ஊடாக குறிப்பிட்ட உலங்கு வானூர்தியை வரவைப்பதே முதன்மை நோக்கம்.

திட்டத்தின்படி தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே காயக்காரரை ஏற்ற உலங்குவானூர்தி வந்தது. வரும்போது தாக்குதல் நடத்தப்படவில்லை. திட்டம் தெரிந்தவர்களுக்கு பதட்டம். ஏவுகணையோடு நிலையெடுத்திருக்கும் சுவர்ணனின் வீச்செல்லையைத் தாண்டி வானூர்தி பயணித்தாலேயே திட்டத்தில் பிசகு ஏற்பட வாய்ப்புண்டு. அல்லது எதரியின் பகுதிக்குள் நிலையெடுத்திருக்கும் அணியை எதிரியணிகள் கண்டு தாக்குதல் நடத்தினாலும் பிசக வாய்ப்புண்டு. சுவர்ணனுடன் சீரான தொடர்பு இருந்தது. எல்லாம் சரியாக நடக்குமென்று தகவல் தந்துகொண்டிருந்தான்.

காயக்காரரை ஏற்றிக்கொண்டு பலாலி திரும்பிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி எதிர்ப்பார்த்தபடியே சுவர்ணனின் எல்லைக்குள் வந்தது. அன்று அந்த இலக்கு சுவர்ணனால் அழிக்கப்பட்டது.



அவ்வெற்றிகரத் தாக்குதலை நடத்தியதற்குப் பரிசாக கைத்துப்பாக்கியொன்று தேசியத் தலைவரால் சுவர்ணனுக்குப் பரிசளிக்கப்பட்டது.

முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

ஈழவிடுதலைக்கான போராட்டப்பயணித்தில் தொடர்ந்து லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பணியாற்றிய மேஜர் சுவர்ணன் பின்வந்த ஒருநாளில் தாயக விடுதலைக்காக தனது மூச்சை நிறுத்திக் கொண்டான்.

மேஜர் சுவர்ணனுக்கும் அவனைப் போல் ஈழவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.



சுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா

Wednesday, September 23, 2009 / No Comments
தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.


ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்படமுன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகள் இடம்பெற்றகாலத்தில் கடல்புறாவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். பின்னர் இந்திய இராணுவத்துடன் போர் ஏற்பட்டபோது தலைவரோடு இருந்து காட்டுப்போர்முறையின் நுணுக்கங்களை தானும் கற்று போராளிககளுக்கும் கற்பித்து தலைவர் பிரபாகரன் அவர்களுடனே வாழ்ந்துவந்தவர்.

அமைதியான மென்மையாக சிரிக்கும் சங்கர் அண்ணாவையே எல்லோருக்கும் தெரியும். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையினால் வழங்கப்படும் எந்தப்பணியையும் மிகவும் கவனம் எடுத்து சிறப்பாக செய்து முடிக்கும் அவரது ஆளுமையையும் அனைத்துப் போராளிகளுடனும் உடனேயே நல்ல உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய தோழமையையும் கண்டுகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்காது.

கேணல் சங்கர் அண்ணாவுடன் 2001 ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த இராணுவ தாக்குதல்களாக இருந்தாலும் சரி முன்னேறிவரும் இராணுவத்தினரை மறித்துத் தாக்கும் பாதுகாப்பு படைநடவடிக்கைகளாக இருந்தாலும் சரி அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிய இராணுவப் பகுப்பாய்வு நடைபெறுவது வழக்கம். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் தமிழீழத் தாயகத்தின் பெரும்பகுதிகள் விடுவிக்கப்பட்டபோது பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டும் என தலைவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நவீன போர்ப்பயிற்சிகள் அத்தியாவசியம் எனக்கருதி சிறப்பு இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவென வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

பயிற்சியாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தமிழில் மொழிமாற்றி விளங்கப்படுத்துவார் சங்கர் அண்ணா. இயக்கச் செயற்பாடுகளின் இரகசியம் கருதியும் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சிமுகாமின் முக்கியத்துவம் கருதியுமே தலைவர் அவர்களால் சங்கர் அண்ணாவுக்கு மேலதிகமாக அப்பணி வழங்கப்பட்டிருந்தது.

வான்படையின் தளபதியாக வெளியே உலாவந்த சங்கர் அண்ணா பயிற்சிமுகாமில் எங்களுடனே இருந்தார். "இயக்கத்தால் சொல்லப்படும் எந்த வேலையென்றாலும் சிறப்பாகச் செய்துமுடிக்கவேண்டும்" என்பதேஅவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். எதையுமே தத்துவங்களூடாக விளங்கப்படுத்துவதைக் காட்டிலும் நேரிலே அறிந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஆழமாக பதிந்துகொள்ளும். அதனையே சங்கர் அண்ணாவும் செய்து காட்டினார்.

காடு சார்ந்த பயிற்சிகள் நடாத்துவதற்கான இடங்களைப் பார்ப்பதற்காக 03 கிலோமீற்றர் அளவு தூரம் நடந்து ஒரு குளத்தைச் சென்றடையவேண்டும். நாங்கள் மூன்று பேர் பயிற்சியாளர்களுடன்  ஜி.பி.எஸ்.ஸின் துணையுடன் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் செல்வதற்கு முன்பாகவே சங்கர் அண்ணா திசைகாட்டி(compass) யின் உதவியுடன் அங்கே சென்றடைந்துவிட்டார். நாங்கள் சென்றபோது சிரித்துக்கொண்டே வரவேற்றது பயிற்சியாளர்களுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.

முன்னர் இந்திய இராணுவத்தினுடனான போரின்போது தாங்கள் எவ்வாறு மணலாற்று காடுகளுக்குள் செயற்பட்டோம் என்று கூறுவார். அந்தக்காலத்தில் திசைகாட்டியின் உதவியுடன் மட்டுமே காடுகளுக்குள் இடங்களைச் சென்றடையவேண்டும். கொஞ்சம் இடம்மாறி போய்விட்டாலும் இந்திய இராணுவத்தினருடன் முட்டுப்பட வேண்டிவரும். அவ்வாறு இந்திய இராணுவத்தினரோடு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண்போராளியை தாங்கள் எவ்வாறு மீட்டுவந்தோம் எனவும் சொல்லுவார். அக்குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைக்கு சங்கர் அண்ணாவின் தனித்திறமைகளே கைகொடுத்திருந்தது என்றே சொல்லவேண்டும். சங்கர் அண்ணாவின் இவ்விசேட திறமைகளைப்பற்றி தலைவர் அவர்கள் வெளிப்படையாக பாராட்டியதுடன் மட்டுமன்றி அதனை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்.

விடுதலைப்போராட்ட பயணத்தில் போராட்ட அனுபவங்கள் என்பவை முக்கியமானவை. ஒவ்வொரு களத்திலும் ஏற்படும் தோல்வியும் வெற்றியும் அடுத்த களத்திற்கான செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தும். போராட்டகளத்தில் ஏற்படும் அனுபவங்கள் புதிய போர்வீரர்களுக்குச் சொல்லப்படவேண்டும். தனது போரியல் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும் என்பதில் சங்கர் அண்ணா எப்போதும் கவனமாக இருப்பார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தலைவருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார். தியாகி திலீபனின் நினைவுதினத்தில் தலைவர் உண்ணாநோன்பு இருப்பது வழமை. அன்றைய தினம் தலைவரைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சங்கர் அண்ணாவின் வாகனம் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது இன்னொரு முனையில் எமது தளபதிகளையும் தலைவரையும் கொல்வதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் இறங்கியிருந்தன.

தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான அன்று சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களை சிறிலங்கா அரசபடைகள் தனது நாசகாரத் திட்டத்தின் மூலம் கொன்றுவிட்டது. சங்கர் அண்ணா – 1971 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் ஐந்தாம் திகதி - அவரது நண்பர்களில் ஒருவரான கலாநிதி சிறிதரன் என்பவரின் நாட்குறிப்பேட்டில் குறித்த குறிப்பை இங்கு மீளவும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். அது இதுதான். "The most important thing in the Olympic games is not to win - but to take part…the essential thing in life is not to regret, But to have lived and fought well."

சுவடுகள் - 5. கேணல் ராயு/குயிலன்

Monday, August 24, 2009 / No Comments
இன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

இன்று (25-08-2009) கேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்தளபதி புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார்.

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார். ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

raju2விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.

~  ~  ~~  ~  ~~  ~  ~~  ~  ~~  ~  ~~  ~  ~~  ~  ~~  ~  ~

இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார். பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.

~   ~   ~~  ~  ~~  ~  ~~  ~  ~~  ~  ~

1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்றுநாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை. வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.

- தீவண்ணன் -

சுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன்

Friday, August 14, 2009 / No Comments
1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள்.

வட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு -  முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியினருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது.

விமானத்திலிருந்து வீசப்படும் சில குண்டுகள் வெடிக்காமல் விடுவதுண்டு. பெரும்பாலும் 250 கிலோகிராம் நிறைகொண்ட குண்டுகளே அப்போது சிறிலங்கா வான்படையின் பயன்பாட்டிலிருந்தன. வெடிக்காத குண்டுகளைச் செயலிழக்கச் செய்து இயக்கம் பயன்படுத்துவதுண்டு. ஒரு குண்டை வெட்டியெடுத்தால், சும்மா இல்லை சுளையாக 90 கிலோ கிராம் உயர்சக்தி வெடிமருந்து கிடைக்கும். பின்னாட்களில், குண்டை செயலிழக்கச் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு வெடிமருந்தை அகற்றாமல் அந்த விமானக்குண்டு அப்படியே கடற்புலிகளால் ஒருதேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. குண்டைச் செயலிழக்கச் செய்வதில் அந்நேரத்தில் எமக்குப் படிப்பித்துக் கொண்டிருந்த வானம்பாடி மாஸ்டரும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தார்.



அப்படியான அழைப்பொன்று தனக்குக் கிடைத்தபோது, கற்கைநெறியில் இருந்த எம்மையும் அழைத்துச்சென்று சொல்லிக்கொடுப்பதென்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்திருந்தார். அப்படிக் கிடைத்த சந்தர்ப்பமொன்றில்தான் நாங்கள் முப்பது பேர்வரை வந்து வட்டுவாகல் கரையில் தேடிக்கொண்டிருக்கிறோம். இங்கு வீசப்பட்ட இரண்டு குண்டுகளை நாங்கள் தேடியெடுத்துச் செயலிழக்கச் செய்ய வேண்டும். நாங்கள் தேடத்தொடங்கி இரண்டு நிமிடங்களிலேயே ஒரு குண்டைக் கண்டுபிடித்துவிட்டோம். மற்றதைத் தேடத் தொடங்கினோம்.

இரண்டாவது குண்டை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரைமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.
‘சரி, இப்ப கிடைச்ச குண்டைச் செயலிழக்கச் செய்திட்டு பிறகு மற்றதைத் தேடுவம்’ என்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்தார். அதன்படி அனைவரையும் கூட்டிவைத்து குண்டைப்பற்றிய அடிப்படைப் பொறியமைப்பையும், அதைச் செயலிழக்கச் செய்யும் முறையையும் விளங்கப்படுத்தினார். பின் தன்னோடு இன்னும் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு அக்குண்டைச் செயலிழக்கச் செய்தார். பத்து நிமிடத்துக்குள் வேலை முடிந்துவிட்டது. மீண்டும் இரண்டாவது குண்டைத் தேடத் தொடங்கினோம்.

பற்றைகளை முடித்து, எமது தேடுதற்பரப்பு இன்னும் அதிகரித்த்து. நந்திக்கடலின் கரைப்பகுதிகளையும் தேடினோம். குண்டு இருப்பதற்கான தடயங்களே இல்லை. மதிய வெயில் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் குண்டைத் தேடுவோமென்று நினைக்கவில்லை. வரும்போதே குண்டுகளைக் காட்டுவார்கள், அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் குண்டுகளை இனங்காண அவ்விடத்திற் பணியாற்றும் போராளிகள் யாரும் உதவியாக வரவில்லை. ‘குண்டைக் காட்டாமல் இவங்கள் எங்க போய்த் துலைஞ்சாங்கள்’ என்று திட்டிக்கொண்டே தேடிக்கொண்டிருந்தோம். அவர்களின் முகாம் பக்கம் யாரும் போய்க் கூப்பிடத் துணியவில்லை. எங்களோடு நின்ற கடற்புலிப் போராளிகளைக் கேட்டோம்,
‘டேய் நீங்கள் ஒராளெண்டாலும் போய் இடம் தெரிஞ்ச ஆரையேன் கூட்டிக்கொண்டு வாங்கோவேன்ரா’
‘சேச்சே… நாங்கள் அங்க போகேலாது’ என்றுவிட்டு அவர்களும் எம்மோடு தேடினார்கள்.



கொஞ்ச நேரத்தில் ஐந்துபேர் கடற்கரைப் பக்கமிருந்து வந்தார்கள். எங்களை விசாரித்து அறிந்துகொண்டார்கள். அதற்குள் ஒருவன், தனக்கு அந்தக் குண்டிருக்கும் இடம் தெரியுமென்று சொல்லி முன்வந்தான். நந்திக்கடலின் கரையோரச் சதுப்புநிலத்தில்தான் இடங்காட்டினான். அது ஒருவருடத்தின் முன்பு வீசப்பட்ட குண்டு. துல்லியமாக அவனாலும் இடத்தைச் சொல்லமுடியவில்லை. அதில் நின்ற ஒரு தில்லைமரம், பாதையிலிருந்து குண்டு விழுந்த தூரம் என்பவற்றைக் கணக்கிட்டு குண்டுவிழுந்த இடத்தைப் பருமட்டாகச் சுட்டினான். அது இப்போது நீரால் மேவப்பட்டிருந்தது.

அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். குடிக்க ஏதாவது அனுப்பிவிடுறம் என்று சொல்லிச் சென்றவர்களிடம், ‘வேண்டாம். இந்தக் குண்டை இப்ப எடுக்க ஏலாது. தண்ணி வத்தினபிறகுதான் வரவேணும். நாங்கள் இப்பவே வெளிக்கிடுறம்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட ஆயத்தமானோம்.

அப்போதுதான் நரேஸ் ஓடிவந்தான்.
“_ _ _ _ அண்ணை, வைகுந்தன் அண்ணா வந்திட்டுப் போறார். கதைச்சனியளோ? உங்களை மட்டுக்கட்டினவரோ? நீங்கள் அவரை மட்டுக்கட்டினியளோ?”

திகைத்துப் போனேன். உடனேயே என் மனக்கண்ணில் அந்த ஐவருள் வைகுந்தன் இனங்காணப்பட்டான். அது அவனேதான். அந்தச்சிரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக உதட்டை ஒருமாதிரிச் சுளித்துத் கதைப்பது, அது வைகுந்தனேதான்.
“எட கோதாரி… இவ்வளவு நேரமும் குண்டிருக்கிற இடம்பற்றி என்னோட கதைச்சுக் கொண்டிருந்திட்டுப் போனவன் என்ர வைகுந்தனோ?”

----------------------------------------------------------------

அவனின் இயற்பெயர் விமல். எனது ஊர்க்காரன்தான். ஐந்தாம் ஆண்டுவரை ஒன்றாகப் படித்தோம். என்னைவிட அவன் இரண்டுவயது மூத்தவன். ஆனால் என்னோடுதான் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாட்கூட பாடசாலையைத் தவறவிடமாட்டான். அவன் வருவதே விளையாடத்தான். அவனோடு இருக்கும் பொழுதுகள் மிகமிகச் சுவாரசியமாக இருக்கும். சிறுவயதிலேயே அவனுக்குத் தந்தையில்லை. மஞ்சு என்ற பெயரில் தமக்கையொருத்தி இருந்தாள். தாய், தமக்கை, இவன் என அவனது குடும்பம் சிறியது.

அவன் தனித்துவமானவனாக இருந்தான். இரண்டு விடயங்கள் அவனுக்குத் தெரியாது; அழுவது, கோபப்படுவது. இதுபற்றி இன்றும் நான் வியப்பாகச் சிந்திப்பதுண்டு. அவனை அழவைக்க அல்லது கோபப்படுத்த அப்போது நாங்கள் நிறைய முயற்சித்தோம். எதுவும் பலிக்கவில்லை. ஒருமுறை இரத்தம் வருமளவுக்கு அவனது பின்பக்கத்தில் பேனையால் ஒருவன் குத்தினான். வாயை உறிஞ்சி நோவை வெளிக்காட்டியதோடு சரி, குத்தியவனைச் செல்லமாக நுள்ளிவிட்டுச் சிரித்துக்கொண்டே போனான். வகுப்பறையில் அவன் அடிவாங்காத நாளே இருக்கமுடியாது. மொளியில் அடிமட்டத்தால் அடிவாங்கிவிட்டு யாராலும் அழாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் என்றுமே அழுததில்லை. ஒருகட்டத்தில் நாமே சலித்துப்போய் அவனை அழவைக்கும் / கோபப்பட வைக்கும் விளையாட்டுக்களை விட்டுவிட்டோம்.

Sea_Tigersஅந்தப்பாடசாலை வளவில் விளாத்திமரங்கள், மாமரங்கள், மகிழமரம் என்பன இருந்தன. வருடத்தில் முழுநாளுமே மாங்காயோ விளாங்காயோ காய்த்திருக்கும். விமல் பாடசாலை வரும்போது கொப்பி, புத்தகங்கள் கொண்டுவருவானோ இல்லையோ சம்பல் போட ஏதுவாக எல்லாச் சரக்கும் கொண்டுவருவான். அனேகமான நாட்களில் நாங்கள் மாங்காய்ச் சம்பலோ விளாங்காய்ச் சம்பலோ சாப்பிட்டிருப்போம். திருவுபலகை அலகொன்றைக்கூட பாடசாலையில் நிரந்தரமாக ஒளித்துவைத்திருந்தான் விமல். மரமேறத் தெரியாத எங்களுக்கு அவன்தான் எல்லாமே.

அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு வரைதான் வகுப்புகள் இருந்தன. அதன்பிறகு பாடசாலை மாறவேண்டும். நான் இரண்டு கிராமங்கள் தள்ளியிருந்த ஒரு கல்லூரியில் இணைந்தேன். விமல் என் கிராமத்துப் பாடசாலையொன்றிலேயே கல்வியைத் தொடர்ந்தான். சில மாதங்களிலேயே எமது சொந்த ஊர் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது. எல்லோரும் இடம்பெயர வேண்டியேற்பட்டது. அத்தோடு விமலுக்கும் எனக்குமான தொடர்பு இல்லாமற் போய்விட்டது.

பின்னொரு நாள் கேள்விப்பட்டேன், விமல் இயக்கத்துக்குப் போய்விட்டான் என. அதன்பின் அவனது தமக்கையிடமிருந்து அவ்வப்போது அவனைப்பற்றிக் கேட்டறிவேன். முதலில் படைத்துறைப்பள்ளியில் இணைக்கப்பட்டிருந்தான், பிறகு கடற்புலிகள் பிரிவில் இருப்பதாக அறிந்திருந்தேன். அவனது பெயர் வைகுந்தன் என்பதையும் அறிந்திருந்தேன். எனது போராட்ட வாழ்க்கையும் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தைமாதம், குடாரப்புப் பகுதியில் ஒரு கடமையாக நின்றிருந்தவேளை, எனது ஊர்க்காரப் போராளியொருவரைச் சந்திக்க நேர்ந்தது. 1995 இன் நடுப்பகுதியில் கடத்தப்பட்டிருந்த ஐரிஷ்மோனா கப்பல் அப்போது குடாரப்புக் கடற்கரையில்தான் அலையடித்துச் சேதமாகப்பட்ட நிலையில் கிடந்தது. அதைப் பார்க்கப் போனபோதுதான் இச்சந்திப்பு. வைகுந்தன் பக்கத்தில்தான் எங்கோ நிற்பதாக அவர் சொன்னார். அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. அப்போது முயன்றும் என்னால் முடியவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு வந்தபின்னும் அவனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட கற்கைநெறியில் இருந்தபோது அங்கே படிப்பதற்கென வந்திருந்த கடற்புலிப் போராளிகளுள் ஒருவன்தான் நரேஸ். இடையிடையே தனது முகாமுக்குச் சென்றுவருவான். அப்படிச் சென்றுவந்த ஒருநாளில்தான் வைகுந்தன் என்னை விசாரித்ததாகச் சொன்னான். வியந்துபோனேன். எமது படையணியிலிருந்து கடற்புலிக்குச் சென்றவர்களிடம் என்னைக்குறித்து விசாரித்து, இப்போது நான் நரேசோடு படித்துக்கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தான் வைகுந்தன்.

அவனைச் சந்திக்க வேண்டுமென்ற எனது அவாவையும் நரேசிடம் சொன்னேன். அப்போது வைகுந்தன் கடற்புலியின் ‘சாள்ஸ்’ அணியில் இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சந்திப்பது இலகுவான காரியமன்று. ஆனாலும் நரேஸ் எங்களிடையே தூதுவனாக இருந்தான். ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்பதை என்னிடமிருந்து வைகுந்தனுக்கும் வைகுந்தனிடமிருந்து எனக்கும் காவிக்கொண்டு திரிந்தான் நரேஸ்.

-----------------------------------------------------------------------

அதே வைகுந்தன்தான் கொஞ்சநேரத்துக்கு முன்பு என்னோடு உரையாடிவிட்டுச் சென்றவன். நானும் அவனும் யார்யாரெனத் தெரியாமலே குண்டிருக்கும் இடம்பற்றி ஆராய்ந்திருக்கிறோம். இப்போதே எப்படியாவது அவனைச் சந்தித்து விடுவதென்று நான் தீர்மானித்தேன். கால்மணி நேரம் பொறுக்கும்படி வானம்பாடி மாஸ்டரிடம் சொல்லியாயிற்று. தான் அவர்களின் தளப்பக்கம் போய் நுழைவாயிற் காவலரணில் நிற்பவரிடம் சொல்லி வைகுந்தனைக் கூட்டி வருகிறேன் என்று நரேஸ் சென்றான். என்னால் இருக்க முடியவில்லை. அங்கெல்லாம் போவது எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடுமென்பது எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவன் தடுக்கத் தடுக்க நானும் நரேசுடன் போனேன்.

காவலரணுக்கு முன்னமே இரண்டுபேர் வந்து வழிமறித்தார்கள். நல்லவேளை, அதிலொருவன் எங்களோடிருந்து கடற்புலிக்குப் போனவன். ‘வைகுந்தன் ஆக்களின்ர வண்டி இப்பதான் வெளிக்கிட்டது. இண்டைக்கு ஆளைப் பார்க்க எலாது’ என்று சொன்னான்.

தோல்வியோடு திரும்பினேன்.

veeravanakkamஅதன்பின், அன்பரசனின் வெடிவிபத்து, வானம்பாடி மாஸ்டரின் வெடிவிபத்து எல்லாம் நடந்து எமது படிப்பும் முடிந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட காலம் நீட்டி நிமிர்ந்து இருக்க முடியாதபடி வேலைகள். அன்பரசன் வீரச்சாவடைந்த வெடிவிபத்தின்போது காயமடைந்த நரேஸ் அதன்பின் படிக்க வரவில்லை. ஆனாலும் அவனோடு எனது தொடர்பு நீடித்தது. சில மாதங்களின் பின்னர் அங்கிங்கு என்று திரிந்து கடமையாற்ற வேண்டி வந்ததாலும் ஓரளவு ஓய்வு நேரம் கிடைத்ததாலும் வைகுந்தனைச் சந்திக்கும் ஆசையை நிறைவேற்ற எண்ணினேன். இருந்த கடற்புலித் தொடர்புகளுக்குள்ளால் முயற்சித்தபோது வைகுந்தன் சந்திக்க முடியாத நிலையிலிருந்தான். வைகுந்தனால் முடிந்தபோது அவன் என்னைச் சந்திக்க முயற்சித்துத் தோல்வியடைந்தான், ஏனென்றால் நான் அப்போது சந்திக்க முடியாத நிலையிலிருந்தேன். இப்படி மாறிமாறி நடந்தாலும் நரேஸ் எங்களில் ஒருவரைச் சந்திக்கும்போது அதே ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்ற விசாரிப்பைப் பரிமாறிக்கொண்டிருந்தான்

ஒருநாள், வழமையான வழிமுறைகளின்றி நேரடியாக நானிருந்த தளத்துக்குத் தொடர்பெடுத்து வைகுந்தன் காயம் என்ற தகவலை எனக்குத் தெரிவிக்கும்படி சொன்னான் நரேஸ். இப்படிச் சொன்னபடியால் ஏதாவது கடுமையான காயமாகத்தான் இருக்குமென்று நான் முடிவெடுத்தேன். அப்போது நான் வெளிச்சந்திப்புக்களைச் செய்ய முடியாத நிலையிலிருந்தேன். கொஞ்ச நாட்களில் நரேசிடமிருந்து தகவல் வந்தது, வைகுந்தனுக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சியில்லை என்று.

சிலநாட்களின் பின்னர் முல்லைத்தீவுப் பக்கம் போனபோது கடற்புலிப் போராளிகளைச் சந்தித்து வைகுந்தன் இருக்கும் மருத்துவமனையைத் தெரிந்துகொண்டேன். எனக்கான நேரமும் வசதியும் கிடைத்தபோதும்கூட நான் ஏனோ அவசரப்படவில்லை. ஒரு முழுநாளை அவனோடு ஒதுக்க வேண்டுமென்று யோசித்திருந்தேன். இடுப்புக் கீழே உணர்ச்சியில்லை என்பதை உயிராபத்தான ஒரு விடயமாக நான் கருதியிருக்கவில்லை. ‘வாறகிழமை ஒருநாள் ஒதுக்கிப் போகவேண்டும்’ என்று ஒவ்வொரு கிழமையும் தள்ளிக்கொண்டே போனது.

ஆனால் வைகுந்தனின் உயிர் எனக்காகக் காத்திருக்கவில்லை. ஒரு கடமை காரணமாக பத்துநாட்கள் ஓரிடம் போய் நின்றுவந்த பின்னால் புதுக்குடியிருப்பில் வைத்து ஊர்க்காரர் ஒருவர்தான் சொன்னார் வைகுந்தன் வீரச்சாவென்பதை. வழமையாக புலிகளின் குரல் செய்திகளையும் அறிவித்தல்களையும் கேட்டுவிடும் நான் அந்தப்பத்து நாட்களும் வானொலிகூடக் கேட்கவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

நான் அவனைச் சந்திக்கத் தேடித்திரிந்த காலங்களில் ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருந்தேன். பளார் என்று கன்னத்தில் அறைந்து, அவன் விமலாக இருந்ததுபோல்தான் இப்போதும் கோபமோ அழுகையோ வராத வைகுந்தனாக இருக்கிறானா என்று சோதிப்பதே அது.

*  கடலில் நடந்த சண்டையொன்றில் கப்டன் நரேசும் வீரச்சாவடைந்து விட்டான்.

சுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்

Thursday, August 6, 2009 / No Comments
கப்டன் அன்பரசன் பற்றியும் அவன் வீரச்சாவடைந்த நிகழ்வு பற்றியும் கடந்த சுவட்டில் ‘தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன்’ என்ற தலைப்பில் பார்த்திருந்தோம்.

கப்டன் அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதன்பின் வந்த சில வியாழக்கிழமைகளை ஒருவித பீதியோடு கழிக்கும் வகையில் அந்த இரண்டாவது வெடிவிபத்து ஆழ்ந்த பாதிப்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது.

அன்பரசனின் சம்பவத்தின் பிறகு எமது கற்கைநெறி திட்டமிட்டபடியே நகர்ந்தது. அன்பரசனையும் காயமடைந்த இருவரையும் சேர்த்து மூன்றுபேர் குறைந்திருந்தார்கள். விபத்து நடந்து அடுத்தநாளே கட்டடத்தைத் துப்பரவாக்கி எல்லாம் பழையபடி ஒழுங்கமைத்து படிப்பைத் தொடங்கியிருந்தோம். எவரும் துவண்டுபோய்விட வானம்பாடி மாஸ்டர் விட்டுவிடவில்லை.

வானம்பாடி மாஸ்டர் எமக்குக் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர். இயக்கத்தின் ‘வெடிபொருள் பொறியமைப்புக் கல்வி’ தொடர்பில் அந்நேரத்தில் அவரே பொறுப்பாக நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியமைப்புக்கள் தொடர்பில் நீண்டகால அனுபவமும் மிகத் தேர்ச்சியும் கொண்டிருந்தார். பொறியமைப்புச் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவதொன்றும் இலகுவான செயலன்று. கணனிகள் உட்பட நவீன சாதனங்கள் எவையுமின்றி வெறும் கரும்பலகையில் கீறிமட்டுமே கற்பிக்க வேண்டிய நிலையிற்கூட மிக அழகாக எல்லோருக்கும் விளங்கும் வணக்கம் கற்பிக்க அவரால் முடிந்தது. மிக எளிய எடுத்துக்காட்டுக்களோடு பொறியமைப்புத் தொகுதிகளின் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவார்.



கற்சிலைமடுவில் தங்கியிருந்து நாம் படித்துக்கொண்டிருந்தபோது கிழமைக்கொரு நாள் வந்து தனது பாடத்தைக் கற்பித்துச் செல்வார். இவரின் பாடம் மிக உற்சாசமானதாக அமைந்திருக்கும். அப்போது பிறைசூடி எங்களோடு படித்துக்கொண்டிருந்தான். அவன் வெடிபொருள் உற்பத்திப் பிரிவிலிருந்துதான் வந்திருந்தான். ஏற்கனவே வெடிபொருட்கள் மட்டில் கொஞ்சம் அனுபவங்கள் இருந்தன அவனுக்கு. கொஞ்ச நாட்களின்பின் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டார் வானம்பாடி மாஸ்டர். அவ்வளவுக்கு வெடிபொருட் பொறியமைப்புக்கள் மட்டில் மிகவும் ஆர்வமாகவும் திறமையான கற்கையாளனுமாய் இருந்தான் பிறைசூடி.

வானம்பாடி மாஸ்டர் கற்பிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். தனக்குத் தெரிந்த அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர். அதற்கு அவர் வளர்ந்த விதமும், அதாவது அவர் தனது வெடிவொருள் அறிவைப் பெருக்க முற்பட்டபோது ஏற்பட்ட தடங்கல்களும், சிரமங்களும் முக்கிய காரணம். தனது தனிமுயற்சியாலேயே ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொண்டவர் அவர். அது தொடர்பாக தனது அனுபவங்கள் பலதைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார். தனது நிலைமை மற்றவர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதென்பது அவரது முக்கிய நோக்கம்.

குண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள்.

கற்பித்தல் திட்டத்தில் இல்லாத விடயங்களைக்கூட எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அவரது எண்ணம். வெடிக்காத கிபிர் குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதைக் காட்டித் தந்ததுட்பட அப்படி நிறையச் செய்திருக்கிறார். அவருக்கேற்றாற்போல் மாணவர்களும் நல்ல ஆர்வமானவர்களாயும் கெட்டிக்காரராயும் அமைந்தது அவருக்கு மிகவும் உற்சாகமாய் அமைந்தது.

1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம். கற்கை நெறியின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தோம். வெடித்தல் தொகுதிகளின் பொறிமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்காக இயக்கத்தின் பொறிமுறைக் களஞ்சியம் இருக்கும் இடத்திற்கு அனைவரும் போயிருந்தோம். ஒருகிழமை அங்கேயே தங்கியிருந்து அனைத்து வெடிபொருட்களையும் பார்த்துப் படிப்பதே நோக்கம். கற்சலைமடுவிலிருந்து கல்மடுவுக்கு எமது படிப்புத்தளம் மாறியது.



அக்களஞ்சியம் வானம்பாடி மாஸ்டரின் பொறுப்பிலேயே இருந்தது. அங்குத் தங்கியிருக்கும்மட்டும் கற்கைநெறியிலுள்ள போராளிகளுக்கு அவரே பொறுப்பாளர். எமக்கான உணவு விடயத்தில் அதிக அக்கறை காட்டினார். ஒருநாள் இரவு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இருவரோடு அவர் வேட்டைக்குப் போய் எமக்காகப் பன்றி சுட்டுக்கொண்டு வந்தார்.

அன்று ஜூன் மாதம் பத்தாம் நாள். திகதி ஞாபகமிருப்பதற்குக் காரணம் அன்றுதான் சுதந்திரபுரப் படுகொலை நடந்தநாள். பின்னேரம்தான் எமக்குச் செய்தி வந்தது. அன்று எவரும் குளிக்கப் போகவில்லை. அனைவரும் உடைந்து போயிருந்தோம். அன்று இரட்டிப்புத் துன்பம். ஒன்று பொதுமக்கள் படுகொலை, மற்றது அம்மா அண்ணையின் வீரச்சாவு.

அம்மா அண்ணைக்கு ஏன் அந்தப்பேர் வந்ததென்று சரியான ஞாபகமில்லை. ‘அன்பு’ என்பதுதான் அவருடைய பதிவுப்பெயர். காட்டுக்குள்ளேயே அவருக்கு அம்மா என்ற பெயர் வந்ததென்று கேள்விப்பட்டோம். பேருக்கேற்றாற்போல், இயக்கத்துக்கு அவர் அம்மாவாகவே இருந்தார். போராளிகள் அனைவருக்குமான வழங்கற் பொறுப்பாளர் அவர்தான். எந்த நெருக்கடிக்குள்ளும் அவர் சாப்பாடு தந்துகொண்டிருந்தார்.

ஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.

இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒருவரின் இழப்பின்போது ‘இனி என்ன செய்யிறது?’ என்ற கேள்வி எழுந்த சந்தர்ப்பங்கள் மிகச்சில தாம். அம்மா அண்ணையின் வீரச்சாவும் அவற்றிலொன்று. அன்று நாங்கள் மிகவும் நொடித்துப் போயிருந்தோம். வானம்பாடி மாஸ்டரும்தான். ஆனால் எம்மைச் சோரவிடாமலும் குழப்பமில்லாமலும் வைத்திருக்க வேண்டிய தேவை அவருக்கிருந்தது. அன்று இரவு நீண்டநேரம் எம்மோடிருந்து கதைத்தார். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் எமக்கான படிப்பு முடிந்துவிடுமென்ற நிலையில் அவர் நிறைய விடயங்களைக் கதைத்தார்.

மறுநாள், ஜூன் பதினோராம் நாள், வியாழக்கிழமை. அன்பரசன் வீரச்சாவடைந்து சரியாக ஒருகிழமை. அன்று மதியத்தோடே படிப்பை முடித்திருந்தார். எம்மைக் குளிக்க அனுப்பிவிட்டு பிறைசூடியும் வானம்பாடி மாஸ்டரும் நின்றுகொண்டார்கள். நாங்கள் வழமைபோல் குளத்துக்குப் போனோம், குளித்தோம், திரும்பி வந்துகொண்டிருந்தோம்.

அணைக்கட்டிலிருந்து இறங்கி சிறிதுதூரம்தான் வந்திருப்போம். திடீரென்று ஒரு வெடிச்சத்தம். எமது தளப்பக்கம்தான் கேட்டது. அடிக்கடி இச்சத்தங்களைக் கேட்டுப் பழகியிருந்ததால் வெடிச்சத்தங்கள் எமக்குள் உடனடித் தூண்டல்களைச் செய்வதில்லை. அதன் காரணத்தால் இச்சத்தத்தைக்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் கதைத்துக்கொண்டு நடந்தோம். அப்போது பாதைக்கரையாக கச்சானுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்த பொதுமகன் ஒருவர்

‘ஐயோ! இண்டைக்கு ஆரோ தெரியேல…’

என்று தலையில் கைவைத்து எமது தளப்பக்கம் பார்த்துச் சொன்னபோதுதான் உறைத்தது. எமது தளத்திலிருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. விழுந்தடித்து ஓடினோம். அதற்குள் வீதியாற் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர் வளவுக்குள் நின்றிருந்தனர். வானம்பாடி மாஸ்டரும் பிறைசூடியும் நிலத்திற் கிடந்தனர். களஞ்சியக் கட்டடத்திலிருந்து சற்று எட்டவாகத்தான் ஏதோ செய்துகொண்டிருந்திருக்க வேண்டும். களஞ்சியத்துக்கு எந்த ஆபத்துமில்லை. வானம்பாடி மாஸ்டரிடம் அசைவே இல்லை. பிறைசூடி சுயநினைவோடு இருந்தான். வோக்கியில் உரிய இடத்துக்கு அறிவித்துவிட்டு இருவரையும் அப்புறப்படுத்தும் வேலையைத் தொடங்கினோம். அன்பரசனின் நிகழ்வோடு, மருத்துவமனையிருக்கும் இடம், அதை அடையும் பாதை என்பவற்றை அறிந்திருந்தோம். வாகனம் வந்து சேர்வதற்குள் குறிப்பிட்ட தூரமாவது பிறைசூடியைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதுதான் திட்டம்.



சாரங்களைக் கொண்டு காவுதடி செய்து பிறைசூடியைத் தூக்கிப் போனோம். எல்லாப் போராளிகளும் வந்து சேரவில்லை. பொதுமக்களே உதவினார்கள். வானம்பாடி மாஸ்டரைக் காப்பாற்றுவது சாத்தியமில்லையென்பது உடனேயே தெரிந்திருந்தது. அவர் உடனடியாகவே இறந்திருக்க வேண்டும். அப்போது பிறைசூடி சுயநினைவோடுதான் இருந்தான். வேதனையில் கத்திக்கொண்டிருந்தான்.

நாம் தங்கியிருந்த தளத்தின் அருகில்தான் பிறைசூடியின் குடும்பத்தினர் இருந்தனர். அவனது அக்கா வந்துநிற்பதாகச் சொல்லி அன்று மதியம்தான் வீட்டுக்குப் போய் வந்திருந்தான். அவ்வீட்டின் வழியாகத்தான் இப்போது பிறைசூடியைக் காவிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம். அப்போது நெல் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஓர் உழவு இயந்திரத்தின் ஓட்டுனர் உடனடியாக நிறுத்தி பிறைசூடியை மூட்டைகளின்மேல் ஏற்றச் சொன்னார். ‘இல்லையண்ணை, நெல்மூட்டையள் வீணாப்போடும். எங்களுக்கு வாகனம் வந்துகொண்டிருக்கு, நீங்கள் போங்கோ’ என்றோம். அவரும் விடவில்லை. அதற்குள், எதையோ மூடிக்கட்டியிருந்த யு.என்.எச்.சி.ஆர் கூடாரமொன்றைப் பெண்மணியொருத்தி கொண்டுவந்து தர, அதை நெல்மூட்டைகள் மேல் போட்டு பிறைசூடியை ஏற்றத் தயாரானோம். அந்நேரம் எமக்குரிய மருத்துவ வாகனம் வந்துவிட்டதால் அதிலேயே பிறைசூடியை ஏற்றிக்கொண்டு போனோம்.

இவ்வளவும் நடந்தது பிறைசூடியின் வீட்டுப் படலையடியில்தான். அவனது வீட்டுக்காரர் வாசலில்தான் நின்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறைசூடியை அடையாளங்காணவில்லை. அந்நேரம்பார்த்து பிறைசூடி வாய்திறக்கவில்லை.

மருத்துவமனையில் சேர்த்து அரைமணி நேரத்தில் அவன் சாவடைந்த செய்தியை எமக்குச் சொன்னார்கள். தளத்தில் என்ன நடந்ததென்று தன்னைக் கொண்டுபோகும் வழியில் பிறைசூடி சொல்லிக்கொண்டிருந்தான். நாமனைவரும் குளிக்கப் போனபின் பொறித்தொகுதியொன்றைச் செயலிழக்கச் செய்யும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அது மிக ஆபத்தான, பயன்படுத்த முடியாதவிடத்து வெடிக்கவைத்து அழிக்கும்படி உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு வெடிபொருள். அப்பொறியமைப்பைப் பற்றி அறியும் தேவை எமது கல்வித்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் கற்கை நெறியின் இறுதியாக அப்பொறியமைப்பை வெட்டிக்காட்டி அதன் உள்ளமைப்பையும் செயற்பாட்டையும் கற்பிக்க வேண்டுமென்று வானம்பாடி மாஸ்டர் நினைத்திருந்தார். ஆனால் அது அவரையும் பிறைசூடியையும் காவுகொண்டு விட்டது.

குண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள். போராளிகளுக்கு அவை இன்னும் பழக்கமானவையே.

ஆனால் வானம்பாடி மாஸ்டரின் இறப்பு எல்லோரையும் உலுக்கிப் போட்டது. ஓர் இறப்பென்ற வகையிலோ, சிதைந்த உடலைப் பார்த்தோமென்ற வகையிலோ அந்த அதிர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ‘வானம்பாடி மாஸ்டர்’ என்ற ஆளுமைக்கு இப்படி நடந்ததென்பதே முக்கிய விடயமாக இருந்தது. சரியாக ஒருகிழமை இடைவெளியில் நடந்த இரண்டாவது வெடிவிபத்தாக அது அமைந்ததும் ஒரு காரணம். மருத்துவமனையிலிருந்து தளம் திரும்பியபோது நிலைமை தலைகீழாக இருந்தது. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திக்காக ஒடுங்கிப்போய் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. எழுந்து நடக்கச் சக்தியற்றவர்கள் போல் சுருண்டிருந்தார்கள்.

அதுவரை தான் களவாகச் சேர்த்து வைத்திருந்த ஈரங்குல நீளமான திரி, வெடிப்பதிர்வு கடத்தி, வெடிப்பிகள் போன்ற ஆபத்தற்ற மாதிரிப் பொருட்களை எல்லாம் தூக்கிக் கொண்டு கோபி குளத்தைநோக்கி ஓடிப்போனான். கையிலிருந்தவற்றையெல்லாம் குளத்தில் எறிந்தான். அவ்வளவுக்கு ஒவ்வொருவரையும் அச்சம்பவம் பாதித்திருந்தது.

பொறியியற்றுறைப் போராளிகளையும் அச்சம்பவம் உலுக்கியிருந்தது. வானம்பாடி மாஸ்டருக்கு இப்படி நடந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. ‘தம்பிமார், நீங்கள் இந்தநிமிசமே வெளிக்கிட்டு உங்கட இடத்துக்குப் போங்கோ ராசா’ என்று சொல்லி அன்றிரவே எம்மை அனுப்பிவைத்தார்கள்.

நாங்கள் இயல்புக்கு வரச் சிலநாட்கள் எடுத்தன. போராளிகளை மீள்நிலைக்குக் கொண்டுவருவது இலகுவானதாக இருக்கவில்லை. தொடர்ந்தும் வெடிபொருட்களோடு செயற்பட வேண்டிய துணிவையும் விருப்பையும் அவர்களிடம் தக்கவைப்பது முக்கியமானதான இருந்தது. எல்லாவற்றையும் வென்று திட்டத்தில் மிச்சமிருந்தவற்றையும் கற்று வெற்றிகரமாக எமது கற்கைநெறியை முடித்தோம். அத்தொகுதியில் வெளிவந்த பலர் தத்தமது படையணிகளிலும் பிரிவுகளிலும் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றினர். இயக்கம் வளர்ந்தது, காலம் கடந்தது.

ஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.

=========================================

* கோபி கடற்புலிகள் பிரிவிலிருந்து படிக்க வந்திருந்தவன். பின்னாளில் வினியோகப் பணியில் சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் கோபியாக வீரச்சாவடைந்தான்.

** வானம்பாடி மாஸ்டருக்குப் பின்னர் நிருபன் மாஸ்டர் அவரின் பணியை ஏற்றுச் செயற்பட்டார். பின்னர் நடந்த இன்னொரு வெடிவிபத்தில் கப்டன் நிருபனும் வீரச்சாவடைந்தார்.