News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category "அரிச்சந்திரன்"

தமிழர் தேசத்தை கட்டமைக்கும் பயணம்

Wednesday, September 18, 2024 / No Comments




தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 01


தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் சிறிலங்கா சனாதிபதிக்கான தேர்தலுக்கான களத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் தமிழ் மக்களிடத்தில் மூன்று விதமான அணுகுமுறைகள் இருந்து வந்திருக்கின்றன. மோசமான எதிரியை நரித்தனமான எதிரியை வைத்து தோற்கடித்தல் அல்லது மென்வலுவை பயன்படுத்தி கெட்டவரை நல்லதாக்க வாக்களித்தல் அல்லது முற்று முழுதாக புறக்கணித்தல் என்பவையே 2009 இற்குப் பின்னர் தமிழர்கள் தமிழ்த் தேசிய தளத்தில் எடுத்த முன்னெடுப்புகளாக இருந்தன.


சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றமே எப்போதும் அமையக்கூடிய களச்சூழலில், தமிழ் பேசும் மக்கள் தங்கள் வகிபாகத்தை செலுத்தக்கூடிய தளமாக சனாதிபதிக்கான தெரிவு அமையும் என்றும் அது அவர்களுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பைத் தரும் என்ற எண்ணம் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தொடர்ச்சியாக ஆட்சிக் கட்டிலேறிய சனாதிபதிகள் சிங்கள பேரினவாதத்தின் அதிகார மையமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றார்கள். அதன் நீட்சியாக, 2019 இல் நடைபெற்ற தேர்தலில் முழுமையாக சிங்கள மக்களின் வாக்குகளால் அன்றைய சனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.


ஆனால், அவர் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வருடங்களில் நிறைவேற்று அதிகாரம் உள்ள சனாதிபதி என கருதப்பட்ட அந்தப் பதவியில் அமர்ந்தவராக இருந்தபோதும், நாட்டைவிட்டு தப்பியோடும் நிலைக்குச் சென்றமை சிறிலங்காவின் அரச கட்டமைப்பில் பல மாற்றங்களுக்கான புறநிலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இனிவரும் சனாதிபதி தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்குகள் ஒருவரை நோக்கி திரளாமல் சிதறி, விருப்பு வாக்குகளில் தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்படுகின்றது. தெரிவு செய்யப்படும் சனாதிபதி கூட நாடாளுமன்றத்தின் ஊடாகத்தான் ஆட்சியை தொடரமுடியும். முன்னரைப் போல, ஆட்சிக்கட்டமைப்புகளில் சனாதிபதியால் நேரடி தலையீடு செய்வது கடினம்.


இவ்வாறு சிங்கள அதிகார மையத்திற்கான கட்சிகள் சிதறியிருந்தாலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான விடயத்தில் அவற்றின் போக்கில் மாற்றங்கள் ஏற்படவில்லை. வெறுமனே பொருளாதார பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி, சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தை கொண்டு நடத்துவதில் தான் அவர்கள் குறியாக இருக்கின்றனர். போர் முடிவடைந்து 15 ஆண்டுகளின் பின்னரும் கூட தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்களிலோ அல்லது நீதி சார் விடயங்களிலோ அல்லது நினைவேந்தல் சம்பந்தப்பட்ட விடயங்களில் கூட, தமிழர் தரப்புடன் சகோதர இனமாக இணைந்து நிற்கின்ற நிலை சாதாரண சிங்கள மக்களிடமோ சிங்கள செயற்பாட்டாளர்களிடமோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளிடமோ இன்னமும் ஏற்படவில்லை. மாறாக, சிங்கள பேரினவாத நகர்வுகள் ஊடாக இலங்கைத்தீவை சிங்கள தீவாக மாற்றிவிடவே முயன்று வருகின்றார்கள்.


இந்த நிலையில், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை இணைக்கவும் தமிழ் மக்களின் அரசியல் தேடலுக்கான வெளியை விசாலப்படுத்தவும் என ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. அத்தகைய முன்னெடுப்பிற்கு பல்வேறு தரப்பட்டவர்களின் ஆதரவான குரல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் புறக்கணிப்பும் தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குப்பலம் என்பதுவும் ஒரே அடிப்படையான நோக்கங்களையே கொண்டிருந்தபோதும் மக்களை ஆர்வத்துடன் இணங்கச்செய்கின்ற பொறிமுறையாக தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது.


ஆனால், இதன் ஆரம்ப நிலையில் செயற்பட்ட சில கட்சிகள் மற்றும் அதன் தனிநபர்கள் மீதான நம்பகத்தன்மையை முன்வைத்து, இத்தகைய முயற்சி தவறானது எனவும், குறிப்பிடத்தக்களவான வாக்குகளை பெறமுடியாது போனால் அது தமிழ்த் தேசியத்திற்கான தோல்வி எனவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.


இங்கு தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற தெரிவை தமிழ்த் தேசியத்திற்கான தெரிவாக முன்வைத்து பலமாக நகரும்போது, தளம்பலாக இருக்கும் அரசியல்வாதிகளை உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும். குறைகுடங்களை நிறைகுடங்களாக மாற்றுவது என்பது தொடர் போராட்டம். நிறைகுடங்களை நிறைகுடங்களாக பேணுவது என்பதும் இன்னொரு சவாலான போராட்டம். எனவே, தமிழ் மக்களாக திரண்ட சிந்தனை எழுச்சி மூலமே அதனை அடையமுடியும். 


அத்தோடு, தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான வாக்குப்பலம் என்பது எண்ணிக்கையை வைத்து தீர்மானிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதன் கனதியை வைத்தே தீர்மானிக்கவேண்டும். பொங்குதமிழ் மக்கள் திரட்சி என்பதும், எழுக தமிழ் மக்களின் திரட்சி என்பதும் எண்ணிக்கை அல்ல கனதியையே மையப்படுத்தியது. நாடாளுமன்ற ஆசனங்களை வைத்து தமிழ்த்தேசிய அரசியலை மதிப்பிட்டாலும் அதன் எண்ணிக்கைகளை வைத்து நாம் மதிப்பிடுவதில்லை அதன் கனதியை வைத்தே மதிப்பிடுகின்றோம். அந்தக் கனதியை உருவாக்க எத்தனை இலட்ச வாக்குகள் வேண்டும்?


மேலும் தமிழ்ப்பொது வேட்பாளர் தெரிவு என்பது, இந்த சனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல அடுத்த சனாதிபதி தேர்தலிலும் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும். அத்தகைய போக்கே சிங்கள பேரினவாதிகளை பண்புருமாற்றத்தை நோக்கி நகர்த்தும். அதுவே, தமிழ்த் தேசியத்திற்கான இருப்பை பலப்படுத்தி வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும். 


தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 02


தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் கட்சிகள் கடந்து அனைத்து மட்டத்திலும் ஓரளவுக்கு கவனத்தை பெற்றிருக்கின்றது. குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சியில், ஆரம்பித்து வைத்தவர்களை விட இடையில் வந்தவர்களே அதனை உத்வேகமாக கொண்டுசெல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வேளையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் எழும் சில கேள்விகளுக்கு இப்பத்தி ஊடாக விளக்கங்களை தர விரும்புகின்றோம்.


தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தெரிவு என்பது இனங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் என்றும், சனாதிபதித் தேர்தலில் தான் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என தமிழ் பேசும் மக்கள் ஒருமித்த முடிவை எடுப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. எனவே அந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. 


நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாணசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலிலோ கட்சிகள் ரீதியாக இனங்கள் ரீதியாக பிரிவுகள் இருக்கும் என்றும் ஒருமித்து நிற்பதற்கான களம் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால், இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததாக சொல்லப்படுகின்ற 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சிக்கு வந்த பேரினவாத தலைமைகள் தொடர்ந்தும் தமிழர்களை அடக்கியதன் காரணமாகவே,  சுமார் 76 ஆண்டுகளின் பின்னர் - பல்வேறு பட்ட அனுபவங்களின் பின்னர் - தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவு முன்வைக்கப்படுகின்றது என்பதை நாம் நோக்க வேண்டும்.


பன்மைத்துவத்தை புரிந்துகொள்ளாத சனாதிபதி வேட்பாளர்களும், அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தையே முன்னிறுத்தும் வரை அவர்களை மாற்றத்தை நோக்கி நகரக்கூடிய அழுத்தத்தையே நாம் வழங்கவேண்டும். அந்த வகையில், தமிழர்களுக்குள்ளே கட்சிகள் என பிரிந்து நிற்கும் தலைமைகளும், தேசிய சிந்தனையை விட்டு விலகி நிற்கும் மக்களையும், ஒன்று திரட்டுதற்கு சனாதிபதி தேர்தலையும் ஒரு கருவியாக தமிழர் தரப்பு பயன்படுத்த விளைகின்றது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.


இரண்டாவதாக, தேர்தல் புறக்கணிப்பு மூலம் சிங்கள பேரினவாத வேட்பாளர்களை நிராகரிப்பதான கருத்து முன்வைக்கப்படுகின்றது. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 2005 இல் புறக்கணிப்பை செய்ததனை மேற்கோள் காட்டப்படுகின்றது. தேர்தல் புறக்கணிப்பு என்பது அதன் பிரயோகத்தில் இன்னொரு வேட்பாளருக்கு சாதகமான சூழலேயே ஏற்படுத்தும். அதாவது, தமிழர்களின் விடயத்தில் அதிகம் விலகிநிற்கும் வேட்பாளருக்கு அது சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பது யதார்த்தம் ஆகும். ஏனென்றால் கிடைக்கின்ற வாக்குகளில் தான் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகின்றார். எனவே, சிங்கள கடும்போக்காளர்களை நோக்கி நெருங்கி நிற்கின்ற வேட்பாளருக்கே சாதகமான நிலையை தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பு உருவாக்குகின்றது.


அப்படியானால், 2005 இல் எடுக்கப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு என்பது பொருத்தமற்ற முன்னெடுப்பா? அன்றைய தமிழர் தரப்பின் வலுநிலையை பொறுத்தவரை தேர்தல் புறக்கணிப்பு என்பது பல கோணங்களில் சரியான செயற்பாடாகவே இருந்தது. அன்றைய நிலையில் தமிழர் தரப்பை நெருங்கி நின்ற வேட்பாளராக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தார். எனவே அவருக்கு அந்த எதிர்ப்பு நிலையை தெரியப்படுத்தவேண்டியிருந்தது. மேலும், தமிழர் தரப்பு ரணிலுக்கு ஆதரவளிப்பார்கள் என கருதப்படுமாக இருந்தால் அதனால் சிங்கள தரப்பின் வாக்கை ரணில் இழக்க கூடிய சூழலும் இருந்தது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தக் கூடிய அணுகுமுறையாகவே தேர்தல் புறக்கணிப்பு அன்றைய சூழலில் அமைந்திருந்தது.


எனவே, இன்றைய களநிலைமையில் தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான விடயத்தில் தமிழர்களிடத்திலும் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் பதிப்பதற்கான உத்தியாக தமிழ்ப் பொதுவேட்பாளர் அமைந்துள்ளதை காணலாம்.


மூன்றாவதாக, தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் முன்னெடுத்தவர்கள் தொடர்பில் உள்ள விமர்சனங்களை முன்வைத்து, அத்தரப்பிற்கான அங்கீகாரமாக இந்த தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் முன்னகர்த்தப்படுமோ என்ற சந்தேக நிலை சில மட்டங்களில் முன்வைக்கப்படுகின்றது. இங்கு தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பிலான விடயங்கள் அனைத்தும் எந்தவொரு கட்சி சார்ந்தும் முன்னெடுக்கப்படவில்லை. பொது வேட்பாளராக நிற்கும் அரியநேத்திரனை மையப்படுத்தியும் தேர்தல் பரப்புரைகள் செய்யப்படவில்லை. தமிழ்த்தேசிய மக்களை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமாகவே இதனை பார்க்கவேண்டும். அதன் ஊடாக, காலம்காலமாக சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட வரலாற்றினை அழுத்தமாக பதிவு செய்யலாம்.


கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களை இணைக்கக்கூடிய தூரநோக்குடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய அரசியல் கட்சியோ, அரசியல் இயக்கமோ தோற்றம் பெறாதது போரில் பெரும் தியாகங்களை புரிந்த தமிழினத்தின் துயரநிலையாகும். இவற்றை தாண்டி பொதுத்தளத்தில் அனைவரையும் செயற்பாட்டு தளத்தில் இணைப்பதன் மூலமே பொருத்தமான தலைமைத்துவம் தோற்றம் பெறும். அதற்கான வெளிகளை உருவாக்குவோம். வழிகள் தானாக உருவாகும்.


தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 03


தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்வைக்கப்பட்ட பின்னர், எதிர்பாராத மக்கள் ஆதரவு பரவி வரும் அதே நேரத்தில், அதனை எதிர்ப்பதற்காக எதிரும் புதிருமான அரசியல் கட்சிகள் அதன் ஆதரவாளர்கள் வட்டம் என்பன இணைந்திருப்பது தமிழர் எதிர்காலம் எத்தகைய சிக்கலான பாதையில் நகர்கின்றது என சிந்திக்கவைக்கின்றது.


சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கின்ற சுமந்திரன் சார்பு அணியும் அதன் ஆதரவாளர்களும் மிகவும் வேகமான அவர்களது தமிழ்ப் பொதுவேட்பாளர் எதிர் பரப்புரைகளை முன்னெடுக்கின்றபோது, தேர்தல் புறக்கணிப்பு அணியாக செயற்படுகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியும் அதன் ஆதரவாளர்களும் இன்னொரு விதமாக எதிர் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.


இங்கு இந்த இரு தரப்பினரின் நோக்கமும், பொது வேட்பாளர் தெரிவு பொது மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்பது. அதற்கு காரணம் அப்பொதுவேட்பாளர் ஆதரவு அணியில் இருப்பவர்களிற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றும், தாங்கள் முன்வைக்கும் அரசியல் தெரிவு மீது கேள்வி எழக்கூடாது என்ற நிலையுமாகும்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரை சஜித்தை ஆதரித்தால் இந்தியாவின் அடிமை என்பார்கள். ரணிலை ஆதரித்தால் இந்தியப் புலனாய்வின் முகவர் என்பார்கள். பொதுவேட்பாளரை ஆதரித்தாலும் இதில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது புலனாய்வு நிறுவனம் ஒன்றோ சம்பந்தப்பட்டவர்கள் என்பார்கள். இவர்களுக்கும் பொதுவேட்பாளர் விடயம் என்பது கோட்பாட்டு ரீதியில் சரி என்றாலும் அதனை முன்னெடுப்பவர்கள் அனைவரும் இந்தியாவின் அடிமைகள் தான். அவர்களது முடிவிற்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்தால் தமிழ்ச் சிவில் சமூக மையமும் இந்தியாவின் அடிமைதான். மூத்த போராளி காக்கா அண்ணையும் இந்தியாவின் அடிமைதான்.


பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என ஒரு பழமொழி உண்டு. புதுமொழியாக, பானைக்குள் இருப்பது தானே அகப்பையில் வரும் என்ற யதார்த்த நிலையை புரிந்துகொள்ளாமல் கனவுலகில் சஞ்சரிக்க முடியாது. தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய களநிலை இல்லை. பத்து வீத வாக்குகளோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட காலமும் இருந்தது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு தமிழர்களின் விடயத்தில் சிக்கலான நிலை என்றால் எதிர்க் கட்சியில் உள்ளவர்களே கட்சி மாறி ஆதரவு கொடுத்த நிலையும் உண்டு. இதனை விட தமிழர் தாயகத்தில் தமிழர்கள் பல பிரிவுகளாக பிளவுண்டு நிற்கின்ற நிலையும் அதன் பலவீனமான அரசியல் தலைமைத்துவங்களும் உண்டு. இப்படியான நிலையில் இருக்கின்ற பானைக்குள் இருந்து எடுக்க கூடியது என்ன?


மேலும், தேர்தல் புறக்கணிப்பு என்பது இராசதந்திர ரீதியிலான தற்காப்பு முறை என்பது வாதமாக முன்வைக்கப்படுகின்றது. அதாவது, சிங்கள வேட்பாளர்களே வெல்லுகின்ற தேர்தலில் யார் வெல்லுவார்கள் என்றே எதிர்வு கூறமுடியாதபோது, ஒருவருக்கான ஆதரவை வழங்காமல் இருப்பது தமிழர்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முடிவதோடு, ஆட்சியில் வரக்கூடிய இரண்டு தரப்புகளோடும் சம இடைவெளியை பேணலாம் என்பதாகும்.


ஆனால், தேர்தல் புறக்கணிப்பை விட மக்களிடம் செல்லக்கூடிய சிறப்பான அணுகுமுறையே தமிழர் சார்பு பொதுவேட்பாளர் என்பதாக இருக்கின்றது. ஏனென்றால் தேர்தல் புறக்கணிப்பு என்பதை வீச்சாக மக்களிடம் கொண்டுசெல்ல முடியாத தமிழர் வலுநிலைமை என்பது ஒரு புறம். அவ்வாறு முழுமையான தேர்தல் புறக்கணிப்பு நடந்தால் அது தமிழரில் இருந்து விலகிநிற்கும் சிங்கள வேட்பாளருக்கே நன்மைகளை கொடுக்கும் என்ற யதார்த்த நிலைமை இன்னொரு புறம் என்ற நிலையே உண்டு.


அதேவேளை, இத்தேர்தலின்போது மூன்று சிங்கள வேட்பாளர்கள் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான சமவாய்ப்புகள் உள்ளபோது, அவர்களிடமிருந்து சமதூரத்தில் விலகி நிற்பதற்கான தந்திரோபாய நகர்வாகவும் தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவு பொருத்தமாக இருக்கின்றது.


இந்த வேளையில், சுமந்திரன் சொல்கின்ற விடயம் முக்கியமானது. பொது வேட்பாளர் விடயம் என்பது பெரியளவில் வாக்குகளை பெறாது என்றும் அப்படி கணிசமான வாக்குகளை பெறாது போனால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து நின்று பெற்ற தேர்தலில் கிடைத்த ஆணை இல்லாமல் போய்விடும் என்று சொல்கின்றார். அண்ணளவாக 50 வீதத்திற்கு மேலாக பெற்ற வாக்குகளின் ஆணை அது. 


ஆனால் அந்த தீர்மானத்திற்கு பின்னர், 1982 இல் சனாதிபதி தேர்தலில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். அதற்கு பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இனவழிப்பு செய்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சனாதிபதியாக தமிழர் தரப்பு ஆதரித்தது. அதன் பின்னர் மைத்திரியை தமிழர் தரப்பு ஆதரித்தது.  அதற்குப் பின்னர் சஜித்தை தமிழர் தரப்பு ஆதரித்தது. சிங்கள சனாதிபதிக்கு தமிழர் தரப்பால் அளிக்கப்பட்ட வாக்குகளில் 80 விழுக்காடுகள் அவர்களுக்கு சென்றன. அதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மான வெற்றி மலினப்படுத்தப்பட்டதா? சுமந்திரன் தனது வாதத்திறமையை எப்போதும் தமிழர்களை அடகு வைப்பதற்கே பயன்படுத்தி வருகின்றார். அதன் தொடர்ச்சியே அவரது வலிதற்ற வாதமே இது.


பொது வேட்பாளர் முன்னெடுப்பு என்பதும் அதன் வெற்றி தோல்வி என்பது தனிநபர்களினதோ கட்சிகளினதோ இல்லை. பொங்குதமிழ் எழுகதமிழ் போன்று இதுவும் ஒரு தமிழர் எழுச்சிகரமான போராட்ட வடிவம். இதன் முழுமையான பங்கும் அடித்தட்டு மக்களிடமே சென்று சேரும். தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னெடுப்பு ஒரு புதிய அணுகுமுறை. பலர் ஏற்றுக்கொண்டு முன்வந்த அணுகுமுறை. சிங்கள அரசியல் தலைவர்களின் வீடுகள் தேடி சென்று அரசியல் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அமிர்தலிங்கம். அதனைத் தொடர்ந்து சுமந்திரன் அதனை செய்கின்றார். அந்தளவு நெருக்கத்தை அவர் பேணுகின்றார். ஆனால் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் அரசியல் தலைவர்களின் வீடுகள் தேடி வந்தமை தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முன்னெடுப்பின் பின்னணியில் தான் நடைபெறுகின்றது. எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது அதன் நோக்கத்தில் ஏற்கனவே வெற்றியடைந்துவிட்டது.


இந்த நிலையில், அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் அரசியல் நலன்களை புறந்தள்ளி தமிழர் தேசமாக இணைந்துசெல்வோம் இணைந்து வெல்வோம்.


தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 04


இவ்வேளையில் தமிழ்க் கட்சிகளின் செல்நெறி பற்றி மீள்பார்வை செய்வது அவசியமானது என கருதுகின்றோம். 


இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான உரிமைகளை முன்னெடுப்பதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1944 இல் தோற்றம் பெறுகின்றது. 


சிறிலங்கா அரசுடன் சேர்ந்து ஆட்சியில் பங்குகொண்டதால், ஒற்றையாட்சி கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதால், அதிலிருந்து ஒரு குழு வெளியேறி, இலங்கைத் தமிழரசுக் கட்சியை 1949 இல் உருவாக்கினார்கள்.


பின்னர், தமிழரசுகட்சி ஆனது சிறிலங்கா அரசுடன் இணைந்து 1967 இல் ஆட்சியில் பங்குகொண்டதால், அதிலிருந்து வெளியேறியோர் தமிழ் சுயாட்சி கழகத்தை ஆரம்பித்தனர்.


தமிழர் மீதான ஒடுக்குமுறைகள் அதிகமாக, 1972 இல் தமிழர் கூட்டணியாக காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்தனர். 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றம் பெற்றது.


வட்டுக்கோட்டை தீர்மானமாக: இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்து 1977 பொதுத்தேர்தலில் ஆணை கேட்டது. அதில் தமிழர் பகுதிகளில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியீட்டியது.


அதனைத் தொடர்ந்து தமிழ் அரசியல்வாதிகள், தாம் பெற்ற தமிழர் ஆணையை முன்கொண்டு செல்லவில்லை. 


இதனால், ஆயுத விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றது. அது தனிநாட்டை நிறுவும் முயற்சியில் நகர்ந்தபோது சர்வதேச அரசுகளின் உதவியுடன் 2009 இல் மௌனிக்கப்பட்டது.


அவ்வாறு ஆயுத விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த கூடியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக 22 நாடாளுமன்ற ஆசனங்களுடன் இருந்தது.


ஆனால் நடந்தது என்ன?


2010 இல் ஒற்றையாட்சிக்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணங்கியது என கஜேந்திரகுமார் தலைமையிலான அணி (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உட்பட) வெளியேறியது.


2020 இல் கூட்டமைப்பில் இருந்த ஏனைய கட்சிகளும் வெளியேற தமிழரசுக்கட்சி தனித்த கட்சியானது. ஒற்றையாட்சிக்குள் உட்பட்ட 13வது திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அதனை தமிழரசுக் கட்சி ஏற்காது எனவும் தமிழரசுக் கட்சி (சுமந்திரன்) தெரிவித்து இந்தியாவுக்கு அனுப்பிய கடிதத்தில் விலகியிருந்தது.


இப்போது 2024 இல் தமிழரசுக்கட்சிக்குள் மூன்று அணிகள் உருவானது: சுமந்திரன் அணி, மாவை அணி, சிறிதரன் அணி. இதில் சுமந்திரன் அணி வெளியிட்ட சனாதிபதி ஆதரவு துண்டு பிரசுர அறிக்கையில் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்படும் என சஜித் வாக்குறுதி தந்ததாக சொல்லி அவரை ஆதரிக்குமாறு சொல்கிறது.


தற்போதைய கணிப்பின்படி, 2025 இல் மாகாணசபை தேர்தல் நடைபெறும். அதில் மேற்படி அனைத்து கட்சிகளும் போட்டியிடும்.


ஒற்றையாட்சிக்குள் அமைந்த மாகாணசபை முழுமையான தீர்வு அல்ல. சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தான் வேண்டும் என தெரிவித்து இந்த கட்சிகள் அனைத்தும் அந்த தேர்தலில் போட்டியிடும்.


13 ஆவது திருத்தத்தை நிராகரிக்கின்றோம் என ஊடகங்களுக்கு அறிவித்தவாறு, மாகாணசபை தேர்தலில் அனைவரும் போட்டியிடுவார்கள்.


அதில் தெரிவுசெய்யப்படுபவர்கள் அனைவரும் அமைகின்ற மாகாணசபையில் பல விடயங்களை விவாதிப்பார்கள். ஆனால் 13 ஆவது திருத்தத்தை நிராகரிக்கின்றோம் என்று சொல்லி சொல்லி விவாதிப்பார்கள்.


இது தான் இன்றைய அரசியல் நிலைமை. இந்த கட்சிகள் அனைத்திடமும் ஒரே பானை தான். அதற்குள் இருப்பதை தான் எடுப்பார்கள். ஆனால் ஒவ்வொரு கதை சொல்வார்கள்.


இந்த நிலையில் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?


இவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக நிற்பதற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.


இணைந்து நின்று வேறுபாடுகளை விமர்சியுங்கள். விவாதியுங்கள். முடிவுகளை காணுங்கள். முன்னோக்கி நகருங்கள் என்பதே தமிழ் மக்களின் அறிவுறுத்தலாக இருக்கவேண்டும். அல்லாவிடின், கடந்த மாகாணசபைகளில் / உள்ளாட்சி சபைகளி் குழம்பியது / குழப்பியது போல குழம்புவார்கள் / குழப்புவார்கள்.


பொது வேட்பாளர் வரவு இணைவிற்கான வழியை உருவாக்கப்பட்டும்.


தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 05


சிங்கள தேசத்தில் கோத்தபாய அரசாங்கத்தை விரட்டியடித்ததன் மூலம் புதிய மாற்றத்திற்கான விதையை இளைஞர்கள் விதைத்திருந்தார்கள். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் பேரினவாத அரசுகள் தமது சுயலாபத்திற்காக எவ்வாறு இனவாதத்தை பரப்பிவந்தார்கள் என்பதையும் அந்த ஊழியில் தாமும் உள்வாங்கப்பட்டதை புரிந்தவர்களாக புதிய சமூகம் உருவாகி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக அனுர தலைமையிலான அணி பெருமளவான மக்களின் கவனத்தை பெற்று வருகின்றது. சிங்கள தேசியக்கொடியை தவிர்த்து முன்னெடுக்கும் அவர்களது பரப்புரைப் பயணம் பலமடையுமா அல்லது பலியாகுமா என்பதை எதிர்வரும் காலங்களே பதில் சொல்லும்.


அதேவேளை தமிழர் தேசமும் தங்களை மீள்பார்வை செய்வதும் தொடர்ந்து முன்செல்வதும் அவசியமாகின்றது. தமிழர்களது அரசியல் போராட்டத்தில் அதன் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு செதுக்கி கொள்வது அவசியம். தமிழ்த்தேசத்தின் அனைத்து கட்டமைப்புகளிலும் முரண்பாடுகள் நிறைந்துள்ளது. உள்ளாட்சிசபை தொடக்கம் மாகாணசபை வரை அதன் வரையறை கடந்த முரண்பாடுகளால் சரிவர செயற்படமுடியவில்லை. மறுபக்கத்தில், சாதாரண குடும்பங்கள் தொடக்கம் கிராமிய அமைப்புகள் வரை முரண்பாடுகளை கொண்டதாக முறிவுகள் நிறைந்ததாக சமூகம் சீரழிந்து வருகின்றது. இதற்கு அப்பால் பாடசாலை வைத்தியசாலை உதவி அமைப்புகள் என அனைத்து மட்டத்திலும் முரண்பாடுகள் போட்டி நிலைகள் நிறைந்துள்ளன. இவற்றிற்கு அடிப்படையான காரணம் என்ன? இதனை சரிசெய்ய என்ன செய்யப்போகின்றோம்?


இவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றால் சரியான தலைமைத்துவங்கள் உருவாக்கப்படவேண்டும்? சரியான தலைமைத்துவங்கள் உருவாக வேண்டும் என்றால் சரியான சமூகம் அமையவேண்டும். சரியான சமூகம் அமையவேண்டும் என்றால் சரியான பார்வை சமூக மட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவேண்டும்.


விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, தமிழர் தரப்பில் அரசியலை அடுத்த கட்டடத்திற்கு நகர்த்திச் செல்லக்கூடிய 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால், நெருக்கடி நிலை ஒரு புறம், தலைமைத்துவமற்ற செயற்பாடுகள் மறு புறம், கொள்கை ரீதியான முரண்பாடுகள் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதறிவிட்டது. இது தான் கடந்த 15 வருடங்களின் விளைவுகள்.


தமிழர் தரப்பை ஒரு அணியாக வைத்திருக்க முடியாதவாறு பல முரண்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய அரசின் முகவர்கள், சிறிலங்கா அரசின் முகவர்கள், சிறிலங்கா புலனாய்வின் முகவர்கள் என பல பிரிவுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அந்த சதித்திட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ பலர் மூழ்கிப் போகின்றார்கள். 


மாற்று கருத்துக்களை அதிகாரத் தொனியோடு ஏற்றுக்கொள்ளாத போக்கும், சகட்டு மேனிக்கு அவதூறான விமர்சனங்களை முன்வைப்பதும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது.


சரியான வழிநடாத்தலும் இன்றி, செல்வதற்கான சரியான வழித்தடமும் இன்றி தொடர்ந்து பயணிக்க முடியாது.


இதன் மூலம் பிழையான தரப்புகளை வெள்ளையடிப்பதோ அல்லது முரண்பாடாக கொள்கைகளை சரியென சொல்வதோ நோக்கமன்று. விழிப்புடன் இருக்கும் அதே நேரம் முரண்பாடுகளை பிரிவுகளாக்காமல், கொள்கைகளை முன்வைத்து அரவணைக்கின்ற அழைத்துச் செல்கின்ற போக்கு வளரவேண்டும். இதற்கான வழிமுறை என்ன? இதற்கான பொறிமுறை என்ன? என்பதை அனைவரும் கலந்துரையாடி புதிய வழிமுறைகளை இனங்காணவேண்டும். 


தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் எவ்வாறு ஒரு இலக்கை நோக்கி அனைவரையும் வழிப்படுத்தி வருகின்ற அதே போன்ற ஒரு பொறிமுறையோடு, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு நகரவேண்டும்.

தமிழ்ப்பொது வேட்பாளர் தெரிவு என்பது, இந்த சனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல அடுத்த சனாதிபதி தேர்தலிலும் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும். அத்தகைய போக்கே சிங்கள பேரினவாதிகளை பண்புருமாற்றத்தை நோக்கி நகர்த்தும். அதுவே, தமிழ்த் தேசியத்திற்கான இருப்பை பலப்படுத்தி வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும். 

- அரிச்சந்திரன் -

May 18: பத்து ஆண்டுகளை கடந்து ……

Saturday, May 25, 2019 / No Comments
தமிழ் மக்கள் தமது தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்து நகர்ந்த, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் முடிவில், பலத்த அழிவையும் இழப்பையும் சந்தித்தபோதும், அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் தேவையையும் வலியுறுத்தியதாக அதன் பின்னான பத்து ஆண்டுகளின் முடிவில் தமிழர் தேசம் நிற்கின்றது.

எதிரியை விட பல மடங்கு குறைவான சனத்தொகை, அதிலிருந்து உருவான படைப்பலம், சர்வதேச நாடுகளின் ஆதரவற்ற நிலை என்ற பின்னனியில் - உலகத்தின் உச்சமான தியாகங்களின் அடித்தளத்தில் கட்டப்பட்டதாக, பலமான போராட்டமாக கட்டி வளர்த்த போராட்டத்தின் முடிவென்பது, விமர்சனங்களுக்குஅப்பால் தமிழர் தரப்பில் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது.



ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் தியாகங்களையும் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்களின் இழப்புகளையும் சந்தித்த பின்னரும், இன்னமும் எஞ்சியவர்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களை கூட, செப்பனிடாத நிலையில், பெரும்பாலான மக்களின் வாழ்நிலை உள்ளபோதும் உரிமைக்கான போராட்டத்தின் அசைவு நின்று விடவில்லை.

அந்த வகையில்தான் 2009 இல் நிகழ்ந்த பேரழிவின் பின்னரும் தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கையை வலியுறுத்தி, சலுகை அரசியலுக்கு விலைபோகாமல் உரிமை அரசியலுக்காக, தமது வாக்குகளை வழங்கி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமது தேசிய சக்தியாக இனங்காட்டினர்.

பேரழிவின் பின்னர் மகிந்தவின் வெற்றிவாத அரசாட்சியின் நெருக்குதலின் மத்தியிலும், உரிமைக்காக குரல் எழுப்பிய தமிழ் மக்களின் தலைமை பொறுப்பை ஏற்ற தமிழர் தலைமை தனது கடப்பாடுகளை சரி செய்ததா?

தேசம் தேசியம் என்ற எண்ணக்கரு

தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக சிந்திக்கின்ற கூட்டு உணர்வு என்பது இலங்கைத் தீவிலே இரண்டு இனங்கள் சந்தோசமாக நீடித்த அமைதியுடன் வாழ்வதற்கான அடிப்படையை கொண்டது. அதுவே அதற்கான அடித்தளத்தை உருவாக்கும். எனவே அந்த நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழர் தலைமை அகத்திலும் புறத்திலும் அதற்கான சிந்தனை தளத்தில் வேலை செய்யவேண்டும். அதற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக "நாங்கள் ஒன்று"“எமக்கான அடையாளம் ஒன்று” எமக்கான கொடி ஒன்று" என்ற அடிப்படையில் "சிறிலங்கர்களாக" வாழத்தான் தமிழர் தலைமையான தமிழ்த்தேசியகூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது.

தேசம் என்பதோ தேசியம் என்ற எண்ணக்கருவோ பிரிவினைகளை (divisions) வலியுறுத்தவில்லை. மாறாக மற்றவரை சமமாக மதிக்கின்ற நினைக்கின்ற பண்பையே அது பிரதிபலிக்கின்றது. சிங்கள தேசம் என்ற அடிப்படையான சித்தாந்தம் இருக்கின்றபடியால், தமிழர் தேசம் என்ற சித்தாந்தமே தமிழர்களை இலங்கைதீவில் சுதந்திரமாக கௌரவமாக வாழவைக்கும்.

அதற்கு சமனான தீர்வை பெற்றுக் கொள்ளாத வரைக்கும், அவ்வப்போது வெடிக்கும் இனவாத வன்முறைகளுக்குள் சிறுபான்மையின சமூகங்கள் பலியாகவேண்டிய நிலையே ஏற்படும்.

தமிழர் தரப்பின் தோல்வி

மூன்று சகாப்தங்களாக நடந்தஆயுத விடுதலைப் போராட்டம், தமிழர்களை ஒரு தேசமாக, தேசியமாக வளர்ச்சியடையச் செய்திருந்தது. ஆனால் அந்த போராட்டத்தில் ஏற்பட்ட அழிவு என்பது தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் தளர்வை கொடுக்கவில்லை. அந்த போராட்டத்தின் நியாய தன்மையும், இனவழிப்புக்கான நீதியும், எமது மக்களின் போராளிகளின் உன்னதமான தியாகங்களும் தமிழர் தரப்பின் தீர்வுக்கான வாய்ப்புகளை சாதகமாகவே திறந்து விட்டிருந்தது.

ஆனால் தமிழர் தரப்பின் நியாயங்களை, மலினப்படுத்தும் நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளையே தமிழர் தரப்பு கையாண்டது. வாழ்வாதார திட்டங்களில் முன்னேற்றகளையோ, தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதிலோ கூட அக்கறை செலுத்தாமல், சிங்கள தேசத்தின் ஒருதரப்புக்கு சேவகம் செய்வதற்காக, மற்றைய தரப்புடன் முரண்பாட்டை கூர்மைப்படுத்தியது.

அத்தோடு தமிழர் தேசத்தின் நீதிக்காக பேரம் பேசப்படாமல், தனிப்பட்ட வாக்கு வங்கிகளை தக்கவைப்பதற்காக, சிறிலங்கா அரசின் அடிப்படையான வேலைத்திட்டங்களை கூட, தமது வேலைத்திட்டங்களாக பிரபலப்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலானது மிகவும் கேவலமானது.

நிழல் நிர்வாக கட்டமைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய தீர்வுக்காக போராடும் அதேவேளை, வடக்கு கிழக்கு தழுவிய நிழல் நிர்வாக கட்டமைப்பு ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் செய்திருக்க முடியும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து, ஒருமாதிரி கட்டமைப்பை ஏற்படுத்தி, அடிப்படையான கலந்துரையாடலையாவது செய்திருக்கமுடியும்.

கூட்டமைப்பின் 14 எம்பிக்களை மட்டும்கொண்டிருந்தாலே அவர்களுக்கான ஐந்து உதவியாளர்களையும் சேர்த்தால் 75 பேர் கொண்ட செயலணியாக செயற்பட்டிருக்கமுடியும்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்ற மாதிரி கட்டமைப்பு ஒன்றை புலமைசார் நெறியாளர் சார் துறை வல்லுநர்களை உள்வாங்கி, தமது ஆதரவுடன் செயற்படக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்க முடியும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மாதிரி முயற்சியாவது செய்திருக்கலாம்.

வடக்கு கிழக்கு தழுவிய கலைகலாச்சார போட்டிகள், விவசாய மீன்பிடிதொழில்சார் போட்டிகள், விளையாட்டுபோட்டிகள், கல்விசார் தொழில்சார்கண்காட்சிகள் என்பவற்றையேனும் செய்திருக்கமுடியும்.

இவற்றில் எதுவுமே செய்யவில்லை என்பது மட்டுமில்லை. இவற்றை செய்யவேண்டும் என்று சிந்திக்கின்ற தேசியம் சார் சிந்தனை கொண்ட அமைப்பாக தமிழ்த் தேசியகூட்டமைப்பு இல்லை என்பதே கவலையான விடயமாகும்.

தொடரும் உரிமை பறிப்பு

வனவள திணைக்களம் என்றும், தொன்மை பாதுகாப்பு திணைக்களம் என்றும் கறையான்களை போல இருக்கும் சிங்களத்தின் சிறு திணைக்களங்கள் மூலம், தமிழர் தேசத்தின் கட்டமைப்பே சிதைக்கப்படுகின்றது.

அதேவேளை தமிழர்கள் தமது அடையாளம் வரலாறுகளை பேணமுடியாதவாறு மறைமுகமாகவும் நேரடியாகவும் அழுத்தங்களும் கைதுகளும் நடைபெறுகின்றன.

தமிழர்களுக்கான அரசியல் உரிமையை மறுக்கும் அதேநேரம் தமிழர்களின் தேசத்தில் உள்ள உள்ளாட்சி மாகாண கட்டமைப்புகளையும் சரியாக செயற்படவிடாமல் தடை ஏற்படுத்தப்படுகின்றது. சரியானவர்கள் வருவதை சிங்களத்துடன் இணைந்து தடுப்பதில் தமிழர் தரப்பின் பங்கும் இருக்கின்றது.

என்ன செய்யப்போகின்றோம்?

ஆயுதங்களை கீழே வையுங்கள், சமஷ்டி பற்றி பரிசிலீப்போம் என ஒஸ்லோவில் வாக்குறுதி வழங்கப்பட்டபோது சிங்கள தேசத்தின் வாக்குறுதிகளில் நம்பிக்கையில்லை, செயற்பாடுகள் அடிப்படையில் எதிர்காலத்தில் முடிவுகளை எடுப்போம் என விடுதலைப் புலிகள் அமைப்பு முடிவெடுத்தமை பற்றி பலரும் விமர்சித்திருந்தனர்.

ஆனால் பத்துஆண்டுகளின் முடிவில் அதுவே நிதர்சனமாகியிருப்பதை கண்கூடாககாண்கின்றோம். இப்படி பத்து ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்ற பகிரங்க பிரகடனத்தையாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் செய்யமுடியவில்லை.

எனவே தமிழர் தரப்பாக ஏமாற்றுஅரசியலை முன்னெடுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது இணக்க அரசியல் என்ற பெயரில் சிங்கள தேசத்தின் அரசியலை தமிழர்களுக்கு கொண்டுவரும் முகவராக செயற்படுகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, தமிழர்கள் தனியான தேசிய அடையாளத்தையும், தேசத்தையும் கொண்டவர்கள் என்பதை புரிந்துகொண்டு அதற்கான செயற்பாடுகளை - அரசியல் ரீதியாக மக்கள் ரீதியான நிறுவன ரீதியாக - சிறு அளவேனும் முன்னெடுப்பவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்.

அத்தகைய செயற்பாடுகளுக்கான ஆதரவுபோக்கே தமிழர்களை தன்னிறைவு கொண்டவர்களாக தனித்துவமான கட்டமைப்பு கொண்டவர்களாக தனித்தேசமாக சிந்திக்க செயற்படவைக்கும்.

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டபொதுமக்களையும், ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்டமாவீரர்களையும் இழந்து நிற்கின்ற நாம் முள்ளிவாய்க்காலில் எழுப்பியது அவலக்குரல் மட்டுமல்ல, எமக்கு நீதிவேண்டும் என கடைசி நிமிடம் வரை போராடி மடிந்த மாவீரர்களின்உறுதிக்குரலும் தான்.

- அரிச்சந்திரன் -

முதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்

Monday, August 20, 2018 / No Comments
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது,  உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

ஏமாற்றங்களின் விளைவாக உருவான திருப்புமுனை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத்தலைமையாக முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணிக்கு மக்களின் ஆதரவாக பெருகியது.



தமிழ் மக்கள் பேரவை என்றும் அதன் தொடர்ச்சியாக எழுகதமிழ் என்றும், முதல்வருக்கு எதிராக அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தமிழரசுக் கட்சியும் ஈபிடிபியும் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராகவும், மக்கள் தமது ஒட்டுமொத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தமிழ்த் தேசியத்திற்கான அடிப்படைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை சம்பந்தரும் சுமந்திரனும் தீர்மானித்தாலும், அதற்கான மக்கள் ஆதரவு என்பது அவர்களை சுற்றி அல்லாமல் கட்சிக்கான ஆதரவு என்ற தளத்திலேயே நிலைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் மாற்றுத்தலைமைக்கான முதல்வர் அணியின் ஆதரவு என்பது முதல்வரை சுற்றியதாக அல்லது ஒரு கொள்கையை மையப்படுத்தியதாக இருந்தது.

மக்களின் அபரமிதமான ஆதரவை புரிந்து, தன்மீதான மக்களுக்கான எதிர்பார்ப்பை முதல்வர் விக்கி பூர்த்தி செய்தாரா?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது அதன் அடிப்படை கொள்கையை கைவிட்டு ஏமாற்று அரசியல் செய்கிறது என்பதை வெளிப்படுத்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியவாதிகள் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியபோது, அது தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து வெளியேறுவதாகவே, ஒற்றுமையை குலைத்த  செயலாகவே அன்றைய நிலையில் பரவலாக பார்க்கப்பட்டது.

அப்படி இறுக்கமான நிலையில் வெளியேறிய அந்தக் கட்சி கூட, முதல்வர் தலைமையிலான அணியாக இணைந்து செயற்பட தயாராக இருந்தது இருக்கிறது.

முதல்வர் விக்கினேஸ்வரனின் ஆதரவுக்கான அலையை உருவாக்குவதில் அல்லது தக்கவைப்பதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் செயற்பாடு கவனிக்கத்தக்கது. எழுகதமிழ் நிகழ்வுக்கான செயற்பாடுகளிலிலும் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்தும் மக்கள் மயப்பட்ட போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதிலும் அதற்கு காத்திரமான பங்கிருந்தது.

பாரிய சவால்களுக்கு மத்தியில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைய தொடங்கிய முன்னேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னனிக்கான வளர்ச்சியானது, திடிரென மேலெழுந்த முதல்வரின் மாற்றத்துக்கான அரசியலால் அவரது அணிக்கான ஆதரவாக திரும்பியது.

கடந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, மாற்றத்துக்கான தலைமையை ஏற்குமாறு ஆரம்பம் முதலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியும் அதன் பின்னர் ஈபிஆர்எல்எப் உம் கேட்டுக்கொண்டன.

அனைவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக முதல்வர் விக்கினேஸ்வரன் அமைதியானார்.

மாற்றத்துக்கான அணியை பலப்படுத்தாமல் அந்த அணி இரண்டு பிரிவுகளாக உடைந்துபோக, மக்கள் சலிப்படைந்தனர்.

அந்த தடுமாற்றம், சிங்கள பெருந்தேசிய கட்சிகளுக்கான ஆதரவை, ஈபிடிபி போன்ற "இணக்க அரசியல்" அரசியல் செய்கின்ற கட்சிகளுக்கான ஆதரவை அதிகரித்துவிட்டது.

அந்த நேரத்தில் சரியான முடிவை முதல்வர் எடுத்திருந்தால், இன்று பலமான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்று அணி அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே மாற்றும் அணி உருவாகியிருக்க முடியும்.

இப்போதும் பலமான மாற்று அணி உருவாகுவதை முதல்வர் விக்கினேஸ்வரன் விரும்பவில்லை என்றும் ஒருவித அழுத்த குழுவாகவே இருப்பது போதும் என்ற அடிப்படையிலேயே முதல்வரின் நடவடிக்கைகள் அமைகின்றன என்ற அபிப்பிராயம் பரவலாக எழுகிறது.

ஆனால், சமாந்தரமாக முதல்வர் விக்கினேஷ்வரன் தனியாக ஒரு அணியை தான் உருவாக்கப்போவதாக பூடகமாக செய்திகளை பரவவிட்டு, மக்களின் எண்ணங்களை அளவுகோலில் போடுகிறார்.

விக்கினேஸ்வரனின் அறிவும் அவர் வகித்த பதவி நிலைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆதரவும், தமிழ்த்தேசிய அரசியலை நிலை நிறுத்தவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்க, அவரோ ஏமாற்றமான முடிவுகளையே எடுத்திருக்கிறார்.


1. அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை தொடர்பான விடயத்தை சரிவர கையாள தவறியமை அவரது தலைமைத்துவத்தின் மீதான விசனத்தை ஏற்படுத்தியது.

2. கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் செயற்பாடுகளில், மாணவர்களை எடுத்தெறிந்து, அவர்கள் வெளிநாட்டு பின்னனியில் இயங்குகிறார்கள் என அறிக்கை விட்டமை அவரது முதிர்ச்சியற்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

3. கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை புதிய மாற்று அணி என போக்குகாட்டி இறுதி நேரத்தில் மறுத்தமை ஊடாக பெருந் தேசிய சிங்களக் கட்சிகளையும் அவை சார்பு கட்சிகளையும் வளர இடமளித்தமை.

4. தற்போது இளைஞரணி மாநாடு என தமிழ் மக்கள் பேரவை மூலம் அறிவித்துவிட்டு, அதற்கு அண்மையில் அந்த அணியில் சேர்ந்த ஐங்கரநேசன், அருந்தவபாலன், அனந்தி ஆகியோரை செயற்குழுவில் நிலைப்படுத்தியும், ஆரம்பம் முதலே செயற்பட்ட கட்சிகளை செயற்பாட்டாளர்களை தனது சுயநல அரசியலுக்காக வெளியில் விட்டமை அல்லது செயற்திட்டங்களில் உள்வாங்காமை.

மேற்குறித்த நான்கு விடயங்கள் மட்டும் ஊடாகவே, முதல்வர் விக்கி எத்தகைய தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டியிருக்கின்றார் என்பதை கண்டுகொள்ளலாம்.

அப்படியானால், மாற்று எதுவென்பதையும் சொல்லவேண்டியுள்ளது.

முதல்வர் விக்கியை பொறுத்தவரை அவரது பலவீனங்களை கடந்து, அல்லது அந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யக்கூடிய பலமாக நல்லதொரு அணி அவரைச் சுற்றி இருக்குமெனில், அவரிடம் உள்ள நேர்மை, கொள்கை ரீதியான அவரது தெளிவும் தமிழர்களின் விடுதலைப் பயணத்துக்கு வலுச்சேர்க்கும் என நம்பிக்கை தற்போதும் தொடர்கிறது.

ஆதலால், கொள்கையில் உறுதியும் அரசியல் நேர்மையும் கொண்ட கூட்டடிணைவுக்கு முதல்வர் முக்கியம் கொடுக்க வேண்டும். அது முதல்வருக்கு வரலாற்றில் நல்லதொரு பெயரை கொடுப்பதோடு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும்.

அந்த வகையில் வரலாற்றில் அவரால் செய்யக்கூடிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவே நம்புகிறோம்.

உண்மையான தலைமைகள் முன்செல்லும்போது, தங்கள் உழைப்பையும் வியர்வையும் சிந்தி அவர்கள் பின்னால் பயணிக்க இப்போதும் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.

- அரிச்சந்திரன் -

உதயசூரியன் சின்னம்: வைக்கப்பட்ட பொறி!

Sunday, December 10, 2017 / No Comments
வெளிச்சவீடு என்றும் உதயசூரியன் என்றும் வீடு என்றும் தமிழர்களின் அர்ப்பணிப்பான விடுதலை இயக்கத்தால் உயிர்பிக்கப்பட்ட விடுதலை வேட்கையானது ஆசன பங்கீடுகளுக்காக கட்சிதாவலில் இறங்குகின்ற நிலைமையானது தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி விழித்துக்கொள்ளவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
தமிழ்மக்களின் அடிப்படையான அரசியல் அதிகாரம் என்பது, தமிழர் தாயகம் - தமிழர் தேசியம் - தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடித்தளத்தில் உருவாக்கப்படவேண்டும் என்றும், அதனை அடைவதற்கான இசைவுகள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் போராளிகளினதும் தியாகம், இனப்படுகொலைக்கான நீதி, சர்வதேச நீதிவிசாரணை என்ற அடிப்படைகளை ஆயுதமாககொண்டு முன்னகர்த்தப்படவேண்டும் என்பதும் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக இருந்தது.



ஆனால் அத்தகைய பொறிமுறையை முன்னகர்த்துவதாக குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, அந்த அடிப்படைகளை ஒவ்வொன்றாக நீர்த்துப்போகச் செய்து, சர்வதேசங்கள் தமிழர் நலனில் காட்டிவந்த அக்கறையையும் குறைப்பதற்கான, மறைமுக நிகழ்ச்சிநிரலில் செயற்படுவதான தோற்றப்பாடு உருவானது.



இத்தகைய பின்னனியில்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான பலமான மாற்றுஅணியை பலப்படுத்தவேண்டிய தேவை பலராலும் முன்வைக்கப்பட்டது.



தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியானது, அதன் தொடக்ககாலம் தொட்டே தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது தமிழரது போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் படிமுறையான பொறிமுறையொன்றை கையாள்வதாக குற்றஞ்சாட்டிவருகின்றது. அது ஏற்கனவே 2009 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், 13வது திருத்தத்தை திருத்தியதான ஒரு தீர்வுத்திட்டத்திற்கு தமிழர் தரப்பு இணங்கவேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் தொடர்ச்சியாகவே கூறிவந்தது.



எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான ஓரளவு நம்பிக்கையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் மாற்றுத்தலைமைக்கான பலவீனமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான தெளிவான சக்தியை வளர்ப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனாலும் தமிழ்த்தேசியத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்ட தரப்புகளின் தெளிவான ஆதரவைப் பெற்ற தரப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியால் ஓரளவு நிலைபெறமுடிந்தது.



இதன் பின்னனியில் உருவான தமிழ்மக்கள் பேரவையும், அதற்கு இணைத்தலைமை கொடுக்க முன்வந்த வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் வருகையும் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.



ஆனாலும் அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் பேரவையை உருவாக்குவதில் தயக்கம் காட்டிய விக்கினேஸ்வரன் கொள்கை ரீதியாக மாற்றுசக்தி உருவாவதை வரவேற்றார்.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், புதிய சின்னத்தில் புதிய கூட்டணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியும் ஈபிஆர்எல்எப் உம் இணைந்து, பொதுத் தேசிய செயற்பாட்டாளர்களையும் இணைத்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள முடிவானது. அத்தகைய கூட்டானது தேர்தல் கூட்டாக அன்றி, நீண்டகால அரசியல் செயற்றிட்டத்தை மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.



ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான சக்தியாக தமிழ்த்தேசியத்தை வலுவாக முன்னகர்த்தும் சக்திகள் பலம் பெறுவதை விரும்பாத உள்ளக வெளியக சக்திகள், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்ளே கொண்டுவந்து குழப்பின.



தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதும் தமிழரசுக்கட்சி என்பதும் அதன் நிலையில் வேறுவேறானவை அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 விழுக்காட்டினர் தமிழரசுக்கட்சியின் “பாரம்பரிய அரசியல் வியாதிகளை” கொண்ட ஒரே மையத்தை சுற்றிய இரண்டு வட்டங்கள் என்பது பழைய அரசியல்வாதிகளுக்கே வெளிச்சமான விடயம்.



புதிய பலமான அணி உருவானால், அதற்கு தனது உதயசூரியன் சின்னத்தை விட்டுக்கொடுப்பதாக சொல்லும் ஆனந்தசங்கரிக்கு போட்டியாக, அடுத்த பொதுக்கூட்டத்தையே கூட்டி அதே சின்னத்தை முடக்கக்கூடிய “அரசியல் பாரம்பரியம்” அதன் உறுப்பினர்களுக்கு அதிகப்படியாகவே இருக்கின்றது என்ற வாதம் சின்னத்தனமானதல்ல.



அதேவேளையில், தமிழ்மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட இறுதியுத்த காலத்தில் அரசுடன் இணைந்துநின்று இனவழிப்புக்கு துணைநின்றவர்களை, எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளமுடியும் என்ற வாதமும், தனது சொந்தங்களை பறிகொடுத்த ஒவ்வொருவனின் குமுறல் மட்டுமல்ல, சாதாரண மக்களிடத்திலும் எழும் கேள்விகள்தான்.



ஆனந்தசங்கரியோ அதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வளர்ச்சி என்பதோ தமிழரசுக்கட்சியிலும் விட தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதும் அதன் தொடர்ச்சிதான்.



அதுவும் தமிழ்மக்கள் தங்கள் பேரம் பேசும்பேசும் வலுவை உச்சநிலையில் வைத்திருந்தவேளையில், விடுதலைப்புலிகளுக்கே சவால்விட்டு உதயசூரியன் சின்னம் பயன்படுத்தமுடியாதவாறு முடக்கிய ஆனந்தசங்கரியை முதன்மையாக கொண்ட ஒரு கட்சியுடன் இணைந்துகொள்வது, அடிப்படை முரண் இல்லையா என்ற கேள்வியும் அதன் நீட்சிதான்.



அத்தோடு தமிழரசுக்கட்சிக்கு மாற்றான அணிகள் என்பவை, கொள்கை சார்ந்து இணையவேண்டும் என்பதும் அது தலைமைத்துவம் மீதான காழ்ப்புணர்வாலோ அல்லது தனிப்பட்டட ஆசன பங்கீடுகளுக்காகவோ அமையக் கூடாது என்பதும் விதண்டாவாதமாக எடுத்துக்கொள்ளமுடியாது.



அந்தவகையில்தான் புதிய சின்னம் என்றும் புதிய கூட்டணி என்றும் ஓடிஓடி பதிவுவேலைகளை செய்த சுரேஸ் பிரேமசந்திரன், ஒண்டியாக சென்று உதயசூரியன் என்ற சின்னத்திற்காக ஆனந்தசங்கரியுடன் இணைந்துகொண்டது ஏமாற்றத்தை விதைக்கிறது.



தமிழ்த் தேசியத்திற்கான மாற்று அணி என்ற அணியில் உள்நுழைந்த விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமசந்திரனும் காணாமல்போக, தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை முன்னிறுத்தி செயற்படக்கூடிய அணிகளை ஓரணியில் இணைக்கவேண்டிய நிலை கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டது.



அதன் அடிப்படையில்தான், தமிழ்த் தேசிய பேரவை என்ற புதிய அரசியல் கூட்டணியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான கிராமிய மட்ட செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதான அந்த அணி எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்கின்றது.



வெற்றிகள் தோல்விகள் என்பவற்றுக்கு அப்பால் தமிழர்களின் எதிர்கால அரசியல்போக்கு எப்படியானதாக இருக்கப்போகின்றது என்பதையும், தமிழர் அரசியலில் பன்முகப்பட்ட கட்சிகளின் ஆளுமைகள் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்பதையும், வெளிக்காட்டுவதுடன் அனைவருக்கும் சவாலானதாகவும் இத்தேர்தல் அமையப் போகின்றது.



இத்தேர்தல் மயக்கத்தில் தமிழர்களின் மீது திணிக்கப்படப்போகும் ஒற்றையாட்சி அரசியற்கட்டமைப்புக்கான தீர்வும் மறுதலிக்கப்படப்போகும் நீதியும் வெளித்தெரியப்போவதில்லை.



– அரிச்சந்திரன்

எழுகதமிழும் எதிர்பார்ப்பும் - அரிச்சந்திரன்

Saturday, February 4, 2017 / No Comments
 போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான அடிப்படைகளை அழிப்பதிலும் கவமாகவிருந்தது மகிந்த அரசு.

கொடுமையான அரசாட்சியை ஒழித்து பயமின்றி வாழ புதுஅரசை கொண்டு வருவோமென சொல்லப்பட்டு – சர்வதேச நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு தமிழர்களின் வாக்குகளையும் பெற்று – “நல்லாட்சி” நிறுவப்பட்டும் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.



ஆனாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றிய புரிந்துணர்வு இன்னமும் சிங்கள தேசத்தில் உருவாகவில்லை. மாறாக தொடர்ந்தும் பேரினாவாத அரச இயந்திரத்தின் கபடத்தனமாக தமிழர்களது உரிமைகளை பறிக்கும் செயற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அடிப்படையான அரசியல் அதிகாரங்களை வழங்குவது என்றால் அதுவொரு காலம் நீடித்த பணியென்றும் படிப்படியாகவே அதனை அடையலாம் என சாட்டுகள் சொல்லப்படுகின்றபோதும் அப்படியான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்கான எந்தவித அடிப்படை முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலம் அத்தகைய மாற்றத்தை கொண்டுவரலாம் என சொல்லப்படுகின்ற போதும் தமிழர்களின் சமத்துவமான உரிமைகளுக்கான கோரிக்கைக்கு பதிலீடான தீர்வாக அது ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.

இருக்கின்ற 13வது திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கான இன்னொரு திருத்த சட்டமாகவோ அல்லது இணைப்பு சட்டமாகவோ தான் புதிய அரசியலமைப்பு இருக்கப்போகின்றது.

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தனித்துவமான தாயகம் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்ட அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தமிழர்களால் ஆளப்படுகின்ற அரசியல் இறைமை வழங்கப்ப்போவதில்லை.



எப்போதுமே மத்திய அரசுகளின் தலையீடுகளும் மத்திய அரசின் ஒப்புதலோடு தான் எதுவுமே செய்யப்போகின்ற ஒற்றைமய ஆட்சிதான் தமிழர்களுக்கு தீர்வாக இருக்கப்போகின்றது.
இவை ஒருபக்கம் இருக்க தமிழர்களின் அவசரப ;பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகின்றது. வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்பட்டும் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.

படையினரால் கையகப்படுத்தப்படும் காணிகள் ஒரு பக்கம் காணாமல்போனோர் பற்றிய தகவல்கள் இதுவரை வழங்கப்படாமல் இன்னொரு பக்கம் அரசியல் கைதிகளின் விடுதலை மறுபக்கம் விடுதலை செய்யப்படுகின்றவர்கள் மீளவும் கைதுசெய்யப்டுவதும் கண்காணிப்படுவதுமான பிரச்சனைகள் இன்னொரு பக்கம் பரவிவரும் சிங்களமயமாக்ககல் என்ற இறுகிய நிலை இன்னொரு பக்கம் என தமிழர்களது வாழ்வு பெரும் நெருக்கடியில் மூழ்கி கிடக்கின்றது.

இந்தவேளையில் இருக்கின்ற சூழ்நிலையில் சிங்களவர்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்கவேண்டாம் என்றும் மீளவும் மகிந்த வருவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தவேண்டாம் எனவும் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையானது தொடர்ந்தும் மௌனம் காத்துவருகின்றது.

மீண்டும் சிங்கள பேரினவாதத்தின் இறுக்கமான பிடிக்குள்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கப்போகின்றது. இப்படியே இழுத்து இழுத்து சமஸ்டி என்றும் கூட்டாட்சி என்றும் தமிழர்களுக்கு உண்மையை மறைத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என மீளவும் சொல்லப்போகின்றார்கள்.

அப்படியானால் தங்களுக்கு முன்னே இருக்கின்ற ஆபத்துக்களை உணர்ந்தும் இன்னமும் மௌனமாக இருக்கும் தமிழர் தரைமையின் காரணம் என்ன? மொனமாக அழுதுகொண்டிருப்பதுதான் தமிழர்களின் தலைமை காட்டும் வழியா?

இதனால்தான் தமிழர்கள் தரப்பு அதிருப்தி தொடர்ந்தும் வெளிப்படுகின்றது. கடந்த ஆண்டு காணாமல் போனோர் தொடர்பாக அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பாக என பல்வேறு போராட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்டிருந்தன. அதன் ஒட்டுமொத்த குவிமையமாக எழுகதமிழ் என்ற போராட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இப்போது தொடர்ச்சியாக தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் முளைகொள்கின்றன. தங்கள் வாக்குகளால் அனுப்பப்பட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவமானது வாழ்நாள் சாதனை வீரர் என்றும் இறைபணிச் செம்மல் என்றும் கற்பனை உலகில் மிதந்துகொண்டிருக்கும்போது இத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்களே தமிழர்களது அடிப்படையான பிரச்சனைகளை மேலெழுப்பிவருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியும் எழுகதமிழ் போராட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. எழுகதமிழ் போராட்ட நடவடிக்கையானது குறித்த ஒரு நாளில் கூடி தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் தனியான நிகழ்வு அல்ல.

தமிழ் மக்கள் தங்கள் உரிமைகள் எவை என்பதை தெரிந்துகொள்வதும் எப்படி தாங்கள் அடக்கப்பட்டுவருகின்றோம் என்பதை புரிந்துகொள்வதும் அப்படியான இறுக்கமான நிலையை உடைப்பதற்கு தங்களால் என்ன செய்யமுடியும் என்பதை திட்டமிடுவதற்கும் அது பற்றிய தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்குமான களமாக அது விரியவேண்டும்.

அந்த வகையில் முதலாவது எழுகதமிழை விட கிராமங்கிராமாக சென்று விழிப்புணர்வை உருவாக்குவதில் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களை நோக்கி பரவலான அணுகுமுறையை குறுகிய வளங்களோடு ஏற்படுத்துவதில் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் வெற்றியடைந்துள்ளார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவே எழுகதமிழின் முக்கியமான நோக்கமாகும்.

புதிய ஆட்சி மூலம் உருவாக்கப்பட்ட சிறு இடைவெளியில் தமிழர் தரப்பு சாதித்திருக்கவேண்டிய பல விடயங்கள் இருந்தன. ஆனால் அதன் பிரதான பங்காற்றலை செய்யவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது பிழையான வழிநடாத்தலால் தமிழர்களுக்கு பாரிய தவறை செய்துகொண்டிருகின்றது.

எனினும் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் அந்த இடைவெளியை நிரப்பி தமிழர்களது உரிமைக்கான குரலை வெளிக்கொண்டுவரவேண்டும். அதுவே பரந்தளவான மக்கள் செயற்பாட்டு இயக்கத்தை உருவாக்க வழிவகுக்கும். அதுவே தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றெடுப்பதில் பெரும் பங்காற்றும்.

- அரிச்சந்திரன் -

விடுதலையை விலை பேசும் "சுமந்திரம்" - அரிச்சந்திரன்

Tuesday, January 31, 2017 / No Comments
தமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.

விடுதலைப் போராட்டம் பாரிய சவாலை எதிர்கொண்டு பேரவலத்தை சந்தித்தபோதும் அதில் தப்பிபிழைத்த போராளிகளும் அதனோடு பயணித்த பொதுமக்களும் எப்போதுமே ஒரு உயரிய கட்டுக்கோப்பை பேணியே வாழ்ந்துவருகின்றார்கள்.

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை வசை பாடிய சிறிலங்கா இராணுவத்தின் குறிப்பிடத்தக்க அதிகாரிகள் கூட விடுதலைப்புலிகளின் திறனை தவிர்க்கமுடியாமல் வியந்திருக்கிறார்கள்.



ஆனால் எமது தமிழர்களின் பிரதிநிதிகளோ தமிழர்களுடைய முப்பது வருட விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு தம்மாலான முயற்சிகளை அவ்வப்பபோது செய்துவருகின்றார்கள்.

குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரன் அதனை வெளிப்படையாக விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்திவருகின்றார்.

அதிலும் காயமடைந்து போராட்டத்திற்காக தமது வாழ்வை தொலைத்து வாழ்வாதாரத்திற்கு ஏங்கி நிற்கும் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தையும் நெருக்கடிக்குள்ளாக்குவதில் மிகக்கவனம் எடுத்துவருகின்றார்.

சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பல்வேறு நரித்திட்டங்களுக்கு நடுவில் சிக்கிதவிக்கும் இப்போராளிகளின் வாழ்வை சீரழித்து அழிப்பதிலும் அப்படியான அழிவை தமிழர் சார்பாக நியாயப்படுத்துவதிலும் சுமந்திரன் தனது இராசதந்திர நுட்பத்தை தெளிவாக பயன்படுத்திவருகின்றார்.

கடந்த ஆண்டு சாவகச்சேரி பகுதியில் ஒரு தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை சுமந்திரனுக்கு இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் சுமந்திரனின் கையாளான கேசவன் சயந்தன் என்ற மாகாணசபை உறுப்பினர் ஊடாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.


பழைய சிங்களப் பத்திரிகை ஒன்றில் மடித்து மறைக்கப்பட்டிருந்த அந்த அங்கியைய சாட்டாக வைத்து வடக்கே பருத்தித்துறை தொடக்கம் கிழக்கே மட்டக்களப்பு வரை 65 இற்கும் மேற்பட்டோர் இரகசியமாக கைதுசெய்யப்பட்டனர்.

மக்களுக்கு பயப்பீதியை உருவாக்கும் நோக்குடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் நடத்தப்பட்ட இந்நடவடிக்கையில் சுமந்திரன் தரப்பு வேண்டுமென்றே உள்நுழைந்து கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் அபாண்டமான ஒரு குற்றசாட்டை முன்வைத்திருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்களோ தற்கொலை அங்கி என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளோ அவர்கள் அனைவர் மீதும் பயத்தை உருவாக்கும் நோக்குடனே நடத்தப்பட்;டிருந்தது.

அப்படி கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இராணுவ புலனாய்வுத்துறைக்காக வேலை செய்துகொண்டிருந்தவர்கள் என்பதைவிட வேலை செய்யவைக்கப்பட்டவர்கள் என்பது பொருத்தமானது.

இப்போது கனடாவிலிருந்து கட்டுக்கதைகளை உருவாக்கி எழுதுவதில் வல்லவரும்  தனது உறவினருமான டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாக தன்மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட இருந்ததாகவும் அதில் தான் எப்படியோ தப்பிவிட்டதாகவும் இன்னொரு செய்தியை கசிய விட்டிருக்கின்றார் சுமந்திரன்.

சுமந்திரன் எப்படியான செய்தியை உருவாக்கி பரப்புகின்றார் என்பதனையும் அதன் பின்புலம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்துகொள்வதன் மூலமே தமிழர்கள் தமக்கு முன்னேயுள்ள ஆபத்துக்களை புரிந்துகொள்ளமுடியும்.

அவர் பரப்பிய அந்த செய்தி என்ன?

கிளிநொச்சியில் ஒருவரிடம் 5000 இலங்கை ருபாக்களை கொடுத்து தமிழீழக் கொடியை கடந்த மாவீரர் நாளில் ஏற்றுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலிகளால் சொல்லப்பட்டிருந்ததாம்.  அந்த காசை பெற்றுக்கொண்ட அந்நபர் அப்படியே அந்தக்கொடியை நவம்பர் 26 இரவு ஏற்றினாராம்.

அதன் பின்னர் ஒற்றைக் கையில்லாத ஒருவருடன் சேர்ந்து வந்த நபர் மிகமுக்கியமான தமிழ் அரசியல்வாதி ஒருவரை கிளைமோர் வைத்து கொல்லவேண்டும் என சொன்னார்களாம்.

அதற்கு அவர் அந்த கொல்லப்படவேண்டிய நபர் யாரென்று சொன்னால்தான் தான் அதனை செய்வேன் எனச் சொன்னாராம்.

அப்போது அவர்கள் அது சுமந்திரன் தான் எனச்சொன்னபோது அந்ந நல்ல மனுசனை கொல்லமுடியாது என்று பின்வாங்கி விட்டாராம். அதனை அவர் அப்படியே இராணுவ புலனாய்வுத்துறையிடம் சொல்லிவிட்டாராம்.

இதுதான் அந்தச்செய்தி.

இதன் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கிளைமோர் வைக்கப்பட்டபோதும் சாதுரியமாக சுமந்திரன் தப்பிவிட்டார் என்றும் அப்படி கிளைமோர் வைத்தவர்களை படையினர் கைதுசெய்து விட்டார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டபோது கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அந்தச்செய்தி நீள்கின்றது.

இப்போது சுமந்திரன் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்.

“What seems to be clear now is that some misguided former LTTE cadres living in the Island are being exploited by certain overseas elements through cash incentives to engage in acts of violence on Sri Lankan soil. We can’t be sure at this time whether this is an individual act targeting me or whether it is part of a more comprehensive design to revive the LTTE again. I am confident that the security agencies will probe this further and arrive at definite conclusions very soon”

“வெளிநாட்டு சக்திகள் ஊடாக முன்னாள் விடுதலைப் போராளிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. பணத்தை வழங்கி சிறிலங்கா மண்ணில் வன்முறையை தூண்ட வைக்கப்படுகின்றார்கள். இது ஒரு தனிப்பட்ட சம்பவமா அல்லது விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கான பிரமாண்டமான முழுமையான திட்டத்தின் ஒரு பகுதியா என்பதை எங்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் எமது பாதுகாப்பு படையினர் இதனை சரியாக விசாரணை செய்து முடிவை விரைவில் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”.</strong>

இதன் மூலம் சுமந்திரன் சொல்லவருவது என்ன?

தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எமது போராளிகளின் எதிர்கால வாழ்வை சிதைப்பதிலும் சிறிலங்கா படைத்துறையோடு இணைந்துநிற்கும் சுமந்திரனின் இத்திட்டத்தின் நோக்கம் என்ன?


இப்போது சுமந்திரனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவரது போக்குவரத்துக்கு சிறிலங்கா படைத்துறை உலங்குவானூர்தி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் புலிகள் இன்னமும் உள்ளார்கள் அவர்கள் வந்துவிடுவார்கள் எனவே எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்படவேண்டிய பல விடயங்களை நிறைவேற்றமுடியவில்லை.
ஏனென்றால் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கே எங்களுக்கு அதிகநேரம் தேவைப்டுகின்றது என சிறிலங்கா அரசு சொல்லப் போகின்றது.

இதுதானே அந்த செய்தி.

- அரிச்சந்திரன் -

முதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்

Monday, August 29, 2016 / No Comments
அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் வந்திருந்தனர்.

பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றை நிறுவ அமெரிக்க நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வுகூடத்தை நிறுவியதற்கான கட்டுமானப்பணிகளை செய்தது கடற்படை. அந்த கட்டுமான பணிக்கான குத்தகை எப்படி நடந்தது. அது விரைவில் வெளிவரும் என நம்பலாம்.



அந்த ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வே அன்று நடைபெற்றது. திறந்துவைக்கும் நிகழ்வு கடற்படையினர் தலைமையில் நடைபெற்றது. இப்பாடசாலை மாகாணசபைக்கு உரிய பாடசாலை. எனினும் நிகழ்வின்போது மேடைக்கு செல்ல முற்பட்ட முதல்வர் கடற்படை அதிகாரி ஒருவரால் தடுக்கப்பட்டார். அவ்வாறு அவர் தடுக்கப்படும்போது ஆளுநரும் அமெரிக்க தூதுவரும் மிக நெருக்கமாக முதலமைச்சருடனே நின்றார்கள்.

அப்படியிருந்தும் அக்கடற்படை அதிகாரி அவரை முதலமைச்சர் என்று தெரியாமல் தடுத்ததாக இப்போது சொல்லப்படுகின்றது. இப்படித்தான் அப்போதைய பாரதப்பிரதமர் கொழும்புவந்தபோது இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார். அப்போது கடும்வெய்யிலால் மயங்கி (Sun stroke) ராஜீவ்காந்தி மேல் விழுந்துவிட்டதாக அன்றைய சிறிலங்கா சனாதிபதி ஜெயவர்த்தனே சொன்னார்.

அப்படி அந்த முதலமைச்சர் தடுக்கப்பட்டபோது அவர் கடும்கோபத்தில் கடற்படை அதிகாரியை அவமதித்து பேசியதாக சொல்லப்படுகின்றது. உனக்கு அரச நடைமுறைகள் தெரியவில்லை என்னை மறிக்கிறாயே எனச் சினந்தார்.

முஸ்லிம் முதலமைச்சர் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதில்லை என்ற குற்றசாட்டு உண்டு. தனிப்பட்ட ரீதியில் அந்த முதலமைச்சரின் செயற்பாடுகளை ஆராய்வதல்ல இப்பத்தியின் நோக்கம். அதனை வேறு தளத்தில் ஆராய்வோம்.

இங்கு கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் ஒரு மாகாண முதலமைச்சருக்கு நடந்த சம்பவத்திற்கான எதிர்விளைவுகள் என்னவென்பதே.

1. மறித்த கடற்படை வீரர் பதவி உயர்த்தப்பட்டு கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. அவமதித்த முதலமைச்சர் இனி எந்த இராணுவ முகாம்களுக்கும் செல்ல கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இப்போது அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.


பாடசாலை ஆய்வுகூட திறப்பு விழாவுக்கு கிழக்கு முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் வருகை தந்திருந்தபோதும் அவர்கள் மேடைக்கு அழைக்கப்படவில்லை.

ஆளுநரும் அமெரிக்க துாதுவரும் மட்டுமே பரிசில்கள் கொடுத்து கௌரவிக்க ஒலிபெருக்கியில் மேடைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது இவர்கள் மேடைக்கு கீழே காத்திருந்தார்கள்.

இவர்களை ஆளுநர் கண் சைகையால் மேடைக்கு வருமாறு அழைத்தார். இவர்களிருவரும் மேடையில் ஏறிச்சென்றபோது முதலமைச்சரை அந்த கடற்படை அதிகாரி இழுத்து மறித்துள்ளார்.

அப்போதுதான் மாகாணத்திற்கான ஒரு முதலமைச்சர் ஆக நானிருக்கின்றேன். இப்பாடசாலை உட்பட மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் கல்வி அமைசசராகவும் இதே தொகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி இங்கே இருக்கிறார். அவர்களை முறையாக அழைக்கவேண்டும் என்ற அரச நடைமுறைகள் தெரியாமல் இருக்கிறீர்களே என வெளிப்படையாக கடிந்தார் நசீர் அகமட்.

இதில் எங்கே தவறு நிகழ்ந்தது? மாகாண சபைக்கு உரித்தான அதிகாரங்களின்படி என்றாலும் இவர்களிருவருக்குமான கௌரவம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நடக்கவில்லை. மாறாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கடுமையான குற்றசாட்டுக்கள் சிங்கள தரப்பால் முன்வைக்கப்படுகின்றன.

இதில் ஒருவர் சிங்கள முதலமைச்சராக இருந்திருந்தால் நிலை என்ன?

இதில் ஒருவர் தமிழ் முதலமைச்சராக இருந்திருந்தால் நிலை என்ன?

கிளிநொச்சி இராணுவ முகாம் பகுதிச் சென்ற எதிர்கட்சி தலைவர் சம்பந்தர் என்ன பாடுபடவேண்டியிருந்தது. அழாத குறையாக அதுவொரு இராணுவமுகாம் என்றே தெரியாமல்தான் நான் உள்ளே சென்றேன். யாரேனும் மறித்திருந்தால் போயிருக்கமாட்டேன் என சம்பந்தன் எவ்வளவு இறங்கவேண்டியிருந்தது?

சுமந்திரன் இதற்காகவே சிறப்பு ஊடக சந்திப்பு வைத்து சம்பந்தன் ஐயா அறியாமல் செய்த விடயத்தை தமிழ் ஊடகங்களுக்கு விளங்கப்படுத்தினார்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை அவர்கள் இப்போது ஒரு தரப்பாக இல்லை. தருவதை பெற்றுக்கொள்ளும் அல்லது கிடைப்பது எதுவோ அதனை தமிழ் மக்களுக்கு நியாயப்படுத்தும் தரப்பாக மாறியுள்ள நிலையில் சம்பூர் சம்பவம் பல செய்திகளை சொல்லியுள்ளது.

மகிந்த இராசபக்ச காலத்தில் ஒரு சிறிலங்கா புலனாய்வுத்துறை மேஜர் தர அதிகாரி இன்னொரு அரசியல்வாதியின் மகனுடன் கைகலப்பில் ஈடுபட்டார் என்பதற்காக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு புலனாய்வு பிரிவிலிருந்தே மாற்றப்பட்டிருந்தார். அப்போது அந்த "போர்வீரன்" செய்த பிழை என்ன?

குறிப்பாக புரிந்துகொள்ளக்கூடியது என்னவெனில் எண்ணிக்கையில் சிறிய தொகையினரான தமிழர்களையும் முஸ்லிம்களையும் உரிய கௌரவத்துடன் கண்டுகொள்ள சிங்கள பெருந்தேசியவாதம் தயாராவில்லை என்பதைதானே?

இப்படியான தவறுகளுக்கு ஆளுநரே காரணம் என்றும் முதலமைச்சரின் அதிகாரிகரங்களில் தொடர்ந்தும் ஆளுநர் தலையீடு செய்வதாகவும் கடற்படை அதிகாரியின் தவறுக்கும் ஆளுநரையே முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் முதலமைச்சரை கடற்படையினருக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டியது தனது கடமையல்ல என தெரிவித்துள்ளார்.



ஒப்பீட்டு ரீதியில் மென்போக்கான ஆளுநர்களே வடக்கிற்கும் கிழக்கிற்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு பார்வை உண்டு. ஆனால் அங்கே தான் கடுஞ்சிக்கல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது போன்ற இச்சம்பவம் இருக்கின்றது.

ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் யார் என்பதும் அவருக்கு உரித்தான அதிகாரங்கள் முக்கியத்துவம் பற்றிய விளக்கஅறிவு அல்லது நெறிமுறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கடற்படைக்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

எனவே அங்கே அறியாமல் ஒரு தவறு நடந்தால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரே பதில் சொல்லவேண்டும். ஆனால் இங்கு அவர் அதனை மறைக்கமுயலுகின்றார்.

இதன் மூலம் புரிந்துகொள்வது யாதெனில் மாகாணசபைக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை புரிந்துகொள்ளவும் மென்போக்காக கருதப்பட்ட வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள் ஏன் அதன் குறைபாடுகளை வெளிப்படையாக சொல்லுகின்றார்கள் என்பதற்கும் மென்போக்காக கருதப்படுகின்ற ஆளுநர்களால் அந்த மென்போக்கான முதல்வர்களுடன் ஒத்துப்போகமுடியவில்லை என்பதற்கும் விடையை கண்டுகொள்ளவேண்டும்.

அதற்கான விடையை கண்டுகொள்ளும்போது சிங்கள பெருந்தேசியவாத மனநிலையை புரிந்துகொள்ளலாம்.

அரிச்சந்திரன்

தமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா? அரிச்சந்திரன்

Saturday, June 18, 2016 / No Comments
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

குருபரன் ஏற்கனவே சமூகவலை தளங்கள் ஊடாக பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானவராக இருந்தபோதும், நேரடியாக அவரது கருத்துக்களை அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளது.

இப்பத்தி அவரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளபோதும் இன்னும் சில முன்னேற்றகரமான சிந்தனைகளை கொண்ட சாதாரண குடியானவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.



கீழ்வரும் மூன்று விடயங்கள் ஊடாக, முக்கிய கருத்துக்களை வாசகர்களுக்கு கொண்டுவருதல் பொருத்தமானது.

சமகால நிலவரங்களை பற்றியது

நல்லாட்சி அரசு வந்தபின்னர், சர்வதேச நாடுகளை பொறுத்தவரை புதிய மென்போக்கான அரசுடன் இணைந்து சென்று, கிடைப்பதை பெற்றுக்கொள்ளுங்கள் என தமிழர்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்கள்.

நல்லாட்சி அரசை பொறுத்தவரை காணி விடுவிப்பு என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் குறித்தளவான காணிகளை விடுவிக்கப்படும், அதே நேரம் விடுவிக்கப்படுகின்ற பிரதேசத்திற்குள்ளேயே இருக்கப்போகும் இராணுவமுகாமை பற்றி யாரும் கதைக்க முன்வருவதில்லை.

அதேபோல கோவில் உண்டியல் இருக்கும் இடம் விடுவிக்கப்பட்டபோதும் கோவில் இன்னமும் இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற சந்தர்ப்பத்தையும், ஒரு வீட்டுக்கான மலசலகூடம் விடுவிக்கப்பட்டும் வீடு இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற நிலையும் மீள்குடியேற்றமாக காட்டப்படுகின்றது.

இதேவேளை தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டால் போதும் அரசகாணிகள் இராணுவத்திற்கே சொந்தம் என்ற மனநிலையும், இராணுவ பிரசன்னம் என்பது நடைமுறை வாழ்வியலில் ஒரு சாதாரண நிலைமை என்பதையும் தோற்றுவித்துவிட்டார்கள்.

தனிப்பட்ட பிணக்குகள் ஏற்படுகின்றபோது பொதுமக்கள் பொலிஸ் நிலையம் செல்வதற்கு பதிலாக, இராணுவமுகாம் சென்று தீர்வு தேடுவது நல்லது என்ற நிலைமை வந்துவிட்டமை அதன் ஒரு நீட்சியாக குறிப்பிடலாம்.

சரி இப்படியான சூழ்நிலையில் சிங்கள் அரசுகள் தரப்போகின்ற தீர்வை பெற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வதே நல்லது என்ற மனப்பாங்கும் எம்மக்களிடமும் உண்டு.குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமிடம் அத்தகைய மனநிலை உண்டு.

அப்படியே தருவதை தான் பெற்றுக்கொள்ளப்போகின்றோம் என்றால், அதனை மக்களுக்கு தெளிவாக சொல்லி அதற்கான அரசியலை தமிழ்மக்களிடம் செய்யாமல், சமஸ்டி தீர்வு எடுப்போம் என்று பொய்யுரைத்து மக்களிடம் வாக்குகளை பெற்று அரசியலை செய்யக்கூடாது.

அப்படியான ஒரு அரசியலே – அப்படியான உணர்வை தட்டியெழுப்பி இளைஞர்களை உசுப்பேத்திவிட்டு – அன்று ஓடிப்போன தமிழ் அரசியல் தலைமைத்துவங்களை போல, அதேபிழையை இவர்களும் செய்தால் நாளை இன்னொரு அதிதீவிரமான நிலைப்பாட்டை நோக்கி இளைஞர்கள் செல்வதற்கும் இவர்களே காரணமானவர்கள் ஆவார்கள்.

சிங்கள தேசியவாத மனோநிலை பற்றியது

தமிழர்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்று கிடைப்பதை சிங்கள தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போன சிங்கள மக்களும் விரும்பவில்லை என்ற யதார்த்தை விளங்கிக்கொள்ளவேண்டும்.

அத்தகைய சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போயிருப்பதால்தான் சம்பந்தன் தெரியாமலே கிளிநொச்சி இராணுவமுகாம் பகுதிக்க சென்றுவிட்டார் என்று தெரிந்தபின்னரும் அவரை கைது செய்யவேண்டும் கூச்சலிடுகின்றார்கள். கிழக்க மாகாண முதல்வர் மேடைக்கு செல்லும்போது இழுத்து நிறுத்தமுடிகின்றது. பின்னர் அவரையே மன்னிப்பு கேட்டு கடிதம் எழுத வைக்கமுடிகின்றது.

எனவே சிங்கள மக்கள் மனம்மாறி எங்களுக்கு தீர்வைதந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது, அப்படி எதிர்பார்த்து எமது கருத்துக்களை எமது தீர்வுக்கான தேடலை ஒத்திப்போடுவது ஒன்றுக்கும் உதவபோவதில்லை.

தமிழரின் எதிர்கால செயற்பாடு தொடர்பானது

1.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தெரிவான 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபையில் தெரிவான 40 வரையான தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இவர்களுக்கு கீழே வேலை பார்க்ககூடிய 150 பணியாளர்கள் என ஒரு பெரிய பலம் இருக்கின்றது.

இவர்களுக்கு பிரத்தியேக பணிகள் ஒதுக்கப்படாமல் நடைமுறை ரீதியாக என்ன செய்யப்படவேண்டுமோ அதனை செய்யக்கூடிய செய்விக்ககூடிய பலமாக இவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அத்தகைய வளம் பயன்படுத்தப்பட்டதா முழுமையான முறையில் பயன்படுத்தப்பட்டதா என்று ஆராய்ந்தால் விளைவு சுழியமாகவே இருக்கும்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் – மீன்பிடித்துறை விவசாயதுறை சமூகவளத்துறை கல்வித்துறை மீள்குடியேற்றம் என – ஒவ்வொரு துறையை பொறுப்பெடுத்து குறித்த பிரச்சனைகள் தொடர்பான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அவர்களது இயலுமைக்குட்பட்ட வகையில் எடுத்த நடவடிக்கை என்ன?

இதற்கான ஆலோசனைகள் தமிழ் சிவில் சமூகத்தால் வழங்கப்பட்டபோதும் இன்னமும் செய்யப்படமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

2.சர்வதேச விசாரணை நடக்கவிடமாட்டோம் என சிறிலங்கா அரசு சொல்கிறது. அப்படியான விசாரணை இப்போதைக்கு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆனால் அதுபற்றிய சாட்சிகளை திரட்டி காணாமற்போனோர்கள் பற்றிய பதிவுகளை தொகுத்து காத்திரமான ஒரு ஆவணக்கோப்பை ஏன் எங்களால் செய்யமுடியாமல் இருக்கின்றது?

முழுமையான ஒரு ஆவணக்கோப்பு தயார்செய்யப்பட்டு வைத்திருக்கப்பட்டிருக்குமானால் என்றோ ஒரு நாளைக்கு அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை நாங்கள் வைத்திருக்க முடியாதா?

3.தமிழர்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் என்னென்ன தேவைகள் என்னென்ன செய்யப்படமுடியும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எத்தனை தாய்தந்தை இல்லாத பிள்ளைகள் எத்தனை வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை என்ற ஒரு தரவுகளை பெற்று தேவைகள் என்ன பட்டியலை தயார்செய்து வைத்திருக்கின்றோமா?

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு அரசஅலுவலர் குறைந்த பட்சம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக வேலை செய்யவேண்டிய நிலை.

எனவே மாகாணஅரசுக்குட்பட்ட ஒரு அலுவலரை நியமிப்பதற்கு வழிவகைகளை காணமுடியாதா? அதன்மூலம் அடிமட்டம் தொடக்கம் உயர்மட்டம் வரை நேரடியான தொடர்புகளை மாகாணஅரசுகளால் பேணக்கூடிய சூழல் இருக்குமல்லவா?

4.வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது என சிங்கள அரசு சொல்கின்றது. ஆனால் அந்த இணைப்பை எங்கள் மட்டத்தில் தமிழர்கள் மட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் மட்டத்தில் ஏன் செய்யமுடியாது?

வடக்கு கிழக்கு இணைந்தவகையில் எங்களிடம் ஒரு செயற்பாட்டு மையம் அல்லது தொண்டுநிறுவனம் இருக்கின்றதா? வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தாங்கள் இணைந்தவர்கள் என்ற மனப்பாங்கை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்திருக்கின்றோம்?

வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் எங்களால் எடுக்கபப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் உ வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் – ஒரு மேசையில் இருந்து ஒரு மாநாடு நடத்த மைத்திரியா அனுமதி கொடுக்கவேண்டும்?

5.தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இனஅடக்குமுறைகள் சிங்கள குடியேற்றங்கள் அதிகாரதுஸ்பிரயோகங்கள் காணி அபகரிப்புகள் அல்லது முழுமையற்ற காணி விடுவிப்புகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மாதாந்தம் ஒரு அறிக்கை ஒன்றை பலமான ஒரு கட்டமைப்பின் ஊடாக கொண்டுவருவதன் ஊடாக அவற்றை நாம் ஆவணப்படுத்தலாம் அல்லவா?

அந்த ஆவணங்களையே நல்லாட்சி அரசின் முன்னேற்றங்களாக சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கு முன்னால் கொண்டுசெல்லலாம் அல்லவா?

இப்படியாக எம்மால் செய்யக்கூடிய பலவிடயங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன. இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் தரப்பு ஒரு தேக்கநிலையிலேயே இருக்கும்.

அப்படியானால் முடிவுதான் என்ன? என்ன செய்யலாம்?

வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சனைகளை ஆய்வுசெய்து அதற்கான பணிகளை முன்னெடுக்க ஒரு கட்டமைக்கப்பட்ட இயக்கம் அல்லது ஒரு நிறுவனம் தேவை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்யமுடியாத, செய்யத்தயங்குகின்ற அல்லது செய்யஇயலாத விடயத்தை தமிழ்மக்கள் பேரவை செய்யும் என எதிர்பார்க்கலாமா?

தமிழ்மக்கள் பேரவை தற்போது பல உபகுழுக்களை நியமித்துள்ளது. அவர்களால் இந்தவிடயத்தில் முன்னேற்றத்தை காட்டமுடியுமா என்பதை காலம்தான் பதில்சொல்லவேண்டும். எனினும் அதற்காக காத்திருக்கமுடியுமா?

எனவேதான் முழுநேரமாக உழைக்கக்கூடிய மனிதவளங்களை கொண்டு வளநிறுவனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். ஒரு பத்துப் பணியாளர்களை உள்வாங்கி வடக்கிலும் கிழக்கிலும் முழுநேரப்பணியில் அந்த நிறுவனம் அதில் ஈடுபடலாம்.

எப்படியான செயற்றிட்டங்கள் செய்யப்படலாம் என்பதையும் எப்படியான தேவைகள் இருக்கின்றன என்பதையும் என்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதையும் அவர்கள் இனங்காணவேண்டும் கண்டறியவேண்டும் அதனை ஆவணமாக்கவேண்டும்.

செய்யப்படவேண்டிய வேலைகளை அரசியல்வாதிகள் ஊடாகவும் வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாகவும் கிராம கட்டுமானங்கள் ஊடாகவும் செய்யப்படுவதற்கு அவர்கள் வழிகளை கண்டறியவேண்டும்.

ஒரு நோக்கத்தோடு ஒருமித்த சிந்தனையோடு ஒரு இயக்கம் போல அவர்கள் பணியாற்றவேண்டும். இப்படியான ஒரு நிறுவனத்தை தொடக்கி தாயகத்தின் வளர்வதற்கு புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்கள் கைகொடுக்கவேண்டும்.

அமெரிக்கா வந்து எங்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்றும் பிரித்தானியாவுக்கு ஒரு கடமை இருக்கின்றது அது எங்களுக்கு ஏதாவது செய்யும் என்ற கற்பனைவாதத்தில் வாழாமல்எங்களுக்கான தேசத்தை எங்களுக்கான கட்டமைப்புகளை நாங்களே உருவாக்குவோம்.

– நன்றி துளியம்

வெறும் தேசியம் விலையாகுமா?

Sunday, May 22, 2016 / No Comments
ஈழத்தமிழர்கள் வாழ்வில் கொடிய அவலங்களை சுமந்த கனத்த நாட்களின் எண்ணங்களை அனைவரும் மீளநினைவு கொள்ளும் நாள் மே 18. இவ்வாண்டு தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவு நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.

தாயகத்தில் வழமையை விட நெருக்குவாரங்கள் குறைந்தபோதும் கனதியான நிகழ்வுகளாக அந்நாள் நினைவுகூரப்படவில்லை. முள்ளிவாய்க்காலில் கூட இம்முறை பெருமளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அங்கும் வடமாகாணசபை என்று தனித்தும் தமிழத்தேசிய மக்கள் முன்னனி என்றும் தனித்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.



வழமையாக பெருமளவில் திரண்டுகொள்ளும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் இம்முறை அந்த கனதியை இழந்துவிட்டன. ஈழத்தமிழர் அரசிpயலுக்காக குரல்கொடுத்தவர்களே பிரிபட்டு “உண்மையானவர்கள்” யார் என்ற போட்டியில் ஒருவருமே “இல்லாதவர்களானார்கள்”.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் முன்னரை விட மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

பிரித்தானிய பெருந்தேசத்தில் இரண்டு இடத்தில் இரண்டு பிரிவுகளாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஒரு இடத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் மற்றைய இடத்திற்கு செல்லுமாறு பழ. நெடுமாறனும் குரல்கொடுத்திருந்தனர்.

இரண்டு இடங்களில் அல்ல இருபது இடங்களிலும் நினைவுநிகழ்வுகளை உரிய முறையில் செய்வது வரவேற்கதக்கது.

நடைபெற்றது இனப்படுகொலை அல்ல சில கவலையான சம்பவங்களே எனச்சொல்லியும் தலைவர் பிரபாகரன் வந்து சொல்லும்போது தமிழரின் தேசியக்கொடியை ஏற்றுவோம் அதுவரை அதனை மடித்து வையுங்கள் பிரித்தானிய தமிழர் பேரவை சொல்லுகின்றது.

தேசிய அடையாளங்களை ஒளித்துவைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றும் அதனை முன்னே வைத்து தமிழர் போராட்டத்தின் நியாயங்களை வெளிச்சொல்லுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருந்து உங்களுக்காய் வேலை செய்கின்றோம் என்று சொல்கின்றார்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாளென்பது தனியே ஒரு துக்கநாளல்ல. ஒருதேசத்தின் அழிவில் நனைந்து வீழ்ந்து அழுதுபோவதற்கான நாள் மட்டுமல்ல. இழந்தவர்களுக்கான நீதிபெறப்பட வேண்டிய தேவையை நினைவூட்டும் நாளாகவும் இருப்பவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான நாளாகவும் அதனை நினைவுகொள்ளவேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

இதனையே முள்ளிவாய்க்கால் நிகழ்வை தலைமையேற்று நடத்திய வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் பதிவுசெய்துள்ளார். தமிழர்களுக்கு நல்ல தீர்வை பெற்றுத்தருகின்றோம் நடந்தவைகளை மறந்துவிடுங்கள். போர்க்குற்றங்களை பற்றி கதைக்கவேண்டாம் என்றும் நடைபெற்றது இனவழிப்பு என சொல்லவேண்டாம் எனவும் மறைமுகமான அழுத்தங்கள் உள்ளேயும் வெளியிலிருந்தும் கிடைப்பதாகவும அதனை ஏற்கமுடியாது எனவும் விக்கினேஸ்வரன் சொல்லுகின்றார்.

ஆனால் இங்கு முக்கியமான கேள்வி என்னவெனில் தமிழர்களின் முக்கியமான ஒரு நினைவுநாளில் கூட அனைவரும் ஒருமித்து பயணிக்கமுடியாமல் போவது ஏன் என்பதே.

பல்வேறு பிளவுகளும் பிரிவுகளும் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றபோதும் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு தொடர்பாக தாயகநிலைமைகளை விரிவாக ஆராயவிரும்புகின்றது இப்பத்தி.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் கூட அதுவும் முள்ளிவாய்க்கால் என்ற முக்கியத்துமான இடத்தில் நடைபெற்ற நினைவுநிகழ்வை கூட ஒருங்கிணைந்து செய்யமுடியாமல் போனமை வரலாற்றின் தமிழர் வரலாற்றின் சாபக்கேடா?

முள்ளிவாய்க்கால் நிகழ்வை வடமாகாண சபை பொறுப்பெடுத்து செய்தது தவறு என்றும் தாம் ஏற்றுக்கொள்ளாத 13வது சட்டத்திற்கு கீழ் அமைக்கப்பட்ட – தங்களால் நிராகரிக்கப்பட்ட கட்டமைப்பான – வடமாகாணசபையால் நடாத்தப்படும் நினைவுநிகழ்வில் பங்குகொள்வது தமது அரசியல்பாதைக்கு தவறானது என்று தமிழத் தேசிய மக்கள் முன்னனி சொல்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவுநிகழ்வு என்பது தனியே வடமாகாணசபையால் நடாத்தப்பட்டநிகழ்வு என சொல்லமுடியாது. அது வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அவர் இப்போது வடமாகாண சபையின் முதல்வர். அத்தோடு தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர். அங்கு பேரவையின் உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் விக்கினேஸ்வரன் மீது கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவது வெளித்தெரியா விடயமல்ல. அவரை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்பது சிங்கள பேரினவாதத்தின் நோக்கம் மட்டுமல்ல. கூட்டமைப்பில் உள்ள அரசியல் வியாபாரிகளின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கின்றது.

எனவே இந்த நினைவுகூரல் விடயத்திலாவது ஒன்றுபட்டு நின்று தமிழத்தேசிய மக்கள் முன்னனியானது விக்கினேஸ்வரனை மறைமுகமாக பலப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் வெறுமனே தேசியம் பேசுகின்றோம் பேர்வழியாக இவர்களும் போய்விடுவார்களோ என்ற ஐயத்தை விதைப்பதுபோல அவர்களின் செயற்பாடு அமைந்துவிட்டமை தவறான உதாரணமாக வரலாற்றில் பதியப்படும்.

வடமாகாணசபை என்பது தனியே அதிகாரங்கள் அற்ற ஒரு கட்டமைப்பு என்று ஓரேயடியாக புறக்கணித்துவிடமுடியாது. தமிழர்களை பொறுத்தவரை இருக்கின்ற கட்டமைக்கப்பட்ட – அதிகாரத்தில் உள்ள - ஒரே அரசியல் நிறுவனமாக வடமாகாணசபையே உள்ளது.

கொழும்புக்கு செல்லும் முக்கியமான தூதுவர்கள் வடக்கிற்கும் வருவதனை அங்கும் ஒரு விசேட அதிகார நிறுவனம் உண்டு என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதால் தான்.

13 இற்கு கீழ் அமைக்கப்பட்ட மாகாணசபை மூலம் தான் சமஸ்டி ரீதியான அரசில் தீர்வே தேவை என்கின்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அதிகாரங்கள் அற்ற நிராகரிக்கப்பட்ட வடமாகாணசபையால் தான் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என தீர்மானம் நிறைவேற்றமுடிந்தது.

எனவே வெறுமனே தேசியம் பேசிக்கொண்டு முன்னே செல்வதால் மட்டும் அதனை சரியான அரசியல் நகர்வாக கொள்ளமுடியாது. அப்படியான செல்முறை தோல்வி காணும்போது அதற்கான பழி அப்பாவிகள் மீதே சுமத்தப்படுகின்றது.

இன்று வடமாகாணசபை உறுப்பினர்களில் சிலர் மோசமான காட்டுமிராண்டித்தனமான காடையர் கூட்டத்தை தமது தொண்டர்களாக வைத்துள்ளார்கள். அது இப்போது சாதாரண நாட்டாண்மை அரசியல் தரத்திற்கு சென்றுவிட்டது. சிலவேளைகளில் அப்படியானவர்களால் கொலைகளும் நடக்கின்றன. கடத்தல்களும் நடக்கின்றன. கற்பழிப்புகளும் நடக்கின்ற நிலைக்கு சென்றுவிட்டன.

இப்படி எம்மவர்களால் எம்மவர்கள்தான் என்று எண்ணி வாக்களிக்கப்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதற்கு காரணம் என்ன? நல்லவர்கள் பலர் வெறுமனே தேசியம் பேசிக்கொண்ட சிலரால் பாதை மாற்றப்பட்டமைதான் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?

ஆகக்குறைந்தது இப்படியான தனித்தனியான செயற்பாடுகளால் விரக்தியடைந்து பலர் அரசியல் வேலைத்திட்டங்களிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?

எந்த இடத்தில் பிரிந்து நிற்கவேண்டும் எந்த இடத்தில் சேர்ந்து நிற்கவேண்டும் என்ற அடிப்படை அரசியல் அறம் வேண்டாமா?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீது விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காக அதில் உள்ள அனைவரையும் அதன் ஆதரவாளர்கள் அனைவரையும் விமர்சிக்கமுடியுமா?

விடுதலைப்புலிகளின் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர்களை முன்கொண்டுவருவதிலும் நாம் தோற்றுவிட்டோமா? அல்லது இன்னும் காத்திருக்கப்போகின்றோமா?



-     அரிச்சந்திரன் -

முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை!!!

Tuesday, April 26, 2016 / No Comments
அண்மையில் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்தவர்களின் காணி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்நோக்கில் ஒரு விசேட சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

அதன்படி எதிர்வரும் ஒருவருட காலத்தினுள் “பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் காணி சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது” என அச்சட்டமூலம் கூறுகின்றது.

இந்த சட்டமானது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். வழமைபோலவே தாங்களும் இணைந்துதான் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே அச்சட்டம் கொண்டுவந்ததாக கூட்டமைப்பு சொல்லும் என்பது எதிர்பார்க்ககூடியதே.



அதனையே ஒரு ஊடகத்திற்கு பகிரங்கமாக கருத்து தெரிவித்தபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அப்போது இது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு ஆயுதக்குழுவால் பாதிக்கப்பட்ட வர்களுக்குத்தான் இழப்பீடு தருகின்றதே தவிர இராணுவத்தினரால் கையப்படுத்தப் பட்ட காணிகளுக்கு பதில் வருமா எனக்கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுமந்திரன் “பயங்கரவாத ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சூழ்நிலைகள் என்று வரும்போது அந்தச் சூழ்நிலைக்குள் படையினரையும் சிக்கவைக்கமுடியும்” என்று தனது சாணக்கியத்தனத்தை தெரிவித்திருந்தார்.

காணி ரீதியான மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் அவர்கள் சார்பான பிரதிநிதிகள் எவரும் இதுபற்றிய பிரயோசனமளிக்கக்கூடிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை.

மாறாக விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தும் விதத்தில் சட்டமூலங்கள் வருவதை மறைமுகமாக ஆதரித்து வருகின்றார்கள். அதற்கு இந்த காணிச்சட்டமூலம் கொண்டுவந்த முறைமை நல்ல எடுத்துக்காட்டு. ஆழக்கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் ஏற்படுகின்ற பிரச்சனையை தலையிட்டு அதற்கு தனது விசேட சட்டமூலத்தை கொண்டுவந்தவர் இந்த சுமந்திரன்.

ஆனால் தமிழர்களின் உரிமைகளை மீளப்பெற்றுக்கொள்வதில் உருப்படியான எந்த சட்டமூலத்தை சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்கள் என்றால் எதுவும் இல்லை.

தமிழர்களின் அரசியலுரிமை என்பது தற்போதைய சிறிலங்காவின் சட்டவாக்கத்திற்கு அப்பாற்பட்டது. அதே சட்ட எல்லைக்குக்குள் நின்று ஒரு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்றது.

அதற்கு அப்பால் சென்று தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற சிந்தனை மாற்றம் சிங்கள தேசத்திற்கு இன்னும் வரவில்லை. அதனை உருவாக்கி கொள்ளும் அல்லது மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளும் எந்த உபாயங்களும் தமிழர்நலனில் அக்கறை உள்ள சக்திகள் என்று சொல்லப்படுவனவற்றிலும் இல்லை.

ஆனால் அந்த சட்டவாக்க எல்லைகளுக்குள் நின்று தீர்வு காணப்படக்கூடிய பல பிரச்சனைகள் உண்டு.

உதாரணமாக 32 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட கொக்குளாய், கொத்குத்தொடுவாய், தென்னமரவாடி மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறமுடியாமல் இருக்கின்றார்கள்.

திருமலை கன்னியா நீரூற்றுகள் என்பவை தமிழர்களின் வாழ்வோடு இணைந்தவை இன்று அந்தப்பிரதேசம் பௌத்த மதங்களுக்கு சொந்தமானது என தமது அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அதனை கையகப்படுத்தியுள்ளனர்.

இன்று கன்னியா நீரூற்று பிரதேசம் அந்தப்பிரதேச மக்களின் பிரதேச சபையிடமிருந்து பறிக்கப்பட்டு சிங்கள உடைமை ஆக்கப்பட்டுள்ளது.

அங்கு பௌத்த விகாரையும் பள்ளிவாசலும் கட்டப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. இந்து ஆலயம் இடிக்கப்பட்டு மக்கள் மீண்டும் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் அந்தப்பிரதேசத்து மக்களின் அனுமதி இன்றி பிரதேசசபை பிரிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பல இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளனன. பிள்ளையார் கோவிலை இடித்து பள்ளிவாசல் கட்டியது நானே என அலிசாகிர் மௌலான வெளிப்படையாகவே சொன்ன காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இருந்தது.

தமிழ்மக்களின் அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட இத்தகைய பிரச்சனைகளை கையாளவோ அல்லது தீர்வு காணவோ தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு வருமட்டும் காத்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கின்றதா?

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை சரிபிழைகளுக்கு அப்பால் தம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவதிலும் அதற்கு தீர்வு காண்பதிலும் அத்தகைய தீர்வு காணலிற்கு இணைந்து நிற்பதிலும் முன்மாதிரியாக இருக்கின்றார்கள்.

குறிப்பாக முஸ்லிம் பிரதேச சபைகளை ஏற்படுத்தும் விடயங்களை தமது தேர்தல் கால உடன்பாடுகள் ஊடாக சாத்தியப்படுத்தியிருக்கின்றார்கள். ஒரு பலவீனமான நிலையிலும் கிழக்கு மாகாணசபையின் தலைமைத்துவத்தை தக்கவைப்பதற்கான தமது அரசியல் நகர்வில் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் தலைமைத்துவம் சாதித்தது என்ன?

அரிச்சந்திரன்

சம்பந்தரின் இருமுகங்கள்: சாதிக்குமா? பாதிக்குமா?

Friday, April 15, 2016 / No Comments
சிறிலங்கா அரச கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்த பின் எதிர்க்கட்சிகளே இல்லாதநிலையில் வலிய நுழைக்கப்பட்ட சம்பந்தர் சிறிலங்கா அரச கட்டமைப்பின்எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.

எதிர்க்கட்சி தலைவர் ஆன சம்பந்தர் தற்போது இரண்டு பாத்திரங்களைஏந்திக்கொண்டு திரிகின்றார். முதலாவதாக சிறிலங்கா என்ற நாட்டின் தலைவர்களில்ஒருவராக அதுவும் எதிர்க்கட்சித்தலைவராக செயற்படவேண்டிய நிலையில் உள்ளார். இரண்டாவதாக தமிழர் தரப்பின் தலைமைத்துவ பிரதிநிதியாக தமிழர்களின்தலைவராகவும் தன்னை காட்டிக்கொள்ளவேண்டிய நிலை அவருக்கு உள்ளது.



அண்ணளவாக 70 வீதத்திற்கு மேலான சனத்தொகையை கொண்ட இலங்கைத்தீவின்அரச கட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைமைத்துவ பொறுப்பு எடுப்பது என்பது மீண்டும்இனவாதிகளின் கோபத்திற்குள்ளாகி தமிழருக்கே உரித்தான நியாயங்களைவெளிப்படுத்த முடியாத கையறுநிலையை ஏற்படுத்திவிட்டதா என்பது பலரிடம் உள்ளகேள்வி.

ஏற்கனவே ஆளுங்கட்சியில் உள்ளவர்களே இரண்டாக பிரிந்து தமக்கே எதிர்க்கட்சிதலைமைப்பொறுப்பை தரவேண்டும் எனக்கோரி நிற்கின்றனர்.

உண்மையாகவே தமிழர் தரப்பின் ஒரு தலைமைக்கு – தற்போதுள்ள அரசகட்டமைப்பின்படி – எதிர்க்கட்சி தலைமைப்பதவி பொருத்தமானதில்லை என்பதுஇப்பத்தியாளரின் கணிப்பும் ஆகும்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை தமிழர்களுடைய பிரச்சனைகளைமையப்படுத்தியதாகவே தமிழர் அரசியல் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத நிலையில்இருக்கின்றார்கள்.

இருப்பதற்கு காணியும் இல்லாமல், இருப்பவன் இருக்கிறானா இல்லையா என்பதும்தெரியாமல் சிறைகளிலே அடைபட்டு இருப்பதே வாழ்வாகிப்போன ஒரு இனத்தின்தலைமை, எங்கோ ஒரு மூலையில் அவ்வப்போது சில சிக்கல்களை எதிர்கொள்ளும்சிங்கள சமூகத்திற்காக, வினைத்திறனுடன் குரல் எழுப்பமுடியாது.

அப்படியே குரல்கள் எழுப்பப்பட்டாலும் அது ஆதரவுக்குரலாக மட்டுமே இருக்கமுடியும்.

அப்படியானால் தமிழர் தரப்பு எப்படி எதிர்க்கட்சி தலைமைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்பதை ஆராய்வோமானால் தமிழர் தரப்பின் குரலைபலவீனப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இது என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் அதனை தமிழர்களில் ஒரு தரப்பினர் இப்போது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வைத்துக்கொண்டு வெளிநாட்டு தூதுவர்களோடுசந்திப்புக்களை செய்யமுடியும் என்றும் அதன் ஊடாக தமிழர் தரப்பின் நியாயங்களைஎடுத்துரைக்கமுடியும் என்றும் அவர்கள் கதைவிடுவார்கள்.

சிங்களத்தின் ஆளும் கட்சியும் சிங்களத்தின் எதிர்க்கட்சியும் இருக்கும்போதே தமிழர்தரப்பை ஒரு தரப்பாக கருதி தனிப்பட்ட சந்திப்புகளை முக்கியமான எந்த நாடுகளுமேசெய்துவருகின்றன. செய்துவரும்.

ஆனால் தற்போதைய தமிழர் ஒருவரின் எதிர்க்கட்சி தலைமைப்பதவியானதுதமிழருக்கான கவனம் செலுத்தலை குறைத்து, சிறிலங்கா என்ற நாட்டின்அடிப்படையில் சிந்தித்து ஒவ்வொரு அரசுகளும் செயற்படக்கூடிய நிலையேஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசதலைவருக்கான தேர்தல் காலத்தில், சந்திரிகா மிக கவனிப்பிற்குரியவிடயத்தை பகிர்ந்துவந்தார். அதாவது தான் அரசதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டசமயத்தில் விடுதலைப்புலிகளோடு போர் செய்தே வெல்லவேண்டும் என சிங்கள மக்கள்எண்ணியதாகவும், ஆனால் தனது அரசு சிங்கள மக்கள் மத்தியில் செய்த விளக்கவுரைநடவடிக்கைகள் காரணமாக அந்த மனநிலையை மாற்றியிருந்ததாகவும்பெருமிதப்பட்டிருந்தார்.

ஆனால் இன்று நல்லாட்சி அரசு வந்துள்ள சூழலில், தமிழ்மக்களுக்கு அதிகாரங்களைகொடுத்து சமத்துவமாக வாழவேண்டும் என்ற நல்நெறியை சொல்ல எந்தவொருசிங்கள தலைவர்களாவது  தமிழ்தலைவர்களாவது எந்தவொரு நடவடிக்கையாவது முன்னெடுத்தார்களா?

தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவேண்டும் என்ற மனநிலை சிங்கள தேசத்திற்குஇன்னும் வரவில்லை. அத்தகைய அறிவூட்டலை செய்கின்ற நீண்ட செயற்றிட்டம் முன்னெடுக்காதவரை சிங்கள தேசிய மனநிலை மாறப்போவதில்லை.

ஆனால் அத்தகைய “அறிவூட்டல்” வேறு இடத்தில் நடக்கின்றது.

அண்மையில் ஏறாவூர் சென்ற சிறிலங்கா அரச அதிபர் மைத்திரிபால அங்கு உரையாற்றும்போது  “தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களும் தீர்வு வழங்காமல் சிங்களமக்கள் அமைதியாக வாழமுடியாது” என சொன்னார்.

இதனைப்போலவே அம்பாறைக்கு சென்ற சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் மங்களசமரவீரவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும்“காணாமல் போவதை காணாமல் ஆக்குவோம்” என சபதம் எடுத்திருந்தார்கள்.

இங்கு மைத்திரிபாலாவும் மங்கள சமரவீரவும் சுமந்திரனும் மேற்படி செய்தியை சிங்களதேசத்தில் அல்லவா சொல்லியிருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பொழிவுரைகளை செய்வதன் நோக்கம் என்ன?

இதற்கு மேலதிகமாக அண்மைய எடுத்துக்காட்டை கூறலாம்.

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபாலசிறிசேனா “நாம் ஒரு நாடாக ஒரு தேசமாக வளர்ந்து முன்னேறுவோம் எனதிடசங்கற்பம் கொள்வோம்” என தெரிவித்திருந்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழில் “மலர்ந்துள்ள இந்தபுத்தாண்டில் கடந்த காலங்களிலேயே பல்வேறு சம்பவங்களின் நிமிர்த்தம் சிதைந்துபோயுள்ள சமூகங்களுக்கு இடையேயான நல்லுறவை கட்டியெழுப்ப அனைவரும்முன்வர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன்.

மேலும் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாலும் பல்வேறுசூழ்நிலைகளின் நிமித்தம் இப்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடமுடியாத நிலையிலுள்ள எமது உறவுகளையும் நினைவில் வைத்துக்கொள்வோமாக.

மலர்ந்துள்ள இப்புத்தாண்டு அனைவரதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற சுபீட்சமானஆண்டாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

என தனது வாழ்த்துச்செய்தியை பதிவு செய்திருந்தார்.

ஆனால் ஆங்கிலத்தில் சிங்கள மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில்

The Sinhala and Tamil New Year is not merely a celebration. Rather, it is a national festival that has deep roots in our culture and traditions. The Sinhala and Tamil New Year is also a symbol of unity as it brings together people, irrespective of race, caste, or creed in national celebration.

However, while I encourage all of you to partake in the celebrations with joy and happiness, I also urge you to remember those who are not so fortunate to celebrate owing to various circumstances.

“My hope is that this New Year would be a peaceful and prosperous one to all Sri Lankans”.

இதில் சிதைந்துபோன சமூகங்கள் மத்தியில் நல்லுறவு வரவேண்டும் என்றோ அதனைகட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டும் என்றோ கோரிக்கை விடப்படாமல்

அனைத்து சிறிலங்கா தேசத்து மக்களுக்கும் இதுவொரு தேசிய விழா என்றும்அந்தளவுக்கு எங்களனைவரையும் பிணைத்து வைத்துள்ளது என்றும் ஒரு சிங்களதேசத்தின் தலைவராக தனது வாழ்த்துச்செய்தியை பதிவு செய்திருந்தார்.

அதனால்தான் இப்பத்தியின் ஊடாக முக்கியமான ஒரு விடயத்தை முன்வைக்க விரும்புகின்றோம்.

தமிழரது தனித்துவ தேசிய அடையாளங்களை உடைத்து படிப்படியாகநீர்த்துப்போகச்செய்து சிறிலங்கா ஒரு தேசத்தில் தமிழர்களும்வாழ்ந்துவிட்டுப்போகலாம் என்ற நிலையை உருவாக்குகின்ற முயற்சியிலேயே சிங்களத் தலைவர்களுக்கு ஈடாக தமிழ்த்தலைவர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்தைஇப்பத்தி முன் வைக்கின்றது.

கூர்வாளின் நிழல் - அரிச்சந்திரன்

Friday, March 18, 2016 / No Comments
ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமும் அதன் பின்னரான தமிழர்களின் அரசியல் இருப்பு என்னவென்பதும், ஆயுதபோராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான அரசியல் நிலை உண்மையில் தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியா என்பதிலும் பல வாதங்கள் உண்டு.

எனினும் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நெறியானது, போராட்டத்திற்காக அர்ப்பணித்த மாவீரர்களினதும் பொதுமக்களினதும் தியாகத்தின் மீதுதான் நிலைப்படுத்தப்படமுடியும் என்பதும், அதன் ஊடாகவே தமிழர்கள் தமது அரசியல் பலத்தை பெறுவார்கள் என்பதும் ஒரு பொதுவான அபிப்பிராயமாக இருக்கின்றது.





அதனை மறுத்து போராட்டத்தின் தோல்விகளை ஏற்றுக்கொண்டு, போராட்டவழிமுறையே தோல்வி என ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்திற்குள் நகருவதே தமிழர்களுக்கு மோட்சத்தை தரும் என்ற வகையில், பயணப்படவேண்டும் என்ற வாதத்துடன் சில கருத்துக்கள் எம்மவர் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இதே கருத்தைத்தான் சிங்கள பெருந்தேசியவாதமும் முன்வைக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டால், அதன் வழிமூலம் எதுவென்பதை புரிந்துகொள்ளமுடியும்.

எமது போராட்டத்தினை தோல்வியடைந்த போராட்டமாக காட்டுவதற்காகவென பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்காக இறுதியாக பயன்படுத்தப்பட்ட உத்திகளில் ஒன்றுதான், தமிழினியின் கூர்வாளா என ஐயப்படவைக்கிறது அதன் உள்ளடக்கம்.

ஒரு விடுதலைப்போராளியின் புத்தகத்தை தங்களது நீண்டகால திட்டங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல்களை செய்து வெளியிட்டுள்ளார்கள் என்ற இயல்பான ஐயத்தை தோற்றுவிக்கின்றது அதன் தொடக்கமும் முடிவும்.

இப்போது ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை அடக்குவதற்கு நேரடியான உத்திகளை பயன்படுத்தாமல், தந்திரமான உத்திகளையே சிங்கள தேசிய அரச இயந்திரம் பயன்படுத்திவருகின்றது.

அந்தவகையிலேயே சரணடைந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளை இராணுவ உடுப்புகளுடன் விட்டிருந்தார்கள். அல்லது அவர்களது இணக்கத்துடன் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதுபோன்று காட்ட விரும்பினார்கள். அவ்வாறு "சுதந்திரமாக" விடப்பட்டவர்கள் ஊடாக போராட்டதவறுகளை விளம்பரப்படுத்தினார்கள்.



பின்னர் அப்படியான உயர்மட்ட தலைவர்கள் ஊடான ஒரு அரசியலை மக்கள் மத்தியில் விதைக்க முயன்றார்கள்.

முன்னர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சிங்கள புலனாய்வுத்துறை தளபதிகள், இராணுவதளபதிகளாக நியமிக்கப்பட்டு மக்களை கவர்ந்திழுக்கும் செயற்பாடுகளை செய்தார்கள். அவர்கள் வாகனங்களில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடுவதை கண்டால் அந்த இடத்தில் இறங்கி விளையாடுவார்கள். அதனை பார்க்கும் அயலவர்கள் "அந்த ஆமிக்காரன் நல்லவன்” என்பார்கள். இப்படித்தான் வடமராட்சியில் ஒரு இராணுவதளபதிக்கு பாராட்டுவிழா வைக்கப்படும் அளவுக்கு அவரது "திறமை" உயர்ந்திருந்தது.

இதன்மூலம் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த இனப்படுகொலைகளின் இறுகிய வடிவம் தந்திரமாக மறைக்கப்பட்டது. இப்படியான செயற்பாடுகளில் சிறிலங்கா புலனாய்வுத்துறை ஒரு படி மேலோங்கியிருந்தது என்றே சொல்லவேண்டும்.

அந்தவகையில் அரசஇயந்திரத்தின் நயவஞ்சக உத்திகளில் ஒன்றான இன்னொரு பக்கத்தை இப்புத்தகம் ஊடாக முன்வைக்கவிரும்புகின்றது இப்பத்தி.

பின்வரும் ஆதாரங்களை முன்வைத்து அதனை நிறுவ முயல்கின்றோம்.
  1. புத்தகத்தின் முகப்பும் அதன் அட்டையும்
  2. புத்தகத்தின் உள்ளடக்க தொடக்கமும் அதன் முடிவும்
  3. புத்தக வெளியீட்டின் பின்னணியும் அதன் அரசியலும்
இதனை சற்று விரிவாக பார்ப்போம்.

முகப்பு அட்டையில் தெறிக்கும் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ என்ற அதன் தலைப்பு சிங்கத்தின் கூர்வாளை குறிப்பதாக அண்மையில் ஒரு காட்டூன் வெளியாகியிருந்தது. உண்மையில் கூர்வாளின் நிழலில் என்பது சிங்கத்தின் நிழலில் இது எழுதப்பட்டது எனவே அதனை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழினி சொல்கிறாரா?

அது போலவே புத்தகத்தின் பின்அட்டையில் “புலிகளின் வீர வரலாறு புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையே தான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் இல்லங்களில் துயிலும் மாவீர்ர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப் படுத்திவிட முடியாது” இப்படி வருகின்றது வசனங்கள்.

புலிகளின் அணுகுமுறைகளில் சரிகள் பிழைகள் இருக்கமுடியும். ஆனால் வீரத்தையும் துரோகத்தையும் ஒப்பிடமுடியுமா? அதுபோன்று மாவீரர்கள் அனைவரையும் துரோகிகள் என சொல்லமுடியாது என சொல்வதும் எந்தவகையான ஒப்பீடு. இங்கு ஒரு இலக்கிய அறிவுமிக்க தமிழினியை காணமுடியுமா?



இந்த சொல்லாடல் ஒரு வகையான அன்னியப்பட்ட சொல்லாடல் இல்லையா?
இது முகப்புக்கும் முடிவுக்குமான ஒரு பார்வை.
இனி அடுத்த விடயத்திற்கு வருவோம்.

புத்தகத்தின் தொடக்கத்தில் “தலைவர்” என்றும் “இயக்கம்” என்றும் சொல்லப்படும் விடயங்கள் 69 வது பக்கத்திலிருந்து “புலிகளின் தலைவர்” என்றும் “புலிகளின் இயக்கம்” என்றும் மாறுபட்டு செல்வதை அவதானிக்கமுடியும்.

எமது போராட்டத்தை நியாயப்படுத்தும்போது தலைவர் என்றும் இயக்கம் என்றும் சொல்லப்படும் விடயங்கள் விமர்சிக்கும்போது புலிகளின் தலைவர் என்றும் புலிகளின் இயக்கம் என்றும் வருவது இயல்பானதா?
இடைச்செருகல்கள் செய்யபபட்டன என்பதற்கு வலுவான ஆதாரத்தை இது கொடுக்கின்றது.

இன்று தமிழீழ தாயகத்திற்கு வெளியே வாழ்பவர்களே தலைவர் என்றும் இயக்கம் என்றும் இயல்பாக சொல்லுகின்ற சொற்கள். அது மக்களுக்கும் இயக்கத்திற்கும் இடையே இருந்த நெருக்கத்தின் அடையாளம். அந்த அடையாளம் எப்படி தொலையும்?

அதனை தமிழினியால் தொலைக்கமுடியுமா? சாதாரண மக்களே இயக்கம் என்றும் தலைவர் என்றும் இயல்பாகச் சொல்லுகின்ற சொற்கள் அன்னியமானதேன்?

தமிழினினியின் தொடக்ககால இராணுவப்பயிற்சிகளை பற்றி பக்கம் 65 – 66 களில் வருகின்றது. அது “எமது பயிற்சி ஆசிரியர்கள் மைதானங்களில் மிகக் கடுமையானவர்களாக நடந்துகொண்டபோதிலும் ஒவ்வொரு போராளிகளினது தனிப்பட்ட விடயங்களிலும் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்தார்கள்” என வருகின்றது.

ஆனால் அவரது நண்பியின் பயிற்சி பற்றி பக்கம் 70 இல் இப்படி வருகின்றது. “குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான உதாரணங்களாக இருந்தனர்” என வருகின்றது.
இதன்மூலம் சொல்லமுனைவது என்ன?

இதேபோன்று மாத்தையா கருணா விடயம் ஒப்பிடப்படுகின்றது.
இந்தியாவில் சிறையிலிருந்த கிருபன் என்பவர் இந்திய காவல்துறை வண்டி ஒன்றிலிருந்து அங்கிருந்த பொலிசார் இருவரை சுட்டுவிட்டு தப்பியோடுகின்றார்.

அவர் உண்மையிலேயே அவ்வாறு தப்பிவந்ததாகவே விடுதலைப்புலிகள் நம்புகின்றார்கள். தப்பிவந்த கிருபனை சாதனைவீரனாக கணித்து அவருக்கு தலைவருக்கான பாதுகாப்பு பணி கொடுக்கப்படுகின்றது. பொலிஸ்காரனை சுட்டுவிட்டு தப்பியோடும் திட்டத்தை வடிவமைத்து நிறைவேற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இதுபற்றி இச்சதியில் பங்குபற்றிய அனைவருமே ஏனைய போராளிகளுக்கு முன் சாட்சி வழங்கினர். அதனைத்தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருந்த மாத்தையாவை சிறையில் சந்தித்த தலைவருக்கு தனது நம்பிக்கைக்குரிய ஒரு தளபதி அத்தகைய துரோகத்தை ஏன் செய்தார் என நம்பமுடியவில்லை. அதனால் சிறைக்கு நேரடியாகச்சென்று “நீ ஏன் அப்படி செய்தாய்” என கவலையுடன் கேட்டார் என்றும் அதற்கு மௌனமாக மாத்தையா இருந்ததாக பதிவு உண்டு.

மாத்தையாவின் துரோகத்தை அவரது மனைவியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரலாறு காட்டிய வழி. அது தெளிவாகவே தமிழினிக்கும் தெரிந்திருந்தது.

அதேபோன்ற நிலையே கருணாவுக்கும் ஏற்பட்டது. இதனை விளங்காமல் தமிழினி இருந்திருப்பாரா?

அடுத்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை ஒரு அடிப்படையான வரையறையை எப்போதும் பேணிவந்தது. அது அதன் தலைமைத்துவத்தால் நெறிப்படுத்தப்படவில்லை. மாறாக அடிமட்ட போராளிகளாலேயே வழிப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது ஒருவரது நிலைப்பாடுகள் மாறலாம் ஆனால் செயற்பாடுகள் மாறக்கூடாது என்பதே அது.

போராட்டப்பாதையில் ஏற்படும் கடினங்களை கண்டு விலகுவது சாதாரணமானது. அதற்கான நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியும். ஆனால் அவர்கள் இயக்கத்தின் தியாகத்தையோ அதன் கொள்கைகளையோ கேள்விக்குட்படுத்தும் விதத்தில் செயற்படமுடியாது.
விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து கருணா வெளியேறியபோது கருணா ஒரு துரோகி அவரைப்பற்றி கதைக்கதேவையில்லை என தமிழினி சொன்ன பதிவுகள் இப்போதும் உண்டு. எனவே அதற்கு முரணாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பாரா?

இப்புத்தகத்தில் ஏனைய போராளிகளின் பெயர்கள் அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என தமிழினி சொன்னதாக அவரது கணவர் சொல்கிறார்.

அப்படியானால் அப்படியான நெருக்கடி இருந்தது இருக்கின்றது என்பது ஏன் சொல்லப்படவில்லை? தமிழினிக்கு எந்தவித சித்திரவதைகளும் செய்யப்படவில்லை என்றும் சட்டரீதியாகவே அவருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழினியை சந்தித்த முதலாவது இராணுவத்தினன் சொல்வதாக இப்புத்தகம் சொல்வது ஏன்?
இப்போது இந்தப்புத்தகம் ஏன் அவசரம் அவசரமாக வெளியிடப்படுகின்றது? இதன் பின்னாலுள்ள பின்னனிகள் என்ன? இப்போது சிங்களத்திலும் இப்புத்தகம் வெளிவரவுள்ளது.

ஒரு புத்தகத்தை வெளியீடு செய்வது எவ்வளவு கடினமானது. ஆனால் புத்தகத்தை பிரசுரித்து கிளிநொச்சியில் வெளியீடு செய்வதும் அதன் சிங்கள பதிப்பு இப்போதே தொடங்கிவிட்டதன் பின்னனி என்ன?
தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றியோ அதன் விளைவாக போராட்டம் ஆரம்பித்தது என்றோ போராளிகளின் தியாகங்கள் பற்றியோ சொல்லாத ஒரு புத்தகத்தை சிங்களத்தில் வெளியிடப்போவது எதற்காக?
சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்றவர்களே இதன் வெளியீட்டுக்கும் பின்னணியில் நிற்கும் ‘நல்நோக்கம்’ என்ன?

உண்மையாகவே தமிழினி போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளையே எடுத்திருந்தார் என வைத்துக்கொள்வோம். அப்படியானால் அவரது மருத்துவதேவைக்காக கூட அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்காதது ஏன்?

அனைத்துக்கும் மூலம் ஒன்றுதான்.

30 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு ஆயுதப்போராட்டமானது சரிகளுக்கு நிகராக தவறுகளை கொண்டுள்ளது. உங்களை அடக்குமுறை செய்த சிங்கள அரச இயந்திரத்திற்கு நிகராக உங்கள் விடுதலைப்போராட்டமும் அழிவை தந்துள்ளது. எனவே இரண்டு பக்கஅழிவுகளை மறந்து மீண்டும் உங்களுக்கான தீர்வுகளை 1948 இலிருந்து தொடங்குவோம் என்பதே அது.
அதற்கான சிறுக சிறுக போடப்படும் திட்டங்களின் ஒரு பகுதியே இத்தகைய படைப்பிலக்கிய முயற்சிகளாகும்.

எமது வரலாற்றை புனைந்து தமிழ்த்தேசியத்தை அரிக்கும் ஒரு கூர்வாளே இது.

- அரிச்சந்திரன் -


  பின்னிணைப்பு
1.தமிழினி அக்காவின் சுயசரிதை அவரது இறப்பின் பின் திரிவுபடுத்தப்பட்டு/சில விடயங்கள் உட்புகுத்தப்பட்டு தான் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என 100% என்னால் அடித்துக்கூற முடியும்.
அதற்கான ஆதாரங்களில் ஒன்று தமிழகத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள அப்புத்தகத்தின் பின் அட்டையிலுள்ள வரிகள்.
தமிழினி அக்கா சிறையில் இருந்த போது தமிழகத்தை சேர்ந்த பிரேமா ரேவதி என்பவர் "நலமா தமிழினி" என கேட்டு தமிழினி அக்காவையும் புலிகளையும் விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். அதை வாசிக்க : http://www.kalachuvad...u.com/issue-116/page63.asp
அதில் வரும் ஒரு பந்தியே இப்புத்தகத்தின் பின் அட்டையில் சேர்க்கப்பட்டு அதன் மேலே தமிழினி அக்காவின் படத்தையும் கீழே தமிழினி எனவும் போட்டு அதை தமிழினி அக்காவின் வரிகள் போல் காட்டியுள்ளார்கள். பிரேமா ரேவதி என்பவரின் வரிகள் இங்கே தமிழினி அக்காவின் வரிகளாக திரிவுபடுத்தி காட்டப்பட்டது ஏன் என தமிழினி அக்காவின் கணவர் ஜெயன் தேவா(ஜெயக்குமரன்) அவர்கள் விளக்குவீர்களா?
புத்தகத்தின் அட்டையிலேயே திரிவுபடுத்தல் இடம்பெற்றுள்ள போது உள்ளேயும் பல திரிவுபடுத்தல்கள், திட்டமிட்ட உட்புகுத்தல்கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
2. சயந்தன் கதிர் என்ற எழுத்தாளர் இடைச்செருகல்கள் இல்லையென்றும் இதற்கான ஆதாரமாக தான் தமிழினியோடு உரையாடிய தகவல்களை ஸ்கிறீன்சொட் எடுத்து போட்டிருந்தார்.
ஆனால் தமிழனியின் பேஸ்புக் ஐடியானது அவர் இறந்தபின்னும் இன்னொருவரால் இயக்கப்பட்டதே என சுட்டிக்காட்டியபோது குறித்த பதிவு அகற்றப்பட்டது.
3. பாதுகாப்பு செயலாளரின் விசேட அனுமதியுடன் வெளியிடப்பட்ட புத்தகம்
4. தமிழினி 'ஒரு கூர் வாளின் நிழலில்' எழுதவில்லை” – எழுத்தாளர் திருக்குமரன்