News Ticker

Menu

சுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா

தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.


ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்படமுன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகள் இடம்பெற்றகாலத்தில் கடல்புறாவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். பின்னர் இந்திய இராணுவத்துடன் போர் ஏற்பட்டபோது தலைவரோடு இருந்து காட்டுப்போர்முறையின் நுணுக்கங்களை தானும் கற்று போராளிககளுக்கும் கற்பித்து தலைவர் பிரபாகரன் அவர்களுடனே வாழ்ந்துவந்தவர்.

அமைதியான மென்மையாக சிரிக்கும் சங்கர் அண்ணாவையே எல்லோருக்கும் தெரியும். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையினால் வழங்கப்படும் எந்தப்பணியையும் மிகவும் கவனம் எடுத்து சிறப்பாக செய்து முடிக்கும் அவரது ஆளுமையையும் அனைத்துப் போராளிகளுடனும் உடனேயே நல்ல உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய தோழமையையும் கண்டுகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்காது.

கேணல் சங்கர் அண்ணாவுடன் 2001 ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த இராணுவ தாக்குதல்களாக இருந்தாலும் சரி முன்னேறிவரும் இராணுவத்தினரை மறித்துத் தாக்கும் பாதுகாப்பு படைநடவடிக்கைகளாக இருந்தாலும் சரி அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிய இராணுவப் பகுப்பாய்வு நடைபெறுவது வழக்கம். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் தமிழீழத் தாயகத்தின் பெரும்பகுதிகள் விடுவிக்கப்பட்டபோது பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டும் என தலைவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நவீன போர்ப்பயிற்சிகள் அத்தியாவசியம் எனக்கருதி சிறப்பு இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவென வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

பயிற்சியாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தமிழில் மொழிமாற்றி விளங்கப்படுத்துவார் சங்கர் அண்ணா. இயக்கச் செயற்பாடுகளின் இரகசியம் கருதியும் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சிமுகாமின் முக்கியத்துவம் கருதியுமே தலைவர் அவர்களால் சங்கர் அண்ணாவுக்கு மேலதிகமாக அப்பணி வழங்கப்பட்டிருந்தது.

வான்படையின் தளபதியாக வெளியே உலாவந்த சங்கர் அண்ணா பயிற்சிமுகாமில் எங்களுடனே இருந்தார். "இயக்கத்தால் சொல்லப்படும் எந்த வேலையென்றாலும் சிறப்பாகச் செய்துமுடிக்கவேண்டும்" என்பதேஅவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். எதையுமே தத்துவங்களூடாக விளங்கப்படுத்துவதைக் காட்டிலும் நேரிலே அறிந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஆழமாக பதிந்துகொள்ளும். அதனையே சங்கர் அண்ணாவும் செய்து காட்டினார்.

காடு சார்ந்த பயிற்சிகள் நடாத்துவதற்கான இடங்களைப் பார்ப்பதற்காக 03 கிலோமீற்றர் அளவு தூரம் நடந்து ஒரு குளத்தைச் சென்றடையவேண்டும். நாங்கள் மூன்று பேர் பயிற்சியாளர்களுடன்  ஜி.பி.எஸ்.ஸின் துணையுடன் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் செல்வதற்கு முன்பாகவே சங்கர் அண்ணா திசைகாட்டி(compass) யின் உதவியுடன் அங்கே சென்றடைந்துவிட்டார். நாங்கள் சென்றபோது சிரித்துக்கொண்டே வரவேற்றது பயிற்சியாளர்களுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.

முன்னர் இந்திய இராணுவத்தினுடனான போரின்போது தாங்கள் எவ்வாறு மணலாற்று காடுகளுக்குள் செயற்பட்டோம் என்று கூறுவார். அந்தக்காலத்தில் திசைகாட்டியின் உதவியுடன் மட்டுமே காடுகளுக்குள் இடங்களைச் சென்றடையவேண்டும். கொஞ்சம் இடம்மாறி போய்விட்டாலும் இந்திய இராணுவத்தினருடன் முட்டுப்பட வேண்டிவரும். அவ்வாறு இந்திய இராணுவத்தினரோடு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண்போராளியை தாங்கள் எவ்வாறு மீட்டுவந்தோம் எனவும் சொல்லுவார். அக்குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைக்கு சங்கர் அண்ணாவின் தனித்திறமைகளே கைகொடுத்திருந்தது என்றே சொல்லவேண்டும். சங்கர் அண்ணாவின் இவ்விசேட திறமைகளைப்பற்றி தலைவர் அவர்கள் வெளிப்படையாக பாராட்டியதுடன் மட்டுமன்றி அதனை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்.

விடுதலைப்போராட்ட பயணத்தில் போராட்ட அனுபவங்கள் என்பவை முக்கியமானவை. ஒவ்வொரு களத்திலும் ஏற்படும் தோல்வியும் வெற்றியும் அடுத்த களத்திற்கான செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தும். போராட்டகளத்தில் ஏற்படும் அனுபவங்கள் புதிய போர்வீரர்களுக்குச் சொல்லப்படவேண்டும். தனது போரியல் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும் என்பதில் சங்கர் அண்ணா எப்போதும் கவனமாக இருப்பார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தலைவருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார். தியாகி திலீபனின் நினைவுதினத்தில் தலைவர் உண்ணாநோன்பு இருப்பது வழமை. அன்றைய தினம் தலைவரைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சங்கர் அண்ணாவின் வாகனம் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது இன்னொரு முனையில் எமது தளபதிகளையும் தலைவரையும் கொல்வதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் இறங்கியிருந்தன.

தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான அன்று சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களை சிறிலங்கா அரசபடைகள் தனது நாசகாரத் திட்டத்தின் மூலம் கொன்றுவிட்டது. சங்கர் அண்ணா – 1971 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் ஐந்தாம் திகதி - அவரது நண்பர்களில் ஒருவரான கலாநிதி சிறிதரன் என்பவரின் நாட்குறிப்பேட்டில் குறித்த குறிப்பை இங்கு மீளவும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். அது இதுதான். "The most important thing in the Olympic games is not to win - but to take part…the essential thing in life is not to regret, But to have lived and fought well."

Share This:

No Comment to " சுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM