News Ticker

Menu

போர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் பிளவுக்குள் தமிழினம் ?

தற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் சிங்கள தேசம் எவ்வாறு தனது வியுகங்களை வகுத்துவருகின்றது என்பதை புரிந்துகொள்வது தமிழர் தேசத்திற்கு முக்கியமானதாகிவிட்டது.
சனல் 4 தொலைக்காட்சியினால் காட்சிப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் பிரித்தானியாவில் ஆரம்பித்து - ஜெனிவாவில் முக்கிய இராசதந்திரிகளை கண்கலங்கவைத்து - அவுஸ்திரேலியாவில் பலரையும் அதிரவைத்து - சிங்கள தேசத்தினால் மறைக்கப்பட்ட உண்மைகளை உலகம் புரிந்துகொள்ளதொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.



சிறிலங்காவின் நண்பராகவும் இக்கட்டான நேரத்தில் தோள் கொடுத்த தோழனாகவும் கருதப்பட்ட பிரித்தானிய பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ், அண்மையில் கதிர்காமர் நினைவுப்பேருரையாற்ற கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு உரையாற்றிய பொக்ஸ், சர்வதேச மனித உரிமைமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான குற்றசாட்டுக்கள் நிச்சயமாக கவனத்திற்கொள்ளப்படவேண்டும் எனவும், உண்மையான சமாதானம் என்பது பயங்களிலிருந்து விடுதலையும் தமது எண்ணங்களை வெளியிடுவதற்கான ஒவ்வொருவரின் சுதந்திரமான தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

உலகபோக்கில் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது தனது உற்றநண்பனின் போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டிருக்கும் என்பதை எதிர்பார்த்திராத சிங்களதேசத்திற்கு, இது சங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டதாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சிங்களதேசத்தின் இன்னொரு உற்றநண்பனாக கருதப்பட்ட லிபிய தலைவர் கடாபிக்கு ஏற்பட்ட நிலையென்பது, மகிந்த இராசபக்சவுக்கு நிம்மதியான நித்திரையை கொடுக்கக்கூடிய விடயமல்ல என்பதும் அவர்களுக்கு இடையே காணப்பட்ட உறவுநிலையை அறிந்துகொண்டவர்களுக்கு தெளிவான விடயமாகும்.
ரசியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை வைத்துக்கொண்டாலே மேற்கைத்தைய அழுத்தங்களை சமாளித்துவிடலாம் என அறிவுரை கூறிய லிபிய தலைவருக்கு ஆதரவளிக்காமல், கடைசிநேரத்தில் ரசியாவும் சீனாவும் கைகழுவிவிட்ட நிலையை பார்க்கின்றோம்.

அதற்கு மேலதிகமாக லிபிய தலைவர் மீதும் அவரது பிள்ளைகள் மீதும் சர்வதேச நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையானது, மகிந்த இராசபக்சவுக்கு அதேமாதிரியான ஒரு நிலைக்கே இட்டுச்செல்லக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை கோடிகாட்டி நிற்கின்றன.

எவ்வாறு சூடான் தலைவர் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றசாட்டுக்களை முன்வைத்து - நிலையான தீர்வுத்திட்டம் ஒன்றை நோக்கி சூடானை இழுத்துச்சென்று இன்று - தென் சூடான் என்ற சுதந்திர நாட்டை உலகத்தில் பிரசவிக்கமுடிந்ததோ அதற்கு இணையானதோர் மாற்றத்தை தென் ஆசியாவில் ஏற்படுத்துவது என்பது உலகஒழுங்கை பேணுவற்கு அவசியமானதாகிவிட்டது.

ஆசிய தேசங்களை கடந்து, ஆபிரிக்க தேசங்களை நோக்கி பரந்துவிரியும் சீனாவின் நீளும் கரங்களுக்குள் தமது நலன்கள் விழுங்கப்படுவதை மேற்கைத்தைய அரசுகள் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்தியாவுக்கும் கூட சீனாவின் இந்த அகன்ற கரங்கள் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.

pic7

இந்தவேளையில் கட்சி வேறுபாடுகளை களைந்து சிறிலங்கா என்ற ”இறையாண்மைமிக்க நாட்டின்” மீதான எந்த வெளிநாட்டு அழுத்தமும் தமது சிங்கள மேலாதிக்கவாதத்தை உடைத்துவிடும் என்பதை, சரத் பொன்சேகா தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை புரிந்துகொண்டு, அதற்கெதிராகவே இன்னமும் செயற்பட்டுவருகின்றார்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியமானது என கருதுகின்றோம்.

அண்மையில் அவசரசுற்றுப்பயணம் மேற்கொண்ட சிங்கள தேசத்தின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐநா செயலாளர் பான் கீ முனை சந்தித்தார். அமெரிக்கா மற்றும் முக்கிய பல அரச தலைவர்களை சந்திப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்தபோதும், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் என்ன கதைப்பார்கள் என்பதை புரிந்துகொண்டதாலோ என்னவோ, அவ்வாறான சந்திப்பை அவர்கள் வேண்டும் என்றே தவிர்த்துக்கொண்டதாகவே தற்போது வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த இராசபக்சவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ரணில் விக்கிரமசிங்க இப்பயணத்தை மேற்கொண்டதாகவும், சர்வதேச அழுத்தங்கள் ஊடாக சிங்கள மேலாதிக்கவாதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அதனை தாங்கள் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்பதில் சிங்கள தேசத்தின் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகவே நிற்கின்றன.
போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பில் அனைத்து சிங்கள தேசத்தின் கட்சிகளும் இணைந்தே நிற்கின்றன. ஆனால் தமிழர் தரப்பில் இன்னும் சில அடிவருடி கட்சிகள் சிங்கள தேசத்தின் அடிமைகளாகவே வாழவிரும்புகின்றார்கள் என்பது தமிழர் வரலாற்றின் கசப்பான பக்கங்களாகும்.

ஆனாலும் பேச்சுவார்த்தை மேசையில் காண்டீபத்தை இழந்துநிற்கும் தமிழர் தரப்பிற்கு சர்வதேச ரீதியாக சிறிலங்கா மீது மேலெழுந்துவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான கோரிக்கை முக்கியமானதாகும்.

இதனை சிங்கள தேசமும் தமிழர் தேசமும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன என்பதில்தான் தமிழர்களுக்கான எதிர்காலம் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

- கொக்கூரான் -

Share This:

No Comment to " போர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் பிளவுக்குள் தமிழினம் ? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM