News Ticker

Menu

தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?

இன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அதற்கான வேலைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.



இவ்வேளையில் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணி களம் இறங்கவேண்டுமா என்பதும் அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதங்கள் எவை என்றும் ஆராய்கிறது இப்பத்தி.

இன்று இலங்கைத்தீவின் வரலாற்றில் தமிழர் தரப்புக்கள் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமது அடுத்த கட்டநகர்வுக்கான காய்நகர்த்தல்களை புத்திசாலித்தனமாக மேற்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசியத்தை பலப்படுத்துவதற்காக சில தியாகங்களை மேற்கொள்வதற்கு தமிழ்ப்பற்றாளர்கள் முன்வரவேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையோ கஜேந்திரனையோ அல்லது பத்மினி சிதம்பரநாதனையோ வெளியில் விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வேட்பாளர்களை நியமித்தமை தொடர்பில் சில கேள்விகள் எழுவது நியாயமானதே. ஆனாலும் தமிழ் தேசியம் என்ற இலட்சியத்திற்காக, நடைமுறை சாத்தியமான முறைகளில் செயற்பட்டு அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணிதிரளுவதற்கு அனைத்து தமிழ் பற்றாளர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் தமிழ் தேசியத்திற்காக உழைத்த சமூக பற்றாளர்கள். தமிழர்களின் அரசியல் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கிய துணை ஆயுதப்படைகளை சேர்ந்தவர்கள் படையெடுத்து நிற்க, அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு நிமிர்ந்து நடைபோடவேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறார்கள்.

எனவே அதற்கேற்ற வியூகங்களை வகுப்பதும் அதற்கு பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்துவதும் காலத்தின் தேவையாகும். தற்போது தமிழர் தரப்பை வழிநடத்த முனையும் சம்பந்தரும் மாவை சேனாதிராஜாவும் செல்வம் அடைக்கலநாதனும் சுரேஸ் பிரேமசந்திரனும் தமிழர்களின் விடுதலைக்காக உழைத்தவர்கள். எனவே அவர்களின் தலைமையில் தற்போதைய தேர்தலை நடத்தவிடுவதே தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமாகவிருக்கும்.

இன்னொரு அணியை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்பது சனநாயக பண்புகளுக்கு உயிர்ப்பூட்டும் நடவடிக்கையாக இருப்பினும் தமிழர்களின் தேசியத்திற்கான வாக்குகளை பிரித்து சிங்கள பேரினவாதிகளின் தயவில் உள்ள அரசியற்கட்சிகளுக்கு அவை சாதகமாக அமைந்துவிடும்.

முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிர் இழப்புகளின் பின்னரும் எமது அரசியல் அபிலாசைகளை சமரசம் செய்துகொள்ளவேண்டுமா என்ற உணர்வுரீதியான கேள்விக்கு எம்மிடம் பதில் இல்லைத்தான். ஆனாலும் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் எழுந்த எமது விடுதலைப்பயிரை ஒரு சிலரால் கூடி அழித்துவிடுவார்கள் என எண்ணுவதும் பொருத்தமானதாகவிருக்காது.

இன்று தாயகத்திலுள்ள நிலையை அனைவரும் கருத்திற்கொள்ளவேண்டும். வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த எதிரிகளின் கையோங்கிய நிலையில் சாதுரியமாக சில விடயங்களை நகர்த்தவேண்டும் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதேவேளை எமது தமிழ் தலைவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்களா என்பதையும் அவை எமது தேசிய அடையாளங்களை சிதைக்காமல் பார்த்துக்கொள்வதும் ஒவ்வொரு தமிழ் தேசிய பற்றாளரின் கடமையுமாகும்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக நிறுத்துவதே பொருத்தமாகவிருக்கும். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிலும் அதன் கொள்கைகளிலும் அதிருப்தி இருப்பின் அதனை உரிய காலத்தில் நிரப்பீடு செய்வதே பொருத்தமானது.

உரிய காலம் வரும்வரை, காத்திருந்து சரி பிழைகளை ஆராய்ந்து முடிவுகள் எடுக்க கால அவகாசம் தேவை. அதேவேளை முழுமையான அரசியற்கட்டமைப்பை உருவாக்க அதற்கான அடித்தளம் தேவை. அதனை கட்டியமைப்பதற்கான புறச்சூழல்கள் அமையும்போது அக்கட்டமைப்பும் தானாகவே உருவாகும். அதுவே உலக வரலாறு.

எனவே தற்போதைய தேர்தலில் இன்னொரு மாற்று அணியை நிறுத்துவதை விட்டு தற்காலிகமாக ஒதுங்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு, தமது தமிழ் தேசியத்தின் மீதான பற்றை வெளிக்காட்டுவதுடன் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் தெளிவான செய்தியை சொல்லமுடியும். அதனை விடுத்து மாறிமாறி எம்மவர்களை வசைபாடி எமது எதிரிகளுக்கே வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது.

அதேவேளையில், தற்போது தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவுசெய்வதற்கான கட்டமைப்புகளுக்கான அவசியம் எழுந்திருக்கிறது. தடுப்பு முகாம்களில் வாடும் எமது மக்களுக்கும் தாயகம் எங்கும் அடிப்படை வசதிகளின்றி வாடும் எம்மக்களுக்கும் உதவகூடிய சமூக கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டும்.

அதற்கான வளத்தை ஒழுங்குசெய்து தரக்கூடிய நிலையில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான அவர்களது உதவிகளை நெறிப்படுத்தி வழங்கக்கூடிய கட்டுமானங்களை நிறுவி அதற்கான ஒழுங்குகளை செய்வதற்கு தாயகத்திலுள்ள தமிழர்கள் முன்வரவேண்டும்.

இப்போதைய நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபடலாம். அவ்வாறான பொறிமுறை மூலம் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் தமிழ் தேசியத்தின் பால் நிற்ககூடிய மக்களாக அனைவரையும் உருவாக்கமுடியும்.

உரிய காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாகத்தான் செயற்படுகிறது எனக்கண்டுணர்ந்தால் அதனுடன் இணைந்தோ அல்லது அவர்கள் பிழையான திசையில் சென்றால் அதற்கான மாற்றான அணியை நிலைநிறுத்தி தமிழர்களின் அரசியற் போராட்டத்தை முன்னெடுக்கமுடியும்.

அதுவரை தமிழ் தேசியத்திற்கான ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்காக ஒரு அணியில் பயணிப்போம் அல்லது உரிய காலம் வரும்வரை பொறுத்திருப்போம். அதுவே இப்போதுள்ள எமக்கான தெரிவு.

- கொக்கூரான் -

Share This:

No Comment to " தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM