News Ticker

Menu

காய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு?

இன்றைய உலகில், ஒரு நாட்டில் இடம்பெறும் அரசியல் மாற்றங்கள், மற்றைய நாடுகளை ஏதோவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தாக்கங்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு நாடுகளின் எதிர்பார்ப்பும். அந்தவகையில் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறவேண்டுமா? அல்லது சரத் பொன்சேகா வெற்றி பெறவேண்டுமா? என்பதில் ஒவ்வொரு நாடுகளுக்குமே விருப்புவெறுப்புக்கள் இருக்கின்றது.



இந்தியாவை பொறுத்தவரை சரத் பொன்சேகாவின் தெரிவு என்பது தலையிடியானதாகவே இருக்கும் என மகிந்தவின் ஆலோசகரும் முன்னாள் இராசதந்திரியுமான றசீக் சறூக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் றெடிவ் இணைய சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியானவர் ஒரு நாட்டின் அரச தலைவராக தெரிவு செய்யப்படுதல் இராணுவ ஆட்சிமுறையொன்றை கொண்டுவரவே வழிவகுக்கும் என கூறுகிறார். அதற்கு அவர் பங்களாதேசம், பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளை உதாரணமாக காட்டுகிறார்.

அவரது அனுகூலங்கள் சரியானவையாக கூட இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை, சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்குமிடையில் எந்தவித வேறுபாடுகளையும் கண்டதில்லை. சிறிலங்காவின் அதிகார வர்க்கங்கள் எப்போதுமே தமிழினத்தின் அழிப்பில் அல்லது அதன் உயிர்ப்பை சிதைப்பதில்தான் கவனம் எடுத்துக்கொண்டன. எனவே தமிழர்களை பொறுத்தவரை 1983 ஆம் தொடக்கம் சிறிலங்காவில் இராணுவ ஆட்சிதான் நடந்துவருகின்றது.

இந்தியாவுக்கு இன்னுமொரு அச்சமும் உண்டென குறித்த இராசதந்திரி சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் வடக்கே பாகிஸ்தானும் கிழக்கே சீனாவும் இந்தியாவுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருக்கிறதாம். அதனால் தெற்குப்பகுதியை தமக்கு சாதகமாக வைத்திருக்கவேண்டியது முக்கியமானதாம். சரத் பொன்சேகா வந்தால் அவர் தெற்குப்பகுதியை முன்னையவர்களுக்கு திறந்துவிடுவாராம். அதனால் தமது தெற்குகோடிக்கு பாதிப்பு வந்துவிடுமாம்.

இதேகதையை சொல்லிதானே ஏராளமான ஆயுதங்களை, இந்தியா சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தது. நாங்கள் கொடுக்காவிட்டால், மகிந்த சீனாவிடம் போய்விடுவார் என்றுதானே அத்தனை தமிழர்கள் கொல்லப்படும்போதும் பார்த்துக்கொண்டிருந்தது இந்தியா. இப்போதுமட்டும் எப்படி மகிந்த ராஜபக்ச நல்லவர் ஆனார்?

இதேவேளையில் இன்னொரு இராசதந்திரியான லலித் வீரதுங்கவின் கருத்துக்களை பார்க்கலாம். அவரும் மகிந்தவுக்கு ஆலோசகராக இருக்கிறார். அவரின் கருத்துப்படி, இந்தியாவில் அண்மையில் தேர்தல் நடைபெற்றபோது, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், காங்கிரசை வெற்றி பெறச்செய்ததே மகிந்த ராஜபக்சதான் என கூறியுள்ளார்.

தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும்போது அந்த உணர்வலைகள் காங்கிரசுக்கு எதிராக திரும்பகூடிய சூழல் இருந்ததாகவும், அதனால் மகிந்தவும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் இணைந்து ஆலோசித்து போட்ட திட்டமே கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பாகும். வெறும் பேச்சளவில் விடப்பட்ட அறிவிப்பை இந்திய அரசு தனக்கேற்றவகையில் பயன்படுத்தியிருந்தது. அதனால் தப்பி பிழைத்துக்கொண்டது.

இப்போது தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டிய வேளையிது. மகிந்த ராஜபக்சதான் ஆட்சிக்கு வரவேண்டுமென்பதில் இந்தியா பல்வேறு காய்களை நகர்த்துகின்றது. அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்திய நலன்கள் சார்ந்த சிந்தனையே அன்றி தமிழர்களின் நலன்கள் சார்ந்த சிந்தனை அல்ல.

சிறிலங்கா மீது போர்க்குற்றசாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கான கோரிக்கை வந்தபோதும் அதன்பின்னர் பொருளாதார அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும் சிறிலங்காவுக்கு சார்பாக செயற்பட்டு சிறிலங்காவை காப்பாற்றிவிட்டது இந்தியாவே. இந்தியாவின் அவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளுக்கு பின்னாலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் இரத்தமும் சதையும் கரைந்துபோனதே வரலாறு.

மேற்குலகை பொறுத்தவரை மகிந்தவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவே கருதப்படுகிறது. போர்க்காலத்தில் மேற்குலகின் கருத்துக்களை அசட்டை செய்து சீனா ரசியா ஈரான் லிபியா பாகிஸ்தான் பர்மா போன்ற நாடுகளின் உதவியுடன் மட்டுமே தன்னால் தாக்குபிடிக்கமுடியும் மகிந்த செயற்பட்டார். அவ்வாறே மேற்குலகால் கொண்டுவரப்பட்ட அனைத்து அழுத்தங்களையும் முறியடித்தார்.

இப்போது மேற்குலகை பொறுத்தவரை தனது பலத்தை நிலைநிறுத்துவதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சரத் பொன்சேகா அண்மையில் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக விசாரித்ததும், அதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்கமுடியாது என தேர்தல் சமயத்தில் கைவிரித்து நிற்பதும் அதன் குறியீடுகளாகவே பார்க்கப்படவேண்டும்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரு அணியில் நின்று ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்திருக்க இந்தியா மட்டும் ஏன் மகிந்த பக்கம் சாயவேண்டும்? அவ்வாறான நிலைப்பாட்டுக்கு – முன்னர் குறிப்பிட்டது போல - இந்தியாவின் ஆட்புல வல்லாண்மை ரீதியான காரணங்கள் இருந்தாலும் அதற்காக மட்டும்தானா இந்தியா மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படுகின்றது?

போர்க்குற்றங்களுக்காக மகிந்த விசாரிக்கப்பட்டால் மன்மோகன் சிங்கும் விசாரிக்கப்படவேண்டிவரும் என்பதாலா? போரை நடத்தியவன் போர்க்குற்றம் செய்தது நிறுவப்பட்டால் எரியும் வீட்டுக்கு நெருப்பு எடுத்து கொடுத்தவன் என்ற அடிப்படையில் இந்தியாவின் காந்திய முகமூடி கிழிக்கப்பட்டுவிடும் என்பதாலா?

கூட்டமைப்பை குலைத்து – மகிந்தவுக்கு ஆதரவாக - சிவாஜிலிங்கத்தை நிறுத்திய இந்தியா, தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இந்தியாவுக்கு அவசரமாக அழைத்துள்ளது. இந்தியாவின் நலன்கள் என்பவை தமிழர்களின் உடலங்களுக்கு மேல்தான் எழுதப்படவேண்டுமென, இந்தியா இன்னமும் நினைக்குமாகவிருந்தால் வரலாற்றுப் பழியிலிருந்து இந்தியா எப்போதும் மீளப்போவதில்லை.


- கொக்கூரான் -

Share This:

No Comment to " காய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM