News Ticker

Menu

கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம்

இலங்கைத்தீவானது பிரித்தானியா காலனியாதிக்கத்தின் பின்னர் பல இனப்படுகொலைகளை கண்டிருக்கிறது. 1983 இல் நடந்த இனப்படுகொலையானது உலக மனசாட்சியை உலுப்பிய ஒரு நிகழ்வாக இருந்தபோதும் முதலாவது இனப்படுகொலையாக கருதப்படும் 1956 இல் நடத்தப்பட்ட கல்லோயா படுகொலையை பற்றிய பார்வையை பதித்தல் முக்கியமானது என கருதுகிறோம்.

விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட பதுங்கிதாக்குதலின் எதிரொலியாகவே ஜூலை இனப்படுகொலை ஆரம்பமானது என இப்போதும் எம்மவரில் சிலர் கூறுவர். விடுதலைப்புலிகளால் சிங்கள படையினர் கொல்லப்பட்டதால் தான் பெரும்பான்மை இனத்தின் எதிர்வினை ஒரு இனப்படுகொலைக்கு வித்திட்டதாக கூச்சப்படாமல் நியாயப்படுத்தும் ”விற்பன்னர்கள்” இப்போதும் எம்மத்தியில் உண்டு. கடந்த கால வரலாறுகளை சரியாக அறிந்துகொள்ளாமல் விட்டாலும் அல்லது வரலாற்றை கெட்டித்தனமாக மறைக்க முற்பட்டாலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கிமாற்றிவிடுவோம்.

வரலாற்றை மீளநினைவுபடுத்தும் ஒரு பகுதியாகவும் எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் பயணிப்பதற்கான வழிகாட்டியாகவும் கடந்தகால வரலாறுகளேயிருப்பதால் கல்லோயா படுகொலை தொடர்பான பார்வையை இங்கு தருகின்றோம்.

1956 இல் ஆட்சிக்கு வந்த சொலமன் பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டத்தை அமுல்படுத்தினார். அதன்மூலம் தமிழ் மக்களும் சிங்கள மொழியினூடாகவே அனைத்து வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அப்போது சேவையிலிருந்த அனைத்து தமிழ் உத்தியோகத்தர்களும் சிங்கள மொழியில் சேவையாற்ற தெரியாதவிடத்து கட்டாயமாக வேலையிருந்து விலக்கப்பட்டார்கள்.

அப்போது நாடாளுமன்றத்தில் இதனை எதிர்த்துநின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நின்று உரையாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா நீங்கள் ஒரு மொழி என்று சொன்னால் இரண்டு நாடுகள்தான் உருவாகவேண்டிவரும் என எச்சரித்தார். ஆனால் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளோ அதனை செவிமடுக்ககூடிய நிலையில் இருக்கவில்லை.

தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து காலி முகத்திடலில் அமைதியான கவனயீர்ப்பு நிகழ்வை அப்போதைய தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களும் நடத்தினார்கள். அப்போதைய அரச அமைச்சரின் வழிகாட்டலில் ஆயுத குண்டர்களை அனுப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி குறிப்பிட்ட கவனயீர்ப்பு நிகழ்வை அடக்கினார்கள். தமிழ் மக்களின் வணிக நிறுவனங்களை புறக்கணிக்குமாறு சிங்கள அரசியல்வாதிகளால் சொல்லப்பட்டபோது 150 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களை எரித்தும் கொள்ளையடித்தும் சென்றது இன்னொரு கூட்டம்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயா என்ற இடத்தில் 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள காடையர்களால் கொலை செய்யப்பட்டனர். பெருமளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இலங்கை தீவு சுதந்திரமடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திற்கு பின்னரும் அதற்கு முற்பட்ட காலத்திலும் ஒரே தடவையில் பெருந்தொகையாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

இலங்கைத்தீவு சுதந்திரமடைவதற்கு சில ஆண்டுகள் முன்புவரை தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு ஆட்சியுரிமையில் சம உரிமை அவசியமானதென தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இது பின்னர் 50 இற்கு 50 எனவும் விளிக்கப்பட்டது. தனித்தனியான தேசங்களே வெளிநாட்டு அரசுகளால் ஒன்றாக்கப்பட்டன என்ற யதார்த்தத்தின் அடிப்படையில்தான் அக்கோரிக்கையை ஜி. பொன்னம்பலமும் முன்வைத்தார்.

தற்போதும் எம்மவர்களில் சிலர் சொல்வதுபோல அன்றும் ”பிடிவாதமாக இருக்காமல் இறங்கிப்போய் இணைந்துவாழ்வோம்” என்று உபதேசித்தார்கள். இதனால்தான் என்னவோ ”நாங்கள் இனிமேல் இளகுநிலை ஒத்துழைப்பு (Responsive cooperation) என்ற அடிப்படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வோம்” என ஜி. பொன்னம்பலத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தமிழர்கள் இறங்கிப்போய் இருபது ஆண்டுகளுக்கு பின்னர்தான் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உண்மையான கொடிய முகத்தை அப்போதும் எம்மவர்கள் கண்டிருந்தார்கள். அதற்கு முதலாவது விலையாக 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்மக்கள் சிறிலங்கா அரச காவல்துறையின் கண்காணிப்பில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

அப்போது தமிழர்களிடம் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களோ அல்லது அவ்வாறான எண்ணத்தை கொண்ட அமைப்புக்களோ இருக்கவில்லை. அமைதியான முறையில் தமது உரிமைகளை கேட்ட தமிழ் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுமே செயற்பட்டன. ஆனாலும் அன்றும் சிங்கள தேசம் சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மதிக்காதது மட்டுமன்றி பெரும்பான்மை இனத்தின் மொழியையும் அதிகாரத்தையும் திணித்து தமிழரின் அடையாளத்தை அழிக்கவே முற்பட்டது. எனவே போரிலே தோற்றுவிட்டோம் என்பதற்காக எமது உரிமைகளை கைவிட்டு சரணாகதி அடைய வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற அரசியற் கட்டமைப்புக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களிற்கான உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும். இல்லாதுவிட்டால் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்துவிடுவோம்.

- கொக்கூரான்-

Share This:

No Comment to " கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM