News Ticker

Menu

தயான் – மகிந்த – பராக் ஒபாமா - ஈழத்தாய் (வெள்ளிவலம்)

இலங்கைத்தீவை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கவேண்டும் எனவும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தை, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு அல்லது வடமத்திய மாகாணத்துடன் இணைக்கவேண்டும் எனவும், தயான் ஜயதிலக கூறுகிறார்.


இந்தியாவின் வெளியுறவுச் செயலர் நிருபமாவை சந்தித்த டக்ளஸ் - ஆனந்தசங்கரி கூட்டணிகூட, ”முதற்கட்டமாக” தமிழர்களுக்கு 13 வது திருத்தத்தின் கீழான அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவற்கு - இந்தியா - சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கேட்டிருந்தது.

அப்படியானால் தமிழர்களின் ”அடுத்தகட்டம்” எது என வினாஎழுப்பும் இவர், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருக்கும்வரை தனியாக பிரிந்துசெல்லவே தமிழர்கள் விரும்புவார்கள் எனவும் அதனை தந்திரமாக முறியடிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.

தற்போது  வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தி அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றினால் – தொடர்ந்தும் தமிழர்களின் தன்னாட்சி கோரிக்கை வலுப்பெறும் எனவும் அதனால் அதற்கு முன்னர் தமிழர் பிரதேசங்களை உடைத்து சிங்களதேசத்துடன் பொருத்தவேண்டும் என்பதும் அவரின் சிந்தனையாக இருக்கிறது.

மகிந்த சிந்தனையை அடியொற்றிய இவரின் சிந்தனையை புரிந்துகொள்வதனை விட - இவர் ஐக்கிய நாடுகள் சபையில் ”சரியாக” செயற்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டு அப்பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவால் பதவி இறக்கப்பட்டவர் என்பதனை விளங்கிக் கொள்வது இன்னும் பல தெளிதல்களை தரக்கூடும்.

அதாவது சிங்கள பேரினவாத சிந்தனை என்பது – அவர்களுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருந்தபோதும் - ஆழவேரோடி தமிழர்களின் அரசியல் உரிமைகளை அழிப்பதில் சிங்கள தேசத்தை ஒருமைப்படுத்தியுள்ளதை காணலாம்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடருக்கு பெரும் எடுப்பில் சென்றுள்ள மகிந்த பரிவாரங்கள் பயணம் பல செய்திகளை சொல்லியுள்ளது.

வழமைபோல மகிந்தவின் ”வேட்டியை பிடித்துக்கொண்டு திரியும்” டக்ளஸ் தேவானந்தாவை இம்முறை காணவில்லை. அவருக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சிறிரங்கா ஊடகங்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

மூன்று பேருக்கு மட்டுமே உள்ளக அனுமதி வழங்கப்பட்ட கூட்டத்தொடருக்கு 130 பேரை - பெரும் ஆரவாரத்துடன் - வான் வழியே கூட்டிச்சென்றார் மகிந்த.

கூட்டத்தொடரில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச ”சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மாற்றவேண்டும்” எனவும் தனது சிந்தனையை உதிர்த்தார். தனக்கும் தனது நாட்டுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவனத்தை மகிந்த புரிந்துகொண்டுள்ளமையின் வெளிப்பாடாக அவரின் இக்கருத்து அமைந்திருந்தது.

இதே கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா ”மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் கவனம் எடுக்காமல் தங்களது பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்வதில் சிலர் அக்கறை காட்டுவதாக” மகிந்தவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

சிறிலங்காவின் அரச தலைவராக ”முடிவற்று நிலைக்ககூடிய” சட்டத்திருத்தை மகிந்த நிறைவேற்றியுள்ள நிலையில்  வெளிவந்துள்ள, பராக் ஒபாமாவின் கருத்துக்கள், சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுநிலையை தெளிவுபடுத்துகின்றன.

மகிந்த எதிர்பார்ப்பதுபோல இம்முறையும் முக்கிய நாட்டு தலைவர்களை சந்திக்கமுடியாது. இவருக்காக ஈரான் வியட்நாம் ஜோர்தான் தலைவர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தக்கூடும். முக்கிய தலைவர்கள் இவரை கண்டுகொள்ளமாட்டார்கள்.

இதே காலப்பகுதியில் சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய கருத்துருவாக்கம் சர்வதேச கரிசனையை பெற்றுக்கொள்வதை தடுக்கும் நோக்குடன் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, வன்னி பிரதேசங்களில் அண்மையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

பிபிசி போன்ற ஊடகங்களுக்கு அவ்விசாரணைகள் பற்றிய செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேவேளை விசாரணை அமர்வின்போது – அனாமதேயமாக வருகை தந்த சிலர் ஒளிப்பட பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் மூலம் மறைமுகமாக, தமிழர்களுக்கு அச்சத்தை தோற்றுவித்து தமிழர்களின் உண்மையான உணர்வுகளை சொல்லமுடியாத அடக்குமுறைக்கு மத்தியில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இராணுவத்தின் பிடிக்குள் வாழ்வுக்கு போராடிக்கொண்டிருக்கும் மக்கள் – தமது உள்ளக்கிடக்கைகளை சொல்லி – சிறிலங்கா புலனாய்வாளர்களின் கவனத்திற்குள் சிக்கிவிட விரும்புவார்களா?

ஆனாலும் எல்லாமே வெறுமையாகிய உணர்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் போராளியான எழிலனின் மனைவி – தமிழ் மக்களின் பிரச்சனைகளை – வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதன் மூலம் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்கள் பற்றிய சாட்சியாக அவரின் பதிவு அமைந்திருக்கிறது.

எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தாலும் அவ்வப்போது இவ்வாறான உள்ளக்குமுறல்கள் வெளிப்படவே செய்யும். ஆனால் அவ்வாறான சின்னச்சின்ன பொறிகள் மூலமே ஈழத்தின் உண்மை நிலை உலகத்தை சென்றடையும். அதனை உலகம் புரிந்துகொள்ளுமா?

- சங்கிலியன்

Share This:

1 comment to ''தயான் – மகிந்த – பராக் ஒபாமா - ஈழத்தாய் (வெள்ளிவலம்)"

ADD COMMENT
  1. Casino no deposit bonus codes | GAMBLERSNO!
    › casino-no-deposit-casino-no › casino-no-deposit-casino-no You can febcasino also play gri-go.com slot games on slot machine https://febcasino.com/review/merit-casino/ games at one of the many online septcasino casino sites, such as the https://septcasino.com/review/merit-casino/ casino.com.

    ReplyDelete

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM