News Ticker

Menu

தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

தாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் சவாலாக இருந்தது உண்மைதான்.

தாயகத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பேரழிவுகள் பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் ஏமாற்றமடைந்த நிலையை ஏற்படுத்தி அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற தடுமாற்ற நிலையில் இருந்தார்கள்.

ஆனால் இலங்கைத்தீவில் நிகழ்ந்த அதிரடியான அரசியல் நகர்வுகளும் அதிரடி மாற்றங்களும் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசமும் சேர்ந்துகொள்ள தமிழர் தரப்புக்கு சாதகமான மாற்றங்கள் மீளவும் மேலெழுந்தன.



தமிழர் தேசத்தின் அரசியல் விருப்புக்களும் சிங்கள தேசத்தின் அரசியல் விருப்புகளும் வெவ்வேறானவை என்பதை நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தலில் நிலைநிறுத்தப்பட்டமையும் தமிழர் தரப்பின் அரசியல் எழுச்சியை மீளவும் உந்தித்தள்ளியுள்ளன. தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் தாயகத்தில் பலமான சக்தியாக எழமுடியும் என்பதை நடந்துமுடிந்த அரச தலைவர் முடிவுகள் காட்டியுள்ளன.

தற்போதைய தேர்தலை அரசியல் சாணக்கியத்துடன் எதிர்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. சில பழைய முகங்களின் வெளியேற்றங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் இருந்தாலும் தமிழ் தேசியம் என்ற ஒட்டுமொத்த வழிப்பயணத்திற்கு சிலர் தியாகங்களை செய்துகொள்வதும் தவிர்க்கமுடியாதது என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஆனாலும் யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் தமிழ் தேசிய விடுதலை முன்னனியாக களம் இறங்கியுள்ளமை கவலையளிக்கின்ற விடயமாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் தேசிய ஒற்றுமைக்காகவும் தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும் தமது வேட்பாளர்கள் நிலையை பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.

ஒரு சில பத்து வாக்குகளோ அல்லது நூறு வாக்குகளோ கூட ஒரு சில தமிழ் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிக்ககூடிய நிலைமை காணப்படுவதால் தமிழ் தேசியத்தை பிரதிபலிக்கும் இரண்டு சக்திகளின் பிரவேசம் தமிழர் வாக்குகளின் கணிசமானதை பிரித்து எதிரிகளுக்கு சாதகமாக்கி தமிழர் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை குறைத்துவிடும்.

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிற்கு முன்னர் தமிழர்களது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக அப்போது வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த மக்கள் விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பேரில் மீளவும் திருமலை குடியேற்றப்பட்டார்கள். அப்போது கூட சில பத்து எண்ணிக்கைகளின் எண்ணிக்கை, திருமலையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் உணரப்பட்டிருந்தது.

தமிழர் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை குறைத்துவிடுவது என்பது தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்துவிடும். தமிழர் தாயகத்தில் பெருமளவில் தமிழ் தேசிய சக்திகள் வென்றாலே தமிழர்களது அரசியல் உரிமைகள் பற்றி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ முன்னெடுப்பதற்கு பக்கபலமாகும்.

அதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினானது தமிழர்களது உச்சகட்ட அரசியல் உரிமை பற்றி உறுதியாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்தவிதமான வெளிப்பாடுகளும் இல்லாமல் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேட்பாளர்களாகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இதைத்தான் சொன்னார்கள் என்று சுரேஸ் பிரேமசந்திரன் இரண்டு தடவைகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அறிவித்த பின்னரும் தான் எதைக்கேட்டேன் என்பதை வெளிப்படையாக சொல்லாத நிலையே கஜேந்திரகுமார் விடயத்தில் காணப்படுகிறது.

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை போன்ற அடிப்படை விடயங்களை அடித்தளமாக கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகின்ற நிலையில் அதற்கு மேலாக தமிழீழமே தீர்வு என்று கூறிக்கொண்டு தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் உரிமை சிறிலங்கா தேசத்தில் எவருக்கும் இல்லை. எனவே புதிதாக எதனையும் இவர்களால் சொல்லவும் முடியாது. தமிழீழமே தீர்வு என்று சொல்வதற்கான உரிமையே இல்லாதபோது அதற்கான சூழலை ஏற்படுத்தலே சாதுரியமான நகர்வாக இருக்கமுடியும்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான இவ்வேட்பாளர்கள் தோல்வியடையும் நிலையில் தமிழ் தேசியத்தின் உச்சகட்ட அரசியல் உரிமைக்கான தேவை இல்லாமற் போய்விட்டதாகவே சிங்கள தேசத்தாலும் அடிவருடிகளாலும் பரப்புரைக்குட்படுத்தப்படும்.

அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அடிமட்ட பலத்தை அவர்களால், தனியே யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் மட்டுமே களம் இறங்கியுள்ளதன் மூலம் அறிந்துகொள்ளலாம். திருமலையில் சம்பந்தன் அவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் திருமலையில் இவ்வாறான முன்னெடுப்பா என்கின்ற நியாயமான சந்தேகம் எழாமல் இருக்கமுடியாது.

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் அமைப்பின் சூட்சுமங்களையும் அதனை எவ்வாறு எதிர்கொண்டால் தமிழர் தரப்பின் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கலாம் என தெளிவாக புரிந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எப்படி தேர்தலை எதிர்கொண்டால் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தலாம் என்று சிந்திப்பதற்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது.


ஏப்ரல் எட்டாம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் போதியளவான நாட்கள் இருப்பதால் அதற்கு முன்னர் தமிழ் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி அதற்கான முடிவுகளை தமிழ் காங்கிரஸ் எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ்மக்களின் நம்பிக்கையாகும்.




- கொக்கூரான்

Share This:

No Comment to " தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM