News Ticker

Menu

நாடு கடந்த தமிழீழ அரசு - தமிழர்களின் அடுத்த இலக்கு

அதேவகையான மாறுதலை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டிய தேவை உள்ளது. அவ்வாறான முன்னெடுப்புகளின் தற்போதைய நிலை என்ன? தமிழர்களின் இவ்வாறான பல்வேறு அரசியல் நகர்வுகள் சந்திக்கும் புள்ளி எது? அது எப்போது நடைபெறும்? என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாதவை.  அக்கேள்விகளுக்கான தேடல்களாக விரிகின்றது இப்பத்தி.



தமிழர்களின் தனியரசுக்கான கட்டமைப்புக்கள் அழிந்துபோன இன்றைய நிலையில், தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் பற்றிய அணுகுமுறையில் பல்வேறு கருத்துக்கள் தமிழ் மக்களிடமிருந்து முன்வைக்கப்பட்டன.

இனிமேல் மகிந்த அரசு தருவதை பெற்றுக்கொள்வோம் என ஒரு தரப்பும், நடந்துகொண்டிருந்த விடுதலைப் போரை மறந்து இனிமேல் அதற்கான அடிப்படைகளை மறைத்து இணைந்து வாழ்வோம் என்று இன்னொரு தரப்பும், பொருத்தமான தீர்வு வரும்வரை எமது கொள்கைகளை சமரசம் செய்யதேவையில்லை என இன்னொரு தரப்புமாக பலமுனைகளில் இதுநாள்வரை ஒன்றாக இருந்த தமிழர்கள் குழம்ப தலைப்பட்டனர்.

eelam-tamilsஇதனால் தமிழ்மக்களின் தற்போதைய தெரிவு என்னவென்பது பற்றிய ஆணையை மக்களிமிருந்தே பெற்றுக்கொள்வதும் சர்வதேசங்களுக்கும் தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதும் அவசியமாகவிருந்தது.

இதன்விளைவாக தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைக்கான இன்றைய வலுவுடமையை பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தியதன் மூலம் நிலைநிறுத்திய பின்னர், அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான வேலைத்திட்டங்கள் அனைத்து தமிழ் மக்கள் முன்னேயும் விரிந்துகிடக்கின்றன.

தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைக்கான குரலை வெளிப்படையாக, பயமின்றி, சர்வதேச சட்டவரையறைகளுக்கு அமைவாக வெளிப்படுத்தியதோடு நின்றுவிடாமல் அதனை தொடர்ந்து செயற்படுத்த வேண்டிய கட்டுமானத்திற்கான தேவை இப்போது எழுந்துள்ளது.

அதேவேளை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இரத்தத்தாலும் முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் போராளிகளாலும் வளர்த்துவிட்ட இலட்சியத்தீயை, விடுதலைக்கான வேட்கையை, தமிழ் தேசியத்திற்காக சிந்தனையை விடுத்து விலகி தமிழ் தேசியத்தை நீர்த்துப்போகவிடமுடியாது என்ற சிந்தனையும் பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது.

எனவே மண்ணுக்காக வாழ்ந்து, வீழ்ந்துபோன தமிழ் மறவர்கள் விட்டுச்சென்ற பணியை சனநாயக வழிமுறைகளில் முன்னெடுக்கவேண்டிய பணி, புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வந்துசேர்ந்துள்ளது.

அதனை நாடு தழுவிய மக்கள் அவைகளாக அல்லது தேசிய அவைகளாக அந்நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களாலும் நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு உருவாக்குவதற்கான பணிகள் பலநாடுகளில் நடந்து நிறைவுபெற்றுள்ளன. இன்னும் சில நாடுகளில் அவை நடைபெறுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

அவ்வகையில் எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி, கனடா தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைகளையும், தமிழ் தேசிய அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்காக உழைப்போம் என உறுதியெடுத்தே வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

ஆனால் அவர்களுக்கு முன்னால் உள்ள பணிகள் என்பவை சமூக நல திட்டங்கள் என்பவற்றிலிருந்து தொடங்கி ஒரு இனத்திற்கான விடுதலைக்கான பணி என நீண்டுசெல்கின்றது.

முன்னர் தாயகத்தில் இருந்து நெறிப்படுத்தப்பட்ட இவ்வாறான தமிழர் கட்டமைப்புக்கள் தற்போதைய சூழலில் சுயாதீனமான அமைப்புக்களாக செயற்படவேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு சுயாதீனமாக செயற்படும்போது அதன் கொள்கைகளை உறுதியாக வரித்துக்கொள்கின்ற பொருத்தமான பிரதிநிதிகளிடம் அதனை கையளிக்கவேண்டும். அதன்மூலம் சரியான தலைமைகளிடம் அடுத்த கட்ட விடுதலைப்பணி கொடுக்கப்படவேண்டும்.

இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்னொரு கட்டமைப்புக்கான அவசியம் என்ன என்பது தொடர்பில் சில கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தமிழ் மக்களின் அரசியல் நகர்வில் மிகவும் முக்கியமான செயற்றிட்டமாகும். அதன் மூலம் இழந்துபோன இறைமையை நாடு கடந்த நிலையில் தமிழ் தேசிய ஆன்மாவின் குறியீட்டு வடிவமாக நிலைநிறுத்தியிருக்கின்றோம்.

ஆனால் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாக கட்டமைத்து செயற்படுவதில் சில நடைமுறை பிரச்சனைகள் உள்ளன. அது “அரசாங்கம்” என்ற வகையில் அது ஒவ்வொரு நாடுகளிலும் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகவோ அல்லது நிறுவனமாகவோ இருக்கமுடியாது என்பதையும் அவ்வாறு பதிவுசெய்வதாக இருந்தால் அதனை ஒரு ”அரசு” என்ற கட்டமைப்பில் அனைத்து நாடுகளிலும் பதிவுசெய்துகொள்ளமுடியாது என்பதையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.

ஆனால் சர்வதேச நாடுகளின் ஆதரவை படிப்படியாக பெற்றுக்கொள்ளும்போது, உண்மையான நாடு கடந்த தமிழீழ அரசாக, அது மாற்றமடையும். அவ்வாறான நிலை உருவாகும்வரை, ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள், தமது அரசியல் அடையாளங்களையும் அரசியல் உரிமைக்கான குரலையும் அந்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக முன்கொண்டுசெல்லவேண்டும்.

அந்தவகையில் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்புகள், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பலமான அடித்தளத்தை உருவாக்கும் என்பதோடு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான செயற்படு இயங்குதளத்தை இம்மக்கள் கட்டமைப்புக்களே வழங்கமுடியும்.

அவ்வாறு செயற்பட்டு, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும்போது, மக்கள் அவையும் நாடு கடந்த தமிழீழ அரசும் ஒரு புள்ளியில் சந்திக்கமுடியும். அவ்வாறான நிலையில் இரண்டும் இணைந்து – வெளிப்பார்வைக்கு - வெவ்வேறாக செயற்பட்ட நிலை மாறி, இரண்டும் ஒன்றாகி செயற்படும் நிலையுருவாகும். அப்போதுதான் தாயகத்தில் வாழும் தமிழருக்கான கௌரவமான தீர்வு கிடைப்பதற்கான வழி பிறக்கும்.

ஆனால் அதுவரை இதற்கான தேசியபணியை செய்யப்போவது யார்? எமது விடுதலைக்கான தேவையை வெளிப்படையாக துணிந்து சொல்லப்போகின்றவர்கள் யார்? தமிழீழ தேசிய கொடியின் கீழ் அணிவகுத்து, தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைக்கான போரை, பலமான நிலையான அமைப்பாக இருந்து விடுதலைக்கான போரென எடுத்துச்சொல்லப்போகின்றவர்கள் யார்?

அவ்வாறு சொல்லப்போகின்றவர்கள் சார்ந்த அமைப்பு,  அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு அமைவாக பதிவு செய்துள்ளார்களா? அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட அமைப்பானது எமது தேசிய அடையாளங்களை முன்னெடுத்து செல்வார்களா? அவ்வாறு முன்னெடுத்து செல்பவர்கள் அந்நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களின் பிரதிநிதிகளாக கருதப்படக்கூடியவர்களா?

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளுக்கான அடித்தள ஆதரவை வழங்கப்போவது யார்? நாடு கடந்த தமிழீழ அரசுக்கான வேலைத்திட்டங்களை உரிய காலம்வரும் வரை நிறைவேற்றக்கூடிய மக்கள் பலத்தை கொடுக்கப்போவது யார்?

இவ்வாறான கேள்விகளுக்கு விடைகளை தேடும்போது, நாடு கடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும் எவ்வாறு ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அமைப்பாக உருவாகப்போகின்றன என்பதை விளக்கும். சில கேள்விகளுக்கு சிலவேளைகளில் சில கேள்விகளே பொருத்தமான பதில்களாக மாறுவதுண்டு.




- கொக்கூரான்

Share This:

No Comment to " நாடு கடந்த தமிழீழ அரசு - தமிழர்களின் அடுத்த இலக்கு "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM