News Ticker

Menu

தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 2

தாயகத்தில் நடைபெறும் தேர்தலுக்கு புலம்பெயர் சமூகம் ஏன் இவ்வளவு
முண்டியடிக்கிறது? ஏன் தாயக மக்களுக்குப் போதிக்க முற்படுகின்றது?
அளவுக்கு மீறிய பதற்றத்தோடு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஏன்
பரிதவிக்கின்றது? போன்ற கேள்விகள் பலரால் கேட்கப்படுகின்றன.
உண்மையில் இதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால்
புலம்பெயர்த் தமிழ்ச்சமூகம் தனக்குரிய வகிபாகத்தையும் மீறி இதில்
அதிக முனைப்புக்காட்டுவதற்கும் நியாயமான காரணம் இருக்கத்தான்
செய்கின்றது. இக்கட்டுரையானது புலம்பெயர்ச் சமூகம் இதை ஏன்
இவ்வளவு தீவிரமாகக் கையாள்கிறது என்பதையும்
புலம்பெயர்ச்சமூகத்தின் நோக்கிலிருந்து இத்தேர்தலில் யார்
வெல்லவைக்கப்பட வேண்டுமெனவும் தர்க்கிக்கின்றது.



தற்போதைய சூழலில் எமது தாயக மக்களின் பாதுகாப்பு, தேசத்தின்
பாதுகாப்பு, எமது இனத்தின் விடுதலைக்கான பயணம் என்பவற்றில்
புலம்பெயர் மக்கள் சக்தியின் வகிபாகம் முன்பைவிட அதிகம். அதாவது
2009 மே மாதத்தின் பின்னர் இந்த வகிபாகமும் பொறுப்பும்
அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இது தாயகமக்களின் மீதான
ஆளுமையும், அதிகாரமும் அவர்களின் விருப்பு வெறுப்பைத் தீர்மானிக்கும்
சக்தியும் தமக்குண்டு என்ற இறுமாப்பைக் குறிப்பிடவில்லை. மாறாக
சர்வதேசத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட தமிழர் பிரச்சனையைக்
கையாள்வதில் அதிக அழுத்தத்தையும் செல்வாக்கையும் செலுத்தக்கூடிய
ஒரு சக்தியாக புலம்பெயர் மக்கள்கூட்டம் உள்ளதும், அவ்வகையில் அதிக
பொறுப்பும் பங்களிப்பும் தற்காலத்தில் புலம்பெயர் தமிழர்க்குள்ளது
என்பதுமே இங்கு வைக்கப்படும் விவாதம்.

அவ்வகையில் தாயகத்தில் யார் மக்கள் பிரதிநிதிகளாக வருவது எமது
விடுதலைப் பயணத்துக்கு உகந்தது என்பதில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம்
ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் எத்தவறுமில்லை. அவ்வாறாயின்
யாருக்கான ஆதரவை புலம்பெயர்த் தமிழர்கள் முன்மொழியலாம்.
இதற்கு முன்னதாக எமது விடுதலைப் பயணத்தின் இலக்கும் ஒழுக்கும்
எத்தகையது என்பதை வரையறை செய்துகொண்டால்தான்
இக்கட்டுரையின் தர்க்கத்தை நாம் தொடரலாம்.

எமது இறுதி இலக்கென்பது எமது மக்களுக்குரிய நிரந்தரமான நியாயமான
ஒரு தீர்வு. அவ்வகையில் அது தம்மைத்தாமே நிர்வகிக்கக்கூடிய,
எக்காலத்திலும் ஏனையவர்களால் திரும்பப்பறிக்க முடியாத

அதிகாரங்களுடன் கூடிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தல் எனலாம். அது
தனித் தேசமாகவோ தனி நாடாகவோ அமையப்பெறலாம்.
இந்த இறுதி இலக்கை அடைய நாம் போக வேண்டிய ஓர் ஒழுக்காக,
முதன்மை மூலோபாயமாகக் கையாள நினைப்பது,

1. தமிழர்க்கு நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் ஓர் இனவழிப்பு என்பதை
நிறுவுதலும்
2. அது நிறுவப்படும் பட்சத்தில் பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில்
பொதுவாக்கெடுப்பு நடத்துதலும்

என்று நாம் வரையறுக்கலாம். இந்த ஒழுக்கில் நாம் பயன்படுத்தும்
தந்திரங்களாக போர்க்குற்ற விசாரணை உட்பட பல விடயங்கள்
அமையப்பெறும்.

ஆக, இனப்படுகொலை என்று நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை
நடாத்துவதும் என்ற பயணத்தில் எம்மோடு இணைந்து பயணிக்கக்கூடிய
தாயகக் கட்சி எது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு ஆகிய இரண்டு
விடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கவில்லை
என்பதை நாம் உணரலாம். தனிநபர்கள் சிலர் ஆங்காங்கே வாக்கு
அரசியலுக்காக இதைப் பேசக்கூடுமென்றாலும் ஒரு கட்சியாக
இவ்விரண்டு விடயங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தே
நடந்து வந்துள்ளது. வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து
கூட்டமைப்புத் தலைமை தம்மைத் தாமாகவே விலத்திக் கொண்டமையும்
இதுவரை அத்தீர்மானத்தை வரவேற்றோ முன்மொழிந்தோ எங்கும்
பேசியதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

அதைவிட இந்நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்விடத்திலும் இவ்வினப் படுகொலைத்
தீர்மானத்தைப்பற்றி ஒரு வார்த்தையேனும் பேசியதில்லை. என்றோ
ஒருநாள் சிறிலங்கா நாடாளுமன்றில் தான் இனப்படுகொலை பற்றிப்
பேசியதை வைத்துக்கொண்டு இன்றுவரையும் திரு. சுமந்திரன் இந்த
விடயத்தில் பிடிகொடுக்காமல் கதைத்துக் கொண்டிருப்பதையும் நாம்
பார்க்க வேண்டும். பேச வேண்டிய எவ்விடத்திலும் இனப்படுகொலை
பற்றிப் பேசாமல் சிறிலங்கா நாடாளுமன்றில் ஒருநாள் பேசியதை வைத்து
தன்னைக் காத்துக்கொள்ளும் அந்த வாதத்திறன் அயோக்கியத்தனமானது.
இதுபோலவே பொதுவாக்கெடுப்பு குறித்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இசைவான கருத்தை என்றுமே சொல்லியதில்லை. இனியும் சொல்லப்
போவதுமில்லை.

ஆனால் இவ்விரு விடயங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. உண்மையில்
இனப்படுகொலை தொடர்பான விவாவதத்தைத் தமிழர் அரசியல் அரங்கில்
தொடக்கி வைத்ததும், அது தொடர்பான உருப்படியான முனைப்பைச்
செய்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆவர்.
இனப்படுகொலையை நிறுவுதல் என்ற மாபெரும் செயற்றிட்டத்தை திரு.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஒரு நிபுணர்குழுவைக்
கொண்டு தொடங்கியவர்கள் இந்த த.தே.ம.முன்னணியினர் தான். ஆனால்
அரச பயங்கரவாதத்தால் அம்முயற்சி தடுக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் அதிக
செல்வாக்கும் பாதுகாப்பும் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்பினர்
அம்முயற்சியை எடுத்திருந்தால் ஓரளவாவது அந்நிபுணர்குழு தனது
ஆய்வை நடாத்தி முடித்திருப்பர்.

அதாவது இனப்படுகொலையை நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை
நடாத்துவதும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் புலத்துத்
தமிழர்களோடு கைகோர்த்து வரக்கூடிய தாயகக் கட்சியாக தமிழ்த்தேசிய
மக்கள் முன்னணிதான் உள்ளது என்ற அடிப்படையில் புலம்பெயர் தமிழ்ச்
சமூகம் எடுக்கக்கூடிய நிலைப்பாடு என்பது த.தே.ம.முன்னணிக்கான
ஆதரவே.

இவ்விடத்தில் தற்காலத்தோடு ஒட்டி இன்னுமொரு முக்கிய
விடயத்தையும் கோடிட்டு இக்கட்டுரையை முடிக்கலாம். எதிர்வரும்
தேர்தலின் பின்னர் அரசாங்கத்தில் இணையுமா என்ற கேள்விக்கு த.தே.கூ.
இதுவரை தெளிவான பதிலை முன்வைக்கவில்லை. திரு. சுமந்திரனிடம்
இக்கேள்வி கேட்கப்பட்டபோது அரசில் இணைவது தனக்கு உடன்பாடில்லை,

ஆனால் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ தெரியாது' என்கிற ரீதியில்
பதிலளித்திருந்தார். கூட்டமைப்பின் ஏனைய குட்டித்தலைவர்களைத்
தனித்தனியாகக் கேட்டபோதும் இதுதான் பதில்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்தில் இணைந்தால்
புலம்பெயர் தேசத்தில் கூட தமிழரின் விடியல் நோக்கிய பயணத்தைத்
தொடர முடியாத நிலை ஏற்படும். உலகநாடுகளிடம் சிறிலங்கா
அரசாங்கத்துக்கு எதிரான கோரிக்கைகளை வைத்து எவ்விதப்
போராட்டங்களையும் நடத்த முடியாத நிலைக்குப் போய்விடும். அதாவது
தமிழரின் ஏக பிரதிநிதிகள் இணைந்திருக்கும் ஓர் அரசாங்கத்துக்கு எதிராக
என்ன போராட்டத்தை ஈழத்தமிழர் செய்துவிட முடியும்? இவ்வாறாக
போராட்டங்களைச் செய்ய வேண்டாமென த.தே.கூட்டமைப்பே எமக்கான
அறிவுரைகளை வழங்கக் கூடும். புதிய ஜனாதிபதி மைத்திரியை எதிர்த்து
லண்டனில் தமிழர்கள் கூடியபோது திரு. சுமந்திரன் அவர்கள் ‘நாம் தெரிவு

செய்த ஜனாதிபதியை நீங்கள் எப்படி எதிர்க்கலாம்?’ என்கிற ரீதியில்
கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பதை நாம் நினைவிற்கொள்ள
வேண்டும்.

இந்நிலையில்தான் எமக்கொரு மாற்றுத் தளம் தேவைப்படுகின்றது.
கூட்டமைப்பு அரசில் இணைந்தாலும்கூட அரசுக்கு வெளியே இருக்கக்கூடிய
தமிழ்த்தேசியக் கட்சியொன்றின் இருப்பு மிகமிக அவசியம். அது ஒரு
நாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்தாற்கூட போதும், புலத்தில் நாம் எமது
எதிர்ப்பரசியலை முன்வைத்துச் செயற்பட. தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியானது எதிர்வரும் அரசாங்கத்தில் இணைந்து ஆட்சியமைக்கப்
போவதில்லை என்ற உறுதிமொழியை அளித்துள்ளது.

இந்தத் தர்க்கத்தின்படியும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனக்கான தெரிவாக
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே கொண்டிருக்க முடியும்.
இந்நிலைப்பாடுகளின் வெளிப்பாடுதான் தீவிர தமிழ்த் தேசிய
நிலைப்பாட்டைக் கொண்ட புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை வெளிப்படுத்திச்
செயலாற்றுகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

Share This:

No Comment to " தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 2 "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM