News Ticker

Menu

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்

கடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை, சிறிலங்கா அரசியலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அசைக்கதொடங்கிவிட்டன.

தமிழ் பேசும் தரப்பின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் வழமைபோலவே தனித்து போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு தனித்து போட்டியிடுவதென்பது சிங்கள கட்சிகளிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் என்பதே பொருந்தும். ஏனைய தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து போட்டியிட ஆர்வம் காட்டின், தமிழர்களது அரசியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளின், அவற்றோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாகவே இருக்கும்.

தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய தாயகமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருகின்றார்கள் என்பதையும் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மை இனமாக இல்லாமல் ஒரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படவேண்டும் என்பதையும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அடிப்படை கொள்கைகளாக வரித்துக்கொள்கின்ற எந்த கட்சியுடனும் இணைந்து போவதில் தமிழர் தரப்பை பொறுத்தவரை சாத்தியப்படான ஒருங்கிணைவாகவே இருக்கும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் முக்கிய தலைவர்களை புதிதாக களத்தில் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. விக்கினேஸ்வரன், முன்னாள் பேராசிரியர் சி.கே.சிற்றம்பலம், முன்னாள் யாழ் மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் உள்ளடங்குவர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த யார் யார் எல்லாம் உள்ளடக்கப்படபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்கக வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அப்பால், ஆளும் சிங்கள கட்சிகளுடனேயே கூடியிருந்து தமிழர்களது அரசியல் பேரம் பேசும் தன்மையை வலுவிழக்க செய்த ஈழமக்கள் சனநாயக கட்சி எனப்படும் ஈபிடிபியும் தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தமது சரணாகதி அரசியலை பற்றி மீள்பார்வை செய்ய முற்பட்டுள்ளமை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டும்.

கடந்த தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி தவிர, ஏனைய அனைத்து வடபகுதி தேர்தல் தொகுதிகளிலும், தமது அரசியல் முடிவை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளமையும், அதனால் சிங்கள தலைவர்கள் மட்டத்தில் கூட ஈபிடிபியை பற்றிய ஏளனப்பார்வை உருவாக தொடங்கியுள்ளமையும், ஈபிடிபிக்கும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் காலம் கடந்தாவது ஞானத்தை கொடுக்ககூடும்.


தமிழர்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிங்கள தேசத்தால் தூக்கி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளைகளான டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் பிள்ளையானும் இனிமேலும் சிங்கள தேசத்தால் அவ்வாறு பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை. இவர்களால் தான், தாங்கள் கெட்டோம் என ஒருவர் மாறி மற்றவர்மேல் விமர்சனங்களை வைக்கின்ற சூழல்தான் தற்போது எழுந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை இந்த இரண்டு தரப்புக்களுமே புரிந்துகொள்ளவில்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.

இவ்வாறு வடபகுதியில் ஈபிடிபி தனியாக தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியும் தனித்து தமது வேட்பாளர்களை நிறுத்த முடிவுசெய்துள்ளது. இது ஈபிடிபியை பொறுத்தவைரை இந்த தேர்தலோடு முடிந்துபோய்விடக்கூடிய விடயமாக நிச்சயம் இருக்கபோவதில்லை. அதிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபலமான முக்கிய சமூக ஆர்வலர்களையும் கல்விமான்களையும் உள்ளேயெடுத்து அவர்களை தேர்தலில் நிறுத்தவும் மகிந்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கேற்றவாறு முக்கிய பிரபலங்களை முக்கிய ஒன்றுகூடலென குறிப்பிட்டு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இங்கு ஈபிடிபிக்கு போட்டியாக சுதந்திர கட்சி களத்தில் இறங்குவது இரண்டு தரப்புகளுக்குமே சவாலாகவே இருக்கும். இரண்டு தரப்புகளுமே எவ்வாறு முரண்பாடுகள் இல்லாமல் தமது தேர்தலுக்கான வேலைத்திட்டங்களில் இறங்கமுடியும் என்பது முக்கியமான கேள்வியாகும். இது தேர்தலோடு மட்டும் நிற்கப்போகும் முரண்பாடுகளாக அல்லாமல் அதனை தொடர்ந்தும் நீண்டு செல்லுமா என்பதை இப்போது எதிர்வுகூறுவது கடினமானது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்ததாக செல்வாக்கு செலுத்தகூடிய பிள்ளையானின் அணியும் கருணாவின் அணியும் இரண்டு பிரிவுகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அங்கும் சுதந்திர கட்சி தனியாக போட்டியிடுவதற்கான சூழ்நிலையே உருவாகிவருகின்றது. தாங்கள் தனித்து போட்டியிட்டால் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் ஆகக்குறைந்தது ஒவ்வொரு ஆசனங்களையாவது பெற்றுக்கொள்வோம் என பிள்ளையான் அணியின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

மலையகத்தை பொறுத்தவரை அங்கு அரசியலில் தமிழர் தரப்பில் ஆதிக்கம் செலுத்திய முதலாவது மற்றும் இரண்டாவது அரசியல் தலைமைகளின் கருத்தை நிராகரித்து மூன்றாவது தலைமையின் கருத்தை உள்வாங்கி மகிந்தவுக்கு எதிராக கடந்த தேர்தலில் வாக்களித்திருப்பதும் அங்குள்ள தமிழர் கட்சிகளை சிந்திக்கவே செய்யும்.

எனவே தற்போதுள்ள மாற்றமடைந்த சூழல் தமிழ் மக்களின் உணர்வுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிக்காட்டியுள்ளதோடு தமிழர் தேசமும் சிங்கள தேசமும் ஆழமான பிளவை கண்டுள்ளது என்பதையும் வெளிப்படையாக்கியுள்ளது. தற்போது ஆளும் கட்சியுடன் சரணாகதி அரசியல் நடத்தும் தமிழர் கட்சிகளுக்கும் அவர்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ தமிழர்களின் தனித்துவமான அரசியலுக்குள் இழுத்துவரப்படுகின்ற நிலையையே இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான படிப்படியான மாற்றங்களே, தமிழர்களின் அரசியலை தாமே நிர்ணயிக்க கூடிய உரிமையே தமக்கான தெரிவென்பதை அனைத்து தமிழர் தரப்புகளுக்கும் வெளிக்காட்டும்.

- கொக்கூரான்

Share This:

No Comment to " இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM