News Ticker

Menu

Browsing "Older Posts"

தமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா? அரிச்சந்திரன்

Saturday, June 18, 2016 / No Comments
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

குருபரன் ஏற்கனவே சமூகவலை தளங்கள் ஊடாக பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானவராக இருந்தபோதும், நேரடியாக அவரது கருத்துக்களை அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளது.

இப்பத்தி அவரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளபோதும் இன்னும் சில முன்னேற்றகரமான சிந்தனைகளை கொண்ட சாதாரண குடியானவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.



கீழ்வரும் மூன்று விடயங்கள் ஊடாக, முக்கிய கருத்துக்களை வாசகர்களுக்கு கொண்டுவருதல் பொருத்தமானது.

சமகால நிலவரங்களை பற்றியது

நல்லாட்சி அரசு வந்தபின்னர், சர்வதேச நாடுகளை பொறுத்தவரை புதிய மென்போக்கான அரசுடன் இணைந்து சென்று, கிடைப்பதை பெற்றுக்கொள்ளுங்கள் என தமிழர்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்கள்.

நல்லாட்சி அரசை பொறுத்தவரை காணி விடுவிப்பு என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் குறித்தளவான காணிகளை விடுவிக்கப்படும், அதே நேரம் விடுவிக்கப்படுகின்ற பிரதேசத்திற்குள்ளேயே இருக்கப்போகும் இராணுவமுகாமை பற்றி யாரும் கதைக்க முன்வருவதில்லை.

அதேபோல கோவில் உண்டியல் இருக்கும் இடம் விடுவிக்கப்பட்டபோதும் கோவில் இன்னமும் இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற சந்தர்ப்பத்தையும், ஒரு வீட்டுக்கான மலசலகூடம் விடுவிக்கப்பட்டும் வீடு இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற நிலையும் மீள்குடியேற்றமாக காட்டப்படுகின்றது.

இதேவேளை தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டால் போதும் அரசகாணிகள் இராணுவத்திற்கே சொந்தம் என்ற மனநிலையும், இராணுவ பிரசன்னம் என்பது நடைமுறை வாழ்வியலில் ஒரு சாதாரண நிலைமை என்பதையும் தோற்றுவித்துவிட்டார்கள்.

தனிப்பட்ட பிணக்குகள் ஏற்படுகின்றபோது பொதுமக்கள் பொலிஸ் நிலையம் செல்வதற்கு பதிலாக, இராணுவமுகாம் சென்று தீர்வு தேடுவது நல்லது என்ற நிலைமை வந்துவிட்டமை அதன் ஒரு நீட்சியாக குறிப்பிடலாம்.

சரி இப்படியான சூழ்நிலையில் சிங்கள் அரசுகள் தரப்போகின்ற தீர்வை பெற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வதே நல்லது என்ற மனப்பாங்கும் எம்மக்களிடமும் உண்டு.குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமிடம் அத்தகைய மனநிலை உண்டு.

அப்படியே தருவதை தான் பெற்றுக்கொள்ளப்போகின்றோம் என்றால், அதனை மக்களுக்கு தெளிவாக சொல்லி அதற்கான அரசியலை தமிழ்மக்களிடம் செய்யாமல், சமஸ்டி தீர்வு எடுப்போம் என்று பொய்யுரைத்து மக்களிடம் வாக்குகளை பெற்று அரசியலை செய்யக்கூடாது.

அப்படியான ஒரு அரசியலே – அப்படியான உணர்வை தட்டியெழுப்பி இளைஞர்களை உசுப்பேத்திவிட்டு – அன்று ஓடிப்போன தமிழ் அரசியல் தலைமைத்துவங்களை போல, அதேபிழையை இவர்களும் செய்தால் நாளை இன்னொரு அதிதீவிரமான நிலைப்பாட்டை நோக்கி இளைஞர்கள் செல்வதற்கும் இவர்களே காரணமானவர்கள் ஆவார்கள்.

சிங்கள தேசியவாத மனோநிலை பற்றியது

தமிழர்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்று கிடைப்பதை சிங்கள தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போன சிங்கள மக்களும் விரும்பவில்லை என்ற யதார்த்தை விளங்கிக்கொள்ளவேண்டும்.

அத்தகைய சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போயிருப்பதால்தான் சம்பந்தன் தெரியாமலே கிளிநொச்சி இராணுவமுகாம் பகுதிக்க சென்றுவிட்டார் என்று தெரிந்தபின்னரும் அவரை கைது செய்யவேண்டும் கூச்சலிடுகின்றார்கள். கிழக்க மாகாண முதல்வர் மேடைக்கு செல்லும்போது இழுத்து நிறுத்தமுடிகின்றது. பின்னர் அவரையே மன்னிப்பு கேட்டு கடிதம் எழுத வைக்கமுடிகின்றது.

எனவே சிங்கள மக்கள் மனம்மாறி எங்களுக்கு தீர்வைதந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது, அப்படி எதிர்பார்த்து எமது கருத்துக்களை எமது தீர்வுக்கான தேடலை ஒத்திப்போடுவது ஒன்றுக்கும் உதவபோவதில்லை.

தமிழரின் எதிர்கால செயற்பாடு தொடர்பானது

1.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தெரிவான 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபையில் தெரிவான 40 வரையான தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இவர்களுக்கு கீழே வேலை பார்க்ககூடிய 150 பணியாளர்கள் என ஒரு பெரிய பலம் இருக்கின்றது.

இவர்களுக்கு பிரத்தியேக பணிகள் ஒதுக்கப்படாமல் நடைமுறை ரீதியாக என்ன செய்யப்படவேண்டுமோ அதனை செய்யக்கூடிய செய்விக்ககூடிய பலமாக இவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அத்தகைய வளம் பயன்படுத்தப்பட்டதா முழுமையான முறையில் பயன்படுத்தப்பட்டதா என்று ஆராய்ந்தால் விளைவு சுழியமாகவே இருக்கும்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் – மீன்பிடித்துறை விவசாயதுறை சமூகவளத்துறை கல்வித்துறை மீள்குடியேற்றம் என – ஒவ்வொரு துறையை பொறுப்பெடுத்து குறித்த பிரச்சனைகள் தொடர்பான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அவர்களது இயலுமைக்குட்பட்ட வகையில் எடுத்த நடவடிக்கை என்ன?

இதற்கான ஆலோசனைகள் தமிழ் சிவில் சமூகத்தால் வழங்கப்பட்டபோதும் இன்னமும் செய்யப்படமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

2.சர்வதேச விசாரணை நடக்கவிடமாட்டோம் என சிறிலங்கா அரசு சொல்கிறது. அப்படியான விசாரணை இப்போதைக்கு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆனால் அதுபற்றிய சாட்சிகளை திரட்டி காணாமற்போனோர்கள் பற்றிய பதிவுகளை தொகுத்து காத்திரமான ஒரு ஆவணக்கோப்பை ஏன் எங்களால் செய்யமுடியாமல் இருக்கின்றது?

முழுமையான ஒரு ஆவணக்கோப்பு தயார்செய்யப்பட்டு வைத்திருக்கப்பட்டிருக்குமானால் என்றோ ஒரு நாளைக்கு அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை நாங்கள் வைத்திருக்க முடியாதா?

3.தமிழர்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் என்னென்ன தேவைகள் என்னென்ன செய்யப்படமுடியும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எத்தனை தாய்தந்தை இல்லாத பிள்ளைகள் எத்தனை வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை என்ற ஒரு தரவுகளை பெற்று தேவைகள் என்ன பட்டியலை தயார்செய்து வைத்திருக்கின்றோமா?

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு அரசஅலுவலர் குறைந்த பட்சம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக வேலை செய்யவேண்டிய நிலை.

எனவே மாகாணஅரசுக்குட்பட்ட ஒரு அலுவலரை நியமிப்பதற்கு வழிவகைகளை காணமுடியாதா? அதன்மூலம் அடிமட்டம் தொடக்கம் உயர்மட்டம் வரை நேரடியான தொடர்புகளை மாகாணஅரசுகளால் பேணக்கூடிய சூழல் இருக்குமல்லவா?

4.வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது என சிங்கள அரசு சொல்கின்றது. ஆனால் அந்த இணைப்பை எங்கள் மட்டத்தில் தமிழர்கள் மட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் மட்டத்தில் ஏன் செய்யமுடியாது?

வடக்கு கிழக்கு இணைந்தவகையில் எங்களிடம் ஒரு செயற்பாட்டு மையம் அல்லது தொண்டுநிறுவனம் இருக்கின்றதா? வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தாங்கள் இணைந்தவர்கள் என்ற மனப்பாங்கை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்திருக்கின்றோம்?

வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் எங்களால் எடுக்கபப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் உ வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் – ஒரு மேசையில் இருந்து ஒரு மாநாடு நடத்த மைத்திரியா அனுமதி கொடுக்கவேண்டும்?

5.தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இனஅடக்குமுறைகள் சிங்கள குடியேற்றங்கள் அதிகாரதுஸ்பிரயோகங்கள் காணி அபகரிப்புகள் அல்லது முழுமையற்ற காணி விடுவிப்புகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மாதாந்தம் ஒரு அறிக்கை ஒன்றை பலமான ஒரு கட்டமைப்பின் ஊடாக கொண்டுவருவதன் ஊடாக அவற்றை நாம் ஆவணப்படுத்தலாம் அல்லவா?

அந்த ஆவணங்களையே நல்லாட்சி அரசின் முன்னேற்றங்களாக சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கு முன்னால் கொண்டுசெல்லலாம் அல்லவா?

இப்படியாக எம்மால் செய்யக்கூடிய பலவிடயங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன. இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் தரப்பு ஒரு தேக்கநிலையிலேயே இருக்கும்.

அப்படியானால் முடிவுதான் என்ன? என்ன செய்யலாம்?

வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சனைகளை ஆய்வுசெய்து அதற்கான பணிகளை முன்னெடுக்க ஒரு கட்டமைக்கப்பட்ட இயக்கம் அல்லது ஒரு நிறுவனம் தேவை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்யமுடியாத, செய்யத்தயங்குகின்ற அல்லது செய்யஇயலாத விடயத்தை தமிழ்மக்கள் பேரவை செய்யும் என எதிர்பார்க்கலாமா?

தமிழ்மக்கள் பேரவை தற்போது பல உபகுழுக்களை நியமித்துள்ளது. அவர்களால் இந்தவிடயத்தில் முன்னேற்றத்தை காட்டமுடியுமா என்பதை காலம்தான் பதில்சொல்லவேண்டும். எனினும் அதற்காக காத்திருக்கமுடியுமா?

எனவேதான் முழுநேரமாக உழைக்கக்கூடிய மனிதவளங்களை கொண்டு வளநிறுவனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். ஒரு பத்துப் பணியாளர்களை உள்வாங்கி வடக்கிலும் கிழக்கிலும் முழுநேரப்பணியில் அந்த நிறுவனம் அதில் ஈடுபடலாம்.

எப்படியான செயற்றிட்டங்கள் செய்யப்படலாம் என்பதையும் எப்படியான தேவைகள் இருக்கின்றன என்பதையும் என்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதையும் அவர்கள் இனங்காணவேண்டும் கண்டறியவேண்டும் அதனை ஆவணமாக்கவேண்டும்.

செய்யப்படவேண்டிய வேலைகளை அரசியல்வாதிகள் ஊடாகவும் வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாகவும் கிராம கட்டுமானங்கள் ஊடாகவும் செய்யப்படுவதற்கு அவர்கள் வழிகளை கண்டறியவேண்டும்.

ஒரு நோக்கத்தோடு ஒருமித்த சிந்தனையோடு ஒரு இயக்கம் போல அவர்கள் பணியாற்றவேண்டும். இப்படியான ஒரு நிறுவனத்தை தொடக்கி தாயகத்தின் வளர்வதற்கு புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்கள் கைகொடுக்கவேண்டும்.

அமெரிக்கா வந்து எங்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்றும் பிரித்தானியாவுக்கு ஒரு கடமை இருக்கின்றது அது எங்களுக்கு ஏதாவது செய்யும் என்ற கற்பனைவாதத்தில் வாழாமல்எங்களுக்கான தேசத்தை எங்களுக்கான கட்டமைப்புகளை நாங்களே உருவாக்குவோம்.

– நன்றி துளியம்

வெறும் தேசியம் விலையாகுமா?

Sunday, May 22, 2016 / No Comments
ஈழத்தமிழர்கள் வாழ்வில் கொடிய அவலங்களை சுமந்த கனத்த நாட்களின் எண்ணங்களை அனைவரும் மீளநினைவு கொள்ளும் நாள் மே 18. இவ்வாண்டு தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவு நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.

தாயகத்தில் வழமையை விட நெருக்குவாரங்கள் குறைந்தபோதும் கனதியான நிகழ்வுகளாக அந்நாள் நினைவுகூரப்படவில்லை. முள்ளிவாய்க்காலில் கூட இம்முறை பெருமளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அங்கும் வடமாகாணசபை என்று தனித்தும் தமிழத்தேசிய மக்கள் முன்னனி என்றும் தனித்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.



வழமையாக பெருமளவில் திரண்டுகொள்ளும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் இம்முறை அந்த கனதியை இழந்துவிட்டன. ஈழத்தமிழர் அரசிpயலுக்காக குரல்கொடுத்தவர்களே பிரிபட்டு “உண்மையானவர்கள்” யார் என்ற போட்டியில் ஒருவருமே “இல்லாதவர்களானார்கள்”.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் முன்னரை விட மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

பிரித்தானிய பெருந்தேசத்தில் இரண்டு இடத்தில் இரண்டு பிரிவுகளாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஒரு இடத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் மற்றைய இடத்திற்கு செல்லுமாறு பழ. நெடுமாறனும் குரல்கொடுத்திருந்தனர்.

இரண்டு இடங்களில் அல்ல இருபது இடங்களிலும் நினைவுநிகழ்வுகளை உரிய முறையில் செய்வது வரவேற்கதக்கது.

நடைபெற்றது இனப்படுகொலை அல்ல சில கவலையான சம்பவங்களே எனச்சொல்லியும் தலைவர் பிரபாகரன் வந்து சொல்லும்போது தமிழரின் தேசியக்கொடியை ஏற்றுவோம் அதுவரை அதனை மடித்து வையுங்கள் பிரித்தானிய தமிழர் பேரவை சொல்லுகின்றது.

தேசிய அடையாளங்களை ஒளித்துவைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றும் அதனை முன்னே வைத்து தமிழர் போராட்டத்தின் நியாயங்களை வெளிச்சொல்லுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருந்து உங்களுக்காய் வேலை செய்கின்றோம் என்று சொல்கின்றார்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாளென்பது தனியே ஒரு துக்கநாளல்ல. ஒருதேசத்தின் அழிவில் நனைந்து வீழ்ந்து அழுதுபோவதற்கான நாள் மட்டுமல்ல. இழந்தவர்களுக்கான நீதிபெறப்பட வேண்டிய தேவையை நினைவூட்டும் நாளாகவும் இருப்பவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான நாளாகவும் அதனை நினைவுகொள்ளவேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

இதனையே முள்ளிவாய்க்கால் நிகழ்வை தலைமையேற்று நடத்திய வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் பதிவுசெய்துள்ளார். தமிழர்களுக்கு நல்ல தீர்வை பெற்றுத்தருகின்றோம் நடந்தவைகளை மறந்துவிடுங்கள். போர்க்குற்றங்களை பற்றி கதைக்கவேண்டாம் என்றும் நடைபெற்றது இனவழிப்பு என சொல்லவேண்டாம் எனவும் மறைமுகமான அழுத்தங்கள் உள்ளேயும் வெளியிலிருந்தும் கிடைப்பதாகவும அதனை ஏற்கமுடியாது எனவும் விக்கினேஸ்வரன் சொல்லுகின்றார்.

ஆனால் இங்கு முக்கியமான கேள்வி என்னவெனில் தமிழர்களின் முக்கியமான ஒரு நினைவுநாளில் கூட அனைவரும் ஒருமித்து பயணிக்கமுடியாமல் போவது ஏன் என்பதே.

பல்வேறு பிளவுகளும் பிரிவுகளும் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றபோதும் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு தொடர்பாக தாயகநிலைமைகளை விரிவாக ஆராயவிரும்புகின்றது இப்பத்தி.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் கூட அதுவும் முள்ளிவாய்க்கால் என்ற முக்கியத்துமான இடத்தில் நடைபெற்ற நினைவுநிகழ்வை கூட ஒருங்கிணைந்து செய்யமுடியாமல் போனமை வரலாற்றின் தமிழர் வரலாற்றின் சாபக்கேடா?

முள்ளிவாய்க்கால் நிகழ்வை வடமாகாண சபை பொறுப்பெடுத்து செய்தது தவறு என்றும் தாம் ஏற்றுக்கொள்ளாத 13வது சட்டத்திற்கு கீழ் அமைக்கப்பட்ட – தங்களால் நிராகரிக்கப்பட்ட கட்டமைப்பான – வடமாகாணசபையால் நடாத்தப்படும் நினைவுநிகழ்வில் பங்குகொள்வது தமது அரசியல்பாதைக்கு தவறானது என்று தமிழத் தேசிய மக்கள் முன்னனி சொல்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவுநிகழ்வு என்பது தனியே வடமாகாணசபையால் நடாத்தப்பட்டநிகழ்வு என சொல்லமுடியாது. அது வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அவர் இப்போது வடமாகாண சபையின் முதல்வர். அத்தோடு தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர். அங்கு பேரவையின் உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் விக்கினேஸ்வரன் மீது கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவது வெளித்தெரியா விடயமல்ல. அவரை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்பது சிங்கள பேரினவாதத்தின் நோக்கம் மட்டுமல்ல. கூட்டமைப்பில் உள்ள அரசியல் வியாபாரிகளின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கின்றது.

எனவே இந்த நினைவுகூரல் விடயத்திலாவது ஒன்றுபட்டு நின்று தமிழத்தேசிய மக்கள் முன்னனியானது விக்கினேஸ்வரனை மறைமுகமாக பலப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் வெறுமனே தேசியம் பேசுகின்றோம் பேர்வழியாக இவர்களும் போய்விடுவார்களோ என்ற ஐயத்தை விதைப்பதுபோல அவர்களின் செயற்பாடு அமைந்துவிட்டமை தவறான உதாரணமாக வரலாற்றில் பதியப்படும்.

வடமாகாணசபை என்பது தனியே அதிகாரங்கள் அற்ற ஒரு கட்டமைப்பு என்று ஓரேயடியாக புறக்கணித்துவிடமுடியாது. தமிழர்களை பொறுத்தவரை இருக்கின்ற கட்டமைக்கப்பட்ட – அதிகாரத்தில் உள்ள - ஒரே அரசியல் நிறுவனமாக வடமாகாணசபையே உள்ளது.

கொழும்புக்கு செல்லும் முக்கியமான தூதுவர்கள் வடக்கிற்கும் வருவதனை அங்கும் ஒரு விசேட அதிகார நிறுவனம் உண்டு என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதால் தான்.

13 இற்கு கீழ் அமைக்கப்பட்ட மாகாணசபை மூலம் தான் சமஸ்டி ரீதியான அரசில் தீர்வே தேவை என்கின்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அதிகாரங்கள் அற்ற நிராகரிக்கப்பட்ட வடமாகாணசபையால் தான் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என தீர்மானம் நிறைவேற்றமுடிந்தது.

எனவே வெறுமனே தேசியம் பேசிக்கொண்டு முன்னே செல்வதால் மட்டும் அதனை சரியான அரசியல் நகர்வாக கொள்ளமுடியாது. அப்படியான செல்முறை தோல்வி காணும்போது அதற்கான பழி அப்பாவிகள் மீதே சுமத்தப்படுகின்றது.

இன்று வடமாகாணசபை உறுப்பினர்களில் சிலர் மோசமான காட்டுமிராண்டித்தனமான காடையர் கூட்டத்தை தமது தொண்டர்களாக வைத்துள்ளார்கள். அது இப்போது சாதாரண நாட்டாண்மை அரசியல் தரத்திற்கு சென்றுவிட்டது. சிலவேளைகளில் அப்படியானவர்களால் கொலைகளும் நடக்கின்றன. கடத்தல்களும் நடக்கின்றன. கற்பழிப்புகளும் நடக்கின்ற நிலைக்கு சென்றுவிட்டன.

இப்படி எம்மவர்களால் எம்மவர்கள்தான் என்று எண்ணி வாக்களிக்கப்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதற்கு காரணம் என்ன? நல்லவர்கள் பலர் வெறுமனே தேசியம் பேசிக்கொண்ட சிலரால் பாதை மாற்றப்பட்டமைதான் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?

ஆகக்குறைந்தது இப்படியான தனித்தனியான செயற்பாடுகளால் விரக்தியடைந்து பலர் அரசியல் வேலைத்திட்டங்களிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?

எந்த இடத்தில் பிரிந்து நிற்கவேண்டும் எந்த இடத்தில் சேர்ந்து நிற்கவேண்டும் என்ற அடிப்படை அரசியல் அறம் வேண்டாமா?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீது விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காக அதில் உள்ள அனைவரையும் அதன் ஆதரவாளர்கள் அனைவரையும் விமர்சிக்கமுடியுமா?

விடுதலைப்புலிகளின் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர்களை முன்கொண்டுவருவதிலும் நாம் தோற்றுவிட்டோமா? அல்லது இன்னும் காத்திருக்கப்போகின்றோமா?



-     அரிச்சந்திரன் -

முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை!!!

Tuesday, April 26, 2016 / No Comments
அண்மையில் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்தவர்களின் காணி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்நோக்கில் ஒரு விசேட சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

அதன்படி எதிர்வரும் ஒருவருட காலத்தினுள் “பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் காணி சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது” என அச்சட்டமூலம் கூறுகின்றது.

இந்த சட்டமானது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். வழமைபோலவே தாங்களும் இணைந்துதான் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே அச்சட்டம் கொண்டுவந்ததாக கூட்டமைப்பு சொல்லும் என்பது எதிர்பார்க்ககூடியதே.



அதனையே ஒரு ஊடகத்திற்கு பகிரங்கமாக கருத்து தெரிவித்தபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அப்போது இது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு ஆயுதக்குழுவால் பாதிக்கப்பட்ட வர்களுக்குத்தான் இழப்பீடு தருகின்றதே தவிர இராணுவத்தினரால் கையப்படுத்தப் பட்ட காணிகளுக்கு பதில் வருமா எனக்கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுமந்திரன் “பயங்கரவாத ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சூழ்நிலைகள் என்று வரும்போது அந்தச் சூழ்நிலைக்குள் படையினரையும் சிக்கவைக்கமுடியும்” என்று தனது சாணக்கியத்தனத்தை தெரிவித்திருந்தார்.

காணி ரீதியான மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் அவர்கள் சார்பான பிரதிநிதிகள் எவரும் இதுபற்றிய பிரயோசனமளிக்கக்கூடிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை.

மாறாக விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தும் விதத்தில் சட்டமூலங்கள் வருவதை மறைமுகமாக ஆதரித்து வருகின்றார்கள். அதற்கு இந்த காணிச்சட்டமூலம் கொண்டுவந்த முறைமை நல்ல எடுத்துக்காட்டு. ஆழக்கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் ஏற்படுகின்ற பிரச்சனையை தலையிட்டு அதற்கு தனது விசேட சட்டமூலத்தை கொண்டுவந்தவர் இந்த சுமந்திரன்.

ஆனால் தமிழர்களின் உரிமைகளை மீளப்பெற்றுக்கொள்வதில் உருப்படியான எந்த சட்டமூலத்தை சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்கள் என்றால் எதுவும் இல்லை.

தமிழர்களின் அரசியலுரிமை என்பது தற்போதைய சிறிலங்காவின் சட்டவாக்கத்திற்கு அப்பாற்பட்டது. அதே சட்ட எல்லைக்குக்குள் நின்று ஒரு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்றது.

அதற்கு அப்பால் சென்று தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற சிந்தனை மாற்றம் சிங்கள தேசத்திற்கு இன்னும் வரவில்லை. அதனை உருவாக்கி கொள்ளும் அல்லது மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளும் எந்த உபாயங்களும் தமிழர்நலனில் அக்கறை உள்ள சக்திகள் என்று சொல்லப்படுவனவற்றிலும் இல்லை.

ஆனால் அந்த சட்டவாக்க எல்லைகளுக்குள் நின்று தீர்வு காணப்படக்கூடிய பல பிரச்சனைகள் உண்டு.

உதாரணமாக 32 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட கொக்குளாய், கொத்குத்தொடுவாய், தென்னமரவாடி மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறமுடியாமல் இருக்கின்றார்கள்.

திருமலை கன்னியா நீரூற்றுகள் என்பவை தமிழர்களின் வாழ்வோடு இணைந்தவை இன்று அந்தப்பிரதேசம் பௌத்த மதங்களுக்கு சொந்தமானது என தமது அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அதனை கையகப்படுத்தியுள்ளனர்.

இன்று கன்னியா நீரூற்று பிரதேசம் அந்தப்பிரதேச மக்களின் பிரதேச சபையிடமிருந்து பறிக்கப்பட்டு சிங்கள உடைமை ஆக்கப்பட்டுள்ளது.

அங்கு பௌத்த விகாரையும் பள்ளிவாசலும் கட்டப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. இந்து ஆலயம் இடிக்கப்பட்டு மக்கள் மீண்டும் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் அந்தப்பிரதேசத்து மக்களின் அனுமதி இன்றி பிரதேசசபை பிரிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பல இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளனன. பிள்ளையார் கோவிலை இடித்து பள்ளிவாசல் கட்டியது நானே என அலிசாகிர் மௌலான வெளிப்படையாகவே சொன்ன காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இருந்தது.

தமிழ்மக்களின் அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட இத்தகைய பிரச்சனைகளை கையாளவோ அல்லது தீர்வு காணவோ தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு வருமட்டும் காத்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கின்றதா?

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை சரிபிழைகளுக்கு அப்பால் தம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவதிலும் அதற்கு தீர்வு காண்பதிலும் அத்தகைய தீர்வு காணலிற்கு இணைந்து நிற்பதிலும் முன்மாதிரியாக இருக்கின்றார்கள்.

குறிப்பாக முஸ்லிம் பிரதேச சபைகளை ஏற்படுத்தும் விடயங்களை தமது தேர்தல் கால உடன்பாடுகள் ஊடாக சாத்தியப்படுத்தியிருக்கின்றார்கள். ஒரு பலவீனமான நிலையிலும் கிழக்கு மாகாணசபையின் தலைமைத்துவத்தை தக்கவைப்பதற்கான தமது அரசியல் நகர்வில் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் தலைமைத்துவம் சாதித்தது என்ன?

அரிச்சந்திரன்

சம்பந்தரின் இருமுகங்கள்: சாதிக்குமா? பாதிக்குமா?

Friday, April 15, 2016 / No Comments
சிறிலங்கா அரச கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்த பின் எதிர்க்கட்சிகளே இல்லாதநிலையில் வலிய நுழைக்கப்பட்ட சம்பந்தர் சிறிலங்கா அரச கட்டமைப்பின்எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.

எதிர்க்கட்சி தலைவர் ஆன சம்பந்தர் தற்போது இரண்டு பாத்திரங்களைஏந்திக்கொண்டு திரிகின்றார். முதலாவதாக சிறிலங்கா என்ற நாட்டின் தலைவர்களில்ஒருவராக அதுவும் எதிர்க்கட்சித்தலைவராக செயற்படவேண்டிய நிலையில் உள்ளார். இரண்டாவதாக தமிழர் தரப்பின் தலைமைத்துவ பிரதிநிதியாக தமிழர்களின்தலைவராகவும் தன்னை காட்டிக்கொள்ளவேண்டிய நிலை அவருக்கு உள்ளது.



அண்ணளவாக 70 வீதத்திற்கு மேலான சனத்தொகையை கொண்ட இலங்கைத்தீவின்அரச கட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைமைத்துவ பொறுப்பு எடுப்பது என்பது மீண்டும்இனவாதிகளின் கோபத்திற்குள்ளாகி தமிழருக்கே உரித்தான நியாயங்களைவெளிப்படுத்த முடியாத கையறுநிலையை ஏற்படுத்திவிட்டதா என்பது பலரிடம் உள்ளகேள்வி.

ஏற்கனவே ஆளுங்கட்சியில் உள்ளவர்களே இரண்டாக பிரிந்து தமக்கே எதிர்க்கட்சிதலைமைப்பொறுப்பை தரவேண்டும் எனக்கோரி நிற்கின்றனர்.

உண்மையாகவே தமிழர் தரப்பின் ஒரு தலைமைக்கு – தற்போதுள்ள அரசகட்டமைப்பின்படி – எதிர்க்கட்சி தலைமைப்பதவி பொருத்தமானதில்லை என்பதுஇப்பத்தியாளரின் கணிப்பும் ஆகும்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை தமிழர்களுடைய பிரச்சனைகளைமையப்படுத்தியதாகவே தமிழர் அரசியல் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத நிலையில்இருக்கின்றார்கள்.

இருப்பதற்கு காணியும் இல்லாமல், இருப்பவன் இருக்கிறானா இல்லையா என்பதும்தெரியாமல் சிறைகளிலே அடைபட்டு இருப்பதே வாழ்வாகிப்போன ஒரு இனத்தின்தலைமை, எங்கோ ஒரு மூலையில் அவ்வப்போது சில சிக்கல்களை எதிர்கொள்ளும்சிங்கள சமூகத்திற்காக, வினைத்திறனுடன் குரல் எழுப்பமுடியாது.

அப்படியே குரல்கள் எழுப்பப்பட்டாலும் அது ஆதரவுக்குரலாக மட்டுமே இருக்கமுடியும்.

அப்படியானால் தமிழர் தரப்பு எப்படி எதிர்க்கட்சி தலைமைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்பதை ஆராய்வோமானால் தமிழர் தரப்பின் குரலைபலவீனப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இது என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் அதனை தமிழர்களில் ஒரு தரப்பினர் இப்போது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வைத்துக்கொண்டு வெளிநாட்டு தூதுவர்களோடுசந்திப்புக்களை செய்யமுடியும் என்றும் அதன் ஊடாக தமிழர் தரப்பின் நியாயங்களைஎடுத்துரைக்கமுடியும் என்றும் அவர்கள் கதைவிடுவார்கள்.

சிங்களத்தின் ஆளும் கட்சியும் சிங்களத்தின் எதிர்க்கட்சியும் இருக்கும்போதே தமிழர்தரப்பை ஒரு தரப்பாக கருதி தனிப்பட்ட சந்திப்புகளை முக்கியமான எந்த நாடுகளுமேசெய்துவருகின்றன. செய்துவரும்.

ஆனால் தற்போதைய தமிழர் ஒருவரின் எதிர்க்கட்சி தலைமைப்பதவியானதுதமிழருக்கான கவனம் செலுத்தலை குறைத்து, சிறிலங்கா என்ற நாட்டின்அடிப்படையில் சிந்தித்து ஒவ்வொரு அரசுகளும் செயற்படக்கூடிய நிலையேஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசதலைவருக்கான தேர்தல் காலத்தில், சந்திரிகா மிக கவனிப்பிற்குரியவிடயத்தை பகிர்ந்துவந்தார். அதாவது தான் அரசதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டசமயத்தில் விடுதலைப்புலிகளோடு போர் செய்தே வெல்லவேண்டும் என சிங்கள மக்கள்எண்ணியதாகவும், ஆனால் தனது அரசு சிங்கள மக்கள் மத்தியில் செய்த விளக்கவுரைநடவடிக்கைகள் காரணமாக அந்த மனநிலையை மாற்றியிருந்ததாகவும்பெருமிதப்பட்டிருந்தார்.

ஆனால் இன்று நல்லாட்சி அரசு வந்துள்ள சூழலில், தமிழ்மக்களுக்கு அதிகாரங்களைகொடுத்து சமத்துவமாக வாழவேண்டும் என்ற நல்நெறியை சொல்ல எந்தவொருசிங்கள தலைவர்களாவது  தமிழ்தலைவர்களாவது எந்தவொரு நடவடிக்கையாவது முன்னெடுத்தார்களா?

தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்கவேண்டும் என்ற மனநிலை சிங்கள தேசத்திற்குஇன்னும் வரவில்லை. அத்தகைய அறிவூட்டலை செய்கின்ற நீண்ட செயற்றிட்டம் முன்னெடுக்காதவரை சிங்கள தேசிய மனநிலை மாறப்போவதில்லை.

ஆனால் அத்தகைய “அறிவூட்டல்” வேறு இடத்தில் நடக்கின்றது.

அண்மையில் ஏறாவூர் சென்ற சிறிலங்கா அரச அதிபர் மைத்திரிபால அங்கு உரையாற்றும்போது  “தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களும் தீர்வு வழங்காமல் சிங்களமக்கள் அமைதியாக வாழமுடியாது” என சொன்னார்.

இதனைப்போலவே அம்பாறைக்கு சென்ற சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் மங்களசமரவீரவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும்“காணாமல் போவதை காணாமல் ஆக்குவோம்” என சபதம் எடுத்திருந்தார்கள்.

இங்கு மைத்திரிபாலாவும் மங்கள சமரவீரவும் சுமந்திரனும் மேற்படி செய்தியை சிங்களதேசத்தில் அல்லவா சொல்லியிருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பொழிவுரைகளை செய்வதன் நோக்கம் என்ன?

இதற்கு மேலதிகமாக அண்மைய எடுத்துக்காட்டை கூறலாம்.

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபாலசிறிசேனா “நாம் ஒரு நாடாக ஒரு தேசமாக வளர்ந்து முன்னேறுவோம் எனதிடசங்கற்பம் கொள்வோம்” என தெரிவித்திருந்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழில் “மலர்ந்துள்ள இந்தபுத்தாண்டில் கடந்த காலங்களிலேயே பல்வேறு சம்பவங்களின் நிமிர்த்தம் சிதைந்துபோயுள்ள சமூகங்களுக்கு இடையேயான நல்லுறவை கட்டியெழுப்ப அனைவரும்முன்வர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன்.

மேலும் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாலும் பல்வேறுசூழ்நிலைகளின் நிமித்தம் இப்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடமுடியாத நிலையிலுள்ள எமது உறவுகளையும் நினைவில் வைத்துக்கொள்வோமாக.

மலர்ந்துள்ள இப்புத்தாண்டு அனைவரதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற சுபீட்சமானஆண்டாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

என தனது வாழ்த்துச்செய்தியை பதிவு செய்திருந்தார்.

ஆனால் ஆங்கிலத்தில் சிங்கள மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில்

The Sinhala and Tamil New Year is not merely a celebration. Rather, it is a national festival that has deep roots in our culture and traditions. The Sinhala and Tamil New Year is also a symbol of unity as it brings together people, irrespective of race, caste, or creed in national celebration.

However, while I encourage all of you to partake in the celebrations with joy and happiness, I also urge you to remember those who are not so fortunate to celebrate owing to various circumstances.

“My hope is that this New Year would be a peaceful and prosperous one to all Sri Lankans”.

இதில் சிதைந்துபோன சமூகங்கள் மத்தியில் நல்லுறவு வரவேண்டும் என்றோ அதனைகட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டும் என்றோ கோரிக்கை விடப்படாமல்

அனைத்து சிறிலங்கா தேசத்து மக்களுக்கும் இதுவொரு தேசிய விழா என்றும்அந்தளவுக்கு எங்களனைவரையும் பிணைத்து வைத்துள்ளது என்றும் ஒரு சிங்களதேசத்தின் தலைவராக தனது வாழ்த்துச்செய்தியை பதிவு செய்திருந்தார்.

அதனால்தான் இப்பத்தியின் ஊடாக முக்கியமான ஒரு விடயத்தை முன்வைக்க விரும்புகின்றோம்.

தமிழரது தனித்துவ தேசிய அடையாளங்களை உடைத்து படிப்படியாகநீர்த்துப்போகச்செய்து சிறிலங்கா ஒரு தேசத்தில் தமிழர்களும்வாழ்ந்துவிட்டுப்போகலாம் என்ற நிலையை உருவாக்குகின்ற முயற்சியிலேயே சிங்களத் தலைவர்களுக்கு ஈடாக தமிழ்த்தலைவர்களும் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்தைஇப்பத்தி முன் வைக்கின்றது.

கூர்வாளின் நிழல் - அரிச்சந்திரன்

Friday, March 18, 2016 / No Comments
ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டமும் அதன் பின்னரான தமிழர்களின் அரசியல் இருப்பு என்னவென்பதும், ஆயுதபோராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான அரசியல் நிலை உண்மையில் தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியா என்பதிலும் பல வாதங்கள் உண்டு.

எனினும் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நெறியானது, போராட்டத்திற்காக அர்ப்பணித்த மாவீரர்களினதும் பொதுமக்களினதும் தியாகத்தின் மீதுதான் நிலைப்படுத்தப்படமுடியும் என்பதும், அதன் ஊடாகவே தமிழர்கள் தமது அரசியல் பலத்தை பெறுவார்கள் என்பதும் ஒரு பொதுவான அபிப்பிராயமாக இருக்கின்றது.





அதனை மறுத்து போராட்டத்தின் தோல்விகளை ஏற்றுக்கொண்டு, போராட்டவழிமுறையே தோல்வி என ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்திற்குள் நகருவதே தமிழர்களுக்கு மோட்சத்தை தரும் என்ற வகையில், பயணப்படவேண்டும் என்ற வாதத்துடன் சில கருத்துக்கள் எம்மவர் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இதே கருத்தைத்தான் சிங்கள பெருந்தேசியவாதமும் முன்வைக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டால், அதன் வழிமூலம் எதுவென்பதை புரிந்துகொள்ளமுடியும்.

எமது போராட்டத்தினை தோல்வியடைந்த போராட்டமாக காட்டுவதற்காகவென பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்காக இறுதியாக பயன்படுத்தப்பட்ட உத்திகளில் ஒன்றுதான், தமிழினியின் கூர்வாளா என ஐயப்படவைக்கிறது அதன் உள்ளடக்கம்.

ஒரு விடுதலைப்போராளியின் புத்தகத்தை தங்களது நீண்டகால திட்டங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல்களை செய்து வெளியிட்டுள்ளார்கள் என்ற இயல்பான ஐயத்தை தோற்றுவிக்கின்றது அதன் தொடக்கமும் முடிவும்.

இப்போது ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை அடக்குவதற்கு நேரடியான உத்திகளை பயன்படுத்தாமல், தந்திரமான உத்திகளையே சிங்கள தேசிய அரச இயந்திரம் பயன்படுத்திவருகின்றது.

அந்தவகையிலேயே சரணடைந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளை இராணுவ உடுப்புகளுடன் விட்டிருந்தார்கள். அல்லது அவர்களது இணக்கத்துடன் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதுபோன்று காட்ட விரும்பினார்கள். அவ்வாறு "சுதந்திரமாக" விடப்பட்டவர்கள் ஊடாக போராட்டதவறுகளை விளம்பரப்படுத்தினார்கள்.



பின்னர் அப்படியான உயர்மட்ட தலைவர்கள் ஊடான ஒரு அரசியலை மக்கள் மத்தியில் விதைக்க முயன்றார்கள்.

முன்னர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் சிங்கள புலனாய்வுத்துறை தளபதிகள், இராணுவதளபதிகளாக நியமிக்கப்பட்டு மக்களை கவர்ந்திழுக்கும் செயற்பாடுகளை செய்தார்கள். அவர்கள் வாகனங்களில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடுவதை கண்டால் அந்த இடத்தில் இறங்கி விளையாடுவார்கள். அதனை பார்க்கும் அயலவர்கள் "அந்த ஆமிக்காரன் நல்லவன்” என்பார்கள். இப்படித்தான் வடமராட்சியில் ஒரு இராணுவதளபதிக்கு பாராட்டுவிழா வைக்கப்படும் அளவுக்கு அவரது "திறமை" உயர்ந்திருந்தது.

இதன்மூலம் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த இனப்படுகொலைகளின் இறுகிய வடிவம் தந்திரமாக மறைக்கப்பட்டது. இப்படியான செயற்பாடுகளில் சிறிலங்கா புலனாய்வுத்துறை ஒரு படி மேலோங்கியிருந்தது என்றே சொல்லவேண்டும்.

அந்தவகையில் அரசஇயந்திரத்தின் நயவஞ்சக உத்திகளில் ஒன்றான இன்னொரு பக்கத்தை இப்புத்தகம் ஊடாக முன்வைக்கவிரும்புகின்றது இப்பத்தி.

பின்வரும் ஆதாரங்களை முன்வைத்து அதனை நிறுவ முயல்கின்றோம்.
  1. புத்தகத்தின் முகப்பும் அதன் அட்டையும்
  2. புத்தகத்தின் உள்ளடக்க தொடக்கமும் அதன் முடிவும்
  3. புத்தக வெளியீட்டின் பின்னணியும் அதன் அரசியலும்
இதனை சற்று விரிவாக பார்ப்போம்.

முகப்பு அட்டையில் தெறிக்கும் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ என்ற அதன் தலைப்பு சிங்கத்தின் கூர்வாளை குறிப்பதாக அண்மையில் ஒரு காட்டூன் வெளியாகியிருந்தது. உண்மையில் கூர்வாளின் நிழலில் என்பது சிங்கத்தின் நிழலில் இது எழுதப்பட்டது எனவே அதனை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழினி சொல்கிறாரா?

அது போலவே புத்தகத்தின் பின்அட்டையில் “புலிகளின் வீர வரலாறு புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையே தான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் இல்லங்களில் துயிலும் மாவீர்ர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப் படுத்திவிட முடியாது” இப்படி வருகின்றது வசனங்கள்.

புலிகளின் அணுகுமுறைகளில் சரிகள் பிழைகள் இருக்கமுடியும். ஆனால் வீரத்தையும் துரோகத்தையும் ஒப்பிடமுடியுமா? அதுபோன்று மாவீரர்கள் அனைவரையும் துரோகிகள் என சொல்லமுடியாது என சொல்வதும் எந்தவகையான ஒப்பீடு. இங்கு ஒரு இலக்கிய அறிவுமிக்க தமிழினியை காணமுடியுமா?



இந்த சொல்லாடல் ஒரு வகையான அன்னியப்பட்ட சொல்லாடல் இல்லையா?
இது முகப்புக்கும் முடிவுக்குமான ஒரு பார்வை.
இனி அடுத்த விடயத்திற்கு வருவோம்.

புத்தகத்தின் தொடக்கத்தில் “தலைவர்” என்றும் “இயக்கம்” என்றும் சொல்லப்படும் விடயங்கள் 69 வது பக்கத்திலிருந்து “புலிகளின் தலைவர்” என்றும் “புலிகளின் இயக்கம்” என்றும் மாறுபட்டு செல்வதை அவதானிக்கமுடியும்.

எமது போராட்டத்தை நியாயப்படுத்தும்போது தலைவர் என்றும் இயக்கம் என்றும் சொல்லப்படும் விடயங்கள் விமர்சிக்கும்போது புலிகளின் தலைவர் என்றும் புலிகளின் இயக்கம் என்றும் வருவது இயல்பானதா?
இடைச்செருகல்கள் செய்யபபட்டன என்பதற்கு வலுவான ஆதாரத்தை இது கொடுக்கின்றது.

இன்று தமிழீழ தாயகத்திற்கு வெளியே வாழ்பவர்களே தலைவர் என்றும் இயக்கம் என்றும் இயல்பாக சொல்லுகின்ற சொற்கள். அது மக்களுக்கும் இயக்கத்திற்கும் இடையே இருந்த நெருக்கத்தின் அடையாளம். அந்த அடையாளம் எப்படி தொலையும்?

அதனை தமிழினியால் தொலைக்கமுடியுமா? சாதாரண மக்களே இயக்கம் என்றும் தலைவர் என்றும் இயல்பாகச் சொல்லுகின்ற சொற்கள் அன்னியமானதேன்?

தமிழினினியின் தொடக்ககால இராணுவப்பயிற்சிகளை பற்றி பக்கம் 65 – 66 களில் வருகின்றது. அது “எமது பயிற்சி ஆசிரியர்கள் மைதானங்களில் மிகக் கடுமையானவர்களாக நடந்துகொண்டபோதிலும் ஒவ்வொரு போராளிகளினது தனிப்பட்ட விடயங்களிலும் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்தார்கள்” என வருகின்றது.

ஆனால் அவரது நண்பியின் பயிற்சி பற்றி பக்கம் 70 இல் இப்படி வருகின்றது. “குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான உதாரணங்களாக இருந்தனர்” என வருகின்றது.
இதன்மூலம் சொல்லமுனைவது என்ன?

இதேபோன்று மாத்தையா கருணா விடயம் ஒப்பிடப்படுகின்றது.
இந்தியாவில் சிறையிலிருந்த கிருபன் என்பவர் இந்திய காவல்துறை வண்டி ஒன்றிலிருந்து அங்கிருந்த பொலிசார் இருவரை சுட்டுவிட்டு தப்பியோடுகின்றார்.

அவர் உண்மையிலேயே அவ்வாறு தப்பிவந்ததாகவே விடுதலைப்புலிகள் நம்புகின்றார்கள். தப்பிவந்த கிருபனை சாதனைவீரனாக கணித்து அவருக்கு தலைவருக்கான பாதுகாப்பு பணி கொடுக்கப்படுகின்றது. பொலிஸ்காரனை சுட்டுவிட்டு தப்பியோடும் திட்டத்தை வடிவமைத்து நிறைவேற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இதுபற்றி இச்சதியில் பங்குபற்றிய அனைவருமே ஏனைய போராளிகளுக்கு முன் சாட்சி வழங்கினர். அதனைத்தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருந்த மாத்தையாவை சிறையில் சந்தித்த தலைவருக்கு தனது நம்பிக்கைக்குரிய ஒரு தளபதி அத்தகைய துரோகத்தை ஏன் செய்தார் என நம்பமுடியவில்லை. அதனால் சிறைக்கு நேரடியாகச்சென்று “நீ ஏன் அப்படி செய்தாய்” என கவலையுடன் கேட்டார் என்றும் அதற்கு மௌனமாக மாத்தையா இருந்ததாக பதிவு உண்டு.

மாத்தையாவின் துரோகத்தை அவரது மனைவியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரலாறு காட்டிய வழி. அது தெளிவாகவே தமிழினிக்கும் தெரிந்திருந்தது.

அதேபோன்ற நிலையே கருணாவுக்கும் ஏற்பட்டது. இதனை விளங்காமல் தமிழினி இருந்திருப்பாரா?

அடுத்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை ஒரு அடிப்படையான வரையறையை எப்போதும் பேணிவந்தது. அது அதன் தலைமைத்துவத்தால் நெறிப்படுத்தப்படவில்லை. மாறாக அடிமட்ட போராளிகளாலேயே வழிப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது ஒருவரது நிலைப்பாடுகள் மாறலாம் ஆனால் செயற்பாடுகள் மாறக்கூடாது என்பதே அது.

போராட்டப்பாதையில் ஏற்படும் கடினங்களை கண்டு விலகுவது சாதாரணமானது. அதற்கான நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியும். ஆனால் அவர்கள் இயக்கத்தின் தியாகத்தையோ அதன் கொள்கைகளையோ கேள்விக்குட்படுத்தும் விதத்தில் செயற்படமுடியாது.
விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்து கருணா வெளியேறியபோது கருணா ஒரு துரோகி அவரைப்பற்றி கதைக்கதேவையில்லை என தமிழினி சொன்ன பதிவுகள் இப்போதும் உண்டு. எனவே அதற்கு முரணாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பாரா?

இப்புத்தகத்தில் ஏனைய போராளிகளின் பெயர்கள் அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என தமிழினி சொன்னதாக அவரது கணவர் சொல்கிறார்.

அப்படியானால் அப்படியான நெருக்கடி இருந்தது இருக்கின்றது என்பது ஏன் சொல்லப்படவில்லை? தமிழினிக்கு எந்தவித சித்திரவதைகளும் செய்யப்படவில்லை என்றும் சட்டரீதியாகவே அவருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழினியை சந்தித்த முதலாவது இராணுவத்தினன் சொல்வதாக இப்புத்தகம் சொல்வது ஏன்?
இப்போது இந்தப்புத்தகம் ஏன் அவசரம் அவசரமாக வெளியிடப்படுகின்றது? இதன் பின்னாலுள்ள பின்னனிகள் என்ன? இப்போது சிங்களத்திலும் இப்புத்தகம் வெளிவரவுள்ளது.

ஒரு புத்தகத்தை வெளியீடு செய்வது எவ்வளவு கடினமானது. ஆனால் புத்தகத்தை பிரசுரித்து கிளிநொச்சியில் வெளியீடு செய்வதும் அதன் சிங்கள பதிப்பு இப்போதே தொடங்கிவிட்டதன் பின்னனி என்ன?
தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றியோ அதன் விளைவாக போராட்டம் ஆரம்பித்தது என்றோ போராளிகளின் தியாகங்கள் பற்றியோ சொல்லாத ஒரு புத்தகத்தை சிங்களத்தில் வெளியிடப்போவது எதற்காக?
சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்றவர்களே இதன் வெளியீட்டுக்கும் பின்னணியில் நிற்கும் ‘நல்நோக்கம்’ என்ன?

உண்மையாகவே தமிழினி போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளையே எடுத்திருந்தார் என வைத்துக்கொள்வோம். அப்படியானால் அவரது மருத்துவதேவைக்காக கூட அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்காதது ஏன்?

அனைத்துக்கும் மூலம் ஒன்றுதான்.

30 ஆண்டுகள் தொடர்ந்த ஒரு ஆயுதப்போராட்டமானது சரிகளுக்கு நிகராக தவறுகளை கொண்டுள்ளது. உங்களை அடக்குமுறை செய்த சிங்கள அரச இயந்திரத்திற்கு நிகராக உங்கள் விடுதலைப்போராட்டமும் அழிவை தந்துள்ளது. எனவே இரண்டு பக்கஅழிவுகளை மறந்து மீண்டும் உங்களுக்கான தீர்வுகளை 1948 இலிருந்து தொடங்குவோம் என்பதே அது.
அதற்கான சிறுக சிறுக போடப்படும் திட்டங்களின் ஒரு பகுதியே இத்தகைய படைப்பிலக்கிய முயற்சிகளாகும்.

எமது வரலாற்றை புனைந்து தமிழ்த்தேசியத்தை அரிக்கும் ஒரு கூர்வாளே இது.

- அரிச்சந்திரன் -


  பின்னிணைப்பு
1.தமிழினி அக்காவின் சுயசரிதை அவரது இறப்பின் பின் திரிவுபடுத்தப்பட்டு/சில விடயங்கள் உட்புகுத்தப்பட்டு தான் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என 100% என்னால் அடித்துக்கூற முடியும்.
அதற்கான ஆதாரங்களில் ஒன்று தமிழகத்தில் காலச்சுவடு வெளியிட்டுள்ள அப்புத்தகத்தின் பின் அட்டையிலுள்ள வரிகள்.
தமிழினி அக்கா சிறையில் இருந்த போது தமிழகத்தை சேர்ந்த பிரேமா ரேவதி என்பவர் "நலமா தமிழினி" என கேட்டு தமிழினி அக்காவையும் புலிகளையும் விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார். அதை வாசிக்க : http://www.kalachuvad...u.com/issue-116/page63.asp
அதில் வரும் ஒரு பந்தியே இப்புத்தகத்தின் பின் அட்டையில் சேர்க்கப்பட்டு அதன் மேலே தமிழினி அக்காவின் படத்தையும் கீழே தமிழினி எனவும் போட்டு அதை தமிழினி அக்காவின் வரிகள் போல் காட்டியுள்ளார்கள். பிரேமா ரேவதி என்பவரின் வரிகள் இங்கே தமிழினி அக்காவின் வரிகளாக திரிவுபடுத்தி காட்டப்பட்டது ஏன் என தமிழினி அக்காவின் கணவர் ஜெயன் தேவா(ஜெயக்குமரன்) அவர்கள் விளக்குவீர்களா?
புத்தகத்தின் அட்டையிலேயே திரிவுபடுத்தல் இடம்பெற்றுள்ள போது உள்ளேயும் பல திரிவுபடுத்தல்கள், திட்டமிட்ட உட்புகுத்தல்கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
2. சயந்தன் கதிர் என்ற எழுத்தாளர் இடைச்செருகல்கள் இல்லையென்றும் இதற்கான ஆதாரமாக தான் தமிழினியோடு உரையாடிய தகவல்களை ஸ்கிறீன்சொட் எடுத்து போட்டிருந்தார்.
ஆனால் தமிழனியின் பேஸ்புக் ஐடியானது அவர் இறந்தபின்னும் இன்னொருவரால் இயக்கப்பட்டதே என சுட்டிக்காட்டியபோது குறித்த பதிவு அகற்றப்பட்டது.
3. பாதுகாப்பு செயலாளரின் விசேட அனுமதியுடன் வெளியிடப்பட்ட புத்தகம்
4. தமிழினி 'ஒரு கூர் வாளின் நிழலில்' எழுதவில்லை” – எழுத்தாளர் திருக்குமரன்
     

மக்கள்பேரவை மாற்றம் தருமா?

Monday, January 25, 2016 / No Comments
விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது.

தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன.



இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது.

போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற விடயத்திலும் சரி காணாமல்போனோர் விடயத்திலும் சரி தற்போதைய அரசியல் கைதிகள் விடயத்திலும் சரி கூட்டமைப்புக்கு என ஒரு தனியான கருத்து இல்லை.

இதனாலேயே அண்மையில் யாழ் வந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “நான் இதனை சொல்வதற்கு கவலைப்படுகின்றேன். ஆனால் காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை” என சொன்னபோது தமிழரசுகட்சி தலைவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

இதனைப்போலவே “நவாலித் தேவாலயத்தில் குண்டுகள் போடப்பட்டபோது நான் படைத்தளபதிகளை பார்த்து கத்தினேன்.” என சந்திரிகா தனது பொறுப்புக்கூறல்தனத்தை படைத்தளபதிகளை பார்த்து கைகாட்டினார்.

உடனே சந்திரிகா அம்மையார் அதனை தவறு என்று சொல்லிவிட்டார் அவர் நல்ல பெண்மணி என எமது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே – அந்த படுகொலையை மறந்து அதற்கு பின்னாலிருந்த இனவழிப்பின் நோக்கத்தை மறந்து அதனை பூசிமெழுகும் சந்திரிகாவின் தந்திரத்தை மறந்து - பெருமிதமடைகின்றனர்.

இப்படி கையறுந்த நிலையில் எல்லாமே கைவிட்டுபோகின்ற நிலையில் எதிர்கட்சி தலைவர் என மகுடன் சூட்டிக்கொண்ட வாழ்நாள் சாதனை மனிதர் சம்பந்தராலும் ஒன்றும் சொல்லமுடியாத சாதனையை செய்யவேண்டியிருக்கிறது.

இவ்வாறு தடம்மாறிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செல்நெறியானது பலத்த கேள்விகளை பலத்த விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இதன் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்மக்கள் பேரவையின் உருவாக்கத்தை கண்டுகொள்ளவேண்டும்.

தமிழ்மக்கள் பேரவையானது ஒரு அரசியல் கட்சியாக அன்றி மக்கள் இயக்கமாக ஒரு செயற்பாட்டு இயக்கமாக பரிணமிக்கும் என்றே அறிவிக்கப்பட்டது.

இத்தகைய உருவாக்கம் நல்ல விடயம் தான். ஆனால் இதனை சரியான வகையில் உறுதியான முறையில் உருவாக்கவேண்டியது அவசியமானது.

தொடங்கப்படும்போது ஒரு சிறு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் வளர்ச்சியானது பல்பரிணாமங்களாக முழுமையானதாக மாற்றுவதற்கான அடிப்படைகளை உள்வாங்கவேண்டும்.

அதற்கான களங்கள் திறக்கப்படவேண்டும். விவாதங்கள் விமர்சனங்கள் கேள்விகள் பகிரப்படவேண்டும். தனியே ஒரு குழுவால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செயற்றிட்டங்கள் அன்றி ஒரு பலமான மக்கள் இயக்கம் ஒன்றினால் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டமாக பரிணமிக்கவேண்டும்.

எனவே தமிழ்மக்கள் பேரவை தொடர்பான சில கருத்துக்களை இப்பத்தி முன்வைக்கவிரும்புகின்றது.

தமிழ்மக்கள் பேரவையானது அதன் பெயருக்கு ஏற்றவாறு ஒத்த கருத்துடையோரை இணைக்கும் பேரவையாக உயரிய நோக்கத்தை வெளிப்படுத்தும் அமைப்பாக அமைத்துக் கொள்வதற்கு போதியளவில் அனைவரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவில்லை.

தனியாக தமிழ்ச்சிவில் சமூகம் செய்த பணிகளையும் தனியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி செய்த பணிகளையும் ஒரே கூடைக்குள் கொண்டுவந்தமை போலான தோற்றப்பாட்டை உருவாக்கியமை தமிழ்மக்கள் பேரவையின் ஒரு பலவீனமான நிலையை வெளிக்காட்டுகின்றது.

தமிழ்மக்கள் பேரவையானது ஒரு அரசியல் கட்சியாக அன்றி அழுத்தக்குழுவாக மக்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து உயர்ந்த பட்ச அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான  சிந்தனைமாற்றத்திற்கான மையமாக தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணக்கருத்து உயர்ந்திருக்கிறது.

ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் ஈபிஆர்எல்எப் கட்சித்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அதன் முகங்களாக தெரியப்படுத்தப்படுவது அல்லது காட்சிப்படுத்தப்படுவது பேரவையின் நோக்கங்களை பலப்படுத்தாது.

அத்தோடு தமிழரசுக்கட்சியின் செல்நெறியில் அல்லாமல் அதன் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த திரு. சிற்றம்பலம் அவர்களை அதன் பிரதிநிதியாக காட்டிக்கொண்டமை வலுப்படுத்தக்கூடிய செயற்பாடு அல்ல.

மாற்றாக பேரவையில் மேற்குறிப்பிட்டவர்கள்; இணைந்து நிற்பது அவர்களது நிலைப்பாடுகளை பலப்படுத்தும் என்ற யதார்த்தமே முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். கட்சி சார்பு ஊடகங்களும் மேற்குறித்தவர்களின் கருத்தை பேரவையின் கருத்தாக கொண்டுவருவது பேரவையை பலவீனப்படுத்தவே.

எனவே சீர்செய்யும் அல்லது மீளாய்வு செய்யும் பணியில் பேரவை கவனம் எடுக்கவேண்டும்.

மற்றும் தமிழ்மக்களின் அனைத்து சமூகமட்டங்களையும் பிரதிபலிக்கக்கூடியவாறு பேரவையானது கட்டமைப்பை கொண்டுள்ளதா என்ற வினாவுக்குள் வரவேண்டியிருக்கின்றது.

அரசியல் ரீதியான விடயங்களில் முன்னிலைப்படுத்தப்படவேண்டிய சட்டத்தரணிகளின் பங்கு எப்படியானது அல்லது அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்களின் வகிபாகம் எங்கே? சாதாரண மட்டத்தில் கவனத்தினை கொண்டால் பெண்களின் வகிபாகம் என்ன? வடக்கு கிழக்கில் ஏறக்குறைய ஒரு இலட்சம் விதவைப்பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களையாவது பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பெண்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்களா?

எனவே சமூகமட்டத்தில் கருத்துருவாக்கத்தை விதைக்கக்கூடிய கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் சமூகபிரச்சனைகளை முன்னகர்த்தக்கூடிய பங்காளர்களின் பங்கு முன்னிலைப்படுத்தவேண்டும்.

அடுத்ததாக அரசியல்கட்சியாக அன்றி மக்கள் இயக்கமாக வளர்க்கப்படவேண்டிய பேரவையானது அதற்கான அடிமட்ட செயற்பாட்டாளர்களை கொண்டிருக்கின்றதா? அல்லது மீண்டும் மேசையில் இருந்து கதைக்கின்ற மேல்மட்ட அமைப்பாளர்களை மட்டும்கொண்டிருக்கின்றதா?

அதாவது கீழ்மட்டத்தில் இருந்து வளரவேண்டிய பேரவையானது இப்போது அரசியல் திட்டம் ஒன்றை வரைந்து அதனை கீழ்நோக்கி கொண்டுசெல்லப்போவதாக கூறுகின்றது.

கீழ்மட்டத்தில் செயற்பாட்டுநிலையிலுள்ளவர்களே ஒரு மக்கள் இயக்கத்தின் தாங்குசக்தி. அத்தகைய அடிமட்ட செயற்பாட்டாளர்கள் இன்றிய ஒருமக்கள் இயக்கம் சாத்தியம் தானா?

அப்படியானால் அது கூட்டமைப்பின் அதே தந்திரோபாளத்தையே கையில் எடுத்துக்கொண்டுள்ளது என்று சொல்லலாமா? இதனைத்தான் மோதகமும் கொழுக்கட்டையும் என கூட்டமைப்பையும் பேரவையையும் ஒப்பீடு செய்யப்படுகின்றதா?

கிராமிய மட்டத்தில் சிந்தனைவட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை மேல்நோக்கி செல்லும்போது செறிவானதாக கனதியானதாக உண்மையானதாக வெளிவருமல்லவா?

அடுத்ததாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்போர் ஈழத்தமிழர்களின் சனத்தொகையில் முக்கிய இடத்தை பெறுகின்றனர். அது தற்போது மூன்றிலொரு பங்கினர் என சொல்லப்படுகின்றது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் தாயகமக்களுடன் இரண்டறக்கலந்தவர்களாக அவர்களின் வாழ்வியல் விடயங்களில் கரிசனை கொண்டவர்களாக அதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

ஒப்பீட்டளவில் கடும்போக்கானவர்கள் என சிங்கள அரசுகளாலும் தமிழ் மிதவாத தலைவர்களாலும் சொல்லப்படுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் வகிபாகம் என்ன?

ஈழத்தமிழர் தாயகத்திலே தோற்றம் பெறுகின்ற ஒரு அமைப்பில் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும். அதற்கான வழிவகைகள் என்ன?

இப்படியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை வழிப்படுத்தவேண்டிய தமிழ்மக்கள் பேரவையானது அதன் செயற்பாட்டு அளவில் போதிய மாற்றங்களை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

அத்தகைய மாற்றங்களை செய்யாதபோது அவர்களால்; நிரப்பவேண்டிய அந்த இடைவெளி தொடர்ந்தும் இடைவெளியாக - இன்னொன்றிற்காக காத்திருக்கவேண்டி – வந்துவிடும்.

காத்திருக்கவேண்டுமா?

அரிச்சந்திரன்

தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 3

Sunday, August 16, 2015 / No Comments
தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும்
மாற்றுத்தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான
வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான
பலத்தை அதிகரிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து கடந்த கட்டுரை
நிறைவு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தைச் சற்று விரிவாகப் பார்ப்பதே
இக்கட்டுரையின் நோக்கம்.




முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக எவ்வாறான
அணுகுமுறையைக் கடந்த காலத்தில் உலகம் கையாண்டது, இப்போது
கையாண்டுகொண்டு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சில
ஆண்டுகளின் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச்
சந்திக்கவென அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால்
பேரழிவின்பின்னர், அதாவது புலிகள் களத்தில் இல்லாமற்செய்யப்பட்ட
பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அதிகாரபூர்வமாக ஒரு மேற்குலக
வல்லரசு சந்திப்பதற்கான அழைப்பாக அது இருந்தது.

அவ்வாறு அழைப்பு விடப்பட்ட செய்தி கசிந்தவுடனேயே தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு இந்தச் சந்தர்ப்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்,
என்னென்ன பேச வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது, என்று
கூட்டமைப்புக்கு அறிவுரையும் ஆசியும் கூறி தமிழ் அமைப்புக்கள்
அறிக்கைகள் விட்டன. அதுவரை ஒருவிதத் துயரக் கடலில் மூழ்கிப்போய்
சலிப்போடிருந்த தமிழ் அரசியல் உலகம் அச்சந்திப்புப் பற்றிய
அறிவித்தலால் திடீரென சலசலப்புக்குள்ளானது.

அந்நேரத்தில் அச்சந்திப்புக்குப் போகவென ஐரோப்பாவில் தங்கியிருந்த
திரு. மாவை சேனாதிராஜாவை தனிப்பட்ட நட்புக் காரணமாக மூத்த
போராளியொருவர் சந்தித்து வாழ்த்துச் சொல்லப் போனார். ஆனால்
மாவையின் வரவேற்பு எதிர்பாராதவிதமாக இருந்தது.

“தம்பி, இதுவொரு விசயமெண்டு நீரும் வெளிக்கிட்டு வாழ்த்துச் சொல்ல
வந்திருக்கிறீர். இதுவரைக்கும் இன்னும் அப்பொய்ண்ட்மென்டே
கிடைக்கேல. முக்கியமான ஒருத்தரும் நேர கதைக்கவுமில்லை.

இதுவரைக்கும் றிசப்ஷனில நிக்கிற ஒருத்தரோட தான் போனில
கதைச்சிருக்கு. எப்ப சந்திப்பு, ஆரோட சந்திப்பு, ஆரார் அங்க போறது, எங்க
தங்கிறது, ஆர் பிளைட்டுக்கு ரிக்கெட் போடுறது எண்டுகூட ஒரு
தகவலுமில்லை. இந்தச் சந்திப்பு உண்மையில நடக்குமா இல்லயா
எண்டதே எங்களுக்குத் தெரியாது. நாலுநாளா இதுபற்றி ஒரு
கதையுமில்லை. இருக்கிற விசரில ஆளாளுக்கு இதுபற்றி அறிக்கையும்
வாழ்த்தும் சொல்லிக்கொண்டிருக்கினம். நடக்குமா எண்டே தெரியாத ஒரு
மீற்றிங்குக்கு, நடந்தாலும் ஆரேன் ஒரு பியோனோடதான் நடக்குதோ
தெரியாது – அதுக்கு அளாளுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறியள்.”
என்ற தொனியில் மாவையாரின் விசனம் வெளிப்பட்டது.

அந்நேரத்தில் உலகஅரங்கில் கூட்டமைப்பின் நிலையும் அதுதான். அப்போது
மேற்குலகுக்கு ராஜபக்ஷவுடனான தேனிலவு முழுமையான கசப்பு
நிலையை எட்டியிருக்கவில்லை. கூட்டமைப்புடான சந்திப்பு என்ற
செய்திகூட ராஜபக்ஷவை சற்றே வெருட்டி வைக்கவென பயன்படுத்திய
ஓர் ஆயுதம்தான் என்பது பின்னர் புலப்பட்டது. இழுத்தடித்து நிகழ்த்தப்பட்ட
அந்த முதற்சந்திப்புகூட எந்தவித உருப்படியான சங்கதிகளுமின்றி ஒப்புக்கு
நிகழ்த்தப்பட்டதாகவே அரங்கேறியிருந்தது.

பின்னர் ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்லச் செல்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான முக்கியத்துவத்தை உலகம் உயர்த்தத்
தொடங்கியது. அதாவது சிங்களதேசத்துடன் தமக்கான ஒரு பேரம்பேசும்
சக்தியாக கூட்டமைப்புக்கான தமது முக்கியத்துவத்தை உலகம்
பயன்படுத்தியது. இதுதான் கடந்தகால நிகழ்வு.

இன்றிருக்கும் நிலை என்ன என்பதைப் பார்ப்போமானால் கூட்டமைப்பின்
பலமென்பது உலகஅரங்கில் மட்டுப்படுத்தப்பட்டதுதான். இதற்கு
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ‘எள் என முன்னர் எண்ணெயாக’ நிற்கும்
நெகிழ்ச்சித் தன்மையுடன் நிற்பது முக்கிய காரணம் என்றபோதும்
உலகுக்கு கூட்டமைப்பு தொடர்பான அதிக பயம் கொள்ளத்
தேவையில்லாத நிலையும் மிக முக்கிய காரணம்.

அதாவது என்னதான் கிள்ளுக்கீரையாக நினைத்து விளையாடினாலும் கூட்டமைப்பானது தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையைவிட்டு மாறப்போவதில்லை, கூட்டமைப்பும் எதிர்த்துநின்று வாதாடப்போவதில்லை என்பதே வெளிப்படை உண்மை. சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு
வரவேண்டிய ஒரு நிலையில்தான் கூட்டமைப்பு சர்வதேசநிலையில்
காணப்படுகிறது.

இன்னும் சுருக்கிச் சொன்னால், தாம் என்னதான் செய்தாலும் தமிழ்மக்கள்
தமக்குத்தான் வாக்களித்துத் தீரவேண்டும் என்ற நிலையிருக்கும்வரை

த.தே.கூட்டமைப்பு தான்தோன்றித்தனமாக நடப்பதைப் போலவே,
சர்வதேசமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் நடந்துவருகின்றது.
கூட்டமைப்பான மேற்குலக மற்றும் பிராந்திய அழுத்தங்களுக்குப் பணிந்து
கொள்கையில் தமது நிலையைக் கீழிறக்கியும் வருகின்றது.

இந்நிலையில் த.தே.கூட்டமைப்பின் தொடர்ச்சியான இருப்புக்கு
தாயகத்தில் விடப்படும் சவால் சர்வதேசத் தளத்தில் அதன் பேரம்பேசும்
பலத்தைச் சற்று அதிகரிக்கும். தமிழ்மக்களிடத்தில் த.தே.கூட்டமைப்பைச்
செல்வாக்கோடு வைத்திருக்க வேண்டுமென்றால் உலகம்
த.தே.கூட்டமைப்புக்குச் சார்பாக சில நிலைமைகளைக்
கொண்டுவரவேண்டும். அவ்வகையில் தமிழ்மக்களின் நலன்சார்ந்து
கூட்டமைப்பு விடுக்கும் சில வேண்டுகைகளை சர்வதேசம்
நடைமுறைப்படுத்த எத்தனிக்கும்.

ஏனென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் போன்ற ஓர் அமைப்புத்தான்
தமிழரின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்பது மேற்குலகின்
விருப்பமாக இருக்கும். ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியானது கொள்கையில் பிடிவாதத்துடனும், உயர்ந்தபட்சக்
கோரிக்கையுடனும், மேற்குலகைப் பொறுத்தவரை
கடும்போக்குவாதிகளாகவும் இருக்கின்ற நிலையில், தமிழ்மக்களுக்கான
தலைமைப்பதவி கூட்டமைப்பைவிட்டு நீங்குவதை உலகம்
தெரிவுசெய்யாது. ஆகவே கூட்டமைப்பைத் தொடர்ந்தும் தமிழ்மக்களின்
தலைமையாக வைத்திருக்க ஏதாவது செய்யவேண்டிய நிலைக்கு
சர்வதேசம் தள்ளப்படும்.

இந்நிலை எப்போது உருவாகுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
உண்மையிலேயே சவால் எழும்போதுதான். அதாவது அதற்கான மாற்றணி
ஒன்று மக்கள் செல்வாக்குடன் வளரத் தொடங்குவதும், அந்த வளர்ச்சி
காலப்போக்கில் தலைமைத்தன்மையைக் கூட்டமைப்பிடமிருந்து
பறித்துவிடுக்கூடும் என்ற பயமும் உண்மையில் எழ வேண்டும்.

இந்நிலையில்தான் கூட்டமைப்பானது, ‘நாம் இதைவிடவும் கீழிறங்கிப்
போக முடியாது, அப்படிப் போனால் மக்களின் ஆதரவு மறுபக்கம்
மாறிவிடும். எனவே இந்தநிலைதான் எமது குறைந்தபட்ச நிலையாக
இருக்க முடியும்’ என்று தமது கொள்கைநிலையைத் தக்கவைக்க முடியும்.
அத்தோடு மக்கள் நலன்சார்ந்து பல வேலைத்திட்டங்களை உலகைக்
கொண்டு நடைமுறைப்படுத்தவும் முடியும்.

ஆகவேதான், கூட்டமைப்புக்கான சவால் ஒன்று தாயகத்தில் வலுவாக
எழும்நிலையில் கீழ்வரும் இரு நன்மைகளைக் கூட்டமைப்பும்
அதன்வழியாக தமிழ்ச்சமூகமும் பெறமுடியும்.

1. கூட்டமைப்பானது வழிதவறிப் போகாமல் சரியான வழியில் தம்மை
நெறிப்படுத்திச் செல்லும்
2. சர்வதேச மட்டத்தில் கூட்டமைப்பின் பேரம்பேசும் வல்லமையை
உயர்த்துவதோடு தமது கொள்கை நிலையில் கீழிறங்காது
தமிழ்மக்களுக்கான சில சலுகைகளையும் உலகிடம் பெற்றுக்கொள்ள
முடியும்.

இதில் இரண்டாவது காரணத்தையே இக்கட்டுரை ஆராய்ந்திருக்கிறது.
அதாவது தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான வாக்கு வங்கி
குறைந்து அதற்குரிய மாற்றுத்தளமான தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியின் பலம் அதிகரிக்கும்பட்சத்தில் அது தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பினை சர்வதேச மட்டத்தில் பலமுள்ளதாக்கும். அதாவது
தாயகத்தில் பலவீனப்படுவது சர்வதேசத்தில் கூட்டமைப்பைப்
பலப்படுத்தும் என்ற வாதத்தை வைத்து இக்கட்டுரை
நிறைவடைகின்றது.

அந்த மாற்றுத்தளத்துக்கான பலத்தை் அதிகரிக்க இந்த நாடாளுமன்றத்
தேர்தலில் தாயகம் முழுவதும் கணிசமான வாக்குகள்
த.தே.ம.முன்னணிக்கு விழுவதுடன் ஓரிரு நாடாளுமன்ற
ஆசனங்களையும் அக்கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும். அதைநோக்கி
தமிழர்கள் செயற்படுவது தற்காலத்தில் வரலாற்றுக்கடமையும்கூட.