News Ticker

Menu

தமிழர்களின் இருப்பை பாதுகாத்தல்

இன்றைய நிலையில் தாயக மக்களின் வாழ்வை பாதுகாத்து, அவர்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கான வழிவகைகள் என்ன என்பது பற்றி அலசி ஆராய்வது அவசியமானது என கருதி அது தொடர்பான பார்வையாக விரிகின்றது இப்பத்தி.



அண்மைக்காலங்களில் நடந்துமுடிந்த இலங்கைத் தேர்தல்களில் தமிழர்களின் தெரிவு என்பது சிங்கள தேசத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பதை சிங்கள தேசமும் சர்வதேச உலகமும் கண்டுள்ளது. ஆனால் அவ்வாறான இனப்பிளவை புரிந்துகொண்டு பொருத்தமான தீர்வை முன்வைக்காமல் இழுத்துச்செல்லும் சிங்கள தேசத்துடன் சர்வதேசங்களும் இழுபட்டுச் செல்வதுதான் தமிழர்களை பொறுத்தவரை ஏமாற்றமான விடயமாகவிருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவருக்கான தேர்தல் முடிவடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சிறிலங்கா அரச தலைவர் தனது பதவியை புதுப்பித்துக் கொள்ளவில்லை. சிறிலங்காவில் இருப்பதாக சொல்லப்படும் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அதன் ஆட்சியிலுள்ள அரச தலைவர் எவ்வாறு உதாசீனம் செய்கிறார் என்பதற்கு அவரது பதவி ஏற்பு நிகழ்வு தள்ளிப் போடப்பட்டு வருவது நல்ல உதாரணம்.

எதிர்வரும் நவம்பர் மாதமே பதவியை புதுப்பித்துக்கொள்ளவுள்ளதாக சொல்லும் சிங்கள தேசத்தின் தலைவர், மூன்றாவது முறையாகவும் தான் ஆட்சி ஏறக்கூடிய நம்பிக்கை தனக்கு இருப்பதாக இப்போது தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்று, இன்னும் சில மாதங்கள் கடந்த நிலையில் இப்போதுதான் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளுடன் ஒரு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த பிரதிநிதிகளில் ஒருவரான பத்மநாதன் அவர்கள், சிறிலங்காவின் சதிவலைக்குள் சிக்குப்பட்டு இப்போது கோத்தபாய ராஜபக்ச கீறிய கோட்டுக்குள் சில தந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் ஆகக்குறைந்த பட்ச கோரிக்கைகளையே பரிசீலிக்கமுடியாத சிங்கள அரசு, தமிழீழமே தனது இலட்சியம் என வரித்துக்கொண்ட ஒருவர் ஊடாக வெளிநாடுகளிலுள்ள சிலருடன் தொடர்புகொண்டு சில சந்திப்புக்களை ஏற்படுத்திவருவதும் அதன் ஊடாக சிங்கள தேசம் எதனைச் சாதிக்கமுற்படுகின்றது என்பதை சாதாரண தமிழ் மகனும் புரிந்துகொள்ளமுடியும்.

இவ்வாறான களநிலைமையில் தமிழர் தரப்பு செய்யக்கூடியது என்ன என்பது பற்றி பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தற்போது தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் வடக்கு கிழக்கு இணைந்ததான தமிழர் தேசம் என்ற அலகையோ அல்லது தமிழ் தேசத்திற்கான நேரடி வெளிநாட்டு உதவிக்கான ஏற்பாடுகளையோ சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அதேவேளை அவ்வாறானதோர் அதிகார பகிர்வுக்கு சர்வதேச அரசுகளோ அல்லது அமைப்புக்களோ சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தை பிரயோகித்து தமிழர் தரப்பின் வேண்டுதல்களுக்கான ஆதரவை தமிழர் தரப்புக்கு வெளிப்படையாக இப்போது தரப்போவதில்லை.

இந்நிலையில் பிரிக்கப்பட்ட தமிழர் தேசத்தில், வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்துவதில் முன்னர் ஆர்வம் காட்டிய சிங்கள தேசம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து அதற்கான தேர்தலை தற்போது நடத்துவதில் பின்னடிக்கின்றது.

இவ்வேளையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலையோ அல்லது அவ்வாறானதோர் அரசியல் உரிமை வரும்வரை காத்திராமல் தனித்தனி மாகாணங்களாக இருந்தாலும் அதற்கான தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளாக தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பணியில் தமிழர் தரப்புக்கள் அக்கறை காட்டவேண்டும்.

அவ்வாறான தனித்தனி உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டால் அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்ட தேசத்தை மக்கள் பலத்தால் இணைத்துக்காட்டிய சாதனையை தமிழர்கள் ஏற்படுத்தமுடியும்.

அவ்வாறு இரு அலகுகளாக இருந்தாலும் தமிழர்களின் அழிந்துபோன பொருளாதார வல்லமையை நிலைநிறுத்துவதில் புலத்து தமிழ் சமூகத்துடன் இணைந்து பயணித்தால் பொருண்மிய வல்லமையை வளர்த்துக்கொள்வதுடன் தமிழர்களின் இருப்பையும் தக்கவைக்கமுடியும்.

எப்படியேனும் தமிழர்களை வெளியேற்றி அல்லது சிங்கள குடியேற்றங்களை செய்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து தமிழர்களின் அடையாளத்தை சிதைப்பதற்கே சிங்கள தேசம் முன்னிற்கின்றது.

இதன் ஒருபடியாக தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதாக இருந்தாலும்கூட கோத்தபாயவின் கையெழுத்து பெறப்படவேண்டும் என எழுதப்படாத சட்டத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றார்கள்.

எனவே இவற்றை கவனத்திற்கொண்டு நீண்ட கால அரசியற் தீர்வுக்கான வேலைத்திட்டங்களை ஒரு முனையில் நகர்த்தும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக குறுகிய கால அரசியற் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்களை அனைவரும் முன்னெடுக்கவேண்டும்.

இரண்டு முனையில் தமிழர்களின் வாழ்வதற்கான போராட்டமும் வாழ்வுரிமைக்கான போராட்டமும் நகர்த்தப்படாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழர் தேசத்தின் பலம் சிதைக்கப்பட்டுவிடும்.

இதனை தெளிவாக உணர்ந்து தாயகத்தில் தமிழர் பிரதிநிதிகளாக வலம்வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் ரீதியாக சரியான முடிவுகளை எடுக்கும் அதேவேளை தமிழர்களின் பொருளாதார வல்லமையை வளர்ப்பதற்கான கட்டுமானங்களை உருவாக்குவதற்கான தளத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும். அத்தளத்தை புலம்பெயர்ந்துவாழும் மக்களின் ஆதரவுடன் செயற்படுத்தி தமிழர்களின் வாழ்வுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தவேண்டும்.

- கொக்கூரான் -

Share This:

No Comment to " தமிழர்களின் இருப்பை பாதுகாத்தல் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM