News Ticker

Menu

தாயகத்தேர்தல் களத்தின் தடுமாறிய போக்குகள்

இவ்வாறான சூழலில் இரண்டு துருவங்களாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின் பிரதான தரப்புகளால் எதிர்கால அரசியலில் தமிழர்களின் பங்கு பணி தொடர்பில் எவ்வாறான இணைவு எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது? உண்மையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என சொல்லப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையான உறவுநிலை என்ன? தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதில் உள்ள தடங்கல்கள் எவை? இவை பற்றிய விடயங்களை ஆராய்கிறது இப்பத்தி.



தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக எனவும் அதன் தலைமைகளாக சொல்லப்படுகின்ற இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரனுக்கு எதிரான பரப்புரைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என கொள்கையளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் சொல்லப்பட்டாலும் அவ்வாறான ஒரு கட்டுக்கோப்பை இருதரப்புகளாலும் பேணமுடியாது என்பதே அங்கிருந்து வருகின்ற தகவல்கள் சொல்லும் செய்தியாக இருக்கின்றன.

தற்போதைய தேர்தலை முறையை பொறுத்தவரை தேர்தல் மாவட்டங்களுக்கு என நடத்தப்படும் தேர்தலில் மக்கள் முதலில் எந்த கட்சிக்கு தாம் வாக்களிக்கபோகிறோம் என்பதை கட்டாயம் தெரிவுசெய்தே ஆகவேண்டும். அதன்பின்னரே தாம் வாக்களித்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூவருக்கு தமது விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.

எனவே சம்பந்தன் அவர்களை தோற்கடிக்கவேண்டும் என்றால் அவரது கட்சியில் உள்ள ஏனையோருக்கு விருப்புவாக்குகளை அளித்து சம்பந்தன் மீதான அதிருப்தியை காட்டக்கூடிய சூழல் இருக்கிறது.

ஆனால் அவ்வாறான வாக்களிப்பு முறை பின்பற்றப்பட்டாலும் விருப்புவாக்குகளை பெறும் ஒருவர் தான் நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. கட்சியால் பிரேரிக்கப்படும் வேட்பாளர்களே நியமனம் பெறமுடியும். எனவே சம்பந்தன் அவர்கள் முன்வாசலால் செல்வது தடுக்கப்பட்டாலும் பின்வாசலால் நாடாளுமன்றத்திற்கு சென்றுவிடுவார் என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வாதம்.

அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தோற்கடிக்கவேண்டும் என்றால் அவர்கள் போட்டியிடும் மாவட்டங்களில் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும். அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெற்றி பெறவேண்டும் இதுவே அவர்களது வாதம்.

இவ்வாறான நிலமையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என சொல்லப்பட்டாலும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் 12 வேட்பாளர்களுக்கு எதிராகவும் திருமலையில் போட்டியிடும் 07 வேட்பாளர்களுக்கு எதிராகவும் என்ற நிலையை உருவாக்குகிறது.

இதேவேளை குறித்த மூன்று தலைவர்களும் வன்னி மாவட்ட தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும்போதோ அல்லது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும்போதோ ஏற்படுகின்ற அரசியல் சூழ்நிலையை சிந்தித்துபார்க்கவேண்டும்.

அதனைவிட ஏனைய மாவட்டங்களில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கூட்டமைப்பின் தலைமையை ஏற்றே போட்டியிடுகின்றார்கள். குறித்த பிளவுபற்றி கருத்துக்களை அவர்களிடம் கேட்டால் அது நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி்க்கு சாதகமாக இருக்கபோவதில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய சக்திகளுக்கு இடையான பிளவானது தனியே தனிப்பட்ட மூவருக்கு எதிராக என்று இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கும் எதிரானதாகவே மாறிவிடுகின்றது.

இவ்வாறு தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரிவு அல்லது பிளவு உண்மையிலேயே இரண்டு அணிகளுக்கு இடையிலான மோதலாகவே உருவெடுத்திருக்கிறது.

ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு பின்னர், விடுதலைப்புலிகளின் உயரிய பலம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான அரசியலில் மீண்டும் தமிழர் தரப்புகளே தமக்குள் முட்டிமோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளமை தமிழர்களின் எதிர்கால அரசியலில் எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை இன்னும் சற்றுக்காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேவேளை திருமலையில் கடந்த முறை தேர்தலை போன்று இரண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலைகள் தற்போது இல்லை. தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிளவு ஏற்பட்டிருக்காவிட்டாலும் இரண்டு தமிழர் பிரதிநிதித்துவங்கள் இம்முறை தேர்தலில் கிடைக்கமாட்டாது.

தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து போட்டியிடுவதால் அந்தக் கூட்டணிக்கே அவ்விரு ஆசனங்கள் செல்லலாம் அல்லது சுதந்திர கட்சி அதில் ஒன்றை பங்குபோட்டுக்கொள்ளலாம். இதனை இனவாரியான சனத்தொகை மாற்றங்களையும் கட்சி ரீதியான வாக்குகளை  திருமலையில் அவதானிக்கும் ஒருவர் இலகுவாகவே கூறிவிடமுடியும்.

ஆனால் கிடைக்கக்கூடிய அந்த ஒரேயொரு தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழர் தரப்பால் தக்கவைக்கமுடியுமா என்பது மிகமுக்கியமான கேள்வியாகும். 2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது நடந்ததை போல தமிழர் தரப்புக்கு எந்த ஆசனமும் கிடைக்கமுடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படலாம். இவ்வாறான நிலை தமிழர் வாக்குகள் திருமலையில் பிரிவதால் ஏற்படலாம்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவேண்டும் தான் அதற்காக குரங்கின் கையில் பூமாலையை கொடுக்கக்கூடாது என அண்மையில் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயனானந்த மூர்த்தி கூறியிருந்தார். வரக்கூடிய ஒரு தமிழர் பிரதிநிதித்துவம் வராவிட்டாலும் பரவாயில்லை சம்பந்தருக்கு அது கிடைக்ககூடாது என்பது யதார்த்தத்தை புரிந்துகொண்ட ஜெயானந்தமூர்த்தியின் கருத்தா என்பதை அவரே தெளிவுபடுத்தவேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தலில் சிதறிப்போன பல கட்சிகளின் கலப்பான ஒரு தமிழர் பலத்தைதான் வடக்கு கிழக்கு தாயக பிரதேசத்திலிருந்து சிறிலங்கா அரசு எதிர்பார்க்கிறது. இந்தியா எதிர்பார்க்கிறது. ஏன் சர்வதேச சமுதாயமும் அதையே விரும்பும். பலமான தமிழர் தரப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்துவிட்டால் அவ்வாறான சக்தியை தமது தேவைகளுக்கு பயன்படுத்தமுடியாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் கருதப்பட்டாலும் உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை ஒருவரிடம் இல்லை. தமிழீழ தேசிய தலைவரை தவிர இன்னொருவரை ஒட்டுமொத்த தலைமையாக ஏற்றுக்கொள்ள தமிழீழ மக்கள் தயாராக இல்லை. அதனால்தான் கூட்டுப்பொறுப்பு என்ற அடிப்படையில் ஐந்து தலைவர்களை கொண்டதாக கூட்டமைப்பு இருந்தது. இப்போது அவ்வாறான கூட்டுத்தலைமையையே அகற்றவேண்டும் என்பது எவ்வளவு தூரம் சரியானது என்பதும் நியாயமான கேள்வியே.

இப்போது சிறிலங்காவினதும் இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் தமிழர் தரப்புகள் பிரிந்துவிட்டன. இத்தோடு இவை முடிந்துவிடப்போவதில்லை. தேர்தலுக்கு பின்னரும் இவற்றின் பிரதிபலிப்புக்கள் இருக்கவே செய்யும். அவை தமிழர் தரப்புக்கு ஆறுதல் தரக்கூடியதாக இருக்கப்போவதில்லை என்பதே கசப்பான செய்தியாக இருக்கப்போகின்றது.




- கொக்கூரான்

Share This:

No Comment to " தாயகத்தேர்தல் களத்தின் தடுமாறிய போக்குகள் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM