News Ticker

Menu

மக்கள்பேரவை மாற்றம் தருமா?

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது.

தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன.



இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது.

போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற விடயத்திலும் சரி காணாமல்போனோர் விடயத்திலும் சரி தற்போதைய அரசியல் கைதிகள் விடயத்திலும் சரி கூட்டமைப்புக்கு என ஒரு தனியான கருத்து இல்லை.

இதனாலேயே அண்மையில் யாழ் வந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “நான் இதனை சொல்வதற்கு கவலைப்படுகின்றேன். ஆனால் காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை” என சொன்னபோது தமிழரசுகட்சி தலைவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

இதனைப்போலவே “நவாலித் தேவாலயத்தில் குண்டுகள் போடப்பட்டபோது நான் படைத்தளபதிகளை பார்த்து கத்தினேன்.” என சந்திரிகா தனது பொறுப்புக்கூறல்தனத்தை படைத்தளபதிகளை பார்த்து கைகாட்டினார்.

உடனே சந்திரிகா அம்மையார் அதனை தவறு என்று சொல்லிவிட்டார் அவர் நல்ல பெண்மணி என எமது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே – அந்த படுகொலையை மறந்து அதற்கு பின்னாலிருந்த இனவழிப்பின் நோக்கத்தை மறந்து அதனை பூசிமெழுகும் சந்திரிகாவின் தந்திரத்தை மறந்து - பெருமிதமடைகின்றனர்.

இப்படி கையறுந்த நிலையில் எல்லாமே கைவிட்டுபோகின்ற நிலையில் எதிர்கட்சி தலைவர் என மகுடன் சூட்டிக்கொண்ட வாழ்நாள் சாதனை மனிதர் சம்பந்தராலும் ஒன்றும் சொல்லமுடியாத சாதனையை செய்யவேண்டியிருக்கிறது.

இவ்வாறு தடம்மாறிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செல்நெறியானது பலத்த கேள்விகளை பலத்த விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இதன் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்மக்கள் பேரவையின் உருவாக்கத்தை கண்டுகொள்ளவேண்டும்.

தமிழ்மக்கள் பேரவையானது ஒரு அரசியல் கட்சியாக அன்றி மக்கள் இயக்கமாக ஒரு செயற்பாட்டு இயக்கமாக பரிணமிக்கும் என்றே அறிவிக்கப்பட்டது.

இத்தகைய உருவாக்கம் நல்ல விடயம் தான். ஆனால் இதனை சரியான வகையில் உறுதியான முறையில் உருவாக்கவேண்டியது அவசியமானது.

தொடங்கப்படும்போது ஒரு சிறு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் வளர்ச்சியானது பல்பரிணாமங்களாக முழுமையானதாக மாற்றுவதற்கான அடிப்படைகளை உள்வாங்கவேண்டும்.

அதற்கான களங்கள் திறக்கப்படவேண்டும். விவாதங்கள் விமர்சனங்கள் கேள்விகள் பகிரப்படவேண்டும். தனியே ஒரு குழுவால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செயற்றிட்டங்கள் அன்றி ஒரு பலமான மக்கள் இயக்கம் ஒன்றினால் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டமாக பரிணமிக்கவேண்டும்.

எனவே தமிழ்மக்கள் பேரவை தொடர்பான சில கருத்துக்களை இப்பத்தி முன்வைக்கவிரும்புகின்றது.

தமிழ்மக்கள் பேரவையானது அதன் பெயருக்கு ஏற்றவாறு ஒத்த கருத்துடையோரை இணைக்கும் பேரவையாக உயரிய நோக்கத்தை வெளிப்படுத்தும் அமைப்பாக அமைத்துக் கொள்வதற்கு போதியளவில் அனைவரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவில்லை.

தனியாக தமிழ்ச்சிவில் சமூகம் செய்த பணிகளையும் தனியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி செய்த பணிகளையும் ஒரே கூடைக்குள் கொண்டுவந்தமை போலான தோற்றப்பாட்டை உருவாக்கியமை தமிழ்மக்கள் பேரவையின் ஒரு பலவீனமான நிலையை வெளிக்காட்டுகின்றது.

தமிழ்மக்கள் பேரவையானது ஒரு அரசியல் கட்சியாக அன்றி அழுத்தக்குழுவாக மக்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து உயர்ந்த பட்ச அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான  சிந்தனைமாற்றத்திற்கான மையமாக தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணக்கருத்து உயர்ந்திருக்கிறது.

ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் ஈபிஆர்எல்எப் கட்சித்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அதன் முகங்களாக தெரியப்படுத்தப்படுவது அல்லது காட்சிப்படுத்தப்படுவது பேரவையின் நோக்கங்களை பலப்படுத்தாது.

அத்தோடு தமிழரசுக்கட்சியின் செல்நெறியில் அல்லாமல் அதன் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த திரு. சிற்றம்பலம் அவர்களை அதன் பிரதிநிதியாக காட்டிக்கொண்டமை வலுப்படுத்தக்கூடிய செயற்பாடு அல்ல.

மாற்றாக பேரவையில் மேற்குறிப்பிட்டவர்கள்; இணைந்து நிற்பது அவர்களது நிலைப்பாடுகளை பலப்படுத்தும் என்ற யதார்த்தமே முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். கட்சி சார்பு ஊடகங்களும் மேற்குறித்தவர்களின் கருத்தை பேரவையின் கருத்தாக கொண்டுவருவது பேரவையை பலவீனப்படுத்தவே.

எனவே சீர்செய்யும் அல்லது மீளாய்வு செய்யும் பணியில் பேரவை கவனம் எடுக்கவேண்டும்.

மற்றும் தமிழ்மக்களின் அனைத்து சமூகமட்டங்களையும் பிரதிபலிக்கக்கூடியவாறு பேரவையானது கட்டமைப்பை கொண்டுள்ளதா என்ற வினாவுக்குள் வரவேண்டியிருக்கின்றது.

அரசியல் ரீதியான விடயங்களில் முன்னிலைப்படுத்தப்படவேண்டிய சட்டத்தரணிகளின் பங்கு எப்படியானது அல்லது அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்களின் வகிபாகம் எங்கே? சாதாரண மட்டத்தில் கவனத்தினை கொண்டால் பெண்களின் வகிபாகம் என்ன? வடக்கு கிழக்கில் ஏறக்குறைய ஒரு இலட்சம் விதவைப்பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களையாவது பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பெண்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்களா?

எனவே சமூகமட்டத்தில் கருத்துருவாக்கத்தை விதைக்கக்கூடிய கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் சமூகபிரச்சனைகளை முன்னகர்த்தக்கூடிய பங்காளர்களின் பங்கு முன்னிலைப்படுத்தவேண்டும்.

அடுத்ததாக அரசியல்கட்சியாக அன்றி மக்கள் இயக்கமாக வளர்க்கப்படவேண்டிய பேரவையானது அதற்கான அடிமட்ட செயற்பாட்டாளர்களை கொண்டிருக்கின்றதா? அல்லது மீண்டும் மேசையில் இருந்து கதைக்கின்ற மேல்மட்ட அமைப்பாளர்களை மட்டும்கொண்டிருக்கின்றதா?

அதாவது கீழ்மட்டத்தில் இருந்து வளரவேண்டிய பேரவையானது இப்போது அரசியல் திட்டம் ஒன்றை வரைந்து அதனை கீழ்நோக்கி கொண்டுசெல்லப்போவதாக கூறுகின்றது.

கீழ்மட்டத்தில் செயற்பாட்டுநிலையிலுள்ளவர்களே ஒரு மக்கள் இயக்கத்தின் தாங்குசக்தி. அத்தகைய அடிமட்ட செயற்பாட்டாளர்கள் இன்றிய ஒருமக்கள் இயக்கம் சாத்தியம் தானா?

அப்படியானால் அது கூட்டமைப்பின் அதே தந்திரோபாளத்தையே கையில் எடுத்துக்கொண்டுள்ளது என்று சொல்லலாமா? இதனைத்தான் மோதகமும் கொழுக்கட்டையும் என கூட்டமைப்பையும் பேரவையையும் ஒப்பீடு செய்யப்படுகின்றதா?

கிராமிய மட்டத்தில் சிந்தனைவட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை மேல்நோக்கி செல்லும்போது செறிவானதாக கனதியானதாக உண்மையானதாக வெளிவருமல்லவா?

அடுத்ததாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்போர் ஈழத்தமிழர்களின் சனத்தொகையில் முக்கிய இடத்தை பெறுகின்றனர். அது தற்போது மூன்றிலொரு பங்கினர் என சொல்லப்படுகின்றது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் தாயகமக்களுடன் இரண்டறக்கலந்தவர்களாக அவர்களின் வாழ்வியல் விடயங்களில் கரிசனை கொண்டவர்களாக அதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

ஒப்பீட்டளவில் கடும்போக்கானவர்கள் என சிங்கள அரசுகளாலும் தமிழ் மிதவாத தலைவர்களாலும் சொல்லப்படுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் வகிபாகம் என்ன?

ஈழத்தமிழர் தாயகத்திலே தோற்றம் பெறுகின்ற ஒரு அமைப்பில் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும். அதற்கான வழிவகைகள் என்ன?

இப்படியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை வழிப்படுத்தவேண்டிய தமிழ்மக்கள் பேரவையானது அதன் செயற்பாட்டு அளவில் போதிய மாற்றங்களை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

அத்தகைய மாற்றங்களை செய்யாதபோது அவர்களால்; நிரப்பவேண்டிய அந்த இடைவெளி தொடர்ந்தும் இடைவெளியாக - இன்னொன்றிற்காக காத்திருக்கவேண்டி – வந்துவிடும்.

காத்திருக்கவேண்டுமா?

அரிச்சந்திரன்

Share This:

No Comment to " மக்கள்பேரவை மாற்றம் தருமா? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM