News Ticker

Menu

தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 3

தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும்
மாற்றுத்தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான
வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான
பலத்தை அதிகரிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து கடந்த கட்டுரை
நிறைவு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தைச் சற்று விரிவாகப் பார்ப்பதே
இக்கட்டுரையின் நோக்கம்.




முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக எவ்வாறான
அணுகுமுறையைக் கடந்த காலத்தில் உலகம் கையாண்டது, இப்போது
கையாண்டுகொண்டு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சில
ஆண்டுகளின் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச்
சந்திக்கவென அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால்
பேரழிவின்பின்னர், அதாவது புலிகள் களத்தில் இல்லாமற்செய்யப்பட்ட
பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அதிகாரபூர்வமாக ஒரு மேற்குலக
வல்லரசு சந்திப்பதற்கான அழைப்பாக அது இருந்தது.

அவ்வாறு அழைப்பு விடப்பட்ட செய்தி கசிந்தவுடனேயே தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு இந்தச் சந்தர்ப்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்,
என்னென்ன பேச வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது, என்று
கூட்டமைப்புக்கு அறிவுரையும் ஆசியும் கூறி தமிழ் அமைப்புக்கள்
அறிக்கைகள் விட்டன. அதுவரை ஒருவிதத் துயரக் கடலில் மூழ்கிப்போய்
சலிப்போடிருந்த தமிழ் அரசியல் உலகம் அச்சந்திப்புப் பற்றிய
அறிவித்தலால் திடீரென சலசலப்புக்குள்ளானது.

அந்நேரத்தில் அச்சந்திப்புக்குப் போகவென ஐரோப்பாவில் தங்கியிருந்த
திரு. மாவை சேனாதிராஜாவை தனிப்பட்ட நட்புக் காரணமாக மூத்த
போராளியொருவர் சந்தித்து வாழ்த்துச் சொல்லப் போனார். ஆனால்
மாவையின் வரவேற்பு எதிர்பாராதவிதமாக இருந்தது.

“தம்பி, இதுவொரு விசயமெண்டு நீரும் வெளிக்கிட்டு வாழ்த்துச் சொல்ல
வந்திருக்கிறீர். இதுவரைக்கும் இன்னும் அப்பொய்ண்ட்மென்டே
கிடைக்கேல. முக்கியமான ஒருத்தரும் நேர கதைக்கவுமில்லை.

இதுவரைக்கும் றிசப்ஷனில நிக்கிற ஒருத்தரோட தான் போனில
கதைச்சிருக்கு. எப்ப சந்திப்பு, ஆரோட சந்திப்பு, ஆரார் அங்க போறது, எங்க
தங்கிறது, ஆர் பிளைட்டுக்கு ரிக்கெட் போடுறது எண்டுகூட ஒரு
தகவலுமில்லை. இந்தச் சந்திப்பு உண்மையில நடக்குமா இல்லயா
எண்டதே எங்களுக்குத் தெரியாது. நாலுநாளா இதுபற்றி ஒரு
கதையுமில்லை. இருக்கிற விசரில ஆளாளுக்கு இதுபற்றி அறிக்கையும்
வாழ்த்தும் சொல்லிக்கொண்டிருக்கினம். நடக்குமா எண்டே தெரியாத ஒரு
மீற்றிங்குக்கு, நடந்தாலும் ஆரேன் ஒரு பியோனோடதான் நடக்குதோ
தெரியாது – அதுக்கு அளாளுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறியள்.”
என்ற தொனியில் மாவையாரின் விசனம் வெளிப்பட்டது.

அந்நேரத்தில் உலகஅரங்கில் கூட்டமைப்பின் நிலையும் அதுதான். அப்போது
மேற்குலகுக்கு ராஜபக்ஷவுடனான தேனிலவு முழுமையான கசப்பு
நிலையை எட்டியிருக்கவில்லை. கூட்டமைப்புடான சந்திப்பு என்ற
செய்திகூட ராஜபக்ஷவை சற்றே வெருட்டி வைக்கவென பயன்படுத்திய
ஓர் ஆயுதம்தான் என்பது பின்னர் புலப்பட்டது. இழுத்தடித்து நிகழ்த்தப்பட்ட
அந்த முதற்சந்திப்புகூட எந்தவித உருப்படியான சங்கதிகளுமின்றி ஒப்புக்கு
நிகழ்த்தப்பட்டதாகவே அரங்கேறியிருந்தது.

பின்னர் ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்லச் செல்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான முக்கியத்துவத்தை உலகம் உயர்த்தத்
தொடங்கியது. அதாவது சிங்களதேசத்துடன் தமக்கான ஒரு பேரம்பேசும்
சக்தியாக கூட்டமைப்புக்கான தமது முக்கியத்துவத்தை உலகம்
பயன்படுத்தியது. இதுதான் கடந்தகால நிகழ்வு.

இன்றிருக்கும் நிலை என்ன என்பதைப் பார்ப்போமானால் கூட்டமைப்பின்
பலமென்பது உலகஅரங்கில் மட்டுப்படுத்தப்பட்டதுதான். இதற்கு
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ‘எள் என முன்னர் எண்ணெயாக’ நிற்கும்
நெகிழ்ச்சித் தன்மையுடன் நிற்பது முக்கிய காரணம் என்றபோதும்
உலகுக்கு கூட்டமைப்பு தொடர்பான அதிக பயம் கொள்ளத்
தேவையில்லாத நிலையும் மிக முக்கிய காரணம்.

அதாவது என்னதான் கிள்ளுக்கீரையாக நினைத்து விளையாடினாலும் கூட்டமைப்பானது தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையைவிட்டு மாறப்போவதில்லை, கூட்டமைப்பும் எதிர்த்துநின்று வாதாடப்போவதில்லை என்பதே வெளிப்படை உண்மை. சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு
வரவேண்டிய ஒரு நிலையில்தான் கூட்டமைப்பு சர்வதேசநிலையில்
காணப்படுகிறது.

இன்னும் சுருக்கிச் சொன்னால், தாம் என்னதான் செய்தாலும் தமிழ்மக்கள்
தமக்குத்தான் வாக்களித்துத் தீரவேண்டும் என்ற நிலையிருக்கும்வரை

த.தே.கூட்டமைப்பு தான்தோன்றித்தனமாக நடப்பதைப் போலவே,
சர்வதேசமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் நடந்துவருகின்றது.
கூட்டமைப்பான மேற்குலக மற்றும் பிராந்திய அழுத்தங்களுக்குப் பணிந்து
கொள்கையில் தமது நிலையைக் கீழிறக்கியும் வருகின்றது.

இந்நிலையில் த.தே.கூட்டமைப்பின் தொடர்ச்சியான இருப்புக்கு
தாயகத்தில் விடப்படும் சவால் சர்வதேசத் தளத்தில் அதன் பேரம்பேசும்
பலத்தைச் சற்று அதிகரிக்கும். தமிழ்மக்களிடத்தில் த.தே.கூட்டமைப்பைச்
செல்வாக்கோடு வைத்திருக்க வேண்டுமென்றால் உலகம்
த.தே.கூட்டமைப்புக்குச் சார்பாக சில நிலைமைகளைக்
கொண்டுவரவேண்டும். அவ்வகையில் தமிழ்மக்களின் நலன்சார்ந்து
கூட்டமைப்பு விடுக்கும் சில வேண்டுகைகளை சர்வதேசம்
நடைமுறைப்படுத்த எத்தனிக்கும்.

ஏனென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் போன்ற ஓர் அமைப்புத்தான்
தமிழரின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்பது மேற்குலகின்
விருப்பமாக இருக்கும். ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியானது கொள்கையில் பிடிவாதத்துடனும், உயர்ந்தபட்சக்
கோரிக்கையுடனும், மேற்குலகைப் பொறுத்தவரை
கடும்போக்குவாதிகளாகவும் இருக்கின்ற நிலையில், தமிழ்மக்களுக்கான
தலைமைப்பதவி கூட்டமைப்பைவிட்டு நீங்குவதை உலகம்
தெரிவுசெய்யாது. ஆகவே கூட்டமைப்பைத் தொடர்ந்தும் தமிழ்மக்களின்
தலைமையாக வைத்திருக்க ஏதாவது செய்யவேண்டிய நிலைக்கு
சர்வதேசம் தள்ளப்படும்.

இந்நிலை எப்போது உருவாகுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
உண்மையிலேயே சவால் எழும்போதுதான். அதாவது அதற்கான மாற்றணி
ஒன்று மக்கள் செல்வாக்குடன் வளரத் தொடங்குவதும், அந்த வளர்ச்சி
காலப்போக்கில் தலைமைத்தன்மையைக் கூட்டமைப்பிடமிருந்து
பறித்துவிடுக்கூடும் என்ற பயமும் உண்மையில் எழ வேண்டும்.

இந்நிலையில்தான் கூட்டமைப்பானது, ‘நாம் இதைவிடவும் கீழிறங்கிப்
போக முடியாது, அப்படிப் போனால் மக்களின் ஆதரவு மறுபக்கம்
மாறிவிடும். எனவே இந்தநிலைதான் எமது குறைந்தபட்ச நிலையாக
இருக்க முடியும்’ என்று தமது கொள்கைநிலையைத் தக்கவைக்க முடியும்.
அத்தோடு மக்கள் நலன்சார்ந்து பல வேலைத்திட்டங்களை உலகைக்
கொண்டு நடைமுறைப்படுத்தவும் முடியும்.

ஆகவேதான், கூட்டமைப்புக்கான சவால் ஒன்று தாயகத்தில் வலுவாக
எழும்நிலையில் கீழ்வரும் இரு நன்மைகளைக் கூட்டமைப்பும்
அதன்வழியாக தமிழ்ச்சமூகமும் பெறமுடியும்.

1. கூட்டமைப்பானது வழிதவறிப் போகாமல் சரியான வழியில் தம்மை
நெறிப்படுத்திச் செல்லும்
2. சர்வதேச மட்டத்தில் கூட்டமைப்பின் பேரம்பேசும் வல்லமையை
உயர்த்துவதோடு தமது கொள்கை நிலையில் கீழிறங்காது
தமிழ்மக்களுக்கான சில சலுகைகளையும் உலகிடம் பெற்றுக்கொள்ள
முடியும்.

இதில் இரண்டாவது காரணத்தையே இக்கட்டுரை ஆராய்ந்திருக்கிறது.
அதாவது தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான வாக்கு வங்கி
குறைந்து அதற்குரிய மாற்றுத்தளமான தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியின் பலம் அதிகரிக்கும்பட்சத்தில் அது தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பினை சர்வதேச மட்டத்தில் பலமுள்ளதாக்கும். அதாவது
தாயகத்தில் பலவீனப்படுவது சர்வதேசத்தில் கூட்டமைப்பைப்
பலப்படுத்தும் என்ற வாதத்தை வைத்து இக்கட்டுரை
நிறைவடைகின்றது.

அந்த மாற்றுத்தளத்துக்கான பலத்தை் அதிகரிக்க இந்த நாடாளுமன்றத்
தேர்தலில் தாயகம் முழுவதும் கணிசமான வாக்குகள்
த.தே.ம.முன்னணிக்கு விழுவதுடன் ஓரிரு நாடாளுமன்ற
ஆசனங்களையும் அக்கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும். அதைநோக்கி
தமிழர்கள் செயற்படுவது தற்காலத்தில் வரலாற்றுக்கடமையும்கூட.

Share This:

No Comment to " தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 3 "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM