News Ticker

Menu

சிறிலங்காவின் பொதுத்தேர்தலும் தமிழ் மக்கள் மனநிலையும்

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தலும் அதனை தமிழர் தரப்பு எதிர்கொண்டவிதமும் அதற்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு தொடர்பான விடயங்களை ஆராய்கிறது இப்பத்தி.



இதனை பின்வரும் உப தலைப்புகளில் ஆராய்வது பொருத்தமாகவிருக்கும் என கருதுகின்றோம். 1. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதி 2. தமிழர் தரப்பின் கொள்கையடிப்படையிலான வேறுபாடுகள் 3. மகிந்தவின் மறைமுக அரசியல் திட்டங்கள் 4. தமிழர்களின் தீர்மானம்

தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதி

தாயகத்தில் நடைபெற்ற பேரழிவின் கோரங்கள் ஆறமுன்னரே நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தலும் அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலும் தமிழர்கள் மேல் அவசரமாக திணிக்கப்பட்ட தேர்தலாகவே மக்களால் எதிர்கொள்ளப்பட்டமை ஆச்சரியமானதல்ல.

அழிவின் ரணங்கள் ஆறமுன்னர், ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாத நிலையிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத நிலையிலுமே இந்த இரு தேர்தல்களும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டன.

இவ்வாறான சூழ்நிலையில் தமது அரசியல் உரிமையை பற்றி சிந்திப்பதிலோ அல்லது அதற்கான தேடலிலோ ஈடுபடுவதற்கான மனநிலை இருக்காது. மாறாக இருப்பதை பாதுகாத்து கொள்வோம் என்ற இயலாமையே நிரம்பிநிற்கும்.

தமிழர் தரப்பின் கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகள்

தமிழ் தேசிய அரசியலின் இறுதி நம்பிக்கை மூலமாகவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சிவநாதன் கிசோர், கனகரத்தினம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோர் மகிந்த அரசுடன் இணைந்துகொண்டதும் சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா ஆகியோர் குழப்பியடித்து வெளியேறியமையும் கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வெளியேற்றப்பட்டமையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்கை வேறுபட்டு நின்றமையும் இன்னும் சிலர் ஒதுங்கி கொண்டமையும் தமிழ் தேசிய உணர்வுள்ள மக்கள் மத்தியில் குழப்பநிலையை நிச்சயம் உருவாக்கியே இருக்கும்.

இவ்வாறான பிரிவுகளும் பிளவுகளும் தமிழ் தேசிய உணர்வுள்ள மக்களின் மனதை புண்படுத்தி, தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு இட்டுச்சென்று, தமிழ் மக்களின் ஒரு பகுதி வாக்குகளை மௌனிக்கவைத்துவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது.

மகிந்தவின் மறைமுக அரசியல் திட்டங்கள்

மகிந்தவின் மறைமுக நிகழ்ச்சி நிரலானது தமிழ் மக்களால் முழுமையாக விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன, குள்ளநரி என கருதப்பட்டவர். ஆனால் இப்போது ஆட்சியிலிருக்கின்ற மகிந்த ராஜபக்சவும் அதன் சகோதர பரிவாரங்களும் அதனிலும் மோசமான குள்ளநரிகள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக தமிழர்கள் முழுமையாக அதன் உள்ளார்த்தங்களை புரந்துகொள்ளவேண்டும்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற வரவு செலவுதிட்ட விவாதத்தின்போது நாடாளுமன்ற பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதில் மகிந்த அரசாங்கம் தரப்பில் சிக்கல் நிலை உணரப்பட்டது. அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் சிறிலங்கா அரசாங்கமே கவிழும் நிலை.

எனவே எதிர்கட்சிகளில் உள்ளோரை பணம்கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் மேலதிக சிக்கல் வரலாம் என கருதப்பட்டது. அன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரையும் விலைக்கு வாங்கமுடியாது என்பது மகிந்தவுக்கு நன்றாகத் தெரிந்திருந்துது.

அதனால் இன்னொரு நகர்வை செய்தார்கள். அதாவது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்தி வைத்திருந்து, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்று வரவு செலவுத்திட்டத்தில் வாக்களிக்ககூடாது என கூறப்பட்டது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.

இவ்வாறு நவீன சண்டியர்களாக வலம்வந்த ராஜபக்ச அரச நிர்வாகம், இம்முறை தேர்தலில் நுட்பமான காய்களை நகர்த்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தனியே போட்டியிடுவதாக கூறிய மகிந்த பின்னர் டக்ளசுடன் சமரசம் செய்வது போல காட்டி தங்களது வேட்பாளர்கள் நால்வரையும் டக்ளசின் வேட்பாளர்கள் எண்மரையும் நிறுத்தியது. இங்கு மறைமுகமாக மகிந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆதரவை வழங்கி டக்ளசை கைகழுவிடவும் மகிந்த அரசு தயாராக இருந்தது. அதாவது டக்ளசை எதிர்ப்பவர்களை கவர ஒரு அணியும் தன்னை எதிர்ப்பவர்களை கவர இன்னொரு அணியும் என நிறுத்தப்பட்டது.

அதனைவிட விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட வைத்தியர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது கட்சியின் கீழ் அல்லது தனது கட்சி சார்பான கட்சியில் போட்டியிடவிட்டு தமிழ் தேசிய கட்சிகளுக்கான சில பத்து வாக்குகளை பிரித்துவிடுவதற்கான நகர்வை கச்சிதமாக செய்துள்ளார். இதனால் வாக்குகளை பிரித்தாரோ இல்லையோ மக்களை குழப்பி வாக்களிக்காமல் தடுத்துள்ளார்.

எனினும் தமிழ் தேசியத்தோடு பயணித்த சிலர், விலை போயிருப்பார்கள் என்பதை நிராகரிக்கமுடியாவிட்டாலும் அவ்வாறு மகிந்தவின் கட்சிக்காக வேலை செய்யும் பலர், முறைமுக அழுத்தங்களின் கீழ் செயற்படவைக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்திகளும் தமிழர்களின் ஆன்மாவை உலுப்பிவிடும் உண்மைகளாக இருக்கின்றன. அவற்றின் முழுவிபரங்களும் வெளிவரும்போது அது தமிழர்களின் ஆன்மைாவையே உறையவைக்கும் பயங்கரங்களாகவே இருக்கும் என்பதே இப்போது வெளியில் சொல்லக்கூடிய செய்தியாகும்.

சிறிலங்கா இராணுவத்தின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ராம், எவ்வாறு சிறிலங்கா புலனாய்வுத்துறையால் செயற்படவைக்கப்பட்டார் என்பதை இங்கு இணைத்துபார்ப்பது மேலதிக புரிதல்களை தரக்கூடும்.

அத்தோடு மகிந்தவின் அதிகாரவர்க்கத்தை பொறுத்தவரை தமக்கு வாக்குகளை போடவேண்டும். அவ்வாறு அந்த வாக்குகள் தமக்கு கிடைக்காவிட்டால் அதனை மற்றவர்களுக்கும் கிடைக்காமல் செய்யவேண்டும். இதுவே மகிந்தவின் யுக்தி. இந்த வகையில் அரச படைகளால் அவதானிப்பிற்கு உட்பட்டுள்ள தமிழ் குடும்பங்கள், வாக்களிக்க செல்வது அத்தமிழ் குடும்பங்களுக்கு ஆபத்தானதாகவே முடியும். எனவே மகிந்தவின் மறைமுக கரங்களுக்கு அஞ்சி, பல தமிழ் மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துவிட்டார்கள்.

தமிழர்களின் தீர்மானம்

பெரும்பான்மையான தமிழர்கள் வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டமை தமிழ் தேசிய சக்திகளுக்கு அதிர்ச்சியான செய்திதான். ஆனால் தற்போதைய சிறிலங்கா அரசமைப்பிலோ அதன் ஊடாக கிடைக்கப்பெறும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திலோ அவர்கள் நம்பிக்கை வைக்கமுடியாது என்பதை குறிப்பிட்டளவான தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாதுதான்.

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக தமிழ் மக்களின் ஒரு பகுதியினரின் வாழ்க்கை இருக்கும்போது, பேரழிவின் ரணங்கள் ஆறமுன்னரே திணிக்கப்பட்ட தேர்தலாக இருக்கும்போது, தமிழர்களை வழிப்படுத்த வேண்டியவர்களே தமக்குள் பிளவுகளை சந்தித்தபோது, மகிந்தவின் மறைமுக அழுத்தங்களே தமிழர்களை சூழ்ந்திருக்கும்போது தமிழர்கள் இத்தேர்தலில் என்னத்தை செய்யமுடியும்?

-          கொக்கூரான்

Share This:

No Comment to " சிறிலங்காவின் பொதுத்தேர்தலும் தமிழ் மக்கள் மனநிலையும் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM