News Ticker

Menu

அழிக்கப்படுபவை புலிகளின் சின்னங்களல்ல! தமிழர்களின் சின்னங்கள்!!

ஈழத்தமிழர்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டமானது, சமகால அரசியல் இராணுவ புறநிலைகளை கருத்திற்கொண்டு, மீண்டும் அரசியல் வழியிலான விடுதலைப் போராட்டமாக வீரியமடைகின்ற காலகட்டத்தில் இருக்கின்றது. அரசியல் ரீதியான விடுதலை போராட்டமாக முன்னெடுத்து செல்லவேண்டிய பொறுப்பு தற்போதைய தலைமைகளிடம் உண்டு.

இந்தவேளையில் தமிழர் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பில் சில விடயங்களை ஆராய்வது பொருத்தமானது என கருதி நிகழ்கால அரசியல் திட்டங்களில் தமிழர் தலைமைகளின் செயற்பாடுகளை ஆராய்கிறது இப்பத்தி.

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் செய்வதற்கான கைங்கரியத்தில் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது.

வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற தமிழ்மகன் ஒருவர் கதறியழுதபடி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார்.

உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.

இதேபோன்று வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டதான செய்தி ஒரு ஊடகவியலாளரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

இவற்றின் தொடர்ச்சியாக சிலநாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும்.

இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல. அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் (தமிழர்களின்) அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே இவ்வாறான அழித்தொழிப்புக்கள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரசால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.

போர்க்காலத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் இடம்பெற்றபோதும் அதனை அரசியல் ரீதியாக வெளியுலகிற்கு கொண்டுவந்து நீதி கேட்ககூடிய சூழல் இருக்கவில்லை. அவ்வாறு நீதி கேட்போரின் உயிருக்கு உத்தரவாதமான சூழல் இருந்திருக்கவில்லை. இப்போதும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றபோதும் தமிழ் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை சர்வதேச சமூகத்திற்கும் கொண்டுசெல்லக்கூடிய சர்வதேச புறநிலைகள் உருவாகியுள்ளமை முக்கியமானது.

இப்போது இலங்கைத்தீவில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக கூறிக்கொள்ளும் தலைமைகள் சில விடயங்களில் தமது உறுதியான செயற்பாட்டை காட்டிக்கொள்வதன் மூலமே இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவருவதுடன் இவற்றை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

மூன்று சகாப்தங்களாக தொடர்ந்த ஆயுதபோராட்டம் தற்போது அரசியல் போராட்டமாக மாறியுள்ளநிலையில் ஆயுதபோராட்ட காலத்தில் வித்தாகிப்போன விடுதலை வீரர்களின் அடையாளங்களும் சின்னங்களும் தமிழர்களின் அடையாளங்களே என்பதையும் தமிழர் தலைமைகள் சிந்திக்கவேண்டும்.

தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம் என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஆனந்தசங்கரி அவர்கள் மீது பல்வேறுவிதமான விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இவ்விடயத்தில் முதலாவதாக கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டதை கவனிக்கவேண்டும்.

இங்கு அறிக்கைகள் மட்டும் வெளியிட்டுக்கொண்டிருப்பதால் மட்டும் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. ஆனால் செயலில் காட்டிக்கொண்டிருப்பதற்கு இது இராணுவ ரீதியான விடுதலைப் போராட்டத்திற்கான காலமல்ல. இது அரசியல் ரீதியான போருக்கான காலம். இங்கு அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளியிடாமல் தவிர்த்துக்கொண்டு சப்பைக்கட்டு கட்டமுடியாது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைமையாக செயற்படும் இரா. சம்பந்தன் அவர்கள் தமது செயற்பாடுகள் பற்றிய சுயவிமர்சனங்களை செய்யவேண்டும். தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரின் சாவு நிகழ்வின்போதும் தமிழர்களை எதிர்காலத்தில் வழிநடத்தப்போகும் தலைவராக இரா. சம்பந்தன் அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பதுவும் மிகவும் நெருடலான விடயமாகவே இப்போதும் இருக்கின்றது.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதிலும் கூட 1987இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தனிநாட்டுக்காகப் போராடும் ஒரேயொரு ஆயுதமேந்திய இயக்கமாக பரிணமித்தது என்று கூறியதோடு தன்னை மட்டுப்படுத்திக்கொண்டதையும் மீட்டிப்பார்க்கவேண்டும்.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களது போராட்டம் பற்றியும் அதன் தொடர்ச்சி எவ்வாறு முன்கொண்டு செல்லப்படவேண்டும் என்பதிலான ஒரு முதிர்ச்சி நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமிழீழத்திற்கான விடுதலை போராட்டமானது தனியே தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்படவில்லை. ஏறக்குறைய இருபத்தைந்துக்கு மேற்பட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலை போராட்டமாகும். 1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழீழ தாயக மக்களால் தமிழீழத்திற்கான மக்களாணை வழங்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இவ்விடுதலை போராட்டம் வீரியம் பெற்றிருந்தது.

எனவே அழிக்கப்படுபவை தனியே விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலுமில்லங்களோ அல்லது தனியே விடுதலைப்புலிகளின் அடையாளங்களோ இல்லை. அவை அனைத்தும் தமிழர்களின் பொது அடையாளங்கள் ஆகும். அவை தேசிய அடையாளங்களாக பாதுகாக்கப்படவேண்டும்.

இப்போது அரசியல் ரீதியில் தமிழர்களது விடுதலையை வென்றெடுக்கப்போகும் தலைமைகளும் விடுதலைக்கான போரை அடக்கி வாசித்தும் அது ஏதோ மறைத்து கதைக்கப்படவேண்டிய விடயமாகவும் மாற்றிவிடுவதும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அதனைவிடுத்து தமிழர்களது இன்றைய அரசியல் ரீதியான போராட்டத்தை தலைமைதாங்கி செல்லவேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் சில உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும். அப்போதுதான் செயலில் வீரர்களான ஒரு தலைமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும்.

- கொக்கூரான் -

Share This:

No Comment to " அழிக்கப்படுபவை புலிகளின் சின்னங்களல்ல! தமிழர்களின் சின்னங்கள்!! "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM