அமுதாவின் நினைவு அப்போதுதான் வந்தது சுமதிக்கு.
‘அமுதாவ தெரியுமா? நேஸ். இங்கதான் எங்கயோ ஒரு கொஸ்பிட்ரல்ல வேலை செய்யிறா? முதல் யாழ்ப்பாணத்தில வேலை செய்தவ.’
‘அப்ப எங்கட அமுதாக்காவத்தான் கேக்கிறிங்க போல. உயரம், வெள்ளை, இதில ரெண்டு தெத்திப் பல். வடிவாய் சிரிப்பா. அவவையா கேக்கிறிங்க?’ என்று அந்த போராளிப்பையன் நடித்துக்காட்டிக்கொண்டு கேட்டவிதம் அத்தனை துயரத்துக்குள்ளும் அவளுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.
‘அவளேதான்.’ என்று புன்னகையோடு சொன்னாள். அவள் அப்படிச்சொன்னது அந்தப்பையனுக்கு கொஞ்சம் முகம்கோண வைத்தது. தங்கள் அமுதாக்காவை இவ என்ன அவள் இவள் என்கிறாள் என்ற கேள்விப்பார்வையுடன் கேட்டான்.
‘அமுதாக்கா உங்களுக்குச் சொந்தமா?’
‘ஜஸ்ற் ஃப்ரண்ட். யாழ்ப்பாணத்தில ஒண்டாத்தான் வேலை செய்தம். அமுதா எங்க இருக்கிறாள்? என்னைய அவளிட்ட கொண்டேய் விட்டாலே போதும்.’ என்று படபடத்தாள் சுமதி.
தண்ணீருக்குள் மூச்சுத்திணறியபடி அமிழ்ந்துகொண்டிருந்தவளின் கையில் இரும்புத்தூணொன்றே அகப்பட்டுவிட்ட தைரியம் வந்தது அவளுக்கு.
‘அமுதா எங்க இருக்கிறா எண்டு சொல்லுங்க ப்ளீஸ். நான் இப்பவே அவளிட்ட போறன்’ என்றபடி எழுந்து பையைத்தூக்கி தோளில் மாட்டிக்கொண்டாள்.
‘எங்கட அமுதாக்கான்ர வீடு ஒண்டும் ராசண்ணை வீட்டுக்கு பக்கத்துவீடில்லை. அவ புதுக்குடியிருப்பில நிக்கிறா? நீங்க கிளிநொச்சியில நிக்கிறிங்க. இனி நாளைக்குத்தான் நீங்க பஸ்ல ஏறணும். ப்ரண்ட் என்றிங்க. அவட சொந்த இடமே சரியா சொல்ல தெரியேல்ல.’ என்று குசுகுசுத்தபடி நிறுத்தினான் அந்த போராளிப்பையன்.
‘அண்ண பனர் காய்ஞ்சிட்டுதா? நான் போகணும்’ என்றான் தன் குறும்புச்சிரிப்பை அதக்கிக்கொண்டு. ஓவியர் அதை மடிக்கமுன் சுமதி படித்தாள். ‘நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள்’ என்று கொட்டை எழுத்தில் வாசகம்.
அந்தப்பையன் மடிக்கப்பட்ட அதை வாங்கி தன் நெஞ்சுக்கோல்சருக்குள் திணித்துக்கொண்டு தன் துப்பாக்கியை தூக்கி தோளில் மாட்டினான்.
‘போட்டு வாறனண்ண’ என்றுவிட்டு அவளைப்பார்த்து புன்னகைத்தான். சுமதிக்கு ஏனோ எரிச்சல் வந்தது. அவள் தவிக்கின்ற தவிப்பை கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாமல் எவ்வளவு ஏகத்தாளமாய் பேசுகிறான், நாளைக்கு பஸ்லதான் நீங்க ஏறணும் எண்டு. இந்த இரவை அவள் என்னவென்று கழிப்பாள்?
‘உடன போகணுமா அக்கா?’ என்று கேட்டான். அட இன்னமும் அவன் சென்றுவிடவில்லையா என்று நிமிர்ந்தாள்.
‘அவவுக்கு இங்கால தெரிஞ்சாக்கள் வேற ஒருதரும் இல்லப்போலடா. பெரியம்மாவீட்ட அனுப்பிவிடுரன். நீ எதுக்கும் அறிவிச்சு விடுறியா?’ என்றார் ஓவியர்.
சற்று யோசித்துவிட்டுச் சொன்னான்,
‘ம் மருத்துவப்பிரிவுக் காரரிட்டச் சொல்லிவிடட்டோ?’
‘என்னெண்டு சொல்லுவாய்?’
‘இப்பிடி இன்னுமொரு நேஸ் இயக்கத்துக்கு வந்திருக்கிறா. இன்ன இடத்தில நிக்கிறா. வந்து கூட்டிக்கொண்டு போங்கோ எண்டுதான்.’
சுமதி பல்லைக் கடித்துக்கொண்டு அவனை முழுசிப்பார்த்தாள். பின்பு எதற்கு வீண் வம்பு என்று தலையைக் குனிந்துகொண்டாள். அவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
‘அதுவரை குசினிக்குள் அலுவல் பார்த்துக்கொண்டு நின்ற பெரியம்மா வந்தார்.
‘வாம்மா போவம்.’ என்ற அம்மாவை பின்தொடர்ந்தாள் சுமதி. அந்த ஓவியரிடம்கூட போய்வாறன் என்று சொல்லமறந்தவளாய் நடந்தாள். அவளது மனமோ பலவாறான சிந்தனைகளில் சுழன்றது. தனக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது என்பதை தெரிந்திருந்தும் அவன் தன்னை மறைத்து என்னை ஏமாற்றிவிட்டான் என்று குமுறினாள். அழுகையும் ஆத்திரமும் கண்களில் வழிய அந்த அம்மாவுக்குத் தெரியாதவாறு கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
அந்தப் பெரியம்மாவின் வீடு அருகில்தான் இருந்தது.
‘சீலன் கட்டாயம் அறிவிப்பான். யாராவது பிள்ளைகள் உன்னய கூட்டிக்கொண்டுபோக வருவாங்க.’ என்று ஆறுதல் வார்த்தைசொன்ன அந்தத் தாயாரின் வீட்டை கண்களால் அளந்தாள் சுமதி.
சுவர் முழுவதிலும் சட்டமிடப்பட்ட படங்கள்தான் தொங்கின. எல்லாவற்றிலும் யாரோ ஒரு அழகான பையன் துப்பாக்கியோடு சிரித்துக்கொண்டிருந்தான். அவனில் பெரியம்மாவின் சாயலடித்தது. படங்களைப் பார்த்துவிட்டு பெரியம்மாவைப் பார்த்தாள் சுமதி.
‘என்ர பெடியள்தான். மூத்தவனும் கடைசியும்.’
அதன்பின்புதான் உற்றுப்பார்த்தாள். இருவரும் ஒரே சாயலில் இருந்தாலும் பெயர்கள் வெவ்வேறே.
‘எத்தின பிள்ளைகளம்மா உங்களுக்கு?’
‘இவைய ரெண்டுபேருந்தான். அப்பாவை இந்தியன் ஆமி சுட்டாங்கள். இவையளயும் வில குடுத்திட்டன்.’ என்றுவிட்டு பெருமூச்சு விட்டார் அந்தத்தாயார். சுமதி அருண்டு போனாள். இரண்டே இரண்டு குழந்தைகளைப்பெற்று, அவர்களை ஆண்சிங்கங்களாய் ஆளாக்கி, தாரை வார்த்துவிட்டுத் தனிமரமாய் நிக்கிறாரே. அவளுக்கு நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
‘என்னம்மா செய்யிறது? அவங்கள் நாட்டை நேசிச்சாங்கள். சனத்துக்காக எண்டு போனவங்கள். போயிட்டாங்கள்.’
‘பெரியம்மா’ என்றழைக்கும் குரல் வீதியில் கேட்டதும் அந்தப் பெரியம்மாவின் வதனத்தில் புன்னகை ‘பாத்தியாம்மா நான் சொன்னன். உன்னை கூட்டிக்கொண்டு போக ஆள் வந்திட்டுது.’ என்றபடி வாசலுக்கு விரைந்தார் பெரியம்மா.
இரவு எட்டு ஒன்பது மணிக்குப்பிறகு ஒற்றைப்பெண்ணாய் உள்ளே வந்தவள் சிரித்துக்கொண்டு கேட்டாள்,
‘அமுதாக்காட்ட கூட்டிக்கொண்டு போகணுமா?’
சுமதிக்கு எல்லாம் அதிர்ச்சியாகவும் விசித்திரமாகவும்தான் இருந்தது. வன்னி புலிகளின் குகை என்று முன்பே அறிந்திருந்தாலும் அதைப்பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொண்டதில்லை. ஆனால் இந்த நேரத்தில் தன்னந்தனியே பெண்ணொருத்தி வந்து நிற்கிறாளே. ஆறுமணிக்குள் அடங்கிவிடும் யாழ்ப்பாண வாழ்க்கைக்கும் இந்தப்பெண்ணுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதுதான் என்றது சுமதியின் உள்மனது.
பெரியம்மா அவித்த இடியப்பமும் பொரித்த முட்டையும் சொதியுமாக தட்டுக்களை நீட்டினார்.
‘ரெண்டுபேரும் சாப்பிட்டுட்டு வெளிக்கிடுங்க.’
வந்த பெண் எந்த மறுப்பும் இல்லாமல் தண்ணீர்ச் செம்புடன் வாசலுக்குப்போய் கைகழுவிவிட்டு வந்தாள். சுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுக்கவும் தயக்கமாக இருந்தது. மெதுவாக எழுந்துசென்று தானும் கையழம்பிவிட்டு வந்தமர்ந்தாள்.
‘உங்களுக்கு என்ன பேரக்கா?’ என்று இயல்பாகக்கேட்ட அந்தப் போராளிப்பெண் உண்ணத்தொடங்கினாள். ‘சுமதி’ என்றுவிட்டு தானும் உணவுத்தட்டை எடுத்துக்கொண்டாள். பசித்த பிள்ளை பால் குடிக்கும் என்பதைப்போல அவளும் மளமளவென உண்டுமுடித்தாள்.
‘இன்னும் ரெண்டு வைக்கிறன்’ என்று பெரியம்மா கொண்டு வர,
‘இல்லையம்மா உங்களுக்கு….?’ என்று இழுத்தாள் சுமதி.
‘பெரியம்மா வீட்டில எப்பவும் அஞ்சாறு பேருக்கான சாப்பாடு இருக்குமக்கா. நீங்க தாராளமாச் சாப்பிடுங்க’ என்று அந்தப்போராளி சொன்னாள். தயக்கத்தோடு அதையும் உண்டுமுடித்து கைகழுவியபோது சுமதிக்கு ஏனோ பெரியம்மாவை பிடித்திருந்தது. தன் பிள்ளைகளை ஊருக்காகக் கொடுத்துவிட்டு தன் பிள்ளைகளைப்போல் ஊர்ப்பிள்ளைகளை உபசரிக்கிறாரே. என்றாலும் இந்த அம்மா ஒரு மக்கு. கொடுப்பதுதான். அதற்காக இப்படியா? அநியாயத்திற்குத் தன் பிள்ளைகளை இழந்துவிட்டாரே.
‘போவமாக்கா?’ என்ற போராளியின் அழைப்புக்கு கட்டுண்டவளைப்போல தலையை ஆட்டிக்கொண்டு பையையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டாள்.
‘அம்மா போட்டு வாறன்’ என்று சொன்ன சுமதியை அந்தத்தாய் கன்னத்தில் தடவி ‘நல்லா இரம்மா’ என்று விடை பகர்ந்தார்.
சுமதிக்கு இதுகூட அதிர்ச்சிதான். முன்பின் அறியாத ஒரு பெண்பிள்ளை தட்டத்தனியே, ஊரைவிட்டு, ஒருவனைத்தேடி வந்திருக்கிறாள் என்றால் அவளை எப்படியெல்லாமோ அசிங்கமாய் பேசுவார்களே என்று உள்ளுக்குள் அஞ்சிக்கொண்டிருக்க, உபசரித்து உணவளித்து அனுப்புகிறாளே இந்தத்தாய். இவர்களுக்குக் கெட்ட எண்ணங்களே வராதுபோலும். தன் ஊரிலென்றால் எப்படியெல்லாம் அசிங்கமாய் பேசிவிடுவார்கள்? பெற்றதாயே பேசவில்லையா?
அந்தப்போராளி வேகமாய் ஏறிக்குந்தி தன் கொண்டா மோட்டார் சைக்கிளை உயிரூட்டினாள்.
‘ஏறுங்கோ அக்கா.’ என்றுவிட்டு ‘பெரியம்மா நான் பிறகு வாறன்’ என்றாள்.
சொன்னால் வெட்கம்தான். சுமதி அன்றுதான் இந்தப்பெரிய மோட்டார் சைக்கிளில் முதன்முறையாக ஏறப்போகிறாள். பெரிய அந்தரப்பட்டு ஏறப்போன சுமதியின் கையிலிருந்த பையை பெரியம்மாதான் வாங்கிக்கொண்டு அவளை இருக்கைக்கு ஏறச்செய்து மடியில் வைத்து உதவினார். அவர்கள் புறப்பட்டபோது சுமதியின் கண்கள் கலங்கியிருந்தன.
ஒரு பெண், தன்னைவிட இளையவள், எவ்வளவு சுறுசுறுப்பாகவும் இயல்பாகவும் இருக்கிறாள்? முன்பின் அறியாத எனக்கு இவ்வளவுதூரம் முன்வந்து உதவுகிறாளே. முன்பின்னறியாத இவளுடன் தான்கூட எப்படி துணிந்து வருகிறாள்? ஐயையோ இவள் இயக்கம் ஆயிற்றே. இப்படியே நேரே கூட்டிச்சென்று தன்னை கட்டாயப்படுத்தி பயிற்சி….தலைமுடி வெட்டி….. கடவுளே என்று வாய்விட்டு பதறிவிட்டாள் சுமதி.
‘என்னக்கா?’ என்றாள் அந்தப்போராளி மோட்டார் சைக்கிளின் வேகத்தை சற்று தளர்த்தியபடி.
‘ஒ.. ஒண்டுமில்ல… நாங்க… நாங்க இப்ப எங்க போறம்?’ என்று தடுமாறினாள்.
‘புதுக்குடியிருப்புக்குத்தான்’ என்று பதிலளித்தாள் கவிமதி.
‘எதுக்காக?’ என்று பிதற்றினாள் சுமதி.
;என்னக்கா நடந்தது? அமுதாக்காவச் சந்திக்கத்தானே வந்தநீங்கள்?’
‘ம்.. ஓ… அமுதாட்டத்தானே போறம் அக்…கா… தங்கச்சி….’ என்று தடுமாறினாள் சுமதி. அந்தப்போராளி சிரித்தாள்.
‘அவாட்டக் கூட்டிக்கொண்டுபோய் விட்டிட்டு வரச்சொல்லித்தான் பொறுப்பாளர் அனுப்பிவிட்டா. ஏன் நீங்க அங்க போகேல்லையா?’
‘இல்ல இல்… ஓ… நான் அங்க அமுதாட்டத்தான் போகணும்.’
‘எனக்குப்பேர் கவிமதி. கவி எண்டே நீங்களும் கூப்பிடலாம். நீங்கள் நிறைய குளம்பிப்போய் இருக்கிறிங்கள் எண்டு நினைக்கிறன். அமுதாக்காட்டப் போனப்பிறகு நீங்க கவலையே படத்தேவையில்ல. அதுவரைக்கும் யோசிக்காமல் வாங்க அக்கா’ என்றவள் வீதியில் கவனமெடுத்து வேகமெடுத்தாள். சுமதி தன்னை அறியாமல் கவிமதியின் தோளை பற்றிக்கொண்டாள்.
- ஆநதி








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















