பழங்களால் நமக்குக் கிடைக்கும் பயன்களைப்பற்றித் தொடர்ந்து இந்தப் பகுதியில் நாம் கண்டு வருகிறோம். இக்கட்டுரையில் நெல்லிக்கனி மற்றும் எலுமிச்சை போன்ற எளிதாகக் கிடைக்கும், ஆனால் அதிகப் பலன் தருகின்ற கனிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
நெல்லிக்கனி எனும் அமுதம்: அதியமானைப் பற்றிப் புகழுகையில் முதலில் சொல்வது 'அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்தவன்' என்றுதான். மலையில் விளைந்த கரு நெல்லிக்கனியானது வாழ்நாளை நீட்டிக்கச் செய்யுமென்று அறிந்ததும், அதைத் தான் உண்ணாது தமிழ் மூதாட்டிக்குக் கொடுத்தான் அதியமான். மலை நெல்லியளவிற்கு இல்லாவிட்டாலும், நமக்குச் சர்வ சாதாரணமாக கடைத்தெருவில் கிடைக்கும் நெல்லிக்கனி (காய் கூடத்தான்) பற்பல அதிசய மருத்துவக்குணங்களை உடையது.
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவத்தில் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாகத் திகழுகின்ற நெல்லிக்கனியில் ஆரஞ்சில் உள்ளதை விட இருபது மடங்கு அதிகமான அளவில் விட்டமின் சி காணப்படுகிறது. நெல்லியின் சிறப்பம்சம் என்னவெனில், மற்ற பழங்கள் காய்கறிகளில் உள்ள விட்டமின்கள் சமைப்பதால், நறுக்குவதால் குறைவதை அல்லது அழிவதைப்போல் இதில் அழிவதில்லை. நீங்கள் பச்சையாகச் சாப்பிட்டாலும், சமைத்துச் சாப்பிட்டாலும் உங்களுக்குக் கிடைக்கும் விட்டமின்கள் அதே அளவில்தான் உள்ளன.
அதேபோல், நெல்லிமரம் எந்தவிதமான தட்பவெப்பத்திலும் வளரக்கூடியது. அதிகபட்சமாக நாற்பத்தைந்து டிகிரி செல்சியஸ் முதல், உறைநிலை வெப்பம் வரை அனைத்து வெப்பநிலையிலும் இம்மரம் தாக்குப் பிடிக்கும்.
இக்கனியில் அறுசுவையில் நான்கு சுவைகளை (காரம் மற்றும் உப்பைத்தவிர) உணரலாம். புளிப்பு, லேசான இனிப்பு, துவர்ப்பு, கொஞ்சம்கசப்பு என எல்லாம் சேர்ந்த கலவை இதன் சுவை. இக்கனியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் நீர்ச்சத்தும், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், புரோட்டின்கள், கரோடின்கள், அபரிமிதமான விட்டமின் சி, கலவையான விட்டமின் பி, காலிக் அமிலம் என்று பலப்பல தாதுப்பொருட்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. சரகர், சுஸ்ருதர் என்ற பண்டைய ஆயுர்வேத மருத்துவ ஞானிகள் தமது நூல்களில் நெல்லிக்கனியைப் பற்றிய பல குறிப்புகளையும், பலவித நோய்களையும் போக்க நெல்லி எப்படிப் பயன்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளனர்.
நெல்லியின் பயன்கள்: நமது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தானது, இரத்தக் குழாய்களில் படிகின்றபொழுது அது மாரடைப்பு ஏற்படக்காரணமாகி விடுகிறது. ஆனால், நெல்லிக்கனியில் உள்ள விட்டமின் சி, இக்கொழுப்புச் சத்தைக் கரைப்பதன் மூலம், இரத்தக் குழாய்களில் அது படிவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக, நெல்லியானது, மாரடைப்பைப் பெருமளவு கட்டுப்படுத்துகிறது.
சிறிதளவு காய்ந்த நெல்லிக்காய்ப் பொடியை, சர்க்கரையும் நீரும் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைச் சீராக வைக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. இது மூளை நன்கு செயல்படவும், புத்துணர்வு பெறவும் உதவுகிறது. சுவாசக்கருவிகள் நன்கு செயல்படவும், நுரையீரல்கள் மற்றும் ஈரல்கள் சிறப்பாகப் பணிபுரியவும் இதில் உள்ள கனிமங்கள் உதவுகின்றன. சிறுநீர்ப்பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்கவும், உணவை நன்முறையில் உடலானது உறிஞ்சிக்கொள்ளவும் நெல்லி உதவுகிறது.
காய்ந்த நெல்லிக்காய்ப்பொடி, பாகற்காய்ப்பொடி மற்றும் நாவல்பழத்தை, தினமும் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் நீங்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (குளுக்கோஸ்) அளவானது சீர்படுத்தப்படும். தேனில் கலந்து நெல்லிக்காய்ப்பொடியைச் சாப்பிட்டுவர, கண்பார்வை மேம்படும். பற்கள், நகங்கள் இவை வலுவாகின்றன. இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன.
இன்றைய உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளும் குடலில் அதிக அமிலச் சுரப்பை உண்டாக்குகிறது. குடல் அழற்சி ஏற்படுகிறது. வயிற்றில் எரிவது போல் ஒரு உணர்ச்சி உண்டாகும்பொழுது, நெல்லிக்காய்ப்பொடியை, ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் சேர்த்துப் பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கக் காணலாம்.
அழகிய கூந்தல் பெறவும் உதவுகிறது நெல்லிக்கனி. நெல்லிக்காயை நீரில் ஊறவைத்துத் தொடர்ந்து தேய்த்துக்குளித்துவர, உடல் சூடும், முடி உதிர்தலும் குறையும். நெல்லிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு, ஒரு இரும்புப் பாத்திரத்தில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து, பின் தலையில் தேய்த்து சில மணி நேரம் ஊறிக்குளித்தால், நரைமுடி கருமையாகும். கூந்தல் பொலிவுபெறும்.
நெல்லிக்காய் முதிய தோற்றத்தைத் தரும் 'லிபிட்'கள் அதிகம் உற்பத்தியாகாமல் காக்கிறது. நெல்லிக்காயை பச்சையாகவோ காயவைத்தோ தொடர்ந்து சாப்பிட்டுவர, முதுமையான தோற்றம் தவிர்க்கப்பட்டு, இளமைப்பொலிவு உண்டாகும். வாழ்நாள் நீடிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது பண்டைத் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை அறிந்திருந்ததை 'அவ்வை அதியமான்' கதை உணர்த்துகிறதே!
எலுமிச்சை மகிமைகள்: ஏராளமாக 'விட்டமின் சி' யையும், விட்டமின் 'பி' யின் வகைகளான 'தையமின்', 'ரிபோபிளேவின்' இவற்றையும், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவற்றையும் தன்னுள் கொண்டது எலுமிச்சை. இது இயற்கையான நோய்த்தடுப்பானாக விளங்குகிறது. காயங்களில் உள்ள பாக்டீரியாவை அழிக்கவும், நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் உதவுகிறது.
முகப்பரு, அக்கி முதலியவை, எலுமிச்சைச் சாற்றைத் தடவுவதன் மூலம் நீங்குகின்றன. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் சுருக்கங்களை நீக்கவும் எலுமிச்சைச் சாறு உதவுகிறது. தினமும் எலுமிச்சையைச் சாறு பிழிந்து முகத்தில் தடவிக் காய்ந்ததும் குளிர் நீரால் அலம்பிவர, சில நாட்களிலேயே, முகம் பளிச்சிடுவதைக் காணலாம். எலுமிச்சைச் சாற்றில் உப்பு சேர்த்துப் பல் துலக்கிவர, பற்கள் வெண்மை பெறுவதுடன், பல்வலி, ஈறுகளில் இரத்தம் வருதல் முதலியவை கட்டுப்படுத்தப் படுகின்றன. எலுமிச்சைச் சாற்றினை முடியில் தடவி ஊறிக்குளித்துவந்தால், முடி கருமையும் பளபளப்பும் அடர்த்தியும் பெறுகிறது.
எலுமிச்சையானது, எலும்புத்தேய்வு, நீரிழிவுநோய் இவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதில் அதிக அளவு காணப்படும் விட்டமின் 'சி' யானது, சளி இருமல் தொல்லைகளில் இருந்து விடுபடவும், ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தவும் உதவி செய்கிறது. ஈரலை வலுவூட்டும் மருந்தாகவும் எலுமிச்சைச் சாறு பயன்படுகிறது.
இன்னும் பற்பல பழங்களின் பயன்பாட்டை, தொடரும் கட்டுரைகளில் காணலாம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















