ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தவர்கள் பலருக்கும் ஏமாற்றம்.
இன்னமும் மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடியவில்லை.
ஆனாலும் இனிமேல் இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பில்லை என்றே பலரும் கணித்துள்ளனர்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழு அறிக்கையை அனுப்பி விட்டாரே, இனி எதற்குப் பொறுக்க வேண்டும்? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.
மொத்தத்தில் தமிழர்கள் பலரிடமும் இந்த விடயத்தில் ஒரு நம்பிக்கையீனம் இன்னும் இழையோடிக் கொண்டிருக்கிறது.
எங்கே சர்வதேச சமூகம் எம்மைக் கைவிட்டு விடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டிருக்கிறது.
2009 மே மாதம் சர்வதேச சமூகம் வந்து காப்பாற்றும் என்று நம்பியிருந்தவர்களுக்கு, இப்போதைய நகர்வுகளில் நம்பிக்கை ஏற்பட்டிருக்க நியாயமில்லை.
ஆனால் இப்போதைய சூழலில் முக்கியதொரு விடயம் குறித்த தெளிவுக்கு வர வேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியுடன் இருக்கிறதா, அல்லது அவர்களுக்கு வேறேதும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதற்கு முதலில் விடை தேட வேண்டும்.
இந்தக் கேள்விக்கான விடையில் தான் சர்வதேச சமூகம் குறித்த எமது எதிர்பார்ப்புகள் மிகையானவையா என்ற தீர்மானம் ஒன்றுக்கு வர முடியும்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை என்ற விடயத்தில் நான்கு விதமான நிலைப்பாடுகள் சர்வதேச சமூகத்திடம் உள்ளன.
முதலாவது - நம்பகமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர், ஐ.நா நிபுணர் குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனிதஉரிமை அமைப்புகள் இதனையே வலியுறுத்துகின்றன.
இந்தக் கோரிக்கைக்கு நாடுகள் என்றளவில் இன்னமும் ஆதரவு இல்லை என்றே கூறலாம்.
இரண்டாவது- நம்பகமான, உள்ளக விசாரணைகளை சிறிலங்கா நடத்தத் தவறினால், சர்வதேச விசாரணை அவசியம் என்ற நிலைப்பாடு.
இது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் நிலைப்பாடாக உள்ளது.
பெரும்பாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்த பின்னர் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குப் பின்னர் தான் இந்த நிலைப்பாட்டில் உள்ள நாடுகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன என்று தெரிய வரும்.
இந்த நாடுகளைப் பொறுத்தவரையில் நம்பகமான விசாரணையை வலியுறுத்துகின்றனவே தவிர, சிறிலங்காவை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ கிடையாது.
மூன்றாவது - நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரை பொறுத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு.
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன.
உலகம் முழுவதும் ஓடித்திரிந்து அழுது கண்ணீர் வடித்து, சிறிலங்கா அரசு இந்த நிலைப்பாட்டுக்கு சில நாடுகளை இணங்க வைத்துள்ளது.
இது தவிர நான்காவது தரப்பு ஒன்று உள்ளது.
சிறிலங்கா போர்க்குற்றம் எதையும் செய்யவில்லை, எதுவானாலும் அதுவே பார்த்துக் கொள்ளட்டும், வெளியார் தலையிடக் கூடாது என்று கூறும் தரப்பே அது.
சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் அதற்குள் அடக்கம்.
போரில் மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை உலகில் எல்லா நாடுகளும் அறிந்தேயுள்ளன.
சிறிலங்கா அரசை நியாயப்படுத்தும் நாடுகளுக்குக் கூட அது நன்றாகத் தெரிந்திருக்கும்.
ஆனால் சிறிலங்கா விடயத்தில் அந்த நாடுகள் ஏதாவதொரு அரசியல் நிலைப்பாட்டுக்குள் நின்று கொண்டு முடிவுகளை எடுத்துள்ளன.
இப்போது ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மனிதஉரிமைகள் பேரவைக்கு வந்து விட்டாலும், அதை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள எந்தத் தரப்பும் தயாராக இல்லை.
அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
ஏற்கனவே மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் விவாதத்துக்கு வந்தபோது அது தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்தமுறை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரப்பட்டு தீர்மானத்தைக் கொண்டு வந்து விட்டு, பின்னர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ள எந்தவொரு நாடும் தயாராக இல்லை.
இந்தநிலையில் அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்க்கிறது.
அதை வைத்துக் கொண்டே, அதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, முதலாவது வகைக்குள் நுழைய முனைகிறது அமெரிக்கா.
அதேபோல உரிய விசாரணைகள் நடத்துவதற்கு சிறிலங்காவுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள டிசம்பர் வரையிலான காலக்கெடுவுக்குள் எதுவும் நடக்காது போனால், அதுவும் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் அணியுடன் இணையும்.
அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து கொண்டால், மேற்குலகம் அந்த வழியைப் பின்பற்றும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைக் காரணம் காட்டி சிறிலங்கா தப்பித்துக் கொள்வதற்கு மேற்குலகம் அனுமதிக்காது.
எனவே உடனடியாக இந்த விவகாரத்துக்கு அமெரிக்காகவோ மேற்குலகமோ முடிவு கட்ட வாய்ப்பில்லை.
மெல்ல மெல்ல இறுக்கிக் கொள்வதும் பின்னர் விட்டுப் பிடித்துக் கொள்வதுமாக ஒரு இழுபறி ஆட்டம் தான் நடக்கும்.
இதற்கிடையே சிறிலங்கா அரசை அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு இணங்க வைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.
இதற்கும் இந்த போர்க்குற்ற விசாரணையைத் தான் அமெரிக்கா ஆயுதமாக வைத்துள்ளது.
இப்போதைய நிலையில் அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டவே சிறிலங்கா முனைகிறது.
ஆனால் சிறிலங்காவை எப்படியெல்லாம் மடக்கலாம் என்று கணக்குப் போடுகிறது அமெரிக்கா.
மறைமுகமாக இருதரப்பு ஒரு இராஜத்திரப் போரையே நடத்திக் கொண்டிருக்கின்றன. இது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல.
இந்த இழுபறிகளினால் தான் இம்முறை மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா பற்றிய விவாதம் வரவில்லை.
இந்தக் கூட்டத் தொடர் முடிவதற்குள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.
ஆனால் அதற்காக ஐ.நாவோ மனிதஉரிமைகள் பேரவையோ போர்க்குற்ற விசாரணைகளை மறந்து போய் விட்டதாகவோ, சிறிலங்கா பக்கம் சாய்ந்து விட்டதாகவோ கணக்குப் போட்டு விட முடியாது.
ஏனென்றால் இது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடொன்றின் விவகாரம்.
இதற்குள் சீனா, இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகள் மட்டுமன்றி ரஸ்யா, அமெரிக்கா போன்றனவும் தொடர்புபட்டுள்ளன.
இந்தச் சிக்கலை அவசரப்பட்டு தீர்க்க முனைந்தால் சிக்கல்கள் தான் இறுதிக் கொள்ளுமே தவிர அவிழ்ந்து போகாது.
இதனால் சர்வதேச சமூகம் மெல்ல மெல்ல காய்களை நகர்த்துகிறது.
அது மெதுவான நகர்வாக இருந்தாலும், ஒவ்வொரு நகர்வுகளும் உறுதியானவையாக தெரிகின்றன.
தமிழர்கள் மத்தியில் நீதி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே உள்ளது.
சர்வதேசம் மீண்டும் எம்மை ஏமாற்றி விடுமோ என்ற ஏக்கம், அச்சம் இன்னமும் தொடர்கிறது.
ஆனால் இன்றில்லா விட்டாலும் என்றோ ஒருநாள் வன்னியில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு சிறிலங்கா பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அதற்கான பூகோள அரசியல் சூழல் ஒருபோதும் வாய்க்காமல் விடப் போவதில்லை.
அது ஒரு ஆண்டிலும் வரலாம், இன்னும் சில ஆண்டுகளிலும் வரலாம்.
அது எப்போது என்பதை விட, அந்த நாள் வரும் என்ற நம்பிக்கை தான் தமிழர்களுக்கு முக்கியமானது.
அதன் மூலம் தான் சர்வதேசத்தை தமிழர்களின் பக்கம் திருப்ப முடியும்.
- முகிலன்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















