அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வது தான் சிறந்த வழிமுறை.
அதனால் தான் ஏட்டுக் கல்வியை விட செயன்முறைக் கல்விக்கு தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அனுபவங்களின் மூலமான பாடம் கற்றுக் கொள்ளுதல் என்பது அரசியலில் அதிகம் முக்கியத்துவமானது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில், வரலாற்றில் இருந்தோ, அனுபவங்களில் இருந்தோ நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஆனால் அதை நாம் எந்தளவுக்கு கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது கேள்விக்குரிய தொன்று தான்.
ஆயுதப் போராட்டத்தின் மூலமான தமிழரின் விடிவு என்பது இனிமேல் சாத்தியமில்லாத ஒன்றாக மாறியுள்ள நிலையில்- இப்போது பயன்படுத்தக் கூடிய ஒரே ஆயுதமாக இருப்பது அரசியல் இராஜதந்திரம் மட்டும் தான்.
அரசியல் இராஜதந்திரம் அல்லது சாணக்கியம் என்று பொதுவாகக் கூறப்படும் விடயத்தில் தமிழர் தரப்பு எப்போதும் அதிக கவனம் செலுத்தியதில்லை என்பதை நாம் ஏற்றேயாக வேண்டும்.
சின்னச் சின்ன வெற்றிகளில் நாம் கொண்ட மகிழ்ச்சிகளும், கவனிக்கப்படாமலே போய்விட்ட அரசியல் சாணக்கியமும் தான் எம்மைக் கழுத்தறுத்து விட்டன.
இவை தான் மிகப்பெரிய வெற்றிகளை சிங்களதேசத்துக்கு விட்டுக் கொடுக்கும் நிலையை உருவாக்கியது என்பதையும் மறுக்க முடியாது.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது தான் தமிழ்நாடு சட்டசபையில் சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று ஐ.நா அறிவிக்க வேண்டும் என்றும், தமிழர்களை சகல உரிமைகளோடும் வாழ வழியேற்படுத்தும் வரை சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பெரிதாக ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.
ஆனால் சிங்கள அரசுக்கு இது ஒருவித அச்சத்தைக் கொடுக்கக் கூடியது.
“இந்தியா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்காது- அது எம்மோடு இருப்பதே மிகப்பெரிய மனோபலம்“ என்று சிங்கள அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்றத்தில் அறிவித்த மறுநாள் தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு இந்திய மத்திய அரசு உடனடியாக விழுந்தடித்துக் கொண்டு இவற்றையெல்லாம் செய்து விடப் போவதில்லை.
ஆனால் இது இலங்கைக்கு மேலும் நெருக்கடி கொடுப்பதற்கான ஒரு ஆயுதமாக இருக்கப் போகிறது.
பல்வேறு வழிகளிலும் துன்பங்களைச் சுமந்து, தாம் யாருமற்ற அநாதைகளாக நிற்கிறோம் என்று மனமுடைந்து போயிருந்த ஈழத்தமிழருக்கு இந்தத் தீர்மானம் ஒரு ஆறுதலாகவும் தற்துணிவைக் கொடுப்பதாகவும் அமையும்.
தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், இலங்கை விவகாரம் பற்றி மௌனமாகவே இருந்து வந்தார்.
இது அவரது நிலைப்பாட்டின் மீது கொஞ்சம் கேள்வி எழுப்ப வைத்தது உண்மையே.
இந்தநிலையில் தான் சிறிலங்கா ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக அண்மையில் நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொடவும் தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊடாக இந்தச் சந்திப்பு முயற்சிகள் நடந்துள்ளது.
இந்தச் செய்தியைப் பார்த்தபோது தான் சிங்கள அரசின் அரசியல் சாணக்கியம் பற்றி நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்ற எண்ணம் தோன்றியது.
மகிந்த ராஜபக்சவைப் போர்க்குற்றவாளி என்றும் அவரைச் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் கோருவேன் என்றும் ஜெயலலிதா கூறி வருகின்ற நிலையில் தான், சிங்கள அரசு அவருக்குத் தூது அனுப்பியது.
அவருக்கு முதலில் வாழ்த்துச் செய்தி அனுப்பினார் பீரிஸ்.
அதன்பின்னர் மிலிந்த மொறகொட மூலம் தூது அனுப்பினார் மகிந்த ராஜபக்ஸ.
அதுமட்டுமன்றி இன்னொரு பக்கத்தில் ரணில் கூட அவரைச் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இவையெல்லாம் ஜெயலலிதா குறித்த சிங்களத் தலைமைகள் கொண்டுள்ள பயத்தை வெளிப்படுத்துகின்றன.
அடுத்த ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டை ஆளப் போகின்றவர் அவர் தான்.
அத்துடன் வரும் நாட்களில் மத்திய அரசிலும் கூட அவரது செல்வாக்கு அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாடு தான் உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு கட்டத்தில் திமுகவை வெட்டிவிட்டு விட்டு ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.
எனவே ஜெயலலிதாவைக் கைக்குள் போட்டுக் கொள்ள சிங்கள அரசு முயற்சிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஜெயலலிதாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்- இந்திய அரசுக்கும் தமக்கும் இடையே குறுக்கே யாரும் வரவிடாமல் தடுப்பது தான் சிங்கள அரசின் திட்டம்.
திமுகவும் இதேநிலையில் தான் இருந்தது.
ஆனால் திமுக சிங்கள அரசின் சாணக்கியத்துக்குப் பலியானது என்று சொல்வதை விட, அது சுயநல அரசியலில் குறியாக இருந்த்தால் சிங்கள அரசுக்கு வாய்ப்பாகிப் போனது என்று சொல்வதே உண்மை.
ஜெயலலிதாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துகின்ற நோக்கில் சிங்கள அரசின் இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, தமிழர் தரப்பு என்ன செய்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஈழத்தமிழர் தரப்புக்கும் இடையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு இடைவெளி இருந்து வந்தது.
அந்த இடைவெளி இன்னமும் நிரப்பப்படவில்லை என்பதும் உண்மை.
அந்த இடைவெளியானது வரலாற்றின் ஓட்டத்தில் தவிர்க்கமுடியாதவையாகவே அமைந்துவிட்டதை யாரும் மறுக்க முடியாது.
கடைசிக் கட்டத்தில் இந்தச் சாணக்கியத்தின் தேவையைப் புலிகள் புரிந்து கொண்டு தமது தவறுகளைச் சரிப்படுத்திக் கொள்ள முயன்ற போதும், காலம் கடந்து விட்டிருந்தது.
இப்போது ஈழத்தமிழருக்கு இந்தியா உதவிகளை மறுப்பதற்கு புலிகள் குறுக்கே இருப்பதாக சாட்டுச் சொல்ல முடியாது.
அதேவேளை, ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, இந்தியாவினதும், தமிழ்நாட்டினதும் உதவிக்கரங்களைத் தேடிப் பிடித்துக் கொள்வது முக்கியமானது.
இங்கே எம்மில் சில குறைபாடுகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் கருத்தை ஆதரவைப் பெற வேண்டும் என்று கூறுவோரை றோ என்றும், அமெரிக்கா ஆதரவைத் தேட வேண்டும் என்று கூறுவோரை சிஐஏ என்று விமர்சிப்பதும், துரோகி என்று பட்டம் சூட்டுவதும் வழக்கமான பாணியாகி விட்டது.
இந்த அகநிலைப் பொறிக்குள் இருந்து நாம் விடுபடாதிருப்பதால் தான் எம்மால் சரியான இராஜதந்திர அணுகுமுறைகளை வகுக்க முடியாதுள்ளது.
இத்தகைய புறநிலையில் தான், இந்தியாவை , தமிழ்நாட்டை இராஜதந்திர ரீதியாக அணுகுவதற்கு ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
பக்கநிலை சாராது தேவையான இடத்தில் தேவையானவர்களின் மூலம் காரியம் சாதிப்பது தான் புத்திசாலித்தனமானது.
சாணக்கியம் என்று சொல்வது அதைத் தான்.
சிங்கள அரசு தன்னைப் போர்க்குற்றவாளி என்று சொல்லும் அமெரிக்காவைக் கூட எதிர்க்கத் துணிந்தாலும், ஜெயலலிதாவுடன் மட்டும் நட்புறவு கொள்ள முனைகிறது.
அது தான் இராஜதந்திரம்.
அமெரிக்காவை விடவும் தனக்கு ஆபத்தானவர் ஜெயலலிதா தான் என அது நினைக்கிறது.
எனவே தான் அவரை மடக்க நினைக்கிறது.
ஆனால் தமிழர்தரப்பு இதுபோன்று எத்தனையோ வழிகளில் சிங்கள அரசின் இராஜதந்திரத்தை முறியடிக்க முனையாமல் இருக்கிறது என்பதே உண்மை.
ஜெயலலிதா பதவிக்கு வந்தபோது- வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக் குவித்ததோடு எல்லாம் சரி.
அதற்குப் பின்னர் அவர் என்ன செய்கிறார், என்ன செய்யப் போகிறார், என்று தெரிந்து கொள்ள யாராவது முயற்சிகள் எடுத்ததாக தெரியவில்லை.
இப்போதும் கூட, சட்டமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நாம் பெரும் வெற்றியாகக் கொண்டாடப் போகிறோம்.
ஆனால் அது ஒன்றும் தமிழருக்கு நீதி, நியாயம் கிடைப்பதற்கான இறுதி நடவடிக்கையாக இருக்க முடியாது.
இதற்கு அப்பாலும் பல தடைக்கற்களையும், இரும்புக் கதவுகளையும் உடைக்க வேண்டியுள்ளது.
அதையெல்லாம் ஜெயலலிதா உரிய நேரத்தில் செய்து கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
அவர் தமிழ்நாட்டுக்கு முதல்வரே தவிர, இலங்கைத் தமிழருக்கு அல்ல.
எனவே தமிழ்நாட்டின் பணிகளில் மூழ்கியிருக்கும் அவரை அவ்வப்போது உசுப்பி விட்டு தமிழர் பக்கம் திருப்பி விட வேண்டியதும், அவரை சிங்கள அரசின் பக்கம் திரும்ப விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் எமது பொறுப்பேயன்றி வேறில்லை.
இங்கே நாம் எவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்பதைப் பொறுத்தே தமிழருக்கான வழிகள் திறக்கும்.
எனவே முன்னைய இராஜதந்திர அணுகுமுறைகளை தமிழர் தரப்பு இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிங்கள அரசின் பாடங்களில் இருந்து நாம் அதைக் கற்றுக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை.
கௌடில்யரின் இராஜதந்திரங்களுக்கு முரணாக தாம் செயற்பட்டதால் தான் போரை வெல்வதற்காக அனைத்துலக ஆதரவைப் பெற முடிந்ததாக சிங்கள அரசு கூறியதை யாரும் மறந்து போக முடியாது.
புலிகளைத் தோற்கடித்து போரை வெல்வதே சிங்கள அரசின் ஒரே நோக்காக இருந்தது.
அதைச் செய்து விட்டதால் எல்லாம் தன் கைக்குள் வந்து விட்டதாக அது நினைத்துக் கொண்டது.
ஆனால் போரை வென்றதுடன்- புலிகளைத் தோற்கடித்ததுடன் அது முடிந்து போகவில்லை என்பதை இப்போது அது உணர்ந்துள்ளது.
அதனால் தான் சிங்கள அரசு மகிந்தவைப் போர்க்குற்றவாளி என்று கூறிய ஜெயலலிதாவைக் கூட அரவணைக்க நினைக்கிறது.
இதுபோன்ற பாடங்களில் இருந்து நாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அதுதான் அடைபட்ட கதவுகளைத் திறப்பதற்கு நிச்சயம் உதவும்.
- முகிலன்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















