விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய வெற்றிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.
காலையில் பிரமாண்டமான படை அணிவகுப்பு நிகழ்வுகளும், மாலையில் உயிரிழந்த படையினருக்கான அஞ்சலி நிகழ்வும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றன.
கடந்த மே 20ம் திகதி நடைபெற வேண்டிய இந்த நிகழ்வுகள் 2600வது புத்த ஜெயந்தியால் பிற்போடப்பட்டு கடந்த 27ம் திகதியே நடத்தப்பட்டன.
அது என்னவோ தெரியவில்லை- சிங்கள அரசு போர் வெற்றி விழாவைக் கொண்டாடத் திட்மிட்டாலே இயற்கைக்குக் கொஞ்சமும் பொறுப்பதில்லை.
வெற்றிவிழாவுக்கு முதல்நாள் தென்பகுதியில் மழை கொட்டத் தொடங்கி விட்டது.
கடந்தமுறையும் இப்படித் தான் கொழும்பே வெள்ளக்காடாகிக் கிடந்தது.
பின்னர் வேறோர் நாளில் அது நடத்தப்பட்டது.
இந்தமுறை வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மழை குழப்புமா என்ற அச்சம் இருந்தது.
சுமார் 10ஆயிரம் படையினர் பங்கேற்கும் அணிவகுப்பும், பிரமாண்ட படைத் தளபாடக் காட்சிகளுக்குமான ஏற்பாடுகள் குழப்பப்பட்டால் அதை மீள ஒழுங்கு செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்
இந்த முறை மகிந்தவின் வெற்றிவிழாவை மழை அவ்வளவாக குழப்பவில்லை.
ஆனால் சிங்கள விமானப்படைக்குச் சோதனைக் காலம் இன்னும் முடியவில்லை.
அவர்கள் இந்த நிகழ்வில் 34 விமானங்களை காட்சிப்படுத்தத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் 10 போர் விமானங்கள் மட்டுமே அணிவகுப்பில் பங்கேற்றன.
கட்டுநாயக்கவில் கொட்டித் தீர்த்த மழையினால் அங்கிருந்து போர் விமானங்களைக் கிளப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தனியே ஹெலிகள் மட்டுமே பங்கேற்றன.
ஒரே ஒரு மிக்-27 போர் விமானம் மட்டுமே அங்குமிங்கும் பறந்து விட்டு மறைந்து போனது.
இப்படியாகக் களைகட்டிய இந்த வெற்றி விழாவினால் கடந்த வெள்ளியன்று கொழும்பில் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
ஆனால் அன்று வர்த்தக வங்கி விடுமுறை என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டு விட்டது.
இதனால் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் எவரும் வராமல் வங்கிகள் படுத்துக் கிடந்தன.
இந்த விவகாரம இப்போது அந்த சிங்கள நாளிதழுக்கு எதிரான நட்டஈட்டு வழக்காக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவையெல்லாம் ஒருபுறமிருக்க, இப்போது நாம் விவகாரத்துக்கு வருவோம்.
இந்த வெற்றிவிழாவில் கதாநாயகன் மகிந்த ராஜபக்ஸ என்ன சொல்லியிருப்பார் என்று பார்க்கலாம்.
அவர் வழக்கம் போலவே, வெளிநாட்டு சக்திகள் சிறிலங்காவில் குழப்பத்தை உருவாக்க முனைவதாக குற்றம்சாட்டினார்.
தமது பிரச்சினைகளைத் தாமே தீர்த்துக் கொள்வோம் என்றும், வெளியார் தலையிட முடியாது என்றும் அழுத்திக் கூறினார்.

எந்தநிலை வந்தாலும் படையினரைக் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தார்.
பழைய காயங்களைக் கிளறுவதன் மூலம் எந்தப் பயனும் கிட்டாது. அதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
உண்மையில் மகிந்த ராஜபக்ஸவுக்கு என்னவோ பழையதை நினைவூட்டினால் கோபம் தான் வருகிறது.
“அவர் இப்போது பழையதை எல்லாம் மறந்து விட்டார்“.
இது மகிந்த ராஜபக்ஸவைப் பற்றி அவரது முன்னைய நண்பர்கள் கூறும் கருத்து.
அந்தளவுக்கு அவர் இப்போது மாறிவிட்டார்.
முன்னொரு காலத்தில் ஜேவிபியினரை அடக்கும் நடவடிக்கையின்போது சிறிலங்கா அரசினால் மனிதஉரிமைகள் மீறப்பட்டதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கதவுகளைத் தட்டியவர் இவர் தான்.
அப்போது ஆட்சியில் இருந்தது ஐதேக அரசாங்கம்.
இவர் எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
அப்போது மகிந்தவுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை-அதன் தலையீடு தேவைப்பட்டது.
இப்போது அது அவருக்குத் தேவைப்படவில்லை.
அப்போதெல்லாம் பிரச்சினைகளை உள்வீட்டுக்குள் தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இவருக்கு வரவில்லை.
வெளியாரின் தலையீடும், ஆதரவும் தேவைப்பட்டது.
ஆனால் இப்போது அவருக்கு வெளியாரைக் கண்டாலே கோபம் வருகிறது.
அவர்கள் எதையாவது சொல்லி விட்டால் எரிந்து விழுகிறார்.
எல்லாவற்றையும் நாமே பார்த்துக் கொள்கிறோம், நாமே தீர்த்துக் கொள்கிறோம் என்கிறார் அவர்.
போரை நடத்தும் வரையில் வெளியாரின் துணை தேவைப்பட்டது, அவர்களின் உதவிகள் தேவைப்பட்டன.
ஏன் இப்போது கூட வெளிநாடுகளின், வெளிநாட்டு அமைப்புகளின் நிதியுதவி இல்லாமல் சிறிலங்கா அரசினால் எதையாவது செய்து விட முடியுமா?
ஒன்றையுமே அவரால் கிழிக்க முடியாது.
மகிந்தவின் இந்தக் கருத்தை டெய்லி மிரர் ஒரு கருத்தோவியமாக்கியது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் முதுகில் ஏறி நின்று கொண்டு மகிந்த ராஜபக்ஸ எமது பிரச்சினைகள் எம்மாலேயே தீர்க்க முடியும் என்று கூறுவதாக அந்தக் கருத்தோவியம் அமைந்திருந்தது.
நிதி உதவி பெறுவதற்கு உலக நாடுகள் தேவை.
புலிகளைத் தோற்கடிக்க அவர்களின் உதவி தேவை.
இப்போதும் எஞ்சியுள்ள புலிகளை அழிப்பதற்கும் அவர்களின் உதவி தேவை.
அதற்கான கோரிக்கைகளை சிறிலங்கா அரசு இன்னமும் கூட விடுக்கிறது.
ஆனால் உலக நாடுகளின் உதவிகளைப் பெற்று, ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கு நீதியை வழங்க மட்டும் உலகநாடுகள் தலையிடக் கூடாது- தீர்வு சொல்ல முடியாது.
இதுதான் மகிந்த சிந்தனை. அவரது நியாயம்.
பழைய காயங்களை கிழறக் கூடாது என்றால் என்ன அர்த்தம்.
நடந்ததையெல்லாம் தமிழர்கள் மறந்து விடவேண்டும் என்பதே.
1958 இனக்கலவரத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் அவலங்கள் வரை எல்லாவற்றையும் தமிழர்கள் மறந்து விட வேண்டுமாம்.
அதை யாரும் நினைவூட்டக் கூடாதாம்.
ஆனால் சிங்கள அரசாங்கம் என்ன செய்கிறது?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை சந்தித்த காயங்களை பழையது என்று கூறி மறக்குமாறு கூறும் மகிந்த, அதே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை அழித்துப் பெற்ற வெற்றியை மட்டும் மறந்து போகாமல் ஏன் கொண்டாடுகிறார்.
அதையும் மறந்து போகலாமே. அதற்கெல்லாம அவர் தயாரில்லை.
தமிழர்களுக்குத் தான் மறதி வரவேண்டுமாம்.
அவர் தன்னைப் போல பழைய நிலையை மறந்து விட்டு புதிய சிந்தனைக்கு தமிழர்கள் வரவேண்டுமாம்.
காயங்களை ஏற்படுத்தி விட்டு அதை மறந்து போக வேண்டும் என்று கூறும் தைரியம் மகிந்தவைத் தவிர வேறு எவருக்கும் வரமுடியாது.
காயங்களுக்கு மருந்திட்டு குணமாக்க வேண்டும் என்றே உலகம் கூறுகிறது.
ஆனால் அதைச் செய்யாமல் காயத்தையே மறந்து விடுங்கள் என்கிறார் அவர்.
அதாவது தமிழர்கள் உணர்ச்சியற்ற நடைப்பிணங்களாக இருக்க வேண்டுமாம். அதாவது கோமா நிலையில்.
இல்லையேல் காயத்தின் வலி எப்போதும் அதை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் அல்லவா?
மகிந்தவுக்கு ஒரு காயம் ஏற்பட்டிருந்தால் தான் அதன் வலியை அவரால் உணரமுடியும்.
அந்தக் காயத்தின் வலியை உணராத அவர்- அதை மறந்து விடச் சொல்லிக் கூறியதில் எந்தவித ஆச்சரியமும் இல்லைத் தான்.
என்ன தான் மகிந்த ராஜபக்ச இப்படியெல்லாம் கூறிக் கொண்டிருந்தாலும் இந்தக் காயங்களையோ, அதனால் ஏற்பட்ட விளைவுகளையோ தமிழர்கள் ஒருபோதும் மறந்து விடத் தயாரில்லை.
அதுபோல உலகமும் இதை கண்டும் காணாமல் விட்டு விடாது.
கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்குத் தான் என்பார்கள்.
தமிழர்களுக்கு இந்தக் காயங்களை ஏற்படுத்திய மகிந்தவை உலகம் என்றோ ஒரு நாள் கூண்டிலேற்றத் தயங்காது என்பதே தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளது.
- முகிலன்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















