பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்
தமக்கென ஒரு செயல் திட்டம் வகுக்காமை, தாம் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமை, அளவுக்கு அதிகமான துணிகரமான முதலீடுகளில் ஈடுபடுதல், யாராவது ஏதாவது கூறுவதை நம்பி சந்தையில் இறங்குவது முதலிய பல தவறுகளைப் பற்றி சென்ற கட்டுரையில் கண்டோம். நாள் வணிகத்தில் (Day Trading) ஈடுபடுபவர்கள் தொடக்கத்தில் செய்யும் தவறுகள் பற்றி மேலும் கொஞ்சம் பார்க்கலாம்.
அனுபவமும், பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் புதிதாக பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள், எளிதில் நட்டமடைந்து விடுகின்றனர். ஏன் தெரியுமா?
எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளாமை: நாள் வணிகத்தில் (Day Trading) 'Stop Loss' என்று ஒன்று உண்டு. இந்த இந்தப் பங்குகளை வாங்கலாம்/விற்கலாம் என்று ஆலோசனை கூறும் மையங்கள், பங்குகள் இந்த அளவு வரை விலை ஏறலாம் (கரடிச் சந்தைப் போக்கின்பொழுது, Short Selling செய்வதானால், இந்த அளவு வரை விலை இறங்கும்) என்று கூறுவர்.அதே சமயத்தில் யூகங்கள் பொய்த்து, ஒரு குறிப்பிட்ட பங்கின் விலையானது, ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் சரியுமானால், மடமடவெனப் பங்கின் விலை மென்மேலும் சரியத் தொடங்கும். அதே போல், கரடிச் சந்தைப் போக்கின்பொழுது, பங்கின் விலை, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயருமானால் தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்லும். அந்த அளவினை'Stop Loss' என்பர். பங்கு வணிகத்தில் ஈடுபடுபவருக்கு அந்த 'Stop Loss' குறித்த தெளிவு வேண்டும். அத்தகைய குறிப்பிட்ட அளவினை, பங்கின் விலை தொடுகையில், நாம் நம் பங்கை விற்று ( அல்லது வாங்கி) விடவேண்டும். அதே போல், நம்முடைய தாங்கும் சக்தியைப் பற்றியும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். நம்மால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும், எந்த அளவு வரை நட்டத்தைத் தாங்கமுடியும் என்றும் முன் கூட்டியே யோசித்து முடிவு செய்து தமக்கென்று ஒரு செயல் திட்டத்தினை வகுத்து அதன் படி செயல்படுதல் வேண்டும். இவ்வாறு செய்யாமையினாலேயே பலர் நட்டமடைகின்றனர்.
சில சமயங்களில் பேராசையும், சில சமயங்களில் தேவையற்ற பீதியும் நட்டத்திற்குக் காரணமாகி விடுகிறது. நாம் ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும் என நினைத்துக்கொண்டு ஒரு பங்கினை வாங்குகிறோம்.அந்த அளவுக்கோ, அதைவிட சற்று அதிகமாகவோ உயர்ந்தவுடன் விற்று லாபம் பார்ப்பதே நல்லது. அந்தக்கட்டத்தில் விலை நாம் நினைத்த அளவு உயர்ந்ததும், மேலும் மேலும் உயருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், பலன் எதிர்மறையாகிவிட வாய்ப்புண்டு. என் நண்பர் ஒருவர், விலை உயர உயர மேலும் மேலும் ஏறும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். உடனிருந்தவர்களும், இப்பொழுது விற்கவேண்டாம் இன்னும் ஏறும் என்று தவறாக யோசனை சொன்னார்கள். பங்குகள் விலை திடீரெனச் சரிந்துவிட்டது. கிட்டத்தட்ட வெறும் காகிதத்திற்கு ஈடாகிவிட்டது அந்தப் பங்குகள். எனவே பேராசை பெருநட்டம் என்பதை மனதில் கொள்வது முக்கியம்.
கணிணி மூலம் பங்கு விற்பனை செய்யத் தொடங்கும் கற்றுக்குட்டிகள் தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக தவறான ஆணைகளைத் தந்து விடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். விற்கச் சொல்லுவதற்குப் பதில் வாங்கச் சொல்லியோ அல்லது தவறான பங்கு எண்ணிக்கைகளைக் கொடுத்துவிடவோ அதிக வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக இருப்பது அவசியம். சிலர் ஏற்கனவே பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள தமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் மீது கண்மூடித் தனமாக நம்பிக்கை வைத்து அவர்கள் வாங்கியுள்ள பங்குகளை வாங்குவதும், அவர்களுடைய ஆலோசனைகளையே கேட்பதுமாக இருப்பர். இவர்களுக்கு யோசனை சொல்பவர்களே தேவையான தெளிவு இல்லாதவர்களாக இருந்தால் இவர்களும் சேர்ந்து நட்டப்பட வேண்டி வரும். அது மட்டுமின்றி தேவையில்லாத மனக்கசப்பும் உருவாகும்.
நிறுவனங்களின் தன்மையைப் பார்த்தும், சந்தையில் அதற்கான தேவையைப் பார்த்தும் பங்குகளை வாங்காமல், ஏதோ தமக்குப் பரிச்சயமான / புகழ் பெற்ற நிறுவனம் என்பதற்காகப் பங்குகளை வாங்குவது தவறானது. தரமான நிறுவனங்களின் பங்குகளை வாங்காமல், குறுகிய காலத்தில் நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் Penny Stocks எனப்படும் விலை மலிவான, சிறிய அல்லது புதிய நிறுவனங்களின் பங்குகளை ஏராளமாக வாங்கிப் போடுவது ஆபத்தானது. அதே சமயம், மிகக் குறைந்த லாபமே போதும் என்று நினைத்து அவசரப்பட்டு பங்குகளை விற்றுவிடுவதும் சரியல்ல. சொல்லப் போனால் திருவள்ளுவர் கூறும்
'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.'
என்ற குறளைப் போல, சந்தை சாதகமாக இல்லாதபொழுது, கொக்கு மீனுக்காகக் காத்திருப்பது போல் காத்திருக்கும் பொறுமையும், சாதகமான நேரம் வரும்பொழுது, தாமதமின்றி கொக்கு மீனைக் கவ்வுவது போல், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமார்த்தியமும் அவசியம்.
இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். தாங்கள் நம்பி வாங்கிய பங்கின் விலை எவ்வளவு சரிந்தாலும் அதை விற்காமல், மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்று நம்பிக்கொண்டே இருப்பார்கள். தாங்கள் எடுத்த முடிவு தவறாகப் போகாது என்ற அளவு கடந்த நம்பிக்கையே அதற்குக் காரணம். தான் நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்பி வாங்குகின்ற பங்குகள், நினைத்தபடி செயல்படவில்லை எனில் அதற்குக் காரணம் என்ன என்பதை அறிந்து, தேவைப்படுமானால், சிறிய நட்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விற்றுவிடுவதே அறிவுடைய செயல். இன்னும் சிலரோ, சிறு அளவு நட்டம் வந்துவிட்டாலும் மனமுடைந்து, எல்லாப் பங்குகளையும் விற்று அவசியமில்லாமல் நட்டத்தை ஏற்றுக் கொள்வர். இப்படித் தப்பு மேல் தப்பாகச் செய்துவிட்டு, சந்தையில் பணத்தை இழந்துவிட்டு வருந்துவோர் பலர். சந்தையின் முக்கியமான ஒரு குணம் - உணர்ச்சிமேலீட்டின் காரணமாக ஊசலாடுவது. சந்தையில் லாபம் பார்க்க விரும்புபவருக்கு மிகத் தேவையான தகுதி, உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக விற்பனை மேற்கொள்வது. இது இருந்தாலே பாதி வெற்றிதான். சந்தையின் அடுத்த குணம் - எதிர்பாராத மாற்றங்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவருக்குத் தேவை -எந்தச் சூழலையும் தனக்குச் சாதகமாக மாற்றக் கூடிய நுண்ணறிவு.
இது இரண்டும் உங்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அல்லது வளர்த்துக்கொள்ள இயலும் என்று நம்புகிறீர்களா? துணிந்து பங்குச் சந்தையில் இறங்குங்கள், வெற்றி காணலாம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















